திங்கள், 17 ஆகஸ்ட், 2020

பழந்தமிழர் கட்டுமான நுட்பங்கள் - பயன்பாட்டுப் பொருள்கள்

 ஆ.மணவழகன், விரிவுரையாளர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம். கலை -அறிவியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் - 603 203.

 (அறிவியல் தமிழ் மன்றக் கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ஆக.26,27- 2006)

            ஒரு நாட்டின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் அந்நாடு தொழில்நுட்ப அறிவினைத் தம்முள் கொண்டிருப்பதும், பல்துறைகளிலும் தொழில்நுட்ப உத்திகளைக் கையாள்வதும் அடிப்படையாக அமைகிறது. தொழில்நுட்பக் கூறுகளைப் பயன்படுத்தாத எந்த ஒரு நிறுவனமோ, துறையோ அல்லது நாடோ என்றாலும், வளர்ச்சி காண்பதும் தன்னிறைவு பெறுதலும் அரிதாகிறது. இன்றைய நிலையில், வளர்ந்த நாடுகளின் வரிசையில் உள்ள பலவும் தங்கள் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தினையே மூலதனமாக்கியுள்ளன என்பது கண்கூடு. வளர்ந்துவரும் நாடுகளும் அவ்வழியைப் பின்பற்றியே தங்களை வளர்த்துக் கொள்ள முனைவதையும்  காணமுடிகிறது.

            தொழில்நுட்பம் என்பது, திடீரென இன்று முளைவிட்டு கிளைத்தெழுந்த ஒன்றா?  மேலும், அது இன்று தொழில்நுட்பங்களில் முன்னிலை வகிக்கும் நாடுகளுக்கு மட்டுமே உரித்தான ஒன்றா? என்பன போன்ற கேள்விகள் தொழில்நுட்பத்தின் தீவிரத் தேவையால் இன்று முன்னிறுத்தப்படுகின்றன. மனிதனின் அடிப்படைத் தேவைகள் விரிவடையும் ஒவ்வொரு காலகட்டத்திலேயும், அத் தேவைகளை நிறைவு செய்ய புதிய புதிய வழிமுறைகளைக் கையாளவும், புதுப் புதுக் கருவிகளைக் கண்டுபிடிக்கவும் அவன் முனைகிறான். அத் தேவைகளின் நிரந்தரத் தன்மைக்கும், வேலை பளு குறைப்பு மற்றும் கால மேலாண்மைக்கும் புதிய புதிய நுட்பங்களைக் கையாள வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்படுகிறது. இவ்வடிப்படையிலேயே மனித வரலாறு தொடங்கிய காலந்தொட்டு இன்று வரை புதிய புதிய கண்டுபிடிப்புகளும், நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன/வருகின்றன.

     மேலும், தொழில்நுட்ப வல்லமையே ஒருநாட்டின் நாகரிக வளர்ச்சியினைத் தீர்மானிக்கும் அளவுகோலாகவும் அமைவதைக் காணமுடிகிறது. இவ்வியல்புக்குப் பழந்தமிழகமும் விதிவிலக்கல்ல. இவ்வடிப்படையில், பழந்தமிழர் கட்டுமானத் தொழில்நுட்பத்தினையும் கட்டுமான பொருள்களையும் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.

கட்டுமானத் தொழில்நுட்பம்

    கட்டுமானத் தொழில்நுட்பம் என்ற இக்கட்டுரையானது, குடியிருப்புகள், நீர் நிலைகள், பாதுகாப்பு அரண்கள், பிற கட்டுமானங்கள் ஆகிவற்றின் கட்டுமான நுட்பங்களையும் கட்டுமானப் பொருள்களையும் விளக்குகிறது

1. குடியிருப்பில் பல்வகை நுட்பங்கள்

    குடியிருப்புகள் சுகாதார வசதிகளுடன், பயன்பாட்டு நோக்கில், திட்டமிட்ட அமைப்பினையும் கொண்டிருந்தன. தெருக்களின் இரு புறங்களும் பெரிய பெரிய இல்லங்கள், பல்வகைப் பயன்பாட்டுடன் கூடிய தொழில்நுட்பத்துடன் எழுப்பப்பட்டிருந்தன. வானை முட்டும்படியான உயர்ந்த நல்ல இல்லில் ஆங்காங்கே காற்றோட்டத்திற்கான சாளரங்கள் அமைத்துக் கட்டப்பட்டிருந்ததையும் அறியமுடிகிறது(மதுரைக்.356-358). நிலாமுற்றமும், பெரிய அணிகள் வைத்த அறைகளோடு கூடிய இடங்களும், மானின் கண்ணைப் போலத் துளை செய்யப்பட்ட சாளரங்களைக் கொண்ட மாளிகைகளும் இருந்ததை,

வேயா மாடமும் வியன்கல விருக்கையும்

மான்கட் காலதர் மாளிகை யிடங்களும் (சிலப்.5:7-8)

என்ற அடிகள் காட்டுகின்றன. செம்பினால் செய்யப்பட்டது போன்ற தன்மையைக் கொண்ட நெடிய சுவர் அமைந்திருந்ததையும், அச்சுவரில் வடிவழகையுடைய பல பூக்களையுடைய ஒப்பற்ற பூங்கொடியை ஓவியமாய் வரைந்திருந்ததையும்,

செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவ

ருருவப் பல்பூ வொருகொடி வளைஇக்

கருவொடு பெயரிய காண்பி னல்லில்  (நெடுநல்.112-114)

என்ற அடிகள் காட்டுகின்றன. அதேபோல, மரகதம், வயிரம் ஆகிய மணிகள் வைத்துப் பதித்த பவளத் தூண்களுடன் கூடிய திண்ணைகளை உடைய  நெடுநிலை மாளிகைகளை,

மங்கல நெடுங்கொடு வானுற வெடுத்து

மரகத மணியொடு வயிரங் குயிற்றிப்

பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை

நெடுநிலை மாளிகை                     (சிலப்.5:146-149)

என்ற அடிகள் காட்சியாக்குகின்றன.

