திங்கள், 25 ஏப்ரல், 2011

கவிஞர் ஆ மணவழகனின் கூடாகும் சுள்ளிகளை முன்வைத்து

மழைக்கு நனையும் குடை..


முனைவர் கு. சிதம்பரம்
உதவிப் பேராசிரியர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

              வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்துபார் என்கிறது முதுமொழி. சுள்ளிகளைப் பொறுக்கியெடுத்துக் கூடுகட்டும் காகத்தின் வலியும் வலிமையும், தூக்கணாங்குருவியின் தொழில்நுட்பமும் அறிவியலும், சிலந்திப் பூச்சியின் ஓவியமும் அழகுணர்ச்சியும் அவை கட்டும் வீடுகளில் காணலாம். சுள்ளிகளைத் தேடியெடுத்து உயரமான மரக்கிளைகளின் நடுவில் கட்டும் காகத்தின் வீடு அடைமழை பெய்தாலும், ஆடி மாதக் காற்றில் அம்மி பறந்தாலும் ஆடாமலும் அசையாமலும் இருக்கும். அதிலிருந்து ஒரு சுள்ளிகூட கீழே விழுந்துவிடாது. அதேபோல், தூக்கணாங்குருவியின் தொழில்நுட்பம் பற்றி சங்க இலக்கியப் புலவர்களுக்குக்கூட வர்ணிக்க வார்த்தைகள் இன்றிப் போயிருக்கலாம். அந்தரத்தில் அழகான அடுக்குமாடி கட்டி அதிலொரு விளக்கு வைத்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் பறவையைப் பார்த்தால் அதிசயக்க முடியாமல் இருக்க முடியுமா?

                            ஆயிரம் தாஜ்மகால் அதிசயம்
                            ஒற்றைத் சித்தனின் உயிர்த்தவம்

                            தூக்கணாங்கூடு

என்று தூக்கணாங்குருவியின் கவித்திறத்தைக் கண்டு அதிசயத்தின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார் கவிஞர் ஆ.மணவழகன் அவர்கள்.

        பட்டுப்புழுக்களே நீங்கள் பின்னிக்கொண்டிருப்பது
       பட்டு இல்லை
       நீங்கள் பின்னிக்கொண்டிருப்பது கவிதைகள்
       உங்கள் கவிதைகள் எவ்வளவு மென்மையாக உள்ளன
      எவ்வளவு வசீகரம், எவ்வளவு நேர்த்தி,
      எவ்வளவு நுட்பம், எவ்வளவு...
      உங்களை வர்ணிப்பதற்கு வார்த்தைகள்
      கிடைக்கவில்லையே ஏன்?
      --------------------------------------------
      ஆகா உங்கள் கவிதைகள் இயல்பானவைதான்
      ஆகா உங்கள் கவிதைகள் இயற்கையானவைதான்
      நீங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும்
      கலைநயமிக்க அரண்மனை
     ஆகா உங்களுக்காக மட்டும்தான்!  
                                                   (தமிழில் கு. சிதம்பரம்)

என்று சீனக் கவிஞர் குவோ மொடுவோ பட்டுப்பூச்சியின் கவித்திறத்தைக் கண்டு அதிசயத்ததை ஒப்புநோக்கினால் கவிஞருக்குள்ள பொதுத்தன்மையை அறிய முடிகிறது.

          தேனீக்கள் முதல் பறவைகள்வரை தங்கள் வாழ்நாளில் தங்களுக்கான வீட்டைக் கட்டி அழகு பார்த்துவிடுகின்றன. ஆனால், மனிதர்களுக்கு வீடு என்பது இந்த நூற்றாண்டிலும் கனவாகவே உள்ளது. எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்கிறது முதுமொழி. தனக்கென ஒரு வீடு கட்டுவதில் உள்ள நிகழ்கால சிக்கல்களை ‘கனவு சுமந்த வீடு’ என்ற கவிதை காட்டுகிறது.

