வியாழன், 13 ஆகஸ்ட், 2020

பதிற்றுப்பத்தில் மனிதநேயக் கூறுகள்

 

பதிற்றுப்பத்தில் மனிதநேயக் கூறுகள்

ஆ.மணவழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(வெள்ளிக் கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், நவம்பர்.11, 2003)

 மனிதநேயம்

            மனிதநேயம் என்ற சொல்லிற்கு,  மனிதரிடத்துத் காட்டும் நேயம் என்றும், மனிதரிடத்துத் தோன்றும் நேயம் என்றும் இருவகையான கருத்துகளால் மதிப்பிடுவர். இவற்றுள், மனிதரிடத்துத் தோன்றும் நேயம் என்பதே பொருத்தமானதாக அமைகிறது. இதற்கு, மனிதரிடத்துத் தோன்றி மனிதரிடத்தும் மனிதரல்லாத பிற உயிர்களிடத்தும் காட்டப்படும் நேயம் என்பதை விளக்கமாக கொள்ளலாம். அன்பு, கருணை, பரிவு, பாசம், அருள், நேயம், இரக்கம் என்பன ஒன்றுபோலவே தோன்றிடினும் , பார், கவனி, நோக்கு என்பனவற்றிற்கு உள்ளதுபோன்ற நுணுக்கமான வேறுபாட்டை இவற்றிலும் உணரலாம்.

            நேயம் என்பதற்குப் பொருத்தமான சொற்களாக அருள், கருணை என்பனவற்றைச் சுட்டலாம் என்றாலும், கருணை என்பதையே ஏற்றதாகக் கருத வாய்ப்புள்ளது. காரணம் அருள் என்பதற்குப் பல பொருள்கள் இருந்தாலும் முதன்மை பொருளாக கடவுள் பக்தர்க்குப் பாவிக்கும் அருளே கொள்ளப்படுகிறது. ‘அருள் பாவித்தார்’ என்பது இதன் பயன்பாட்டுத் தொடராக  உள்ளது. கருணை என்பதற்கு ‘உயிர்களுக்கு இரங்கும் பண்பு; துன்பம் முதலியவற்றைத் தீர்க்க வல்ல அருள்;’-1 என பொருள்கொள்ளப் படுவதால் இப்பொருத்தம் சரியானதாக இருப்பதை உணரலாம். மேலும், இரக்கம் என்பதற்குச் சொல்லப்படும் ‘பிறர் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு; பரிவு; மன உருக்கம்;’-2  என்பனவும் கருணைக்குக் காட்டப்பட்ட விளக்கத்தினுள் அடங்குதலை அறிலாம். மேலும், அருளுடமையை விளக்கவந்த பரிமேலழகர் ‘தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை’-3  என்கிறார்.

            அன்பும் மனிதநேயமும் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதாகவே கொள்ளப்படுகிறது. இவற்றை, அன்பின் வழிப்பட்ட மனிதநேயம், மனிதநேயத்தின் வழிப்பட்ட அன்பு எனக் கொள்ளலாம். இருந்தும் இவற்றில், மனிதநேயத்தின் வழிப்பட்ட அன்பே உயர்வு கருதி சிறப்பாக நோக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே இக்கட்டுரை கொண்டுசெல்லப்படுகிறது.

 

பதிற்றுப்பத்து

            பத்துப்பத்து என்ற பொருளமைந்த பதிற்றுப் பத்தானது, சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. பத்துச் சேர மன்னர்களைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியே பதிற்றுப்பத்து எனப் பெயர்பெற்றது.