          அ. பருவ நிலைக்கு ஏற்ற தளங்கள்

       கட்டடங்களைக் கட்டுவதற்கான தொழில்நுட்பங்களையும் அரணைமனை அமைப்பையும் நெடுநல்வாடை விளக்கிச் செல்கிறது(நெடுநல்.72-114). அதேபோல, பலமாடிக் கட்டடங்களையும், பருவநிலைக்கு ஏறப உறையும் தளங்களையும் (வேனிற் காலத்திற்கான சிறப்பு வடிவமைப்பு),

வானுற   நிவந்த மேனிலை மருங்கின்

வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்

நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்

போர்வாய் கதவந் தாழொடு துறப்ப  (நெடுநல்.60-63)

என்ற அடிகள் காட்டுகின்றன. இதைப்போலவே, வேனிற் காலத்திற்கும், கூதிர்க் காலத்திற்கும் தனித்தனியே தளங்கள் வடிவமைக்கப்பட்டிருந்த தொழில்நுட்பத்தை,

வேனிற் பள்ளி மேவாது கழிந்து

கூதிர்ப் பள்ளிக் குறுங்க ணடைத்து (சிலப்.4:60-61)

என்பதில் அறிய முடிகிறது. இதில், இளவேனிற் காலத்திற்குரிய நிலா முற்றத்தே செல்வதை தவிர்த்து, கூதிர்க் காலத்துக்குரிய இடைநிலை மாடத்தே சென்று தங்கினர் என்ற செய்தி பெறப்படுகிறது. அதேபோல, தனக்குள்ள இடமெல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப்பெற்று, உயர்ந்த ஏழு நிலையினையிடைய மாடத்தினை,

                         இடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து’(முல்லை.86)

என்பதில் காணமுடிகிறது.

            மேலும், வானை அளக்கும் மாளிகையையும், அதில் உள்ள நிலா முற்றத்தில் பெண்கள் வரிப்பத்து விளையாடுவதையும், ‘வான்றோய் மாடத்து வரிப்பந் தசைஇ’(பெரும்பாண். 333) என்பதிலும், நகரில் மாடங்கள் மிக உயரமானதாகவும், மலைகளின் கூட்டத்தைப் போன்று நெருக்கமானதாகவும் அமைக்கப்பட்டிருந்ததை, ‘மலைக்கணத் தன்ன மாடஞ் சிலம்ப’ (புறம். 390:7) என்பதிலும், உயர்ந்த, மணியைவிட அதிகமாக ஒளிவீசும் மாடத்தினை, ‘கதிர்விடு மணியிற் கண்பொரு மாடம்’(புறம். 53:2) என்பதிலும் காணமுடிகிறது. மணியைவிட அதிக பளபளப்புத் தன்மை கொண்ட மாடம் என்பதனால் தேர்ந்தெடுத்த கற்களைப் பளபளப்பாககி கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும்  நுட்பம் கைவரப்பெற்றிருந்தமை தெளிவாகிறது. இவை இன்றைய நிலையில் பயன்படுத்தப்படும் சலவைக் கல்லை ஒத்தவையாகலாம். கல்லைத் தேர்ந்தெடுக்கவும், அறுத்தெடுக்கவும், பளபளப்பாக்கவும் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் பழந்தமிழர் கொண்டிருந்தனர் என்பது இதன்வழி உய்த்துணரப்படுகிறது. 

ஆ. மாடங்கள்

            பண்டைத் தமிழர் இருப்பிடங்களில் மாடம் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. அக்கால மக்களின் வாழ்க்கை மேன்மையையும், நாகரிக வளர்ச்சியையும், தொழில்நுட்பத் திறனையும் மாடங்களின் கட்டுமான நுட்பம் அறிவிக்கிறது. குறிய படிகளை உடைய, நெடிய ஏணிகள் சார்த்தின, வளைந்த சுற்றுத் திண்ணைகளையும், பல கட்டுக்களையும், சிறிய வாயில்களையும், பெரிய வாயில்களையும், பெரிய இடைகழிகளையும் உடைய மேகம் படியும் மாடங்களும், அம்மாடங்களில் தென்றல் காற்று நுழையும் இடமாகிய சாளரமும் வைத்துக் கட்டப்பட்டிருந்த நுட்பத்தினை,

குறுந்தொடை நெடும்படிக்காற்

கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற்

புழைவாயிற் போகிடைகழி

மழைதோயு முயர்மாடத்து     (பட்டி.142-145)

என்ற அடிகள் காட்டுகின்றன. வேயாடமாடம் என்பது நிலாமுற்ற அமைப்பை விளக்கி நிற்கிறது. இது தற்காலத்தில், ‘மொட்டைமாடி’ என்று வழங்கப்படும் அமைப்பாகும். பெண்கள் பந்தாடுமிடமாகப் பரந்த அமைப்பைக் காட்டுகிறது. மாடத்தின் சுவர்களான மதில்கள் விளங்கின. அங்கு வள்ளிக் கூத்து நடைபெற்றது.  மாடத்தின் உயரந்த அமைப்பு நகரச் சிறப்பைப் பறை சாற்றுகிறது.

            அதேபோல, ‘வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇ’(பெரும்.333), ‘விண்பொர நிவந்த வேயா மாடத்து, இரவின் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி’ (பெரும்.348-49), ‘விண்தோய் மாடத்து விளங்குசுவர் உடுத்த, வாடா வள்ளி...’(பெரும்.369-70), ‘மலைக் கணத்தன்ன மாடம் சிலம்ப என, அரிக்குரல் தடாரி இரிய ஒற்றி’(புறம்.390), ‘மாடம் ஓங்கிய மணல்மலி மறுகு’(பெரும்.322), ‘இடஞ்சிறந்து உயரிய எழுநிலை மாடம்’(முல்லை.86), ‘மழையாடு மலையின் நிவந்த மாடம்’(மதுரை.355), ‘மலை புரை மாடம்’(மதுரை.406), ‘நிரைநிலை மாடம்’(மதுரை.451), ‘பிறங்குநிலை மாடம்’(பட்டின.285), ‘மலையென மழையென மாடம் ஓங்கி’(மலைபடு.484), என்பவற்றில், மலைபோன்று உயர்ந்த, இடத்தால் அகன்ற, வரிசைபட அமைக்கப்பட்ட, பலநிலைகளைக்கொண்ட  மாடங்களின் வகைககள் காட்டப்படுகின்றன.

            மேலும், புதுப்பிறை வடிவிலே மாடங்களுக்கு அழகு செய்யப்பட்ட கவின்திறனும்,  மாடத்திற்கு பனிக்கயம்போல ஓவியம் வரைந்து நிறமூட்டப்பெற்றதையும், அதன் தூண்களின் வேறுபட்ட அமைப்பையும், ‘புதுப்பிறையன்ன சுதை செய் மாடத்து, பனிக்கயத்தன்ன நீள்நகர்’  (புறம்.378), ‘சுதை மாடத்து அணிநிலாமுற்றம்’ ( கலி.96), ‘நெடுங்கால் மாடத்து ஒள் எரி’ (பட்டின.111), ‘கொடுங்கால் மாடத்து நெடுங்கடை’ (பட்டின.261) என்பவற்றில் அறியமுடிகிறது. அரண்மனை - மாடங்கள் எல்லாம் வெள்ளி போன்ற சுண்ணச் சாத்தினால் பூசப்பட்டிருந்தன. நீலமணி போன்ற கரிய திரண்ட தூண்கள் அங்கங்கே காணப்பட்டன. செம்பினால் செய்து அமைத்த நீண்ட உட்புறச் சுவரிலே அழகிய பல பூக்களைக் கொண்ட பூங்கொடிகள் எழுதப் பெற்றிருந்தன(நெடுநல்.72-114).