                            கடைக்கால் எடுக்கையில்
                            ஒதுக்கிவிட்ட வேப்பங்கன்று
                            தளிர் தாங்கி
                            நிழல் பரப்பி
                            கூடு சுமக்கும் மரமாய்
                            கனவு இல்லமோ
                            இன்னும் கடைக்காலாய் 

இன்று எத்தனையோ வீடுகள் கடைக்காலோடு நின்றுபோவதையும், தரைமட்டத்தோடு நின்றுபோவதையும் பார்க்கிறோம். இவ்வாறு கட்டிமுடிக்கப்படாமல் பாதியிலேயே நின்றுபோகும் வீடுகளைக் காணும்போதெல்லாம் வாடிவிடும் கவிஞரின் உள்ளம் இதன்மூலம் தெரிகிறது.

                 இவ்வாறு, பாதியிலே நின்ற வீட்டைத் தூக்கி நிறுத்த வங்கியில் நில அடமானம் வைத்து கடன்பெற்று கட்டிமுடித்தால், வட்டியோடு பணத்தை வைத்துவிட்டு வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்துகொள் என்று கடன் கொடுத்தவன் வீட்டைப் பூட்டிச் செல்லும் நிகழ்கால அவலத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் கவிஞர்.

                          காட்டின் பத்திரம் வைத்து
                          ஏர் மாடுகளைக் கலப்பையோடு விற்று
                          ஆசை ஆசையாய் வளர்த்த மரங்களையும்
                          அக்கா வளர்த்த ஐந்தாறு ஆடுகளையும்
                          அடிவிலைக்கு அம்போவென்று கொடுத்து
                          அடுத்த பருவத்திற்கு எடுத்து வைத்த
                          விதை நெல்லையும்
                          அம்மாவின் ஒற்றைக் கொடியையும் விற்று
                          வீடு கட்டினார் அப்பா
                          குடிபுகுமுன் ஓலை வந்தது
                          இம்முறையும் தவணை தவறினால்
                          வீடு தாழிடப்படும் என்று

இவ்வாறு ஆயிரம் சிரமங்களுக்கு ஆட்பட்டு கட்டி முடிக்கப்படும் வீடுகளுக்குக் குடிபோகுமுன் எண்ணற்ற சிக்கல்கள். மாநகராட்சிகள் ஒருபுறமும் இயற்கை சீற்றங்களான சுனாமி, பூகம்பம் போன்றவை மறுபுறமும் கனவு வீடுகளைக் குறிவைத்து அப்புறப்படுத்துகின்றன. ஒரே நிமிடத்தில் மாடிவீடுகளைத் தரைமட்டமாக்கி மீண்டும் நடுத்தெருவிற்குக் கொண்டுவந்து விரட்டிவிடுகின்றன. இதைக்கண்ட கவிஞர் ‘ஒட்டடை’ என்ற கவிதை மூலம் தனது கண்ணீரைக் கடலில் கலந்திருக்கிறார்.

                            ஐயோ
                            துடைத்துவிடாதே
                            ஒட்டடை அல்ல வீடு

                            சுவற்றில் சிலந்தி


             நிகழ்கால மருத நிலத்து மக்களின் புற வாழ்க்கை இன்ப துன்பங்களைக் கண்ணாடி அணியாமலேயே கண்டுகொள்ளும் அளவிற்குத் தனது கவித்திறத்தாலும் கவிதை மொழியாலும் பூமி உருண்டையை இயக்கும் கடவுளைச் சாட்டையால் அடித்தது போன்று வாசகர்கள் உளத்தில் ஏற்படுத்தத் தவறவில்லை. அதேபோல,

                               ----------------
                               என் முன்
                               கூட்டை இழந்த பறவையாய் நீ
                               உன்முன்
                               பறவையை இழந்த கூடாய் நான்

என, கூட்டை மையமாக வைத்து அக வாழ்க்கையின் அழகியலையும் தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கையையும் ‘பறவை இழந்த கூடு’ என்ற கவிதை மூலம் வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.