            சங்க இலக்கியங்கள் யாவற்றிற்கும் இல்லாத சிறப்பு இப்பதிற்றுப்பத்திற்கு உண்டு. சேர அரசர்களைப் பற்றி மட்டுமே உரைக்கும் ஒரு வரலாற்று ஆதாரமாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் ஒவ்வொரு பத்துப் பாட்டின் இறுதியிலும் பதிகம் என்னும் தலைப்பில் சில அடிகள் செய்யுளாகவும் , உரைநடையாகவும் காணப்படுகின்றன. சேர மன்னர்களுடைய நாட்டுவளம், கொடைச் செயல், மக்கள் வாழ்க்கை, படைத்திறன், மனைமாட்சி முதலியவற்றை இந்நூலில் அறியலாம். இதில் முதற்பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கப்பெறவில்லை. இப்பதிற்றுப்பத்தில் பொதிந்துள்ள மனிதநேயக் கூறுகளை வெளிக்கொணருவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

            ‘அன்பு, அருள், ஈவு, இரக்கம்

          இருந்த இடம் தெரியவில்லை!- அவை

          அடிப்படைக் குணங்களென்று

          அறிந்துகொள்ள வழியுமில்லை!

          கணினியோடு பேசுவதே கலாச்சாரம் ஆனது!- மண்ணில்

          காட்டும் நேயமெல்லாம் வெறும் காட்சியென்று ஆனது!

          மனிதராக இருந்தும் மனிதநேயம் மறந்தது!

          இலக்கியத்தில் இருக்குமென்று இடந்தேடலானது!-4

 

மனிதநேயப் பண்புகள்

            மனிதநேயச் செயல்கள் வெளிப்பட, மனிதரின் மனதில் அடிப்படையிலேயே சில நற்பண்புகளைப் பெற்றிருப்பதென்பது இன்றியமையாமையாகிறது. பாலையில் பயிர்வளர்வதென்பது பார்த்திராத ஒன்றல்லவா!  அடிமனதில் இருக்கும் சில நற்குணங்களே அவ்வப்பொழுது மனிதநேயமிக்க மொழிதலுக்கும், தொழிற்படுதலுக்கும் காரணமாக அமைகின்றன. இவ்வகையான பண்புகளைப் பதிற்றுப்பத்துச் சுட்டிக் காட்டுகிறது.

 

            ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’-5 என்ற புறவரிகளைப் போல, மனிதநேயத்திற்கு வேண்டிய பண்புகளை விட , வேண்டாத பண்புகளைப் பட்டியலிடுகிறது பதிற்றுப்பத்து. இதில், மிக்க சினமும், மிக்க காமமும், மிக்க கண்ணோட்டமும், மிக அஞ்சுதலும், வாய்மையுடன் பொருந்தாத பொய் சொல்லுதலும், தொடர்பு கொண்டவரிடம் அளவற்ற அன்புடைமையும் இவை போன்ற பிறவும் அடங்கும் என்கிறது.  இதனை,

                     ‘சினனே காமங் கழிகண் ணோட்டம்

                    அச்சம் பொய்ச்சொ லன்புமிக வுடைமை

                    தெறல் கடுமையொடு பிறவு மிவ்வுலகத்

                    தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும்’  (22: 1-4)

என்பதன் வழி அறியலாம். இதே போல மனிதநேயத்திற்குத் தேவையான நற்பண்புகளான, நாட்டில் வாழும் மக்கள் தம்முள் மற்றவரைத் துன்புறுத்தாமலும் மற்றவர்க்கு உரியதான தமக்குத் தொடர்பு இல்லாத பொருளை விரும்பாமலும், குற்றம் இல்லாத அறிவு உடையவராய்ச் செம்மை நெறியில் தவறாது, பலர்க்கும் பகுத்துத் தந்து தாமும் உண்டு இனிது வாழவேண்டும் என்பனவற்றை மொழிகிறது கீழ்க்கண்ட அடிகள்,

                    ‘தீதுசே ணிகந்து நன்றுமிகப் புரிந்து

                   கடலுங் கானமும் பலபய முதவப்

                   பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது

                   மையி லறிவினர் செவ்விதி னடந்துதம்

                   அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள்

                   மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய’      (22: 5-10)      

இவ்வகையானப் பண்புகளின் அடிப்படையில் முதல் நிலை மனிநேய வெளிப்பாடான ‘மொழிதல்’ அமைகிறது. மனிதநேய மொழிதல் என்பதை, இன்சொற்களால் பிறர் மன மகிழ்ச்சியை உண்டாக்குதல்; ஆதரவான சொற்களால் ஆற்றுப்படுத்துதல் எனலாம். இவ்வடிப்படையில்,  கேட்டார்க்கு இன்பத்தைத் தருதலான சொற்களைப் பேசுபவன் என்பதை,

