கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 மார்ச், 2018

குச்சிக் கிழங்கு - ஆ.மணவழகன்






குச்சிக் கிழங்கு



மழைக்குத் தவமிருக்கும் – என்
குச்சிக் கிழங்குக் காட்டில்
அடர் கோரை நீ
மண் தின்று மண் தின்று
முளைவிடும் உன் இருப்பை
எதைக்கொண்டும் அழிக்க இயலாமல் தவிக்கும்
ஏழை விவசாயி நான்….
கூர்முகங்கொண்டு குத்தி எறியும்
காட்டுப் பன்றிக்குத் தெரியவா போகிறது
கோரைக் கிழங்கிற்கும்
குச்சிக் கிழங்கிற்குமான வேறுபாடு!

-ஆ.மணவழகன், 28.8.17

சனி, 9 ஏப்ரல், 2011

கவிஞர் ஆ.மணவழகன் கவிதைகள் - 4


கனவு சுமந்த கூடு


கடைக்கால் எடுக்கையில்
ஒதுக்கிவிட்ட வேப்பங்கன்று
தளிர் விரித்து
கிளை தாங்கி
நிழல் பரப்பி
கூடு சுமக்கும் மரமாய்
கனவு இல்லமோ
இன்னும்
கடைக்காலாய்



பிறர்தர வாரா


ஒப்புசாண் மலை மீது
பீடியைப் பற்றவைத்துக் காட்டினான்

கோனான் சிவக்குமார்

இரத்தினம் கிணற்றில்
புறா பிடிக்கும் அவசரத்தில்
புகையிலையின் மகத்துவம்(!?) சுட்டினான்
பால்ய நண்பன் பாண்டியன்


நாத்தம் பாக்காம குடிச்சிடு
ஒத்தை மரத்துக் கள் உடம்புக்கு நல்லது
எடுத்து வைத்தார்கள்
சிறிய கோப்பையில் அப்பாவும்
பெரிய சொம்பில் மாமாவும்


பீர் மட்டுந்தான் நல்லதாம்
காட்டுக்கோட்டை கல்லூரிக் காலத்தில்
வாங்கிவந்தார்கள்
சேட்டும் குமரேசனும் ராஜேசும்


தேசியக் கல்லூரியில்
வில்ஸ் வெண்சுருட்டை
விரலிடுக்கில் வைக்கும்
லாவகம் சொன்னான்
மாப்ள காளிமுத்து


கஞ்சா என்னவெல்லாம் செய்யும்
வகுப்பெடுத்தான்
அகால மரணமடைந்த ஆருயிர் நண்பன்


பாக்கியநாதன்
இதப் பழிக்கக்கூடாது சார்
குழந்தை மாதிரி ஒண்ணுமே பண்ணாது
இராணுவ ரம்மை சோடாவில் கலந்து கொடுத்தார்
பசுமைக் கவிஞர்


எதா இருந்தாலும் இதுக்கு உட்டதுதான்
சாமிக்கு வாங்கி வைத்த சாராயத்தை
நாக்கில் வைத்துப் பார்க்கச் சொன்னான்
தையல் கடை செல்வம்


முழு பான்பராக்கையும்
ஒரே வாயில் போட முடியுமா?
பந்தயம் கட்டித் தோற்றான்
திருச்சி நண்பன் சங்கர்

எல்லா எழவையுந்தான் பார்த்தாச்சு
எதிலேயும் ஒரு ---ம் இல்லை


பழகியாச்சு விடமாட்டேங்குது
பொய்சொல்லாதே
உன் மனைவி விதவையாவது பற்றி
உன் குடும்பம் நடுத்தெருவில் நிற்பது பற்றி
எந்த அரசுக்கும்
இங்குக் கவலையில்லை

