புதன், 19 ஆகஸ்ட், 2020

தமிழர் தொன்மை – நாகரிகம் – பண்பாடு

 முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

தமிழினம் - தோற்றம்

  • தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானவையாகும்.
  • உலகின் தோன்றிய முதல் இனம் தமிழினமே என்றும் அவர்கள் தோன்றிய பகுதி  குமரிக்கண்டமே என்றும் பாவாணர் குறிப்பிடுகிறார்.
  • இன்று உலகின் மிகப் பழமையான நாகரிகமாக குறிக்கப்படுகிற சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களுக்கு உரியது என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.
  • சிந்து சமவெளி நகர மக்களின் வழிபாட்டு முறைகள், பண்பாடுகள், நாகரிகங்கள், கட்டடக் கலை நுட்பங்கள் தொல்-தமிழருக்கு உரியது என்பது ஆய்வாளர்களின் முடிவு.

ஆஸ்திரேலியப் பழங்குடியினர் தொல்தமிழரே

  • ஆஸ்திரேலியப் பழங்குடிகளாக இன்று இருப்பவர்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலிருந்து சென்றவர்களே என்று மரபு (டி.என்.ஏ) ஆராய்ச்சியின் அடிப்படையில் உறுதிசெய்துள்ளனர்.

ஈரானியப் பழங்குடியில் தமிழ் அரசர் பெயர்கள்

  • இரானின் பழங்குடி அரசர்களாகச் சுட்டப்படுகிற அதியன், நல்லி, ஆய், அண்டிரன் போன்ற பெயர்கள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளில் தமிழ் ஊர்ப்பெயர்கள்

  • ஆப்கானிஸ்தான் பகுதியில் கொற்கை, பொதினே, பனை, காவ்ரி போன்ற ஊர்ப் பெயர்களும், ஈரானின் குறிஞ்ஜ்(குறிஞ்ச்) என்ற பெயரும்  பாகிஸ்தானில் தோன்றி, குன்று, ஆமூர், நள்ளி, கொற்கை மத்ரை போன்ற ஊர்ப்பெயர்களும் வழங்கப்படுவது தமிழரின் தொன்மைக்கும் நாகரிகத்திற்கும் தக்க சான்றுகளாகும்.

பழங்கால குடியிருப்புகள்

  • தமிழ்நாட்டின் பகுதிகளில் பழங்கற்கால குடியிருப்புகள் இருந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியானது கி.மு 500,000 ஆண்டிலிருந்து கி.மு 3000 ஆண்டு வரை நீடித்திருந்ததாக மதிப்பிடப்படுகிறது.

சென்னையில் பழங்கால குடியிருப்பு

  • பழங்கற்காலத்தின் பெரும்பாலான காலகட்டங்களில் குடியிருப்புகள் அடர்த்தியற்ற காட்டுப் பகுதிகள் அல்லது புல்வெளி சார்ந்த சுற்றுச்சூழலில் அமைந்த ஆற்றுப் பள்ளதாக்குகளுக்கு அருகிலேயே அமைந்திருந்தது.
  •  தென்னிந்தியாவில்  இரண்டு இடங்களில் மட்டுமே இத்தகைய தொடக்க பழங்கற்கால நாகரிகம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையின் வடமேற்கு பகுதியில் உள்ள அத்திரம்பாக்கம் பள்ளதாக்கு இந்தப் பகுதிகளில் ஒன்றாகும்.

வட தமிழகத்தில் தொன்மைச் சான்றுகள்

  • தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளைச் சுற்றி பழங்கற்காலத்திய விலங்குகளின் புதைப்படிமங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் கூறுகின்றன.
  • இவை கி.மு 300,000 ஆண்டு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். தென்னிந்தியாவில் வாழ்ந்த மனிதர்கள் பெரும்பாலும் பண்டைய "பழங்கற்காலத்தில்" நீண்ட காலம் வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் (Homo erectus) இனத்தைச் சேர்ந்தவர்களாவர். மேலும் இவர்கள் கைக்கோடரி மற்றும் வெட்டுக்கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வேட்டையாடி சேகரித்து வாழும் மக்களாக இருந்தனர்

பயன்பாட்டுப் கருவிகள்

  • சூரிய காந்தக் கல், அகேட் கல், சிக்கிமுக்கி கல், குவார்ட்ஸ் கல் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி நுண்கற்கள் கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். 1949ஆம் ஆண்டில், இது போன்ற நுண்கல் கருவிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • நுண்கற்கள் காலமானது கி.மு 6000-3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும் என தொல்லியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன.