இ. நகர்

            நகர் என்னும் சொல் இருப்பிட வகையில் மிகவும் வளமான இருப்பிடத்தையும், நகரத்தையும் குறித்து நிற்கிறது. ‘முரசு முழங்கு நெடுநகர்’(பதி.12), ‘உருகெழு நெடுநகர்’ (பதி.88), ‘வரைகுயின்றன்ன வான்தோய் நெடுநகர்’(அகம்.93), ‘விண் பொரு நெடுநகர்’ (அகம்.167),  ‘நெல்லுடை நெடுநகர்’(அகம்.176; புறம்.287),  மலை புரை நெடுநகர்’ (அகம்.296),  ‘வெண்மணல் நிவந்த பொலங்கடை நெடுநகர்’(அகம்.325), ‘பொன்னுடை நெடுநகர்’(அகம். 385),  ‘நெடுநகர் வரைப்பில் படுமுழா ஓர்க்கும்’ (புறம்.68), ‘ஓண்சுடர் நெடுநகர்’(புறம்.177), ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’ (பெரும்.405), ‘நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப்பள்ளி’(மதுரைக்.169), ‘கடியுடை வியல் நகர்’(நெடுநல்.49) ஆகிய குறிப்புகள் நெடுநகரான இல்லங்களின் அமைப்பையும், இயல்பையும் விளக்கி நிற்கின்றன.

            மேற்காட்டிய நெடுநகர், மலைத்தொடர் போல தொடர்பான அமைப்புடையது; வெண்மணல் பரவிய முற்றம் உடையது; செங்கல்லால் அமைக்கப்பட்ட இருப்பிடத்தையுடையது; உயர்ந்த அமைப்புடையது; மதிலாற் சூழப்பட்டது; அழகிய வாயிற்கதவுகளைக் கொண்டது; ஒண்சுடர் விளக்குகளால் ஒளி பொருந்தியது; நெற்குதிர்கள் நிறைய உடையது; உருவிலே சிறந்த கவின் பொருந்தியது; பலர் நிறைந்து வாழும் இயல்புடையது; பொன் கொழிக்கும் செல்வம் நிரம்பியது; முரசு முழங்கும் ஓசையுடையது; முழவு அதிரும் விழவுடையது. இவற்றிலிருந்து பழந்தமிழரின் வளவாழ்வையும், கட்டுமானத் தொழில்நுட்பத்தினையும்  அறியமுடிகிறது.

ஈ. பெருநகரின் கட்டமைப்பு

            பெருநகரின் கட்டுமான அமைப்பானது, பாதுகாப்பு, போக்குவரத்து, செய்தொழில் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. நகரின் உள்ளமைப்பு அரசன் இருக்கையை நடுவாகக் கொண்டு, அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பெருங் குடிமக்கள் வீதிகளும், போர் மறவர், கொல்லர், குயவர் முதலிய பல்வேறு தொழில் புரியும் மக்கள் வாழும் வீதிகளும் முறைமுறையாக அமைந்திருந்தது. இந்த அமைப்பு தாமரைப்பூவின் நடுவிலுள்ள கொட்டையை அடுத்து இதழ்கள் அமைந்திருப்பதைப் போல உள்ளது என்று மதுரை நகரையும், கச்சி நகரையும் புலவர் காட்டுவர்.

                              மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

                             பூவோடு புரையும் சீர்ஊர் பூவின்

                             இதழகத்து அனைய தெருவம் அண்ணல்கோயில்

                             தாதின் அணையர் தண்தமிழ்க் குடிகள் 

                              தாதுஉண் பறவை அனையர் பரிசில் வாழ்நர் ( பரி.8:1-6)

 

                   நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்

                   நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்

                   தாமரைப் பொகுட்டின் காண் வரைத்தோன்றி

                   ---------- ------------ --------- ----------

                   மலர்தலை உலகத்துள்ளும் பலர்தொடி

                   விழவு மேம்பட்ட படிவிறல் மூதூர் (பெரும்.402-411)

உ. சுகாதார வசதி

            கழிவுநீர் செல்லும் வழிகள் அமைந்த வீடுகள்

            சிறிய இல்லமாயினும் காற்றோட்ட வசதி உடையதாகவும், சுகாதார வசதிகளுடனும் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன. இல்லங்களிலிருந்து கழிவு நீர் வெளியேற்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இச்சாய்க்கடைகள் ‘சுருங்கை தூம்பு’ என்று வழங்கப்படுகின்றன. இல்லங்களில் சிந்தும் கழிவு நீரானது வெளியேறுமாறு கற்களால் மறைத்து அமைக்கப்பட்ட சுருங்கைத் தூம்பை, ‘சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர்’ (மணி.28:5) என்பதிலும், சுருங்கைத் தூம்பின் வழியே கழிவு நீர் வெளியேறியதை, ‘சுருங்கை வீதி மருங்கிற் போகி’ (சிலப்.14:65) என்பதிலும் அறியலாம்.