                        நகைசால் வாய்மொழி  யிசைசா றோன்றல் (55:10-11)

என்ற பதிற்றுப்பத்தின்  மொழியில் உணரமுடிகிறது.  தாம் பெற்ற இன்பத்தினை எல்லோரும் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆற்றுப்படுத்தும் பண்பைப்  பதிற்றுப்பத்தின் பல பாடல்கள் காட்டுகின்றன. அதில்

‘சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை’ (87: 1)

 

என்ற பெருங்குன்றூர் கிழார் சொல்லையும்,

‘கடனறி மரபிற் கைவல் பாண

தென்கடன் முத்தமொடு நன்கலம் பெருகுவை’ (67: 3-4)    

என்ற காக்கைக்பாடினியார் மொழியையும் சுட்டலாம்.

           

மனிதநேயச் செயல்கள்

            மனிதநேயப் பண்புகளின் வழி, மனிதநேய எண்ணம், மனிதநேய மொழிதல் என்பனவற்றின் உயர்நிலையாக மனிதரிடத்து வெளிப்படுவது  மனிதநேயச் செயல்களாக அமைகின்றன.

 கொடை

            கொடையில் சிறந்த குறுநில மன்னர்களும் பெருநில வேந்தர்க்கும் மேலாக போற்றப்பட்ட பாங்கினை இலக்கியங்கள் இனங்காட்டுகின்றன. மன்னர்கள் கொடை மடம் பட்டதையும் சங்கப் புலவர்கள் காட்டியுள்ளனர். பாடிவரும் புலவர்க்குப்  பல ஊர்களை உரிமையாக்குவதிலும், ஆடிவரும் கூத்தர்க்குப் கொட்டிக்கொடுப்பதிலும், இரங்கும் இரவலர்க்கு இல்வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுப்பதிலும், இல்லை என்று வருவோர்க்கு இல்லை என்னாது, இன்முகத்தோடு வழங்கியதிலும் சங்க இலக்கிய மன்னர்களும் மக்களும் மனிதநேயத்தில் சிறந்து விளங்கியமையை இலக்கியங்கள் இயம்புகின்றன.

            பின்னாளில் உதவுமென்றும், பிள்ளைகளுக்கு ஆகுமென்றும் செல்வம்தன்னைச் சேர்க்காமல், இருப்பதை எல்லோருக்கும் ஈந்து வாழ்ந்த இணையற்ற வாழ்வினை பதிற்றுப்பத்தும் பகர்கின்றது. பதிற்றுப்பத்தைப் பொருத்தவரையில் அது முற்றிலும் போரையும் போரைச் சார்ந்த செய்தியையுமே தன்னுள் கொண்டிராமல், சேரமன்னர்களின் படை மாட்சி, கொடைமாட்சி, பண்புகள், மக்கள் வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், சமுதாய நிலை என்ற அனைத்துக் கூறுகளையும் தாங்கி நிற்கிறது. மேலும், இவற்றில் கொடைப் பண்புகள் பதிற்றுப்பத்தின் சேரமன்னர்கள் அனைவரிடமும் இருந்துள்ளமையை அறிய முடிகிறது. பார்வைக்குச் சில பதங்கள்.

            இமயவரம்பன் நெடுசேரலாதனின் கொடைத்தன்மையைக் குமட்டூர்க்கண்ணனார் குறிப்பிடும் இடத்து,  சேரலாதன், இம்மண்ணுலகத்தில் வாழும் நிலைபெற்ற உயிர்க்குக் குறைவில்லாமல் தந்து கை ஓய்தல் இல்லாத கொடுக்கும் கொடைத்தன்மையை உடையவன் என்கிறார். இதனை,

            மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க் கெஞ்சா

          தீத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பிற்

          புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி’  (15: 35-37)

என்பதில் அறியலாம்.