புதிய கற்கால நாகரிகம்

  • தமிழ்நாட்டில் சுமார் கி.மு 2500 ஆண்டு புதிய கற்கால நாரிகம் தொடங்கியது. சாணைபிடித்தல் மற்றும் மெருகேற்றல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி புதிய கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தங்கள் கற்கருவிகளுக்கு நயமான வடிவம் அளித்தனர்.
  • பண்டைய எழுத்துக்களைக் கொண்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடரியின் மேற்பகுதி தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரும்பு கால நாகரிகம்

  • இரும்பைப் பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் கருவிகளை வடிவமைக்கும் முறையை மனிதர்கள் இரும்புக் காலத்தின் போது தொடங்கினர். பல நூறு இடங்களில் காணப்படும் பெருங்கற்களாலான இடுகாடுகளைக் கொண்டு தீபகற்ப இந்தியாவில் இரும்புக் காலக் கலாச்சாரம் இருந்ததை அறிய முடிகிறது.
  •  இடுகாடு நினைவுச் சின்னங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு மற்றும் அவற்றின் வகைகளைக் கொண்டு வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு இரும்புக் கால குடியேற்றங்கள் பரவியதாகத் தெரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளை ஒப்பிடும் போது பெருங்கற்களாலான குடியேற்றங்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

புதைக்கும் பண்பாடு

  • சுமார் கி.மு 1000வது ஆண்டைச் சேர்ந்த பெருங்கற்களாலான புதைகல இடுகாடுகள் இருந்ததற்கான தெளிவான முற்கால ஆதாரங்கள் இடுகாடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன,
  • குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 24 கி.மீ தூரத்தில் இருக்கும்  ஆதிச்சநல்லூர்  என்ற இடத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின்  தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பூமியிலிருந்து 157 புதைகலங்களை அகழ்ந்தெடுத்தனர். அவற்றில் 15 கலங்களில் மனிதனின் மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் மற்றும் மற்றும் எலும்புகள், உமி, அரிசி தானியங்கள், கருகிய அரிசி மற்றும் புதிய கற்கால கோடரிக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருந்தன.
  • கண்டெடுக்கப்பட்டுள்ள புதைகலத்தில் எழுத்தப்பட்ட எழுத்துகள், 2800 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத்தின் தமிழ்-பிராமி வரிவடிவத்தை ஒத்திருப்பதாக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின்  தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அசோகர் கல்வெட்டில் தமிழரசுகளின் தொன்மை

  • அசோகப் பேரரசின் கீழ் இல்லாத பேரரசுகள் மற்றும் இந்தப் பேரரசுடன் நட்பு நிலையில் இருந்த பேரரசுகள் பற்றிய விவரங்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இவற்றுடன் சேர்ந்து சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் சேரர்களின் வம்சங்கள் (கி.மு 273-232) அசோகத் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. குறுநில மன்னர்களில் அதியமானின் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஒரிசா கல்வெட்டில் - தமிழ்ப் பேரரசுகளின் கூட்டமைப்பு

  •  நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழ் பேரரசுகளின் கூட்டமைப்பைப் பற்றி கதிகும்பா கல்வெட்டில், சுமார் கி.மு 150 ஆம் ஆண்டு கலிங்கப் பேரரசை (இன்றைய ஒரிசா மாநிலம்) ஆட்சி செய்த அரசன் கார்வேலா (Kharavela) பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

களப்பிரர்களை விரட்டிய பாண்டியன்

  • மிகப் பழைய வட்டெழுத்து ரீதியான சான்றில் தமிழ் நாட்டில் இருந்த ஆட்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, அதில் பாண்டிய நாட்டிலிருந்து களப்பிரர்களை வெளியேற்றிய பாண்டிய அரசன் கடுங்கோன் (c.560–590 CE) என்பவனைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சேரப்  பேரசு

  • தென்னிந்தியாவின் மலபார் கடற்கரை அல்லது அதன் மேற்கு பகுதியுடன் இணைந்த, தற்போதைய கேரள மாநிலம் ஆகியவை ஒன்றிணைந்த பகுதியாக சேரர்களின்பேரரசு இருந்தது.
  • கடல் வழியாக ஆப்பிரிக்காவுடன் வாணிகம் செய்வதற்கு ஏற்ற வகையில் அவர்களின் இருப்பிடம் இருந்தது. மேலும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுடனும் இவர்கள் பரவலான தொடர்பு கொண்டிருந்தனர். இது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு வரை மட்டுமே வழக்கத்தில் இருந்தது, இதன் பிறகு தமிழ் மொழியில் சமசுகிரதத்தின் தாக்கம் காரணமாக மொழியின் தனிப்பட்ட அங்கீகாரம் மாறி புதிய மொழி ஒன்று பயன்பாட்டிற்கு வந்தது.

