ஆய்வுக் கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்வுக் கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

தமிழர் அறக்கோட்பாடுகள் - சமூக உளவியல் நோக்கு

 முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113. பிப்ரவரி 17, 2020.

 

            அறம்என்பது மனித வாழ்வின் உயர் மதிப்பீடான விழுமியங்களை உருவாக்குவதாக அமைகிறது. அது மரபினருக்குத் தொடர்ந்து வழிவழி கற்பிக்கப்படுகிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களான அற இலக்கியங்கள், அறத்தை நேரடியாக வலிந்து வலியுறுத்தும் தன்மையைக் கொண்டுள்ளன. சங்க இலக்கியங்களில் அறம் வலிந்து வலியுறுத்தப்படுவதில்லை. எனினும், பாடற் கருத்தோடு இயைந் அறியுறுத்தல்களாக இருக்கின்றன. அறம் வாழ்வியலோடு இயைந்ததாக, இன்பமும் பொருளும் அறத்தின் வழிப்பட்டதாக இருக்க நெறிப்படுத்தப்பட்டது.

     புறநிலையில் அரசன், ஆட்சிமுறை போன்றவற்றிற்கான ‘அரசு’ சார்ந்த அறங்கள் பரவலாகவும் அவற்றோடு, தனிமனித அறமும், அவற்றின்வழி குடும்ப அறமும் ஆங்காங்கே வலியுறுத்தப்படுகின்றன. அகநிலையில் மாந்தர்களான தலைவன், தாய் (நற்றாய்+செவிலி) போன்றோரோடு நேரடியாக ‘அறன்’, அல்லது ‘அறம்’ என்ற சொற்கள் பயின்று வருவதைக் காணமுடிகிறது. அதேபோல, தலைவி கூற்றாக வரும் பாடல்களிலும் அறன் எனும் சொல் பயின்று வருகிறது. சமூகக் கட்டமைவிற்கும், செல்நெறிக்கும் தனிமனித ஒழுக்க நெறிகளும், அறச் செயல்களும் அடிப்படையாக அமைகின்றன. எனவே, அறத்தின் தேவை பெரிதும் வலியுறுத்தப்பட்டது. 

‘தனிமனிதன், ஒரு குடும்பம்-குழு-அரசு போன்றவற்றில் இணைந்தே செயல்படுகின்றான். சமுதாயம் தனிமனிதனைச் சமுதாய உறுப்பினனாக்கப் பெருமளவிற்குத் தொண்டு புரிகின்றது. பொதுவாகச் சமூக இயல்பு தனிமனிதன் இயல்பு ஆகிய இரண்டும் ஒருங்கே வளர்கின்றன’ (சமூகவியல், ப.64) என்பது சமூகவியல் கோட்பாடு. மேலும், தனி மனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூகப் பிணைப்பும் குடும்ப இணைப்பும், பழக்க வழக்கங்களும், விருப்பு வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்தும் அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன (தி.நீ.., ப.49) என்பது நோக்கத்தக்கது. எனவே, தமிழர் அறக்கோட்பாடுகளைச் சமூக உளவியல் நோக்கில் அணுகுவது தேவையாகிறது. 

அறம்

 அறுஎன்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே அறம்என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் சுட்டப்படுகின்றன. இதன் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்கு, ‘மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம்’ என்று சமூகவியல் விளக்கமும், பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்என்ற ஆன்மீக விளக்கமும் தரப்படுகின்றன(தி.நீ..,ப. 23). 

நல்ல அல்லது தீய செயல்கள் மூலம் தானே வெளிப்படும் மக்களுடைய நடத்தையைப் பற்றிய ஆய்வியல் கலை மேலை நாடுகளில் எதிக்ஸ்’ (Ethics) என வழங்கப்படுகிறது. இதைத் தமிழில் அறவியல் எனலாம். ‘எதிக்ஸ்’ என்னும் இக் கிரேக்கச் சொல் முதன் முதலில் பழகிப்போன நடத்தை, வழக்கம், மரபு என்னும் பொருள்களை உணர்த்தியும் பின்னர், நடத்தை என்னும் பொருளையும் வழங்குவதாகவும் உள்ளது.  தமிழில், அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் என்ற எட்டுவகையான பொருள்கள் பெருவழக்காக வழங்கப்பட்டு வருகின்றன (தி.தி.., ப.48).

 

தனிமனித நடத்தை பெரும்பாலோரால் பின்பற்றப்பட்டபொழுது ஒழுக்கமெனும் பண்பாக மலர்ந்து, வாழ்க்கை நெறியாக மாண்புற்றது எனலாம். எனவே அறம் என்பது மனிதவாழ்வின் விழுமியங்களை உருவாக்குவதும் கற்பிப்பதுவுமான கருத்தோட்டமாக அமைகிறது. அறத்தை மீறுவது சமூகக் குற்றமாக, தெய்வக் குற்றமாக பார்க்கும் சூழல் அமைந்த நிலையில் ‘சட்டம்’ உருவானது எனலாம். அறம் தவறிய சமூக ஒழுக்கச்செயல்களில் ஈடுபடுவோர் சட்ட தண்டனைக்கு ஆளாகினர். 

தனிமனிதரும் அறமும்

சங்க இலக்கியங்களில் அறன்இல், மாசுஇல், நிறைஇல் என்பன போன்ற சொற்களின் பயன்பாடு காணப்படுகிறது.  ‘இல்’ எனும் சொல்லின் முன் அறன், பண்பு, மாசு, மரன், வறன், நயன், நார், நிறை, முனிவு, புலை, மாண்பு, அன்பு, அருள், ஊறு, அசை, ஈரம் போன்ற சொற்கள் பயின்று வந்துள்ளன. இவற்றுள், அறன்இல்’ எனும் சொல் அன்னை, யாய் போன்ற சொற்களோடு சேர்ந்து அறன்இல் அன்னை, அறன்இல் யாய் என  வந்துள்ளது. அறன் இல்லாத என்பதை உணர்த்தும் அறன்இல் எனும் சொல்லன்றி, அறனிலாளன், அறனும் அன்றே, அறன் இன்று எனும் சொற்றொடர்களும் சங்க அக இலக்கியத்துள் பயின்று வந்துள்ளன. இச்சொற்கள் தலைவன், தலைவியின் ஊர், அஃறிணைகள் குறித்து செவிலி, தோழி மற்றும் தலைவியால் சுட்டப்படுவன. ஆயினும், அறம், அறன் எனும் சொற்கள் பயின்று வருகிற இடங்களைக் கொண்டு மட்டுமே தலைவனுக்குச் சுட்டப்படுகிற அறத்தை வரையறுத்துவிட முடியாது. இச்சொற்கள் நேரடியாக இடம்பெறாமல் கருத்து நிலையில் அறம் வலியுறுத்துகிற இடங்களையும் கருத்தில் கொண்டே தலைவனுக்கான அறக்கோட்பாட்டை வரையறுக்க முடியும். மேலும், ஒரே வகையான செயல், தொடர்புடைய இருவேறு மாந்தர்களின் பார்வையிலும் சமூக உளவியல் நோக்கிலும் வேறுபட்டு விளங்குவதையும் காணமுடிகிறது. அவ்வகையான செயல்களுக்குப் பொதுவானவர்களின் (சான்றோர்) கருத்து பெறப்பட்டு அறம் உறுதிசெய்யப்படுகிறது (எ.கா. உடன்போக்கு). அக வாழ்க்கையில் தலைவனுக்கான அறத்தை களவு, கற்பு என்ற இருநிலைகளிலும் பார்க்க முடிகிறது. இவ்விரு நிலைகளிலும் காணப்படும் மாந்தர்களான தலைவன், தலைவி, செவிலி, நற்றாய், தோழன், தோழி, வாயில்கள், கண்டோர் ஆகியோரின் கூற்றுகளின் வழி தலைவனுக்கான அறம் பெறப்படுகின்றன. 