ஊ. பொது இருப்பிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள்

அரங்கு

            காப்பியங்களில் அரங்கு அமைப்பு பற்றிய தெளிவான கருத்தினைப் பெறமுடிகிறது. இசை நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களாக இவ்வரங்குகள் காணப்படினும், அமைப்பிலும், தொழில்நுட்பத்திலும், சங்க இலக்கியம் சுட்டும் ‘பொதியில்’ மற்றும் ‘மன்றம்’ ஆகியவற்றிலிருந்து அரங்கு பெரிதும் வேறுபடுகிறது. இவ்வரங்குகள் கலை நிகழ்ச்சிகளின் அரங்கேற்றத்திற்காகவே அமைக்கப்பட்டனவாக திகழ்கின்றன. மேலும், இவை நிகழ்ச்சிகளுக்காக உடனுக்குடன் அமைக்கப்படும் ‘தற்காலிக இருப்பிடமாக’ (Temporary Auditorium) இருந்தமை தெரியவருகிறது. சிலப்பதிகாரம் அரங்கு அமைப்பு பற்றி விரிவாக மொழிகிறது. தேர்ந்த சிற்ப நூலாசிரியர் வகுத்த நெறியில் சிறிதும் பிறழாது அரங்கம் அமைத்தற்குப் பழுதற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து, பின் பொதியமலை முதலான புண்ணிய மலைச்சாரலில் ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்கும் இடையில் ஒரு சாண் இடைவெளியுடன் ஓங்கி வளர்ந்த மூங்கில்களை வெட்டிக் கொணர்ந்து, நூல் நெறிப்படி உத்தமனின் கைப்பெருவிரல் இருபத்து நான்கு கொண்ட அளவு இருக்குமாறு அம்மூங்கிலைத் துண்டு செய்தனர். அதனையே அரங்கம் அளக்கும் கோலாகக் கொண்டு, ஏழுகோல் அகலம், எட்டுக்கோல் நீளம், ஒருகோல் உயரமாக நடன அரங்கத்தை அமைத்தனர். இவ்வரங்கிற்கு இருவாயில்கள் இருந்தன.  தூண்களின் நிழல் அரங்கிலும் அவையிலும் விழாதபடி நிலை விளக்குகளை ஆங்காங்கே அமைத்தனர்.  உருவு திரையாக ஒரு முக எழினியையும், பொருமுக எழினியையும், கரந்து வரல் எழினியையும் வேலைப்பாடுடன் அமைத்தனர். ஓவியத்துடன் கூடிய மேல் விதானமும் அமைத்தனர். புகழ்மிக்க முத்து மாலைகளான சரியும், தூக்கும், தாமமும் என்னும் இவற்றை எங்கும் அழகுபடத் தொங்க விட்டனர்(சிலம்பு.3:95-112). இவ்வகைத் தொழில்நுட்பமும், புதுமையும் வாய்ந்தவையாக அரங்குகள் அமைகின்றன. இவ்வரங்குகள்  மன்றத்தின் வளர்நிலையாகவே காட்சியளிக்கின்றன. ‘சுடும ணேற்றி யரங்குசூழ் போகி’ (மணி.18:33) என மணிமேகலையும் அரங்கு பற்றி குறிப்பிடுகிறது. இதில் நிலையான அரங்கும், அதன்¢ பெரிய அமைப்பும் தெரியவருகிறது.

2.நீர்நிலைகள்

            நீர்நிலைகளே ஒரு நாட்டின் மூலதனம் என்பதைப் பழந்தமிழர் நன்கு அறிந்திருந்தனர். ‘நீரின்று அமையாது உலகு’(குறள்.20) என்பார் வள்ளுவர். நாடாலும் மன்னர்கள் நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று புலவர்களால் அறிவுறுத்தப்பட்டனர். ’உணவெனப் படுவது நிலத்தோடு நீரே’(புறம்.18:18-21என்றும், ‘நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’ (புறம்.18:22,23) என்றும் வலியுறுத்தப்பட்டன.

அ. பாசனத்திற்கான நீர் நிலைகள்

            அணைகள் / குளம்

ஓடிவரும் மழைநீரினைத் தேக்கிவைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்த அறையும், பொறையும் அமைந்த பகுதிகளை இணைத்து, வளைந்த வடிவிலான அணைகள் கட்டப்பட்டன. இந்நுட்பத்தினை,

அறையும் பொறையு மணந்த தலைய

எண்ணாட் டிங்க ளனைய கொடுங்கரை                         

தெள்நீர்ச் சிறுகுளம் ----------   (புறம்.118:1-3)

என்பதில் அறிய முடிகிறது. இதில், பாறைகளையும், சிறிய குவடுகளையும் இணைத்துக் கட்டப்பட்ட, எட்டாம் நாள் தோன்றும் பிறை நிலவைப் போன்று வளைந்த கரையையுடைய குளம் சுட்டப்படுகிறது. மேலும்,                                             

வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது

படமடைக் கொண்ட குறுந்தா ளுடும்பின் (புறம்.326)

என்பதில், நீர் வெளியேறும் வழிகளுடன் கூடிய அணைக்கட்டுப் பகுதியும், அணையில் காணப்பட்ட இடுக்குகளில் சிறுவர்கள் உடும்பு பிடித்த காட்சியும் விளக்கப்படுகிறது.

            புதவு மற்றும் மடுகு

            அணைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தேக்கி வைத்த நீர், புதவின் வழியே திறக்கப்பட்டு, கட்டப்பட்ட கால்வாய்களின் வழியாக வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனை,

ஓம்பா ஈகை மாவேள் எவ்வி

புனல் புதவின் மிழலையொடு கழனி (புறம்.24:18-19)

என்ற அடிகள் காட்டுகின்றன. நீர் வெளியேற்றும் வாயில்களில் பாசனத்திற்காக திறந்துவிட்ட நீரின் ஓசையை, ‘இழுமென வொலிக்கும் புனலம் புதவில்’(புறம்.176:5) என்கிறது.  அதேபோல, அணைகளிலிருந்து நீர் வெளியேற்றும் வாயிலில் பூம்பொய்கை அமைந்திருந்ததையும், புனல்வாயிலில் பாசனத்திற்கு நீர் வெளியேற்றப்பட்டதையும் (பதி.13:1-3; 27:9), குளம் முதலியவற்றில் நீர் புகும் வாயில் அமைக்கப்பட்டிருந்ததையும் (மலைபடு.449, அகம்.237:14) இலக்கியங்கள் காட்டுகின்றன. மேலும், நீர்த்தேக்கத்தில் இருந்து மிகுதியான நீர் புதவின் வழி பாசனத்திற்கு வெளியேற்றப்படும் கட்டுமான அமைப்பினையும்(அகம்.326:11), காட்டாற்றின் இடையே ஆங்காங்கே ஆழமான மடுக்கள் கட்டப்பட்டிருந்ததையு‹ (மலைபடு.213), அணைகளில் வழிந்தோட அமைக்கப்பட்ட போக்கு மடையினையும் (புறம்.24:19, புறம். 176:5), மதகில் நீர் நிறைந்திருந்ததால் எப்போதும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்ததையும், அதனைத் தாங்கும் வண்ணம் நீர்நிலைகளை வலுவுடன் அமைந்திருந்த நுட்பத்தினையும்(புறம்.376:19-20) காணமுடிகிறது.