சோழப் பேரசு

  • முற்கால சோழர்களில் கரிகாலச் சோழன் மிகப் பிரபலமாக இருந்தார். சங்க இலக்கியங்களின் பல்வேறு செய்யுள்களில் கரிகாலச் சோழன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னாளில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் நூலில் வரும் பல்வேறு கதைகளிலும் கரிகாலன் பற்றிய செய்திகள் முக்கிய பொருளாக இருந்தது.

பாண்டியப் பேரரசு

  • இந்திய தீபகற்பத்தின் தென்கோடிப் பகுதியான கொற்கையிலிருந்து முதலில் ஆட்சி செய்ய தொடங்கிய பாண்டியர்கள் பின்னாளில் மதுரை நகருக்கு மாறினர். சங்க இலக்கியத்திலும் பாண்டியர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே காலத்தில் இருந்த கிரேக்க மற்றும் ரோமானிய ஆவணங்களிலும் பாண்டியர்கள் பற்றி உள்ளது.  மெகஸ்தனிஸ் (Megasthenes), இந்திகா (Indika) என்ற தனது நூலில் பாண்டியப் பேரரசு பற்றி குறிப்பிட்டுள்ளார். பாண்டியர்கள் கிரேக்கம் மற்றும் ரோம் ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பையும் கொண்டிருந்தனர்.

தமிழரின் இலக்கியமும் தொன்மையும்

  • சங்க இலக்கியம் என்று அறியப்படும் செவ்வியல் இலக்கியத் தொகுதிகள் கி.மு 200 முதல் 300 ஆம் ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.
  • தமிழில் கிடைத்துள்ள அரிய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக அறியப்படுகிறது.
  • உலகச் செம்மொழிகளில் பழமையான - வளமான இலக்கண இலக்கியங்களைக் கொண்டுள்ள ஒரே மொழி என்ற பெருமையைப் பெற்றுள்ளது தமிழ்,

சங்க இலக்கியம் காட்டும் தமிழர் பண்பாடு - நகரிகம் - அரசியல்

  • செழுமையான நிலம் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த மக்கள் குழுக்கள் பற்றி சங்கப் பாடல்கள் சித்தரிக்கின்றன.
  • ‘வடக்கே வேங்கட மலை, தென்றே குமரி, கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் என்ற எல்லைகளைக் கொண்டு விளங்கிய இந்த பகுதிகளை ஆட்சி செய்வது பரம்பரை குடியாட்சி முறையில் இருந்தது. எனினும் இந்த பகுதிகளின் செயல்பாடுகள் மற்றும் ஆட்சி செய்பவரின் அதிகாரம் ஆகியவை முன்பே இயற்றப்பட்ட ஒழுங்குமுறைகளை பின்பற்றியே அமைந்தது.
  • அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்று சமூக ஒழுங்கு இருந்தது.
  • உலகம் சுற்றும் புலவர்களும் இசைக்கலைஞர்களும் நடனக் கலைஞர்களும் தாராள மனமுடைய அரசனின் அவைகளை அலங்கரித்தனர். இசை மற்றும் நடனக் கலைகள் மேம்பட்டு இருந்தன.
  • பழந்தமிழரின் மேலாண்மை சிந்தனை, தொழில்நுட்ப அறிவு, பல்துறை சிந்தனை, அறம், அரசியல், வீரம், கொடை, நட்பு, விருந்தோம்பல், இல்வாழ்க்கை நெறி,   போன்வற்றை இவ்விலக்கியங்கள் உலகிற்கு உணர்த்துகின்றன.

உலக நாடுகளுடன் வணிகத் தொடர்பு

  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு இயக்கத்தில் இருந்தது.
  • தொல்லியல் துறை ஆய்வுகள் மற்றும் இலக்கியங்களில் யுவனர் களுடனான (கிரேக்கர்) வெளிநாட்டு வியாபாரம் செழுமையாக இருந்தததைக் கூறுகின்றன.
  • தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்த முசிறி மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியின் துறைமுக நகரம் பூம்புகார் ஆகிய இரு இடங்களில் ஏராளமான கப்பல்கள் நிறுத்தப்பட்டு வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வியாபார மையங்களாக விளங்கின.

முனைவர் ஆ.மணவழகன் - Dr.A.Manavazhahan - தமிழியல்.காம் - thamizhiyal.com