தனிமனித அறங்களைக் குறிப்பிடும் இடத்து, தாம்வளம்பட வாழ்தல், தம் கேளிரைத் தாங்குதல், இரந்தோர்க்கு இல்லையென்னாது ஈதல் ஆகிய இம்மூன்றினையும் உயிரினும் மேலாகக் கொள்ளுதல் வேண்டும் (கலி.2:11,15,19) என்று அறிவுறுத்தப்பட்டது. அதேபோல, கிளையழிய வாழ்பவன் ஆக்கம் பொலிவு பெறாது(கலி.34:18). பொருளில்லான் இளமையும் (கலி.38:15) அறஞ்சாரான் மூப்பும்(கலி38:19) பொலிவழியும் என்றும் வலியிறுத்தப்பெற்றது. 

            பொன்னாலும், முத்தாலும் மணியாலும் செய்யப்படும் அணிகலன்கள் கெடுமானால் தொழில் வல்லோரால் சீர்படும். சால்பும் இயல்பும் வியப்பும் குன்றினால் மாசற்ற தம் புகழினை நிறுத்தல் முற்றுந்துறந்த முனிவர்க்கும் ஆகாது என்கிறார் கபிலர் (குறிஞ்சி.13-18). செயல்களுக்கு மனதும் அதில் தோன்றும் எண்ணங்களும் அடிப்படை என்பதால்,

                        ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்’

என்கிறார் வள்ளுவர். 

தனி வாழ்க்கையில் அறக்கோணல் ஏற்படுமாயின், அது சமுதாயத்திற்கு ஊறு பயக்குமென்ற நம்பிக்கை  அக்காலத்திலிருந்தது. தம் பெற்றோர் தன்னை நொதுமலர்க்கு வரைந்தால் அவ்வறமில் செயலால் வள்ளிக் கிழங்கும் கீழ்வீழா; மலைமிசைத் தேனுந்தோன்றா என்று எண்ணுகிறாள் தலைமகள்(கலி.39:11-14). அறக்கோணல் தெய்வக்குத்தமாக கருதப்பட்டது.

அறமும் நம்பிக்கையும்

அறம் இயற்கை நிகழ்வுகளோடும், சமூகத்தில் நிகழும் நன்மை தீமைகளோடும் பொருத்திப்பார்க்கப்பட்டது. சான்றாக, அகவாழ்வில் ஆடவர்க்கான அறத்தில் முதன்மையானதா வலியுறுத்தப்பட்ட ‘புணர்ந்தாரைப் பிரியாமை என்பதைக் கூறலாம்.  தலைவன்-தலைவி களவொழுக்கத்தில் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்ததற்கு எந்தவொரு சாட்சியும் இல்லை. இந்நிலையில் ‘புணர்ந்தாரைப் பிரியாமை’ என்ற ஆடவர்க்கான அறக்கோட்பாடே சமூக விழுமியமாக அமைந்தது. சமூகம் ஏற்றுக்கொண்ட அறங்களை மீறுவது இயற்கைக்கு எதிரான செயலாகவும், தெய்வக் குற்றமாகவும் வலியுறுத்தப்பட்டது. இது மிக நுட்பமான சமூக உளவியலாகும். எனவேதான், சூள் பொய்த்தான் மலையில் எப்படி அருவி வீழும் என்கிறாள் ஒரு தலைவி.

 களவில், சூள் பொய்க்கும் தலைவனின் செயல் பண்பற்றச் செயலாகவும், அறநெறி அற்றதாகவும் சுட்டப்பட்டது. அறக்கோணல் இயற்கைக்கு எதிரானதாகக் கட்டமைக்கப்பட்டது. எனவே, தலைவன் தன் வாய்மையில் பொய்த்தானோ என ஐயுறும் தோழிக்கு,

குன்றகல் நன்னாடன் வாய்மையில் பொய் தோன்றில்

திங்களுள் தீ தோன்றியற்று (குறிஞ்சிக்கலி,5)

எனப் பதில் மொழிகிறாள் தலைவி.  இந்நிலையிலேயே,

                               போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை’ (கலி.நெய்.16)

என்ற அறக்கோட்பாடு உருவாக்கப்படுகிறது. பெண்ணோடு பழகிவிட்டு இல்லையென்று கூறி ஏமாற்றும் அறம் மீறலுக்கு,  பொதுமக்களின் முன்னிலையில் தண்டனையும் வழங்கப்பட்டது(அகம்.526). 

அறத்தொடு நிற்றலும் சமூக உளவியலும்

சங்க இலக்கியங்கள் சுட்டுகிற களவு வாழ்க்கையில் எது அறம், எது அறம் அன்று என்பது குறித்த எதிர்நிலை கருத்துகள், விவாதங்கள் காணப்படுகின்றன. ‘அறனில் அன்னை’ என்ற சொல்லாட்சியும் ‘அறனிலாளன்’ என்ற சொல்லாட்சியும் நோக்கவேண்டியவை. ‘அறனில் அன்னை’ என்பது தலைவியின் தாயையும் ‘அறனிலாளன்’ என்பது தலைமகனையும் குறிப்பன.