            மனிதனின் எண்ணங்களும், செயல்பாடுகளும் அவன் வாழும் சூழலுக்கு ஏற்பவே அமைகின்றன. இத்தன்மைக்குச் சான்றாய், சேரர் படை வீரர்கள் விளங்கிய செய்தியைக் காணமுடிகிறது. களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைப் பற்றிக் காப்பியாற்றுக்காப்பியனார் குறிப்பிடும் இடத்து, நீ பிறர்குரியாளனாய் வாழ்வதால் நின் போன்றே நின் படைவீரரும் பிறர்க்கு உரியவராய் வாழ்கின்றனர் என்கிறார். இதனை,

          ‘பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே

          எமக்கிலென் னார்நின் மறங்கூறு குழாத்தர்’ (39:1-2)

என்ற அடிகளில் குறிப்பிடுகிறார்.

            கொடைப்படும் பொழுது எதிர் இருப்போரின் ஏழ்மையைப் பார்க்கவேண்டுமே அல்லாது, கொடுக்கும் பொருளின் உயர்வு கருதுதல் கூடாது. பார்ப்பின் அது மனிதநேயச்  செயலாகாது. தன்னலமின்மை என்பதற்கு, கருநெல்லியின் உயர்வு கூறாது அதை ஔவைக்கு அளித்த அதியனின் செயலைக் குறிப்பிடலாம். இத்தகையை உயர் பண்புகளைப் பதிற்றுப்பத்தும் உணர்த்துகிறது. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரணர் குறிப்பிடும் இடத்து, கொடுக்கும் பொருள்களை அவை அரியவை என எண்ணாமலும், தனக்கு வேண்டும் என எண்ணாமலும் வழங்கினான் என்கிறார்.  இதனை,

                                அரிய வென்னா தோம்பாது வீசிக்

          கலஞ்செலச் சுரத்த லல்லது கனவினும்

          களைகென வறியாக் கசடி னெஞ்சத்து’ (44: 4-6)

என்பதில் உணர்த்துகிறார்.

 

            காக்கைப் பாடினியார் நச்சௌ¢ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் கொடைத்திறனைக் குறிப்பிடும் இடத்து, உன்¢ கை இரப்பவர்க்கு ஈவதற்குக் கவியுமே அல்லாது மற்றவர் எவரையும் இரத்தற்கு மலர்தலை அறியாது. இவ்வாறு நின்னைப்பற்றிச் சான்றோர் பலரும் கூறக் கேட்டிருக்கின்றோம் என்பதை,

            நல்லமர்க் கடந்தநின் செல்லுறழ் தடக்கை

          இரப்போரக்குக் கவித லல்லதை யிரைஇய

          மலர்பறி யாவெனக் கேட்டிகு மினியே’ (52: 10-12)

என்ற அடிகளில் குறிக்கிறார்.

            புலவர்கள் மன்னர்களைப் பாடுதல் என்பது வெறும் பரிசிலை நோக்கி மட்டுமல்ல, உண்மையை உலகிற்கு உணர்த்தலும், அவர்களின் நற்செயல்களை ஊக்கப்படுத்தலும் என்பதுமாகும். இவ்வுண்மையைக் கபிலர் செல்வக்கடுங்கோவாழியாதனை பாடுதலில் உணரமுடிகிறது. ‘எம்மை இதுகாறும் போற்றிய வேள்பாரி இறந்தான் ஆதலால் எம்மை ஆதரிப்பாயாக’ என்று யாசிப்பை மேற்கொண்டு நின்னிடத்தே வந்தேனில்லை. நின் புகழைக் குறைவாகவும் மிகுதியாகவும் ஈவதால் பொருள் செலவு குறித்து உள்ளம் இரங்கமாட்டான். இடைவிடாமல் ஈவதால் புகழ் மிகுவது காரணமாக மகிழ்ச்சியை அடையவும் மாட்டான்.  ஈயும் போதெல்லாம் பெரிய வள்ளன்மை உடையவன்’ என்று உலகோர் கூறும் நின் நல்ல புகழ் எம்மை நின்னித்து ஈர்த்தது. அதனால் நின்னிடம் வந்தேன் என்பதை,

            ‘இரக்கு வாரா னெஞ்சிக் கூறேன்

          ஈத்த திரங்கா னீத்தொறு மகிழான்

          ஈத்தொறு மாவள் ளியனென நுவலுநின்

          நல்லிசை தரவந் திசினே’ (61:11-14)

என்பதில்  சுட்டுகிறார்.