ஆ. குடிநீர்த் தேவைக்கான நீர்நிலைகள்

       வேளாண்மை தவிர்த்த குடிநீர்த் தேவைகளுக்கான தனியான நீர்நிலைகளையும் பழந்தமிழர் அமைத்தனர். இவ்வகை நீர் நிலைகளிலிருந்து பெறப்படும் நீரினைத் தூய்மைப்படுத்தி பயன்படுத்தினர்.

            நீருண்துறை

     உண்துறை என்பதற்கு, ‘உண்ணும் நீர் கொள்ளும் நீர்த்துறை’ என்று பொருள் வழங்குகிறது சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(ப.332). இவ்வகை, உண்துறையை இலக்கியங்கள் பரவலாகக் காட்டுகின்றன. நீரின் பயன்பாடு கருதி, இயற்கை நீர்நிலைகளான அருவி போன்றவற்றிருந்து நீர் பெறும் தொழில்நுட்பத்தோடு இந்நீருண்துறைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தேவைக்கேற்ப நீர் பெறப்பட்டது. இத்துறையில் தௌ¢ளிய நீரினையும், பாசிபடர்ந்த நீரினையும், அருவியின் அடித்துவரப்படும் மலைபடுபொருள்களோடு கூடிய நீரினையும் காணமுடிகிறது. இந்நீருண்துறையால் குடிநீரின் தேவையை நிறைவு செய்தனர்.

            உண்டுறையில் நீர் பருக இறங்கிய மாதர் அஞ்சி ஓடும்மாறு, பொய்கையில் வாளைமீன் பாய்ந்ததையும்(நற்.310:1-4), மலையினின்றும் இறங்கும் அருவி குரங்கு தீண்டியதனால் விழுந்த பலாப்பழத்தினை உண்டுறையின்கண் கொண்டுவந்து சேர்த்ததையும்(குறு.90:3-5), காதலர் தொடுந்தோறும் நீங்கி, பிரியும் தோறும் பரவுதலால் பசலை ஊருண்கேணியின் உண்டுறையில் கூடிய பாசி போன்றுள்ளதையும்(குறு.399:1-3) புலவர் காட்சிப்படுத்துவர். மேலும், உண்துறையில் காவல்  தெய்வம் நிறுவப்பட்டிருந்ததையும் (ஐங்.28), துணைபுணர்ந்த கரிய தும்பி உண்துறையில் அலர்ந்த தாமரைப் பூவை நீர் சாய்க்க, அப்பூவிலிருத்தலை வெறுத்து வேறொரு பொய்கையைத் தனக்கு இருப்பாக ஆராய்ந்திருந்து பழைய பொய்கையை நினைத்து அலமரும் காட்சியும்(கலி.78:1-3), உண்துறையில் பாவையை வைத்து மகளிர் குவரையாடும் காட்சியும்(அகம்.269:18-20), ஆண்நண்டு, நாவல்மரம் உண்துறையில் உதிர்த்த கனியின் அழகு கெடக் கவர்ந்து சென்று, தாழைவேரின் கீழேயுள்ள தன்பெடை நண்டிற்குக் கொடுத்ததையும்(அகம்.380:4-6), உண்துறைக்கு மலையிடத்துப் பூத்த பூக்களைத் தலைநீர் கொண்டுவந்து ஒதுக்குதலையும்(புறம்.390:23,24) காணமுடிகிறது. மகளிர் உண்துறையில் விட்டுச் சென்ற மகரக்குழையினைத் தன் இரை என எடுத்த சிச்சிலிப் பற¬வையினையும்(பெரு.311-316), பகைவரது மனையிடத்திருந்து கொண்டுவரப்பட்ட மகளிர், உண்துறைசென்று நீராடி, அம்பலத்தை மெழுகி, அந்திக் காலத்தில் விளக்கு ஏற்றியதையும்(பட்.246-248) அறியமுடிகிறது.

3.பாதுகாப்பு அரண்கள்

            ‘பிறர் கொள்ளுதற்கு அரிய உயர்வு, அகழ முடியாத அகலம், அழிக்க இயலாத திண்மை, அணுகுவதற்கு இயலாத அருமை ஆகிய நான்கும் அமைந்ததே அரண் எனப்படும்; நாம் காக்க வேண்டிய இடம் சிறிதாக, நம்மைக் காக்கும் பேரிடத்தை உடையதாகவும், உறுபகையின் ஊக்கம் அழிப்பதாகவும் அமைவது அரண்; புறத்தாரால் கைப்பற்றுதற்கு அரியதாகவும், பலவகை உணவுகளைக் கொண்டதாகவும், புறத்தாரால் அழிவு நேருமிடத்தில் உதவும் நல்லாள் உடையதாகவும் இருப்பது அரண்; அரண் விட்டகலாது முற்றி நிற்பாரை வெல்வது அரண்; போர் முனையில் புறத்தார்கெட, அகத்தோர் வினை வீறு பெற்று  மாட்சியுறல் அரண்’ (குறள்.அதி.75) என அரண்களின் தன்மைகளைச் சுட்டுவார் வள்ளுவர். இவ்வகைச் சிறப்பும் அருமையும் வாய்க்கப்பெற்ற அரண்களை, பலவகைத் தொழில்நுட்பங்களுடன் அமைக்கும் வன்மையைப் பழந்தமிழர்ப் பெற்றிருந்தனர் என்பதை இலக்கியச் சான்றுகள் சுட்டுகின்றன.

அ. இஞ்சி

       இஞ்சு+இ=இஞ்சி என்றாயிற்று; இஞ்சுதல் எனில் இறுகுதல்; இஞ்சியது இஞ்சி; செம்பையுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டின மதில் இஞ்சி என்பர் (பழந்தமிழராட்சி. ப.58). இவ்வகை இஞ்சிகளைப் பாதுகாப்புக் கருதி உறுதியானதாகவும், மிக உயர்வானதாகவும், படைக்கருவிகளைப் பொருத்தும் வகையிலும் கட்டும் நுட்பத்தினைப் பழந்தமிழர்ப் பெற்றிருந்தனர்.