  களவு வாழ்க்கையை அனுமதிக்காத அன்னை, தலைவியின் பார்வையில் அறம் அற்றவளாகிறாள். தினைப்புனம் காக்க சென்றால் தலைவனைச் சந்திக்கலாம்; ஆனால் தாய் தலைவியைத் தினைப்புனம் காக்க அனுமதிக்கவில்லை. அனுமதிக்காத அன்னையைத் தலைவி அறனில் அன்னை என்கிறாள்(அகம்.302). தலைவன் தலைவி உறவு பற்றி ஊரில் அலர் தோன்றுகிறது; அதனால் அன்னை தலைவியை இற்செறிக்கிறாள்; அலர் கூறும் ஊரும் அறமில்லாதது; இச்செறிக்கும் அன்னையும் அறமற்றவள் (குறு.262; நற்.63) என்பது தலைவியின் கோபம். எனவே, ‘புலிகள் வழங்கும் மலைகள் பிற்பட உன்மகள் சுரங்களைக் கடந்து தலைவனுடன் சென்றனள் என்று அறனில் அன்னைக்குக் கூறுங்கள்’ என்று வழிப்போக்கரிடம் கூறுகிறாள் உடன்போக்கு மேற்கொண்ட ஒரு தலைவி (ஐங்.385). 

    இதற்கு எதிர்நிலையாக தாயின் மனநிலை அமைகிறது. தலைவன் தலைவி உடன்போக்கு மேற்கொள்கின்றனர். அவர்கள் சென்ற வழியோ கொடிய பாலைநிலம். ‘அந்தக் பாலை நிலத்தில் அறனிலாளன் ஆகிய தலைவன் தோண்டிய கலங்கிய நீரைத் தலைவி அருந்தித் துன்புறுவாளோ’ என்று தாய் புலம்புகிறாள். இங்கு, தாயின் பார்வையில் தலைவன் அறனில்லாதவன் ஆகிறான் (அகம்.207). அதேபோல ‘அறனில்லாதவனோடு சென்றாளே’ என்று தலைவி பற்றிப் பிறிதொரு தாய் கலக்கம் உறுகிறாள் (அகம்.25). இங்குப் பெற்றோரையும் உறவினர்களையும் பிரித்து தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன் அறனிலாதவன் ஆகிறான். 

மேலும், ‘என் மகளை உடன் போக்குச் செல்லக் காரணமான ஊழ் அறம் அற்றது; அந்த அறனில் ஊழ், காட்டிடை எரியில் வெந்து ஒழிவதாக’ என்று ஒருதாய் சாபம் இடுகிறார் (ஐங்.376). அதேபோல, தலைவி தலைவனுடன் உடன் போக்கினை மேற்கொள்கிறாள்; இதனை அறிந்த அன்னை அறத்தினை வெறுத்துப் பழித்து உரைக்கிறாள் (ஐங்.393). 

ஆக, களவு வாழ்க்கையில் உடன்போக்கு என்பது காதலர் பார்வையில் அறமாகக் தெரிகிறது; பெற்றோர் பார்வையில் அது அறமற்றதாகத் தெரிகிறது. உடன்போக்கு மேற்கொள்ளும் தலைவன், தலைவியின் பெற்றோர் பார்வையில் அறமில்லாதவன் ஆகிறான். களவு வாழ்க்கையைத் தடைசெய்யும் தாய் தலைவியின் பார்வையில் அறமற்றவள் ஆகிறாள். இந்நிலையில் அறம் எது என்ற வினா எழுகிறது. தலைவன் தலைவி களவு வாழ்க்கையை வெளிப்படுத்தும் தோழியின் செயற்பாட்டை ‘அறத்தொடு நிற்றல்’ என்கிறது இலக்கணம். இங்கு அறத்தொடு நிற்றல் என்பது களவு வாழ்க்கையை கற்பு வாழ்க்கையை நோக்கி நகர்த்துதல் ஆகிறது; தலைவியின் காதலைப் பெற்றோர்க்கும் உறவினர்க்கும் உணர்த்துதல் ஆகிறது. அவ்வாறு அறத்தொடு நிற்கும் தோழி ஒருத்தி காதலர் களவு வாழ்க்கையை அனுமதிக்காத மலை வாழ்நரை ‘அல்ல புரிந்து ஒழுகுவோர்’(கலி.39) என்கிறாள். இங்கு ஊரார் அறமற்றவர்களாகின்றனர். களவு வாழ்க்கையைத் தடை செய்வதால் ‘வள்ளிக்கிழங்கு விளையாது, மலையில் தேன் கூடு கட்டாது, தினைப்புனத்தில் தினைக்கதிர்கள் விளையாது’ என்கிறாள் (கலி.39). அறம் வழுவுதல் இங்குத் தெய்வக் குற்றமாகிறது. 

இல்லறத்தில் நல்லறம்

            கற்பு வாழ்க்கை, கொடுப்போர் பெறுவோர் என்ற முறைமையின் அடிப்படையிலான முதல்நிலை திருமண நிகழ்வோடோ அல்லது தலைவன்-தலைவியுடனான காதல் என்ற முறைமையின் அடிப்படையில் உடன்போக்கு என்ற இரண்டாம் நிலை நிகழ்வோடோ தொடங்குகிறது. முறைப்படுத்தப்பட்ட திருமண நிகழ்வாயினும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்போக்கு நிகழ்வாயினும் அதற்குப் பின்னான கற்பு வாழ்வில் தலைமாந்தர்களுக்கான சில அறங்கள் அறிவுறுத்தப்பட்டன.

                              ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

                             ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை (கலி.9.23-24)

என்று, தலைவன் தலைவிக்கான எண்ண ஒற்றுமை சுட்டப்பட்டது. ஆகவே, தலைவன் தலைவியின் ஒன்றிய வாழ்க்கைக்கும், திருமண வாழ்வின் நோக்கத்திற்கும், சுற்றத்தின் உயர்விற்கும், சமூக நலனிற்குமாக தலைவன் தலைவியிடத்தே இருக்க வேண்டிய அறச் செயல்பாடுகள் முன்னிறுத்தப்படுகின்றன. 

            மேலும், தலைவியைப் கூடும்முன் காட்டுகிற அன்பு, களவில் அவளைப் பிரிந்திருக்கிற சூழலில் வெளிப்படுத்துகிற அன்பு, அவளோடு நிரந்தரமாக கற்புவாழ்வில் சேர்ந்தபின்பும் மாறாமல் இருக்க வேண்டும் எனத் தலைவனுக்கு வலியுறுத்தப்பட்டது. உடன்போக்கு மேற்கொள்ளும் சூழலில் தலைவனிடன் தோழி கூறுவதாக கீழ்க்கண்ட பாடல் அமைகிறது.

         அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்

          பொன்மனர் மேனி மணியில் தாழ்ந்த

          நன்னெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும்

          நீத்தல் ஓம்புமதி (நற்.10) 

இதில், தலைவியல் மார்புகள் தளர்ச்சியுற்ற காலத்தும், கரிய நெடிய கூந்தல் நரை எய்திய முதுமைக் காலத்தும், தலைவி மீதுகொண்டிருக்கிற அன்பு மாறாமல் இருக்க வேண்டும் என்று தலைவனிடம் வேண்டுகிறாள் தோழி. எனவே, தலைவியை என்றும் பிரியாமல் இருப்பதும், மாறாத அன்போடு இருப்பதும் இல்லறத்தின் நல்லறமாகச் சுட்டப்படுகிறது. 