            இதைப்போன்றே, பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில்கிழார் புகழுமிடத்து, ‘முற்பகலில் வந்து இரந்தவர் வறுமை நீங்கி வாழும்படி களிறுகளைத் தந்து, பிற்பகலில் வந்து இரப்பவர்க்கும் ஈவதில் குறையாத குதிரைகளை வரையாமல் அளிக்கும் நினது பாசறை இருப்பைக் கண்டு போவதற்காகத்தான் வந்தேன் என்கிறார். இதனை,

            ‘இரந்தோர் வாழ நல்கி யிரப்போர்க்

          கீத றண்டா மாசித றிருக்கை

          கண்டனென் செல்குவ வந்தனென்’ (76:6-9)

என்பதன் வழி  அறியலாம்.

            மேலும், ‘அகன்ற இடத்தையுடைய இவ்வுலகத்தில் நல்ல புகழை நிலை நிறுத்தும் பொருட்டு, வறியவரின் துன்பம் நீங்குமாறு வேண்டியவற்றை நிரம்பக் கொடுக்கும் அறத்தையே ஆராய்தற்கு அமைந்த நெஞ்சையும் அசைந்த நடையையுமுடைய அண்ணலான புகழ் பாடும் புலவர் பாணர் முதலியவர்களை ஆதரிப்பவன்’ என்று இளஞ்சேரலிரும்பொறையை,

          ‘நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத்

          தில்லோர் புன்கண் டீர நல்கும்

          நாடல் சான்ற நயனுடை நெஞ்சில்

          பாடுநர் புரவல னாடுநடை யண்ணல்’ (86: 5-8)

என்ற அடிகளில் போற்றுகிறார் பெருங்குன்றூர் கிழார்.

            இருப்போர் வழங்கும் கொடையைவிட இல்லார் தாம் இரந்தும், பாடியும், பெற்றதைச் சேமித்து வைக்கவேண்டும் என்றெண்ணாது, பிறர்க்குக் கொடுத்து உதவ வேண்டும் என்றெண்ணுவது மனிதநேயமாக அமைகிறது. இத்தகைய மனிதநேயச் செயலைப் புறநானூற்றின், இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது, வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்எல்லோர்க்கும் கொடுமதி-மனைகிழ வோயே!-6 என்று குறிப்பிட்ட பெருஞ்சித்தனார் போல, பதிற்றுப்பத்தின் குமட்டூர்க்கண்ணனாரும் குறிப்பிடுகிறார். இதனை,

            ‘பெற்ற துதவுமின் றப்பின்று பின்னும்

           மன்னுயி  ரழிய, யாண்டுபல துளக்கி

          மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட

          தண்ணிய லெழிலி தலையாது மாறி

          மாரி பொய்க்குவ தாயினும்

          சேர லாதன் பொய்யல னசையே’ (18: 7-12)

என்பதில் அறியலாம். இதில் மன்னரின் மனிதநேயச் சிறப்பும், கொடைபெற்றவரின் மனிதநேயச் சிறப்பும் ஒருங்கே வெளிப்படுவதைக் காணலாம்.

 விருந்தோம்பல்

     ‘மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’-7 என்கிறது மணிமேகலை. பசி என்று வருவோர்க்கு உணவளித்து உபசரிப்பதன் உண்ணதத்தை இவ்வரிகள் உரைக்கின்றன. இப்பண்பு ஒரு சிறந்த மனிதநேயமாகக்  கொள்ளப்படுகிறது. விருந்தோம்பல் என்பது சங்க இலக்கியங்கள் யாவற்றிலும் காணப்படும்  பண்பாகத் திகழ்கிறது. விதை நெல்லைக்கொண்டும் விருந்தோம்பிய சிறப்புகளுக்கு உரியவர்களாக பழந்தமிழர்கள் திகழ்ந்துள்ளனர்.  இத்தகைய விருந்தோம்பும் மனிதநேயப்பண்பைப் பதிற்றுப்பத்தும் தம் பாடல்கள் பலவற்றில் காட்டுகிறது.

            இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் விருந்தோம்பல் பண்பைக் குறிப்பிடும் இடத்து, ‘குளிர்ந்த மழை மேகம் நிலையான உயிர்கள் அழியுமாறு பல ஆண்டுகள் பெய்து குளிரச் செய்யும் செயலின் நீங்கி மழை பொழியாது போனாலும் தன்னை அடைந்தார்க்கு வயிற்றுப் பசித் தீ மிக்கு எழுமாறு குறைவாகக் கொடான். பசி நீங்க நிறையக் கொடுப்பவனாதலால் அவனைப் பெற்ற தாய் வயிறு குற்றம் இன்றி விளங்குவாளாக!’என்று குமட்டூர்க் கண்ணனார் போற்றுகிறார். இதனை,

            தண்ணிய லெழிலி தலையா தாயினும்        

          வயிறுபசி கூர வீயலன்  

          வயிறுமா சில¦இயரவ னீன்ற தாயே’ (20: 25-28)

என்பதில் அறிலாம். மேலும் இவரே, துய்ப்பதற்கு இனிய, கிடைப்பதற்கு அரிய பொருள் கிடைப்பினும், அதனை தனியே உண்போம் எண்ணாது, பலரோடும் பகுத்தே உண்பான் என்கிறார். அத்தோடு, பலருக்கும் பகுக்கவே இவன் தொகுக்கிறான் என்கிறார். இதனை,

            ‘இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்

          தருகென விழையாத் தாவினெஞ் சத்துப்

          பகுத்தூண் டொகுத்த வாண்மைப்

          பிறர்க்கென வாழ்திநீ யாகலன் மாறே’ (38:13-16)

என்ற அடிகள் குறிப்பிடுகின்றன. ‘இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிய எனத் தமியர் உண்டலும் இலரே’-8 என்ற புறநானூற்றுச் சிந்தனை இங்கு நோக்கத்தக்கது.

            கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனின் விருந்தோம்பல் பண்பைக் குறிப்பிடும் பரணர், ‘பெரும, உன்னை நாடி வந்த புலவர்கள்  உண்பனவற்றை ஓம்பாது உண்ணச் செய்தனை, அவருடன் அமர்ந்து உண்டனை. இன்பச் சுவை நல்கும் பாணர் கூத்தர் முதலியவர் நிரம்பப்  பெறுமாறு நீ நல்ல பொன் அணிகளை எல்லையில்லாது தந்தனை’ என்கிறார். இதனை,

 

            உறுவர் ஆர ஓம்பாது உண்டு

          நகைவர் ஆர நன்கலம் சிதறி’

என்ற அடிகள் சுட்டுகின்றன.

விருந்தோம்பல் பண்பை சிறப்பாக செய்துவரும் நிலையில், விருந்தினர் வராத வேளையில் மனம் வாடி, அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அழைத்து வரும் மனிதநேயச் செயலையும்  காணமுடிகிறது. இதனை,

            ‘வாரா ராயினு மிரவலர் வேண்டித்

          தேரிற் றந்தவர்க் கார்பத னல்கும்

          நகைசால் வாய்மொழி யிசைசா றோன்றல்’ (55:10-12)

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

 பிறர் துன்பம் கண்டு இரங்கல்

            எவ்வுயிர் இன்னலுற்ற போதும் இரங்குதலும், இரங்கலோடு இன்சொற்கள் புரிதலும்,  இன்சொற்களோடு இயன்ற நன்மைகள் செய்தலும் மனிதநேயத்தின் வெளிப்பாடாகும். அவ்வகையில், பிறர் துன்பங்கண்டு வருந்தி, அத்துன்பத்தின் தீவிரத்தை எடுத்துக் கூறி தவிர்க்க எண்ணும் புறபாடல் புலவனைப் பதிற்றுப்பத்தில் காணமுடிகிறது. இவர்,