வான் தோய, அரைத்த மண்ணால் ஆக்கப்பட்ட இஞ்சி ‘அரை மண் இஞ்சி’ என்னும் வழக்குப்பெற்றது(புறம்.341:5; பதி.58:6;  மலை.92; அகம்.35:2). இஞ்சிகள் மண் பூசி அழகுபடுத்தப்பட்டதால், ‘மண்புணை இஞ்சி’(பதிற்.58:6), ‘புணைமாண் இஞ்சி’ (அகம்.195:3) எனக் குறிக்கப்பட்டன. உயர்வு, அகலம், திண்மை அருமை என்ற நான்கும் உடைய, மலையென மருளும் மாண்பால் கோடுறழ் இஞ்சி, வரைபோல் இஞ்சி எனவும் குறிக்கப்படுகின்றன(பதிற்.16:1; 62:10). வான்தோய உயர்ந்த இஞ்சியை,

திரை படக் குழிந்த கல் அகழ் கிடங்கின்

வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி  (மலைபடு.90-91)

என்ற அடிகள் சுட்டுகின்றன.   மேலும், நீர் நிறைந்த கிடங்கினைப் புறத்திலே பெற்ற இஞ்சிகள் பல இருந்தன(புறம்.350:1,2; பதிற்.62:10). அவை பகை நோக்க, பகை தாக்க ஏற்ற வளைந்த பார்வை நிலைகளைக்(கண்காணிப்புக் கோபுரங்கள்) கொண்டன (பதிற்.16:1). அஞ்சத்தகும் பெருங்கை வீரர்கள் அவ்விஞ்சிகளைக் காத்து நின்றனர்(பதிற்.62:11). பழந்தமிழகத்தில் செம்பினாலான இஞ்சிகள் ஓரிரு இடங்களில் சிறந்திருந்தன என்பதும் அரைமண் இஞ்சியும், சுடுமண் இஞ்சியும் பெருவழக்காய்ச் சிறப்புற்றிருந்தன என்பதும் புலப்படும்.

ஆ. செம்புப் புரிசை

            பழந்தமிழர் செம்பை உருக்கி ஊற்றி கோட்டை எழுப்பும் தொழில்நுட்பத்தைப் பெற்றிருந்தனர். இந்நுட்பம் அரண்களின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவதாகவும், எதிரிபடைகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வன்மை பெறவும் கையாளப்பட்டதாகும். செம்பை உருக்குதற்கும், கட்டுமானத் தொழிலில் அவற்றைப் பயன்படுத்துதற்கும் பலவகையான நுட்பங்களையும், எந்திரங்களையும் பயன்படுத்தியிருத்தல் வேண்டும் என்பது தெளிவு. ‘செம்பு புனைந் தியற்றிய சேணெடும் புரிசை’(புறம்.201:9), ‘செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி’(அகம்.375;13) என்பனவற்றில் செம்பால் செய்யப்பட்ட கோட்டையையும்,

கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்

செம்புறழ் புரிசைச் செம்மல் மூதூர்       (புறம்.37:9-10)

என்பதில், செம்பை இடையிடையே இட்டு எழுப்பப்பட்ட கோட்டையையும் அறிய முடிகிறது.

இ. எந்திரம் பொருத்திய அரண்கள்

   உயர்ந்த மதில்களில் ஆங்காங்கே கண்காணிப்புக் கோபுரங்களும், வெளியில் அறியமுடியாவண்ணம் பொருத்தப்பட்ட படைக்கருவிகளும், அவற்றை இயக்கும் எந்திரங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

----------------- பருந்துயிர்த்

திடைமதிற் சேக்கும் புரிசைப்

படைமயங் காரிடை நெடுந லூரே (புறம்.343:15-17)

என்பதில், பருந்துகள் தங்கி இருக்கும் உயர்ந்த மதிலை உடைய, படைக்கருவிகள் பொருத்தப்பட்ட அரண்களைக் காணமுடிகிறது. மேலும், திங்களும் நுழையாத உயர்ந்த, எந்திரப்பொறி பொருந்திய குறுகிய வாயிலையுடைய அரணையும்(புறம்.177:4-6), மூட்டுவாய் அமைந்த சிலம்பொடு அணியாகிய தழை தங்குகின்ற எந்திரம் பொருந்திய கட்டினை உடைய எயிலினையும்(பதி.53:5-7) இலக்கியங்கள் காட்டுகின்றன.

      மேலும், காவற்காடும், அகழியும், வளைந்து தானே எய்யும் விற்பொறிகளும், கருவிரலுடைய கருங்குரங்கு போன்ற பொறிகளும், கல்லினை வீசும் கவணும், மதிலைப் பற்றுவார் மீது சொரிவதற்காக எண்ணெய் கொதிக்கும் மிடாக்களும், செம்பினை உருக்கும் மிடாக்களும், இரும்பினைக் காய்ச்சி உருக்குதற்கு அமைத்த உலைகளும், கல் இடப் பெற்ற கூடைகளும், தூண்டில் வடிவாக அமைந்த கருவிகளும், கழுத்தை முறுக்கும் சங்கிலிகளும், ஆண் தலைப்புள் வடிவமாக அமைக்கப்பட்ட அடுப்புகளும், மதிலைப் பற்றி ஏறும்போது தள்ளுகிற கவறுபட்ட கொம்புகளும், கழுக்கோலும், அம்புக் கட்டுகளும், மறைந்து கொண்டு போரிடும் ஏவறைகளும் நெருங்கினார் தலையைத் திருகும் மரங்களும், மதிலின் உச்சியைப் பற்றுவார் கையைத் துளைத்துத் துன்புறத்தி அப்புறப்படுத்தும் ஊசிப் பொறிகளும், பகைவர் மீது பாய்ந்து தாக்கும் மீன்கொத்திப் பறவை போன்ற பொறிகளும்  மதிலில் ஏறியவரைக் கோட்டால் கிழித்தெறியும் பன்றிப் பொறிகளும், கதவிற்கு வலிமை சேருமாறு கதவின் குறுக்கே உட்பக்கத்தில் அமைக்கப்படும் கணையம் போன்ற பொறிகளும், களிற்றுப்பொறி, புலிப்பொறி முதலான பிறவும் மிகுதியாக நெருங்கிச் சிறப்புற்று விளங்கும் மதுரையின் கோட்டையை இளங்கோவடிகள் படம்பிடிப்பார் (சிலம்பு.15:201-219). இக்காட்சிப்படுத்தலில், பழந்தமிழரின் கட்டுமானத் தொழில்நுட்ப அறிவின் வளர்ச்சியினைக் காணமுடிகிறது.

4. பிற கட்டுமானங்கள்

          கலங்கரை விளக்கம்

            பழந்தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியரிடம் பல்வேறு வகையான நீர்ப்போக்குவரத்துக் கலன்கள் இருந்ததோடு, தனித் தனித் துறைமுகங்களும் இருந்தன. அத்துறைமுகங்களை அடையாளப்படுத்தும் கலங்கரை விளக்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன. கடலில் திசையறியாது செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்ட, கலங்களை அழைக்க (கலம்+கரையும்), இக்கலங்கரை விளக்கங்கள் கட்டப்பட்டன. இதற்கான கோபுரங்கள் உயரமாகவும், கடலலைகள், உப்புக்காற்று போன்றவற்றால் பாதிப்படையா தொழில்நுட்பத்துடனும் அமைக்கப்பட்டன.