            அறவழிகளாவன இல்லறம், துறவறம் இவ்விருவகை அறங்களுள் சிறந்தது எது என்பது தொடர்ந்துவரும் வினா. இதற்கு,  

காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (தொல்.கற்பு.190)

என்று விளக்கமளிக்கிறார் தொல்காப்பியர். இதில், இல்லற வாழ்க்கையின் இறுதிக் காலத்து, பெருமை பொருந்திய மக்களுடன் நிறைந்து, அறத்தினைப் புரிகின்ற சுற்றத்தோடு தலைவனும் தலைவியும் சிறந்ததாகிய வாழ்க்கை முறையினையும், நன்னெறியினையும் சமூகத்திற்குப் பயிற்றுவித்தல், அவர்கள் வாழ்ந்ததன் பயனாகும் என்கிறார். இதையே,

                        ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

                       நோற்பாரின் நோன்மை உடைத்து (குறள்.48)

என விளக்குகிறார் வள்ளுவரும். 

பொருள் தேட்டமும் சமூக அறமும்

       களவு, கற்பு என்ற இரு நிலைகளிலுமே பிரிவிற்கான இலக்கணத்தை வகுக்கிறார் தொல்காப்பியர். இரண்டிற்குமான பிரிவிலும் காரணங்ளும், கால வரையறைகளும் உண்டு. ஆயினும் களவு கற்பு இருநிலைகளிலுமே பிரிவைத் தலைவி ஏற்றுக்கொள்வதில்லை. எச்சூழலிலும் தலைவன் உடன் இருக்கவேண்டும் என்ற தலைவியின் எண்ணமும், எவ்வகைச் செல்வத்தினும் தலைவியுடன் இருப்பதே சிறந்தது என்ற தலைவனின் எண்ணமும் கற்புக் கால நிகழ்வுகளில் பதிவுசெய்யப்படுகிறது. 

     தலைவியைப் பிரிந்து பொருள்தேடச் செல்லுதல் அறமற்றதாக தலைவியால் சுட்டப்படுகிறது. இல்லறத்திற்குத் தேவையான பொருளைத் தேடுதல் ஆடவர்க் கடமை ஆயினும், அக்கடமையைத் தலைவி உணர்ந்திருப்பினும், அன்பின் காரணமாக, தலைவனை அறனிலாளன் என்கிறார் தலைவி.

                             ‘நம் நோய் அறியா அறனில்லாளர்’ (அகம்.294)

 

        பொருள் தேடுதல் போன்ற காரணங்கள் தலைவியின் அன்பினால் அறமற்றதாகச் சுட்டப்படினும், சமூக நோக்கில் அவ்வாறு எண்ணப்படவில்லை. தலைவியைச் அமைதிப்படுத்திவிட்டு, பொருள்தேடச் செல்லும் தலைவனைச் சிறந்த வினையாளனாகக் காட்டுகிறது சமூகம். தான் காதலிக்கும் தலைவியைத் தவறாது மணக்க உறுதி கூறும் தலைவனொருவன்,

                             விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை

                             நின்னொடு உண்டலும் புரைவது என்று ஆங்கு

                             அறம்புணை யாகத் தேற்றிப் பிறங்குமலை

                             மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது (குறிஞ்சி.206-209)

அமைகிறான். வருவோர்க்கெல்லாம் வரையாது நல்லுணவு அளித்தல் இல்லறத்தின் கடமைகளுள் தலையாய ஒன்றென்று கருதியிருந்தனர். விருந்தினர் உண்டு எஞ்சிய மிச்சிலை உண்பதில் நிறைவு கொண்டனர். அத்தகைய இல்லறத்தினை நடத்துதற்காகவே தலைவியை  மணமுடித்தல் வேண்டும் என்கிறான் இத்தலைவன். இதற்குப் பொருள் இன்றியமையாதது. ஆகவே, ஆடவர் பொருள்தேடப் பரிந்துசெல்லுதல் சமூக நோக்கில் அறமாகக் கருதப்பட்டது. எனவே,

                        வினையே ஆடவர்க் குயிரே (குறு.135)

என்னும் அறம் வலியுறுத்தப்பட்டது. அதோடில்லாமல், வினையாற்றாமல் மரபுவழிச் செல்வத்தைக்கொண்டு வாழும் வாழ்வை உடையவனை,  சோம்பியிருக்கும் ஆடவனை, 

குடுபுரவு இரக்கும் கூரில் ஆண்மை (புறம்.75)

என்று பழிக்கிறது. 

            வினைமேற்கொள்பனின் செயல், பிறர்க்கென முயலும் பேரருள் (நற்.186) என்று போற்றப்பட்டது. பொருள் தேடி இன்புற்று வாழ்தல் நோக்கம். ஆயினும் அறமே வழியாதல் வேண்டும் என்னும் கொள்கை நிலவியது.

            சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

          அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல் (புறம்.31) 

            பழியோடு வரும் இன்பமும் (புறம்.112:11-12), அறத்திற்கு எதிராக வரும் பொருளும் வெறுக்கப்பட்டது.

                              அறக் கழிவுடையன பொருட்பயம்படவரின்

                             வழக்கென வழங்கலும் பதித்தன்று என்ப (1164) 

குடும்பம் காத்தல் ஆடவர் அறம்

     மனைவி மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பு என்பது ஆடவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது கடமையாகவும் அறமாகவும் உணர்த்தப்பட்டது. வேட்டையாட வந்த வீரனை வழி மறித்து, தன் துணையையும் குட்டிகளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு, ஆயுதத்தோடு வேட்டையாட வந்த வீரனை வழிமறித்து எதிர்கொண்ட ஆண்பன்றியை,

                                    அரும்புழை முடுக்கர் ஆட்குறித்து நின்ற... (அகம்.248) 

என்ற பாடல் காட்டுகிறது. ஒரு மனிதன் தன்மனைவி மக்களைக் காக்க நினைக்கின்றான். ஓர் ஆண் பன்றி தன் பெண்ணையும் குட்டிகளையும் காப்பாற்றும் பொருட்டு வீரத்தோடு செயல்படுகிறது. இங்கு அஃறிணை உயிரின் வாயிலாக ஆடவரின் பொறுப்பும் அறமும் வலியுறுத்தப்படுகிறது.