            ‘தேர் ஓடுதலால் சேறான வயல்கள் பின்பு ஏர்கள் சென்றுலவி உழுதலை வேண்டா ஆயின. பன்றிகள் கோரைக்கிழங்கைத் தோண்டி எடுத்த கொல்லைகள் கலப்பையால் உழப்படுதலை வேண்டா ஆயின. தயிரைக் கடையும் மத்தின் ஒலி ஒலிக்கும் ஆய்ச்சியர் மனைகள் இனிய வாத்தியங்களின் ஓசை கேட்கப்படா ஆயின. அவ்விடத்தை முன்னம் நன்றாகக் கண்டறிந்தவர் அப்போதிருந்த செழுமையான வளப்பத்தை இப்போது எண்ணுவராயின், நினைக்கின்ற நெஞ்சு நோவத் தக்க வருத்தம் ஏற்படும். நானும் அதை எண்ணி வருந்துகின்றேன்’ என்கிறார். இவ்வருத்தத்தை,

            ‘தேஎர் பரந்தபுல மேஎர் பரவா

          களிறா டியபுல நாஞ்சி லாடா

          மத்து ரறியமனை இன்னிய மிமிழா

          ஆங்குப், பண்டுநற் கறியுநர் செழுவள நினைப்பின்

          நோகோ யானே நோதக வருமே’ (26:1-5)

என்ற அடிகளில் உணரமுடிகிறது. இத்துன்பங்கண்டு வருந்திய இப்புலவரே இதுபோன்ற அழிச்செயல்கள் நடக்குமுன்னே தடுக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், படையோடு செல்லும் அரசனைப் பார்த்து, இக்கோட்டை இருக்கும் வழியாகச் செல்லாதே, அது உன் முன்னோர்களெல்லாம் போற்றி பாதுகாத்த கோட்டை. உன் வீரர்களால் அழிவு ஏற்பட்டுவிடுதல் கூடாது என வலியுறுத்துகிறார். மேலும், நீ¢ செல்லும் இடம் மிகத் தொலைவு என்றாலும் வேற்றுவழியில் செல்க! என்கிறார். இதனை,

                        ‘எயின்முகப் படுத்தல் யாவது வளையினும்

                    பிறிதாறு சென்¢மதி’ (53: 12-13)

என்பதில் உணரலாம். இதைப் போல பிறர் துன்பங்கண்டு வருந்தும் பண்பினைப் பெற்றவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்  என்பதை, ‘சேரனின் காதல் மங்கையர் ஊடலால் சினத்துடன் நோக்கும் பார்வையை விட இரவலர் தன்னிடம் குறையிரந்து பசித்துன்பம் தோன்ற நோக்கும் பார்வை கண்டு மிகவும் அஞ்சுபவன்’ என்கிறார் காக்கைப்பாடினியார். இதனை,

                        ‘ஒண்ணுதன் மகளிர் துனித்த கண்ணினும்

          இரவலர் புன்க ணஞ்சும்’ (57:13-14)

என்ற அடிகள் சுட்டுகின்றன.

பிற மனிதநேயச் செயல்கள்

     மேலே குறிப்பிட்ட மனிதநேயக் கூறுகளோடு, முதியோரைப் பேணுதல்; சான்றோர்களைக் காத்தல்; சிறியோரை அளித்தல்   போன்ற மனிதநேயச் செயல்களையும் பதிற்றுப்பத்தில் காணமுடிகிறது.

            பரிசிலை வேண்டி வரும் இரப்பவர் கூட்டத்தில் கொடைச் செயலில் எதையும் என்றும் வரைதலை அறியாய்!  பெரியோரைத் பேணிக் கொண்டு சிறியோரையும் புறக்கணியாமல் அருளுகின்றாய்’ என்ற  அரிசில்கிழாரின் கூற்றால் பெருஞ்சேரல் இரும்பொறையின் மனிதநேயம் புலப்படுகிறது. பெரியோரைப் பேணுதலோடு, அறிவு, ஆண்மை, பொருள், படை முதலியவற்றால் தன்னிற் சிறமையுடையாரை அளித்தோம்பலும் சிறந்த மனிதநேயமாக அமைகிறது. இதனை,        

                        ‘கொடைபோற் றலையே யிரவலர் நடுவண்

                       பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி’ (79:2-3)

என்பதில் அறியலாம். 