            புகார்த் துறைமுகத்திற்கு அருகில், பூம்புகார் நகர் இதுதான் என்று உள்நாட்டு வெளிநாட்டுக் கப்பல்களை வரவேற்கும் முறையிலும், கப்பல்கள் வழிதறாமல் இருக்கவும் கலங்கரை விளக்கு உயர்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்ததை, ‘கங்குன் மாட்டிய கனைகதி ரொண் சுடர்’(நற்.219) என்பதில் காணமுடிகிறது. மேலும், சிலப்பதிகாரத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் கப்பல்களுக்கு வழிகாட்டும் பொருட்டு காவிரிப்பூம்பட்டினத்தில் பெரிய கலங்கரை விளக்குகள் ஒளி வீசிக்கொண்டிருந்ததை, ‘இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்’  என்று காட்டுகிறார் இளங்கோ. விண்முட்ட உயர்ந்து ஒளிரும் விளக்குகள் இரவில் பெரிய வெளிச்சம் வீசிக் கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்டி வந்தன. அவை ஏணியின் உதவியாலும் ஏறமுடியாதவாறு உயர்ந்து நின்றன. இதனை,

வான மூன்றிய மதலை போல

வேணி சாத்திய வேற்றருஞ் சென்னி

விண் பெற நிவந்த வேயா மாடத்

திரவின் மாட்டிய விலங்கு சுடர் நெகிழி

உரவு நீ ரழுவத்தோடு கலங்கரையும்(பெரும்பா. 346-350)

என்ற அடிகள் குறிப்பிடுகின்றன.

5. கட்டுமானப் பொருள்கள்

கட்டடங்களின் உறுதிப்பாட்டிற்கும், நிலைப்புத்தன்மைக்கும் தொலைநோக்கோடு சிந்தித்து, அதற்கான கட்டுமானப் பொருள்களை இயற்கையாகப் பெற்றும், செயற்கை முறையில் உண்டாக்கியும் பயன்படுத்தினர். இயற்கையில், திணைசார் பொருள்களைக் கொண்டு (மூங்கில், கருப்பந்தட்டை, வௌ¢ளிய மரக்கொம்பு, நாணற்புல், தாழை, தென்னங்கீற்று, பனைஓலை, ஈந்தின் இலை, தினை மற்றும் வரகின் தாள்) உருவாக்கப்பட்ட குடியிருப்புகளைத் தவிர்த்து, தொழில்நுட்பத்தால் செயற்கையாக உண்டாக்கிய கட்டுமானப் பொருள்கள் என்பதில், அரைமண்,   சுடுமண் (செங்கல், ஓடு), செம்புக் கூழ், அறுத்து எடுக்கப்பட்ட கருங்கல், பளிங்குக் கல், பூச்சு மண், பொன் தகடு, பவளம் போன்றவை சிறப்பிடம் பெறுகின்றன.

அ. அரைமண்

மண்ணை அரைத்து, அதனைக்கொண்டு வலுவானதாக உருவாக்கப்பட்ட கோட்டையை, ‘அரைமண் இஞ்சி’ என்று பழந்தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.

அரைம ணிஞ்சி நாட்கொடி நுடங்கும்(புறம். 341:5)

என்பதில் அரைத்த மண்ணால்(சிமெண்ட்) கட்டப்பட்ட கோட்டையில் கொடி பறந்துகொண்டிருந்ததை அறிய முடிகிறது. மேலும், அரைத்த மண்ணால் இஞ்சி – மதில் அமைக்கப்பட்டதை பதிற்றுப்பத்து (58:60: 68:16) காட்டுகிறது.

ஆ. பூச்சுமண் மற்றும் சுண்ணம்

            கட்டடங்களின் உறுதிப்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட அரைமண் போலல்லாது, சுவர்களின் வெளிப்புறம் பூசி அழகுபடுத்தற்கும் மண் பயன்படுத்தப்பட்டது. இம்மண் குழம்பாக்கப்பட்டு கட்டடங்களின் மேற்பூச்சாகப் பூசப்பட்டது. இஞ்சிகள் இவ்வகைப் பூச்சு மண்ணால் அழகுபடுத்தப்பட்டதால், ‘மண்புணை இஞ்சி’, ‘புணைமாண் இஞ்சி’ எனக் குறிக்கப்பட்டன. இதனை, ‘மண்புனை இஞ்சி மதில்கடந்தல்லது’(பதிற்.58:7) என்பதிலும், ‘புனைமாண் இஞ்சி பூவல் பூட்டி’(அகம்.195:3) என்பதிலும் அறிய முடிகிறது. உடன்போக்கு சென்ற தன் மகள் தலைவனுடன் திரும்பி வருவாள்என்று தாய் அழகுடைய இஞ்சி (புறச்சுவர்) மீது செம்மண் பூசி மனையை அழகு செய்ததைக் காணமுடிகிறது (அகம்.195:1-5). மேலும், சுவற்றிற்கு பூச்சாக வெள்ளிய சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டது. இதனை ‘வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ’ (நெடுநல்.108) என்பதில் காணலாம்.

இ. இட்டிகை/செங்கல்

            செங்கற்களை வடிவமைத்து அதனைக் கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தும்  நுட்பத்தினையும் பழந்தமிழர் அறிந்திருந்தனர். ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’ (பெரும்பாண்.405) மற்றும் ‘நெடுமண் இஞ்சி நீள் நகர் வரைப்பு’(பதிற்.68:16); என்பதில்  செங்கல் மதிலால் ஆன எல்லை, வரைப்பு எனப்பட்டது தெரியவருகிறது. அதேபோல, சுட்ட செங்கல்லால் இல்லங்களின் நெடிய சுவர் எழுப்பப்பட்டதை, ‘இட்டிகை நெடுஞ்சுவர்’ (அகம்.167;13) என்பதில் காணலாம்.  சுடுமண்ணால் செய்யப்பட்டு, உயர்ந்த, புறப்படை வீட்டை சூழ்ந்த மதிலினையுடைய மூதூரையும் இலக்கியங்கள் சுட்டுகின்றன(பெரும்.405, 411). செங்கல் சுடுமண், இட்டிகை என வழங்கப்பட்டமை தெரியவருகிறது.

