வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

கவிஞர் ஆ. மணவழகனின் கூடாகும் சுள்ளிகள்

 


கூடாகும் சுள்ளிகள் 
கவிஞர் ஆ.மணவழகன் 
அய்யனார் பதிப்பகம், சென்னை. 2010.

வாழ்த்துரை 

பேரா. ஆர்.பி.சத்தியநாராயணன் 

துணைவேந்தர், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், சென்னை.

    கவிஞர் ஆ.மணவழகன் கூடாய் தான் சுமந்த கனவுகளை இந்நூலின் வாயிலாகக் கருத்துடன் கூடிய கவிதைத் தொகுப்பாய் நமக்காகப் படைத்துள்ளார். தலைப்பில் மட்டும் இலக்கிய மணம் வீசாமல், தொகுப்பு முழுவதும் பரவிப் படர்ந்திருக்கிறது.

    இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவையான சமுதாயச் சிந்தனைகளும் மனித நேயமும் நயம்பட நெஞ்சில் பதியுமாறு ஒவ்வொரு கவிதையிலும் அதன் சொற்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. அழகியலுடன் அனுபவமும் சேர்ந்து நற்கவிதைகளாய் மலர்ந்து மணம் கூட்டுகின்றன. அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் தொடங்கி, முக்கிய நாட்டு நடப்புகள் வரை பல கருத்துகளைத் தன் கவிதைகளுக்குள் பொதிய வைத்துள்ளார் முனைவர் மணவழகன். ‘சங்கத்தமிழ் மூன்றும் தா’ என நமக்கு மட்டும் கேட்டுப் பழகிப் போன நம் தன்நலச் சிந்தனைக்கு, தான் வேண்டுவனவற்றை ‘தமிழே இவை எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் கொடு’ என அவர் கேட்டிருப்பது சமூக அக்கறையையும் சுயநலமற்ற சிந்தனையையுமே காட்டுகிறது.

    முனைவர் மணவழகனுக்கு இந்திய அரசு அளித்த ‘இளம் அறிஞர்’ விருது அவர் எழுத்தாளுமைக்கு மட்டுமன்றி, தன்னலமற்ற சமுதாய நோக்கிற்கும்தான் என்று உணர வைப்பதாய் உள்ளது அவரின் இக்கவிதைத் தொகுப்பு.

    அமைதியான இடத்தில் ஆழமும் அதிகம் இருக்கும் எனக் கூறுவர். அது முனைவர் மணவழகனுக்கு மிகவும் பொருந்தும். அமைதியான பேச்சும் நடத்தையும் வீரியம் நிறைந்த சிந்தனைகளோடும் கருத்துகளோடும் சேர்ந்திருக்கும் என்பதன் சிறந்த உதாரணமாக முனைவர் மணவழகன் திகழ்கிறார். அவர் படைத்துள்ள இந்தக் ‘கனவு சுமந்த கூடு’ கவிதைத் தொகுப்பு, படிப்போரின் இலக்கியத் தாகத்தைத் தீர்ப்பதுடன், பயனுள்ள பல புதிய சமுதாயப் பரிமாணப் பார்வைகளையும் காண உதவும் என்பது உறுதி.

    முனைவர் மணவழகனின் இக்கவிதைத் தொகுப்பு வெற்றியடையவும் அவர் மென்மேலும் இதுபோன்ற கருத்தோவியங்களைப் படைக்கவும் என் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.