முதியோரைக் காத்தல்

            நாட்டில் வாழும் முதியவர்களைப் பேணிக்காத்து, அவர்களுக்குத் தொண்டினைச் செய்விக்கும் மனிதநேயப் பண்பினை,

                        ‘வணங்கியசாயல்  வணங்கா வாண்மை

 இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி’ (70:20)

என்ற அடிகளில் கபிலர் உணர்த்துதலைக் காணலாம்.

 முடிவு

            மக்களிடம் மனிதநேயம் மலர, மனதில் வளர்த்துக்கொள்ள வேண்டிய நற்பண்புகளைப் பட்டியலிடுவதோடு, வேண்டாத பண்புகளையும் விளக்குகிறது பதிற்றுப்பத்து.

            பதிற்றுப்பத்தில்  மன்னர், மக்கள்  என்ற வேறுபாடின்றி எல்லோரிடத்தும் மனிதநேயக் கூறுகளில் ஒன்றான கொடை விளங்கியமையைக் காணமுடிகிறது. அரிதாகக் கிடைத்த ஒன்றாயினும், பரிசில் பெற்ற ஒன்றாயினும் அதன் அருமை கருதாது எல்லோர்க்கும் வழங்க வேண்டும் என்ற மனிதநேயச் சிந்தனை கொண்ட பழந்தமிழர் வாழ்க்கையினைப் பதிற்றுப்பத்துப் படம்பிடித்துக் காட்டுகிறது. 

        தம் வீடு தேடி வரும் யாவருக்கும் மட்டுமல்லாது, வறியவர் இருக்கும் இடம் தேடிச்சென்று விருந்தோம்பிய மனிதநேயப் பண்பை  பதிற்றிப்பத்துப் பகர்கிறது.

      பிறர்துன்பங்கண்டு இரங்குதலோடு, இனியன மொழிதல், இயன்றன ஆற்றல் போன்ற மனிதநேயச் செயல்களைப் பதிற்றுப்பத்துக் காட்டுகிறது.

     ஆற்றுப்படுத்துதலின் அருமையினையும், பெரியோரைப் பேணுதலின் பெருமையினையும், பதிற்றுப்பத்து வழி உணரமுடிகிறது.

    இவ்வகையான மனிதநேயக் கூறுகளைத் தன்னுள் கொண்டு, பழந்தமிழரின் மனிதநேயப் பண்பை உலகிற்குப் பறைசாற்றுகிறது பதிற்றுப்பத்து.

 *********

அடிக்குறிப்பு

1. க்ரியா ப. 261

2. க்ரியா ப. 102

3. குறள். அருளுடைமை விளக்கம்

4. ஆய்வாளர் கவிதை வரிகள்

5. புறநானூறு 195: 6-7

6. புறநானூறு 163: 5-7

7. மணிமேகலை 11: 95-96

8. புறநானூறு 182: 1-3

 

முதன்மைச் சான்றுகள்:

1.பதிற்றுப்பத்து, ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்  கழகம் லிமிடெட், 154, டி.டி.கே. சாலை, சென்னை -18

2.பதிற்றுப்பத்து(மூலமும் உரையும்) அ.மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 1999

3.பதிற்றுப்பத்து, வித்துவான் எம். நாராயண வேலுப்பிள்ளை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,  சென்னை. 1998.

 துணைமை ஆதாரம்:

1.         க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, East west Books (Madras). Pvt. Ltd.1992

2.         திருக்குறள், பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை. 2001

3.         புறநானூறு மூலமும் உரையும், அ. மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம், 

           சென்னை, 2001

4.         மணிமேகலை மூலமும் உரையும், பேரா. ஜெ. ஸ்ரீசந்திரன், வர்த்தமானம்  பதிப்பகம்,                   சென்னை, 2002.