ஈ. ஓடுகள் மற்றும் உலோகத் தகடுகள்

            மனையின் சுவர்கள் சுட்ட செங்கற்களால் அமைக்கப்பட்டதுபோல, மேற்கூரை சுட்ட ஓடுகளால் உறுதியாக அமைக்கப்பட்டன. இவ்விரு பொருள்களின் உற்பத்திக்கும் வேறுவேறு தொழில்நுட்பத்தினைக் கையாண்டுள்ளனர் என்பது தெளிவு. ஓடுகளால் வேயப்பட்ட நெடிய நிலையையுடைய மனையை, ‘சுடும ணோங்கிய நெடுநிலை மனை’(மணி. 3:127) என்பதில் காணலாம்.  அதே வேளையில், பொருளாதாரத்தில் வளம் பெற்ற இல்லங்கள் சுட்ட மண்ணால் வேயப்படாது பொன்தகடுகளால் வேயப்பட்டிருந்தன. இதனை,

சுடும ணேறா வடுநீங்கு சிறப்பின்

முடியரசு ஒடுங்கும் கடிமனை   (சிலப்.14:146-7)

என்பதில் அறியமுடிகிறது. சுடும ணேறா என்பதற்கு உலோகத் தகடுகளாலான மேற்கூரை என்று விளக்கமளிக்கப்படுகிறது.

உ. கருங்கல்

            கருங்கல்லை சமச்சீரான வடிவில் அறுத்தெடுத்து, அவற்றைக் கொண்டு கிணறுகளின் சுற்றுச்சுவற்றை எழுப்பி, இயற்கை அழிவினின்று காக்க பயன்படுத்தினர். இந்நுட்பத்தினை, ‘கல்லுறுத் தியற்றிய வல்லுவர்க் கூவல்’ (புறம்.331:1) என்றும், ‘கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்’(அகம்.79:4) என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

ஊ. பளிங்குக் கற்கள்

     பளிங்குக் கற்களைக் கண்டறிந்து அறுத்தெடுத்து, அவற்றைப் பயன்படுத்தி மாளிகைகள், மண்டபங்கள் எழுப்பப்பட்டன. ‘மை இல் பளிங்கின் அன்ன’(அகம்.399:14) என்ற அடி பளிங்கை உவமையாக்குகிறது. பளிங்கு மண்டபம் கட்டப்பட்டிருந்ததும், அம்மண்டபத்தின் உள்ளிருப்போர் வெளியிருப்போருக்குத் தெரிந்தும், உள் நுழையும் வாயில் எதுவென அறிய முடியாத தொழில்நுட்பத்துடன் கூடிய, கட்டட வடிவமைப்பு நுட்பத்தினை, ‘பளிக்கரை மண்டபம்  பாவையைப் புகுகென’ (மணி.4:87) என்பதிலும், ‘தாழொளி மண்டபந் தன்கையிற் றடைஇ’(மணி.5:9) என்பதிலும் அறியமுடிகிறுது.

            இவையல்லாமல், பவளத்தாலான தூணையும், பொன்னாலான சுவரையும்,  சித்திரங்கள் தீட்டப்பட்டதுமான மேற்கூரையையும் உடைய,  ஒளி வீசும் பளிங்கு மண்டபத்தை,

பவழத் தூணத்துப் பசும்பொற் செஞ்சுவர்த்

திகழொளி நித்திலச் சித்திர விதானத்து

விளங்கொளி பரந்த பளிங்குசெய் மண்டபத்து (மணி.18:45-47)

என்ற அடிகள் சுட்டுகின்றன.

 முடிவு

            இயற்கையாக அமையப்பெற்ற மலைக்குகைகள் மற்றும் மரப்பொந்துகளில் மனிதன் ஒளிந்து வாழ்ந்த நிலையிலிருந்து, செயற்கையாக, குடியிருப்பு வசதியினை ஏற்படுத்திக்கொள்ள முனையும் நிலையில் அவனின் கட்டுமானத் தொழில்நுட்ப அறிவு  வெளிப்பட்டு நிற்கிறது. அவ்வாறு, இருப்பிட வசதியை ஏற்படுத்திக்கொள்ளும்போது, மண்ணின் தன்மை, சுற்றுச்சூழல், கூட்டமாக வாழ்வதற்கான வாய்ப்புகள், இருப்பிடங்களை ஒட்டியுள்ள தொழில்சார்ந்த நிலங்களின் தன்மை, இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாப்பு போன்ற பலவற்றையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வகையான முன்யோசனை  நிறைந்த, திட்டமிடுதலுக்குப் பின்னரே பழந்தமிழகத்தில் சிற்றூர்களும், பேரூர்களும் தோன்றியிருக்க வாய்ப்புகள் உள்ளன. இவ்வகையான இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக்கொள்வதிலும், கட்டடக்கலையில் தொழில் நுட்பங்களைக் கையாளுவதிலும் கைதேர்ந்தவர்களாகப் பழந்தமிழர் விளங்கியுள்ளனர் என்பதை மேற்கண்ட பழந்தமிழ் நூல்கள் காட்டும் சான்றுகள் வழி அறியமுடிகிறது.

            பழந்தமிழ்ச் சிற்றூர்ப் பகுதிகளில் காணப்பட்ட இல்லங்களுக்கும் நகரில் வீதிகளினூடே அமைக்கப்பட்ட இல்லங்களுக்கும் வேறுபாடுகள் மிகுந்துள்ளதைக் காணமுடிகிறது. சிற்றூர்ப் பகுதிகளில் திணை சார் பொருள்களால் உருவாக்கப்பட்ட இல்லங்கள் மிகுந்துள்ளன. இவை உறையுளின் தேவையை நிறைவு செய்தனவேயன்றி தொழில்நுட்பச் சிறப்பு வாய்ந்தவை அல்ல. அதேவேளை, நகர இல்லங்கள் கட்டடக்கலையின் உச்சமாகவும், நாகரிகத்தின் வெளிப்பாடாகவும், ஆடம்பரத்தின் ஆணிவேராகவும் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. அதேபோல,  பலவகைப்பட்ட நீர் நிலைகளின் உருவாக்கத்திலும், பல்வேறு நுட்பங்களுடன் கூடிய பாதுகாப்பு அரண்களின் அமைப்பிலும் கலங்கரை விளக்கம் போன்றவற்றாலும் பழந்தமிழரின் கட்டுமான நுட்பத்தினை அறியமுடிகிறது.

            கட்டுமானத்தின் உறுதிக்கும், பயன்பாட்டிற்கும் ஏற்ப, பலவகைக் கட்டுமானப் பொருள்களை பயன்படுத்தப்பட்டதும் மேற்கண்ட சான்றுகள் வழி அறியமுடிகிறது.

 *****