வீடு சுமந்து அலைபவன்

சிறகு முளைக்குமுன்பே
பறக்கத் தொடங்கியாயிற்று


சைதாப்பேட்டை
மேட்டுப்பாளையம்
சானடோரியம்
இப்போது ஆதம்பாக்கம்


முதலில் கைப்பை
அடுத்து தானி
பின் குட்டியானை
இப்போது 407


வீட்டைச் சுமந்து திரிந்தாயிற்று
வேலையும் வேலை நிமித்தமும்
எங்கள் ஆறாம் திணை


வரலாறுகளை வரப்பில் சுமந்திருக்கும்
வளமான மண்
வாழ்க்கையை வாய்க்காலில் நிறைத்திருக்கும்
வற்றாத கிணறு


சோகத்தை விதைத்ததால்
இன்பத்தையே விளைவிக்கும் இல்லம்


குளோரின் கலக்காத குடிநீர்
குப்பைகளைச் சுமக்காத காற்று
எல்லாமும்தான் இருக்கிறது ஊரில்


இருந்துமென்ன---
இருந்தது இல்லாமல் போகும்போதும்
இருப்பு இடம் மாறிப் போகும்போதும்தான்
உறைக்கிறது


ஏதிலிகளின் வலி


திங்கள், 4 ஏப்ரல், 2011

கவிஞர் ஆ.மணவழகன் கவிதைகள் - 3


முரண்

பூச்சூடி
பொட்டு வைத்து
ஆடை உடுத்தி
அலங்காரம் செய்த
அழகு பொம்மையோடு
அம்மணக் குழந்தை
எங்கள் தேசம்


வெள்ள நிவாரணம்

ஒரு சோடி வேட்டி சேலை
மூன்று லிட்டர் மண்ணெண்ணெய்
ஐந்து கிலோ அரிசி
இரண்டாயிரம் ரொக்கம்
மாற்றாக
மனித உயிர்கள் பல
மனிதப் போலி

பலப்பல முகங்கள்
பலப்பல நிறங்கள்
உலக நாகரிகத்தை
உடலில் சுமக்கும் அதிசயங்கள்
பார்த்தால் பேசினால்
அனைவரும் மனிதரே
பழகிப்பார்
பத்தில் ஒன்பது பதர்கள்

 மாக்கள்
 வைக்கோல் கன்றுக்கு
மடிசுரக்கும் பசு
கட்சித் தொண்டன் 

அதிசயம்

ஆயிரம் தாஜ்மகால் அதிசயம்
ஒற்றைச் சித்தனின் உயிர்த்தவம்
தூக்கணாங்கூடு
சிறுமை

பிழைப்பில் கூடியது எறும்பு
இறப்பில் கூடியது மனிதம்
ஆறறிவுச் சிறுமை


ஒட்டடை
ஐயோ
துடைத்து விடாதே
ஒட்டடை அல்ல வீடு
சுவரில் சிலந்தி

ஐயோ பாவம்

நடுங்கி இருக்குமோ குளிரில்
புல்லின் நுனியில்
பனித்துளி
சுவடுகள்

நீ நடக்கும் பாதைகளில்
உன் பாதச்சுவடுகளைப்
பாதுகாத்து வை
உன் மரணம்
சாதனையாகும் பொழுது
அதுவும்
சரித்திரமாகும்




ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

மணவழகன் கவிதைகள் - 2

வாழ்க்கை வணிகன்



பாருங்க சார்
தெய்வப் புலவர் வள்ளுவர்
எழுதியது சார்
வாழ்க்கைக்குத் தேவையான
வழிகளைச் சொல்வது சார்
மூன்று பெரும்பகுப்புகள்
நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள்
ஆயிரத்து முந்நூற்று முப்பது
குறள்களைக் கொண்டது சார்
வெளியில் வாங்கினா
இருபத்தி ஐந்து ரூபா சார்
கம்பெனி விளம்பரத்துக்காக
வெறும் பத்து ரூபா சார்
------ ------- ------ ---- -----
தொடர்வண்டிச் சிறுவன்
மலிவு விலையில் விற்றுச் செல்கிறான்
திருக்குறளோடு வாழ்க்கையையும்


*****


நகரியம்
சாக்கடை நாற்றத்தோடு
கழிவுநீர் ஊற்றுகள்
அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்
பறவைகள் அமர்ந்தறியா
செயற்கை மரங்கள்