சமூகக் கட்டமைப்பில் அறத்தின் பங்களிப்பு

            நீதியும், நட்பும், இழிசெயல் விலக்கலாகிய நாணும், பிறர்க்கும் தமக்கும் பயன்படும் திறமாகிய பயனும், நற்குணங்கள் நிறைந்த பண்பும், பிறர் தன்மை அறிந்து ஒழுகும் பாடும் ஆகிய ஆறு பண்புகளைத் தனிமனித ஒழுக்கங்களாக அற்றைச் சமூகம் அறிவுறுத்தியது. இதனை,

                              நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்

                             பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் (நற்.160:1-2)       

என்கிறது இலக்கியம். ஒரு நாட்டின் நில அமைப்போ, இயற்கையில் அமையப்பெற்ற வளங்களோ அந்நாட்டை நல்லநாடாக முன்னெடுத்துச் செல்வதில்லை. அந்நாட்டில் வாழும் மனிதர்களின் செயல்களே அச்சமூகத்தை  முன்னேற்றுகின்றன என்பதை,

                              நாடா கொன்றோ காடா கொன்றோ

                             அவலா கொன்றோ மிசையோ கொன்றோ

                             எவ்வழி நல்லவர் ஆடவர்

                             அவ்வழி நல்லை வாழிய நிலனே       (புறம். 187)

என்று சுட்டுவார் ஔவையார். எனவே,

                    நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

                   அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்

                   எல்லோரும் உவப்பது, அன்றியும்

                   நல்லாற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே (புறம்.195; 1– 9)

என்று வலியுறுத்தப்பெற்றது. 

நிறைவு

            புணர்ந்தாரைப் பிரியாமை, நன்றி மறவாமை, பிறர் துன்பத்தையும் தன் துன்பமாக எண்ணுதல், சொல்லிய சொல்லில் நிற்றல், வினை ஆளுமை, எண்ணத் தூய்மை, சுற்றம் காத்தல், விருந்தோம்பல் என்பனவெல்லாம் சமூகத்தைக் கட்டமைக்கும் அறக்கோட்பாடுகளாகச் சங்கச் சமூகத்தால் முன்னிறுத்தப்பட்டன. தனி மனிதனும், அரசும் தங்களுக்கான அறங்களில் வழுவாது நிற்க அறிவுறுத்தப்பட்டது. அறம் வழுவும் தனியனைச் சமூகம் தண்டித்தது. அறம் போற்றா அரசனைப் புலவர் பாடாது ஒதுக்கினர்.

          சங்க இலக்கியத்திற்குப் பின்வந்த ஆசாரக்கோவை,

                    நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

                   இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

                   ஒப்புர வாற்ற வறிதல் அறிவுடைமைய        

                   நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்

                   சொல்லிய ஆசார வித்து (ஆ.கோ.)

என்று, அறச்செயல்களைப் பட்டியலிடுகிறது. மணிமேகலைக் காப்பியமோ,

                   அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்

                   மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்

                   உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

                   கண்டதுஇல் 

என்று, இந்த உலகத்து உயர்களுக்கெல்லாம் உணவும், உடையும், உறையும் கிடைக்கச் செய்வதே சிறந்த அறம் என்கிறது. எனவே, அறம் என்னும் சொல் காலந்தோறும் சமூகச் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய பொருள்களைப் பெற்று வந்துள்ளதை அறியமுடிகிறது. 

            அறம் என்பது வாழ்வின் அடிப்படை ஒழுக்கத்தைக் குறிப்பதாயினும் அது பல்வேறு பொருண்மைகளை அகத்தடக்கிய நுட்பமும் செறிவும் கொண்டதாகத் திகழ்கிறது. அறத்தை வடிவமைப்பதில் சமூக உளவியல் முன்னிற்கின்றது. எனவே, மனிதன் தன் வாழ்வுச் சிறப்புக்கும், சமூக ஒழுங்கிற்கும் அமைத்துக்கொண்ட ஒழுக்கநெறிகள் அனைத்தும் அறம் என்று கொள்ள முடியும். மேலாக,

                   முகத்தான் அமர்ந்த இனிதுநோக்கி அகத்தானாம்

                   இன்சொ லினதே அறம் (குறள். 93)

என்று வள்ளுவர் உரைப்பதைப்போல, முகம் மலர்ந்து, இனிது நோக்கி, உள்ளத்திலிருந்து இன்சொற்களைப் பேசுதே இன்றைய நிலையில் தேவையான, சிறந்த அறமாக உள்ளது. 

சுருக்கக் குறியீட்டு விளக்கம்

தி.நீ..,ப. 23 - திருக்குறள் நீதி இலக்கியம்

 ***** 

Dr. A. Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai -113.

தமிழியல்

www.thamizhiyal.com  

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பழந்தமிழர் நெசவுத் தொழில்நுட்பம்

 பழந்தமிழர் உடை மேலாண்மையும் நெசவுத் தொழில்நுட்பமும்

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 600 113.

(அரிமா நோக்கு, பன்னாட்டு ஆய்விதழ், சனவரி, 2019)

 

உணவிற்கு அடுத்த நிலையிலான அடிப்படைத் தேவையாக மட்டுமன்றி, ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் தொழில்நுட்பத் திறத்தையும் அடையாளப்படுத்துவதாகவும் உடை பண்பாடு அமைகிறது.  உடை பற்றிய பண்டைய இலக்கியக் குறிப்புகளிலிருந்து பழந்தமிழர்களின் நாகரிக வளர்ச்சி நிலைகளையும் உடை மேலாண்மையையும் நெசவுத் தொழில்நுட்பத் திறத்தையும் அடையாளப்படுத்த முடிகிறது. ‘ஆடையில்லா மனிதன் அரை மனிதன்’, ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்பன போன்ற தமிழர்தம் பழமொழிகள், அவர்கள் உடைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. 

எத்தகைய நிலையிலிருப்போர்க்கும் உணவும் உடையும் இன்றியமையாதன என்பதால், இவ்வுலகத்தை ஒரு குடைக்கீழ் ஆளும் மன்னனாயினும், காட்டில் வேட்டையாடிப் பிழைப்பவனாயினும் ஒவ்வொருவனுக்கும் உண்பதற்கு நாழி உணவும் உடுப்பதற்கு இரண்டு உடைகளும் இன்றியமையாத பொதுமைகளாக வலியுறுத்தப்பட்டன (புறம்.189:1-5). உடையின் இன்றியமையாமையைக் குறிப்பிடும் இடத்து, ‘உடுக்கை இழந்தவன் கைபோல’(குறள்.788) என உவமையாக்குவார் வள்ளுவர்.

அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்

புறத்தால் பொலிவுறல் வேண்டும் எனைத்தும்

படுக்கை இலராயக் கண்ணும் உடுத்தாரை

உண்டி வினவுவார் இல்        (பழமொழி.329)

என்று, உடுத்தும் உடையே ஒருவரின் நிலையை வெளிக்காட்டும் அளவீடாகுமென உடையின் தேவையை அறிவுறுத்தும் பழமொழி நானூறும். இவ்வாறு, வாழ்வியல் பண்பாட்டோடு ஒன்றிய உடையின் தேவையை நிறைவு செய்ய பழந்தமிழர் எவ்வகையானச் செயல்பாடுகளைக் கடைபிடித்தனர் என்பதையும், பலவகையான தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, இன்றைய உடை உற்பத்திக்கும் ஆடை வடிவமைப்புக்கும் மேலாண்மைக்கும் முன்னோடியாக எவ்வாறு திகழ்ந்தனர் என்பதையும் பதிவு செய்வதை இக்கட்டுரை நோக்கமாகக் கொள்கிறது. 

ஆதி கால ஆடைப் பயன்பாடு

வேட்டைச் சமூகத்தில் இயற்கைச் சக்திகளால் தனது உடலுக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதற்காக உடையணிய வேண்டிய தேவை மனிதனுக்கு எற்பட்டது.  மழையாலும் வெயிலாலும் பனியாலும் ஏற்பட்ட துன்பத்தைப் போக்க, தான் உணவிற்காக வேட்டையாடிய மிருகங்களின் தோலையே தனக்கேற்ற உடையாகப் பயன்படுத்தத் தொடங்கினான். தோல் கிடைக்காதவிடத்து மரப்பட்டைகளையும், மர நார்களையும் மரத் தழைகளையும் உடையாக வடிவமைத்தான். அதன் படிநிலைவளர்ச்சியாக, நூலாடையையும் பட்டாடையையும் உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தன்னை உயர்த்திக்கொண்டான்.  

வெப்பமான காலத்திலே மரத் தழைகளை உடுத்தலால் குளுமையாக உடலை வைத்திருக்க முடிந்தது. தழையுடுத்தும் இப்பண்பாடு மக்களிடையே நிலவி வந்ததைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. பெரும்பாலும், தழை பெண்களுக்குரிய உடையாகவே காட்டப்படுகிறது (புறம்.61:1; 248; 340:1; 341:2,3; அகம்.7:2; 20:9,10; 59:4-6; 156:9-11; 176:13-15; குறு.293:5-7; 342:4,5; நற்.96:7-9;  ஐங்குறு.15:1,2; 191:3; 256:2; கலி.102:4-8;125:12-15). தலைவிக்குத் தலைவன் தழையும் தாரும் பரிசளித்தான் (நற்.80:5). அவ்வகைத் தழையுடைக்கு மகளிர் நெய்தற்பூக்கள் போன்றவற்றால் அணிசெய்தனர்(அகம்.70:11,12; 201:6,7; 275:16-19; 320:3; குறு.125:3; 159;1).

அரிதாக, ஆடவரும் தழையணி அணிந்த செய்தியை, ‘தளிரால் ஆகிய தழையை உடுத்தி நுந்தையின் தினைப் புனத்தின் கண்ணே ஞாயிறு மறையும் பொழுதில் வரவோ’ (நற்.204:1,2) என்ற தலைவன் மொழிகொண்டு அறிய முடிகிறது. ‘சங்க இலக்கியங்களில் ‘தழை’ என்னும் சொல்லே பல பாடல்களில் பயின்று வந்துள்ளது. 

உடை உற்பத்தி மேலாண்மை

உடை உற்பத்தியில் நிறைவினை எட்ட பழந்தமிழர் பலவகைத் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தினர். உடை உற்பத்தி மற்றும் மேலாண்மையில் உடை உற்பத்திக்கு மூலப்பொருளாகிய பருத்தியினை உள்நாட்டிலேயே உற்பத்திசெய்தல், நெசவுத்தொழிலை மக்கள் தொழிலாக/சிறுதொழிலாக மாற்றி, பெண்கள் உட்பட அனைவரும் அத்தொழிலில் ஈடுபடல், வறியவர்க்கும், இரவலர்க்கும், இயலாதோர்க்கும் உடைகளை வழங்கல், உடை உற்பத்தியில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உழைப்பினை எளிதாக்குவதோடு, அதிக உற்பத்தியாலும், சிறந்த வேலைப்பாடுகளாலும் ஏற்றுமதிக்கும் உட்படுத்தி வணிகத்தைப் பெருக்குதல் என பல்வேறு செயலாக்கங்களைக் கண்டறியமுடிகிறது. 

மூலப்பொருள் உற்பத்தி

ஒரு தொழிலின் தடையற்ற வளர்ச்சிக்கு, அத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தல் அடிப்படையாகிறது.  உடைகளின் உற்பத்திக்கு மூலப்பொருளான பருத்தியை உள்நாட்டிலேயே விளைவித்த செய்தியினை சங்க இலக்கியம் காட்டுகிறது. பருத்தி மிகுதியாகப் பயிரிடப்பட்டு, ஊரைச் சுற்றி வேலிபோல காட்சியளித்ததை, ‘பருத்தி வேலிச் சீறூர்’(புறம். 299:1) என்பதில் அறியமுடிகிறது. 

நெசவுச் சிறுதொழில்

பழந்தமிழகத்தில் நெசவுத் தொழில் சிறுதொழிலாக இல்லங்கள்தோறும் கைக்கொள்ளப்பட்டது. உடையின் தேவை என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவானதொன்று என்பதால், அதனைத் தேவையான அளவில் உற்பத்தி செய்வது இன்றியமையாததாகியது. அதற்கானத் தீர்வாக, அத்தொழில் எளிய மக்களின் தொழிலாக பரவலாக்கப்பட்டது. பருத்திப் பயிரை விளைவித்து, அதிலிருந்து பஞ்சினை எடுத்துவந்து, அதிலுள்ள தூசுகளையும், செற்றைகளையும் நீக்கி உலர்த்தினர். பின்னர் கொட்டை நீக்கி, நூலாக நூற்றனர். பழந்தமிழர் இல்லங்களின் முற்றங்களில் பஞ்சு உலர்த்தப்பட்டிருந்தது.

