வெள்ளி, 22 மார்ச், 2013

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வித் திருவிழா




           உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிப்ரவரி 2013 முழுவதும் கல்வியியல் தொடர் நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. பிப்ரவரித் திங்கள் தொடர் நிகழ்வுகளில், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஒன்பது; மூன்று நாள் பயிலரங்குகள் இரண்டு; ஐந்து நாள் பயிலரங்கு ஒன்று; தேசியக் கருத்தரங்கு ஒன்று; கலை நிகழ்ச்சிகள்; மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் ஆகியவை இடம்பெற்றன. சிறப்பாக, உலகத் தாய்மொழித் தினமான பிப்ரவரி 21 அன்று, அறக்கட்டளைச் சொற்பொழிவு, மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை,கவிதை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. தமிழக முதல்வரின் பிறந்தநாளான பிப்.24அன்று நிறுவன வளாகத்தில் 65 பழமரக்கன்றுகள் நடும் விழா, சிற்றுண்டி நிலையம் திறப்பு விழா போன்றவை நடைபெற்றன.




தொடக்க விழா

        2013 பிப்ரவரி திங்கள் 1ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், தேசியக் கருத்தரங்குகள், தேசியப் பயிலரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு, அதன் துவக்க நிகழ்ச்சியாக 01.02.2013 அன்று மாலை 03.00 மணியளவில் தொடக்கவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவில் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம், இ.ஆ.ப., அவர்கள் பிப்ரவரித் திங்களுக்கான நிகழ்வுகளைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். கவிஞர் கலைமாமணி திரு ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களும், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். நிறுவனத் தனி அலுவலர் திரு தா.மார்டின் செல்லதுரை அவர்கள் நன்றியுரை கூறினார்.
வரவேற்புரை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல்,கலை(ம) பண்பாட்டுப் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன்

தலைமையுரை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன்

தொடக்கவுரை:தமிழ்வளர்ச்சிஅறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம்

வாழ்த்துரை: கலைமாமணி ஏர்வாடி திரு இராதாகிருட்டிணன்


வாழ்த்துரை:அரசுமொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்

நன்றியுரை :உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தனி அலுவலர் திரு மார்ட்டின்


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்



தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் ஒலிக்கும் வகையில் தமிழுக்கென்று தனித்ததொரு நிறுவனம் பிரெஞ்சு அகாதெமி போன்று உருவாக்கப்படவேண்டும் என்ற வேணவா தமிழறிஞரிடையே கனன்று கொண்டிருந்தது. இவ்வுணர்வுக்கனல் 1968 இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது அன்றைய தமிழக முதல்வர் பேரறிஞர் சி.என். அண்ணாதுரையவர்கள் வழி கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. அக்கருத்தரங்கில், தக்கணக் கல்லூரி முதுகலை ஆராய்ச்சி நிறுவன (பூனே) இயக்குநர் டாக்டர். கத்ரே, இதற்கான முன் வரைவுத் திட்டத்தினை வழங்கினார். அதன்படி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்' தோன்றி செயல்படுவதற்கான உதவியை யுனெஸ்கோவிடம் தமிழறிஞர் நாடினர்.

                1970 சூலைத் திங்களில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு பாரிஸில் நடைபெற்றது. அம்மாநாட்டைத் தொடங்கி வைத்த, அன்று யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் பொறுப்பிலிருந்த டாக்டர் மால்கம் ஆதிசேஷையா அவர்கள், 1968 நவம்பரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவுவது பற்றி யுனெஸ்கோ நிறைவேற்றிய தீர்மானத்தை எடுத்துவைத்தார். அம்மாநாட்டில், "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கட்டமைப்புப் பற்றிய திட்டமும் அறிவிக்கப்பட்டது.  பதிவு பெற்ற ஒரு சங்கமாக நிறுவுவது பற்றியும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1970 அக்டோபர் 21ஆம் நாள் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பெற்றது. சென்னை, ஸ்டெர்லிங் ரோடு, "தமிழகம்' இல்லத்தில் தற்காலிகமாக இயங்கி, 1972 முதல் சென்னை, மைய பல்தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் உயிர்ப்புப் பெற்று நாளும் தமிழ் மணம் பரப்பிக் கொண்டுள்ளது.

நோக்கம்
       தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு அவரும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன இவ் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன.

                தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.


                உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோன்றிய பொழுது அது தாய் நிறுவனமான உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் (International Association of Tamil Research - IATR) அரவணைப்பில் அமைந்தது. முனைவர் மு.வரதராசனாரை மதிப்புறு இயக்குநராகவும், முனைவர் கா. மீனாட்சி சுந்தரனாரை முதன்மை ஆட்சி அலுவலராகவும் நியமனம் செய்த பின்பு தனித்து இயங்கத் தொடங்கியது. தமிழ்ப் பணியும் விதைக்கப்பட்டு முளைவிடத் தொடங்கியது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்று நாற்றிசையும் புகழ்மணம் பரப்பி வருகிறது.

நிருவாகம் - கல்விப் புலங்கள் - பேராசிரியர்கள்:

     இயக்குநர் (மு.கூ.பொ.)
            முனைவர் கோ.விசயராகவன் 
     
     சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
            முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர்
           முனைவர் கா.காமராஜ், முதுநிலை ஆராய்ச்சியாளர்
           முனைவர் வி.இரா.பவித்ரா, முதுநிலை ஆராய்ச்சியாளர்
 
     தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புலம்
           முனைவர் கோ.வியசயராகவன் (இ.பொ.)
            முனைவர் அ.சதீஷ், இணைப் பேராசிரியர்
           முனைவர் கோ.பன்னீர்செல்வம், முதுநிலை ஆராய்ச்சியாளர்
           முனைவர் சு.தாமரைப்பாண்டியன், முதுநிலை ஆராய்ச்சியாளர்

     தமிழ் மொழி (ம) மொழியியல் புலம்
           முனைவர் பெ.செல்வக்குமார், இணைப் பேராசிரியர்
           முனைவர் க.சுசீலா, முதுநிலை ஆராய்ச்சியாளர்
           முனைவர் நா.சுலோசனா, முதுநிலை ஆராய்ச்சியாளர்

     அயல்நாட்டுத் தமிழர் புலம்
             முனைவர் கு.சிதம்பரம், முதுநிலை ஆராய்ச்சியாளர்
            முனைவர் து.ஜானகி, முதுநிலை ஆராய்ச்சியாளர்

முகவரி: 


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
(International Institute of Tamil Studies)
இரண்டாம் முதன்மைச் சாலை
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
தரமணி, சென்னை - 600 113.
தொ.பே. 044 22542992
இ.தளம்: www.ulakaththamizh.org