முளைக்காத தானியங்கள்
விதை கொடுக்காத கனிகள்
உயிரில்லா முட்டைகள்
தாய் தந்தை உறவறியா
குளோனிங் குழந்தைகள்
ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும்
அறிவியல் வளர்ச்சிகள்


ஆடுகளை மலையில் விட்டு
அருகிருக்கும் கொல்லையில் கதிரொடித்து
பால் பருவக் கம்பைப் பக்குவமாய் நெருப்பிலிட்டு
கொங்கு ஊதித் தாத்தா கொடுத்த
இளங்கம்பின் சுவைக்கு
ஈடு இது என்று
எதைக் காட்டி ஒப்புமை சொல்வேன்


பச்சைக் கம்பு தின்றதே இல்லை
ஆதங்கப்பட்ட தோழிக்கு


*****


இக்கரைக்கு அக்கரை


புளிக்குழம்போடு
அரைத்த கேழ்வரகின்
ஆவிபறக்கும் உருண்டை


இளம் முருங்கைக்கீரைக் கூட்டோடு
இடித்துச் சமைத்த கம்பஞ் சோறு

நாட்டுப் புளிச்சை கடைசலோடு
புதுச் சோளச்சோற்றுக் கவளம்


இம்முறையேனும் கெங்கவல்லி சென்றதும்
ஆக்கித்தரச்சொல்லி
அம்மாவிடம் கேட்கவேண்டும்
ஊர் கிளம்ப ஒருவாரம் முன்பே
நாக்கு நங்கூரம் போடும்


ஏளனப் பார்வைக்கு இலக்காகும்
உயிர்க்கொல்லிப் பொடிகளால் உருவான
மசாலா குழம்பும்
உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்ட
கடையரிசிச் சோறும்


புள்ளைங்க வந்தா மட்டுந்தான்
நல்ல சோறு சாப்பிட முடியுது
அப்பா சான்றிதழ் தருவார் , ஊரில்
எனக்காகச் சமைக்கப்பட்ட
கடை அரிசிச் சோற்றுக்கும்
உயிர்க்கொல்லி பொடிகளால் உருவான
அதே மசாலா குழம்புக்கும்


இரைப்பையைத் தொடாமலேயே செரிக்கும்
தொண்டைக்குழியில் உருட்டி வைத்த
என் களி கம்பஞ்சோற்று ஆசை

*****

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

மணவழகன் கவிதைகள் - 1


அவர்கள் நாசமாய்ப் போக


புலிகளைக் காட்டி
மனிதர்களை
வேட்டையாடினார்கள்
காந்தியைப் பெற்றவர்களும்
புத்தரை ஏற்றவர்களும்

*****


மே 2009


முள்ளிவாய்க்கால்
கரையும் காற்றும் சொல்லும்
அவர்கள்
வீரத்தையும் தியாகத்தையும்
அண்ணா நினைவிடமும்
அருகிருக்கும் கடலும் சொல்லும்
எங்கள்
துரோகத்தையும்
கையாலாகாத தனத்தையும்


*****

பிரபாகரன்


ஆயிரம் ஆண்டுகளுக்கு
ஒருமுறை பூக்கும்
அபூர்வ மலர் நீ
இரு நூற்றாண்டின்
ஈடு இணையில்லா
ஒற்றை அதிசயம் நீ


இராஜராஜன், செங்குட்டுவன்
நெடுஞ்செழியன் ஒட்டுமொத்த
உருவம் நீ


எதிரிக்கு அடங்கிப்போகாது
என்றும் அணைந்துபோகாது
உலகத் தமிழனின் உயிர் மூச்சு நீ


உலகுக்குப் புதிரானவன்
உறவுக்குக் கதிரானவன்
தமிழின் கொடை நீ
தமிழனின் படை நீ


கரையான்களாலும் கருணாக்களாலும்
அரிக்க முடியா விருட்சம் நீ
வீரம் செறிந்த விதை நீ


கடல்நீரைக் கால்வாய்
குடித்துவிடாது
வருவாய்
தமிழின் அகம் நீ
அகத்தில் புறம் நீ

*****