            பஞ்சி முன்றிற் சிற்றி லாங்கட்’ (புறம். 166:5) 

உடை உற்பத்தியில் மகளிர்

உடை உற்பத்திக்கானத் தொழில்நுட்பத்தினைப் பெண்கள் கற்றிருந்தனர்.  நெசவுத்தொழிலில் ஈடுபட்ட பெண்கள் ‘பருத்திப் பெண்டிர்’ என வழங்கப்படுகின்றனர். இவ்வகைப் பருத்திப் பெண்டிர் செய்த நூலாலான பனுவலை,

            ‘பருத்திப் பெண்டின் பனுவ லன்ன’ (புறம். 125: 1)

என்று உவமையாக்குகிறது இலக்கியம். பருத்தியை எடுத்துவந்து, அதிலிருக்கும் தூசு, செற்றை ஆகியவற்றை நீக்கும் பணியில், இரவிலும் விளக்கொளியில் ஈடுபட்டிருந்த பருத்திப் பெண்டிரை,

                        சிறையும் செற்றையும் புடையுந ளெழுந்த

                     பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து    (புறம்.326:4-5)

என்ற பாடலடிகள் காட்டுகின்றன. ஆண் துணை இல்லாத பெண்கள் சிறுதொழிலாக, இல்லத்திலேயே இந்நெசவுத் தொழிலைச் செய்தனர்.  இவ்வகைப் பெண்கள் தம் முயற்சியில் செய்த நுணங்கிய நுண்ணிய பனுவலை,

                        ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த

                      நுணங்கு நுண் பனுவல் போல          (நற்.353:1-2)

என்பதில் காணலாம். 

நெசவுத் தொழில்நுட்பம்

மூலப்பொருள்களை உற்பத்தி செய்து (பருத்தி, பட்டுக்கூடு) அவற்றிலிருந்து இரண்டாம் நிலை பொருள்களை (நூல், பட்டு இழை) உருவாக்கி, மூன்றாம் நிலை உற்பத்திப் பொருளாகிய துணியை நெய்து, பின்னர் பயன்பாட்டுக்கு ஏற்ப பல வடிவங்களிலும், வண்ணங்களிலும், அலங்கார வடிவமைப்புடனும் கூடிய ஆடைகளை நெய்யத் தொடங்கிய நிலை தொழில்நுட்பத்தின் உயர்நிலையாக அறியப்படுகிறது.  இவ்வகை படிநிலை நுட்பங்களைச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. 

          வேறுபட்ட உடைகள்

தன்னை நாடி வரும் வறியவர்க்கும் பாணர்க்கும், அவர்களின் நைந்துபோன, பழைய, கிழிசல் உடைகளைக் களைந்து, புத்தாடைகளை உடுக்கச்செய்யும் பழந்தமிழ் அரசர்களின் செயல்களைப் பல்வேறு இலக்கியக் குறிப்புகள் காண்ட்டுகின்றன. அவ்வாறு வழங்கப்பட்ட உடைகள் பலவகை நுண்வேலைப்பாடுகளைக் கொண்டவையாகவும், பல்வகைத் தொழில் நுட்பங்களின் வெளிப்பாடாகவும் விளங்கின. அரசர், பாம்பின் தோல் போன்ற பளபளப்புத் தன்மையுடையனவாகவும், மூங்கிலின் உட்பக்கத்தில் உள்ள தோலைப் போன்ற மென்மையுடையனவாகவும், நெய்யப்பட்ட நூல் இழைகளின் வரிசை அறிய முடியாத, பூ வேலைப்பாடுகளுடன் கூடியனவுமாகிய பல்வகைத் தொழில்நுட்பம்கொண்ட உடைகளை வறியவர்க்குக் கொடுத்து உடுக்கச் செய்தனர்(புறம். 383:9-11). இரவலரின் பழைய, பாசி போன்ற கந்தல் உடைகளைக் களையச்செய்து, மென்மையான மேகம் போன்ற உடையை உடுக்கச்செய்தனர்(பெரும்பாண். 468-469).

மேலும் உடைகள், பின்னப்பட்ட நூலிழைகளின் இடைவெளியை அறிய முடியா தன்மையிலும், பூ வேலைப்பாட்டுடனும், பாம்பின் மேல்தோல்(சட்டம்) போன்ற தன்மை வாய்ந்ததாகவும்  நுண்ணிய தொழில்நுட்பத்தோடு பின்னப்பட்டிருந்தன.

                        நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்த

                     அரவுரி அன்ன அறுவை நல்கி   (பொருநர். 82-83) 

          நுண் வேலைப்பாடுகள்

பல்வகைத் தன்மைகளோடு கூடிய உடைகளை உற்பத்தி செய்ததோடு, அவற்றில் வண்ணம் ஏற்றுதல், உடைகளில் பூவேலைப்பாடுகள் செய்தல் முதலிய பல்வேறு நுட்பங்களையும் பழந்தமிழர் கையாண்டனர். இது அச் சமூகத்தின் தொழில்நுட்ப அறிவோடு முருகியல் உணர்வையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.  நெய்யப்பட்ட உடையில் கலைப்படைப்புகளை பலவகை ஓவியங்களாக பூ வேலைப்பாடுகளில் வெளிப்படுத்தினர். அவ்விதம் பின்னப்பட்ட பூக்களைப் பல வண்ணங்களில் அழகூட்டினர். நீல நிற உடையில் பல வண்ணப் பூக்கள் பின்னப்பட்டதை,

            ‘நீலக் கச்சைப் பூவா ராடை’ (புறம். 274:1) என்பதிலும்

                       ‘பூவிரி கச்சைப் புகழோன் தன்முன்’ (சிறுபாண். 239) என்பதிலும்

அறிய முடிகிறது.       

            மேலும், பலவகைத் தன்மைகளும், வடிவங்களும் அமைந்த உடைகளுள், இருபுறமும் குறுகியதும், நீளமானதுமான உடையை,

                        தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பகல்

                      குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து             (மதுரைக். 519-520)

என்பதிலும், இருபுறமும் தொங்கவிடும்படி நீளமாக வடிவமைக் கப்பட்ட உடையை,

                        ‘இருகோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர’ (நெடுநல். 35)

என்பதிலும் காணலாம்.

            அதேபோல, பின்புறம் நிலம்தோயும் வண்ணம் நீளமாகத் தொங்கவிடப்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட உடையை, 

                        ‘புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ’ (நெடுநல்.181) என்றும், 

விரிந்த நூலான் இயன்ற, தரையில் புரளும் உடையினை,

                        இருநிலந் தோயும் விரிநூல் அறுவையர்’ (பதி.34:3)

என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 

            வண்ணம் ஏற்றுதல், பூ வரைதல் போன்ற நுண்வேலைப்பாடமைந்த கச்சையை,                             ‘நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி’ (குறிஞ்சி.125)

என்ற பாடலடியும், கடல் அலைபோன்ற தன்மைகொண்ட மென்மையான உடையை,

                        ‘கோட்டங் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்’(புறம். 275:1)

என்ற அடியும் சுட்டி நிற்கின்றன. அதேபோல, இரு ஓரங்களிலும் நூல்களின் வெட்டுவாயினை அறிய முடியாத, அடர்த்தியான நூல் இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட உயர்தர உடையை உற்பத்தி செய்யும் நுட்பத்தினை,

                         ‘இழைமருங்கு அறியா நுழைநூல் கலிங்கம் (மலைபடு.561)

என்பதிலும் அறியமுடிகிறது. 

            வண்ணம் ஏற்றுதல்

உடைகளுக்கு வண்ணம் ஏற்றும் தொழில்நுட்பத்தினைப் பழந்தமிழர் கைவரப்பெற்றனர்.  ஒருசேர நெய்யப்பட்ட உடையில் நீலநிற வண்ணம் ஏற்றியிருந்ததை,

            ‘இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்’ (கலி.72:1)

என்பதில் அறியமுடிகிறது. மேலும், சிவப்பு நிற வண்ணம் ஏற்றப்பட்ட உடையை,

                        வெயிற் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்றுச்

                      செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின்

                      கண் பொருபு உகூஉம் ஒண் பூங் கலிங்கம்   (மதுரைக். 431-433)

என்பதிலும், ‘கோபத் தன்ன தோயாப் பூந்துகில்’ (திருமுருகு.15) என்பதிலும் அறிய முடிகிறது. பூந்துகிலை, ‘அற்றங் காவாச் சுற்றுடைப் பூந்துகில்’ (மணி.3:139) என்றும் இலக்கியம் காட்டுகிறது. 

நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட தறியும், அதில் பல்வகை நூலிழைகளைக் கொண்டு பரப்பி, உடைகளை உற்பத்திச் செய்த தொழில்நுட்பமும் ‘பாவிரித்தன்ன’ (அகம்.293) என்று உவமையாக அமைவதைக் காணமுடிகிறது. 

பலவகையான உடைகள்

            துகில்

உடை வகைகளுள் மென்மைத் தன்மை வாய்ந்ததாகத் துகில் காணப்படுகிறது. அதன் நிறம் மிகவும் வெண்மையானதாகக் கூறப்பட்டுள்ளது. இது பருத்தியினால் ஆக்கப்பட்டதாகும். உருவத்தை மறையாது காட்டுகின்ற மென்மைத் தன்மை இத்துகிலுக்கு உண்டு.

                        முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்

                       நுணுங்கு துகில் நுடக்கம் போல         (நற்.15:1,2)

என்றும்,          ‘துகில் விரித்தன்ன வெயிலவர் உருப்பின்’ (நற்.43:1)

என்றும் துகில் குறிப்பிடப்படுகிறது. 

போர்வை

போர்வை தமிழர்களது உடை வகைகளில் ஒன்றாகும். உடல் மறைக்க உடைகளை உருவாக்கியதோடு, குளிருக்கும், இரவில் போர்த்தவும், விரிப்பிற்கும், உடைகளை விடவும் தடிமனாக நெய்யப்பட்ட போர்வைகளை உற்பத்தி செய்யும் நுட்பத்தினைக் கைக்கொண்டிருந்தனர்.

தலைவனைக் காண்பதற்குத் தலைவி குறியிடத்திலே போர்வையை அணிந்து நின்ற செய்தியை,

மன்பதை எல்லாம் மடிந்த இருங்கல்குல்

          அம் துகில் போர்வை அணி பெறத் தைஇ நம்

          இன்சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக   (கலி.65:3-5)

என்ற பாடலடிகள் காட்டுகின்றன.           

பல வண்ணங்கள் ஊட்டப்பட்ட பல மயிர்களை உள்ளே வைத்துத் தைத்து , அரிமா வேட்டை ஆடுதல் போன்ற உருப்பொறித்து, அகன்ற இடத்தையுடைய காட்டில் பூத்த முல்லை முதலான பல வகையான மலர்களின் உருவங்களையும் நிரம்பப் பொறித்து, மென்மையாகப் போர்த்த போர்வையை,

                        ஊட்டுறு பல் மயிர் விரைஇ வய மான்

வேட்டம் பொறித்து வியன் கட் கானத்து

முல்லைப் பல் போது உறழ பூ நிரைத்து

மெல்லிதின் விரித்த சேக்கை               (நெடுநல்.128-131)

என்பதில் காணமுடிகிறது.

பட்டாடை

உடை உற்பத்தியில் பருத்தியை மட்டும் பயன்படுத்தாமல், பட்டு இழைகளையும் பயன்படுத்திய நுட்பத்தையும் இலக்கியங்கள் காட்டுகின்றன.

பாசி வேரின் மாசொடு குறைந்த

துன்னற் சிதாஅர் நீக்கித் தூய

கொட்டைக் கரைய பட்டுடை நல்கி                     (பொருநர்.153-155)

என்பதில் கரை வைத்து நெய்யப்பட்ட பட்டாடையும்,

            அணிகிளர் சாந்தின் அம்பட்டிமைப்பக்

          கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை     (அகம்.236)

என்பதில், ஒளிரும் பட்டாடையும் சுட்டப்படுகிறது. 

கம்பளம்

உடைகளிலிருந்தும் போர்வைகளிலிருந்தும் வடிவமைப்பிலும், தன்மையிலும், வேறுபட்ட கம்பளம் தயாரிப்பு நுட்பத்தினையும் பழந்தமிழர் கொண்டிருந்தனர். பசுமையான கம்பளத்தில்   இரும்பால் செய்த ஊசி எளிதில் தைத்தயிடம் தெரியாது மறைவதை,

                        பொன்னின் ஊசி பசுங்கம்பளத்துத்

                      துன்னிய தென்னத் தொடுகடல் உழந்துழி         

என்ற பாடலடிகள் உவமையாக்குகின்றன.

 

   மேற்கண்ட சான்றுகளின்வழி, பழந்தமிழர் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானதான உடையின் உற்பத்திக்கும் பரவலாக்கத்திற்கும் தொழில்முறை செயல்பாடுகள் மற்றும் பண்பாட்டு நெறி என இருவகை செயல்பாடுகளைக் கொண்டிருந்தது தெரியவருகிறது.

    பண்பாட்டு அடிப்படையிலான செயல்பாட்டில் வறியவர்களுக்கு உணவோடு உடையையும் வழங்கி அதனை அறமாகப் போற்றினர் என்பதும், உடை உற்பத்தியின் நிறைவிற்குத் தொழில்முறையிலான செயல்பாடுகளில் மேலாண்மையைக் கொண்டிருந்தனர் என்பதும் பெறப்படுகிறது. உடை உற்பத்தியில் பெண்களும் ஈடுபட்டனர் என்பதும், வெறுமனே உடுத்துதற்கு உடை என்ற நிலையோடு நில்லாமல், அதில் பலவகையான கலை வேலைப்பாடுகளை மேற்கொண்டனர் என்பதும், வயதுக்கும் காலத்துக்கும் ஏற்ற உடைகளை உற்பத்தி செய்ததோடு உடைகளில் பலவகை வண்ணங்களை ஏற்றும் நுட்பத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும் அறியப்படுகிறது.

 ***** 

Dr. A. Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai -113.

தமிழியல்

www.thamizhiyal.com