     கூடாகும் சுள்ளிகள் என்ற கவிதைத் தொகுப்பின் கவிதைகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கதைச் சொல்கிறது, மக்களின் வாழ்க்கையைச் சொல்கிறது.ஆட்டுக்குட்டிகளைப் பாதுகாக்கும் குடாப்புப்போல மக்களை பாதுகாக்கத் துடிக்கிறது கவிஞரின் மனம். மழைக்கு நனையும் குடைபோல இவரது கவிதைகள் சமூக அவலத்திற்கு நனைந்துகொண்டிருக்கின்றன.ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெறும் வகையில் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டிய கவிதைகள் இவை.

நூல்          – கூடாகும் சுள்ளிகள் – கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்      - கவிஞர் ஆ.மணவழகன்
வெளியீடு     – அய்யனார் பதிப்பகம், சென்னை 88, 2010. 

சனி, 9 ஏப்ரல், 2011

கவிஞர் ஆ.மணவழகன் கவிதைகள் - 4


கனவு சுமந்த கூடு


கடைக்கால் எடுக்கையில்
ஒதுக்கிவிட்ட வேப்பங்கன்று
தளிர் விரித்து
கிளை தாங்கி
நிழல் பரப்பி
கூடு சுமக்கும் மரமாய்
கனவு இல்லமோ
இன்னும்
கடைக்காலாய்



பிறர்தர வாரா


ஒப்புசாண் மலை மீது
பீடியைப் பற்றவைத்துக் காட்டினான்

கோனான் சிவக்குமார்

இரத்தினம் கிணற்றில்
புறா பிடிக்கும் அவசரத்தில்
புகையிலையின் மகத்துவம்(!?) சுட்டினான்
பால்ய நண்பன் பாண்டியன்


நாத்தம் பாக்காம குடிச்சிடு
ஒத்தை மரத்துக் கள் உடம்புக்கு நல்லது
எடுத்து வைத்தார்கள்
சிறிய கோப்பையில் அப்பாவும்
பெரிய சொம்பில் மாமாவும்


பீர் மட்டுந்தான் நல்லதாம்
காட்டுக்கோட்டை கல்லூரிக் காலத்தில்
வாங்கிவந்தார்கள்
சேட்டும் குமரேசனும் ராஜேசும்


தேசியக் கல்லூரியில்
வில்ஸ் வெண்சுருட்டை
விரலிடுக்கில் வைக்கும்
லாவகம் சொன்னான்
மாப்ள காளிமுத்து


கஞ்சா என்னவெல்லாம் செய்யும்
வகுப்பெடுத்தான்
அகால மரணமடைந்த ஆருயிர் நண்பன்


பாக்கியநாதன்
இதப் பழிக்கக்கூடாது சார்
குழந்தை மாதிரி ஒண்ணுமே பண்ணாது
இராணுவ ரம்மை சோடாவில் கலந்து கொடுத்தார்
பசுமைக் கவிஞர்


எதா இருந்தாலும் இதுக்கு உட்டதுதான்
சாமிக்கு வாங்கி வைத்த சாராயத்தை
நாக்கில் வைத்துப் பார்க்கச் சொன்னான்
தையல் கடை செல்வம்


முழு பான்பராக்கையும்
ஒரே வாயில் போட முடியுமா?
பந்தயம் கட்டித் தோற்றான்
திருச்சி நண்பன் சங்கர்

எல்லா எழவையுந்தான் பார்த்தாச்சு
எதிலேயும் ஒரு ---ம் இல்லை


பழகியாச்சு விடமாட்டேங்குது
பொய்சொல்லாதே
உன் மனைவி விதவையாவது பற்றி
உன் குடும்பம் நடுத்தெருவில் நிற்பது பற்றி
எந்த அரசுக்கும்
இங்குக் கவலையில்லை

வீடு சுமந்து அலைபவன்

சிறகு முளைக்குமுன்பே
பறக்கத் தொடங்கியாயிற்று


சைதாப்பேட்டை
மேட்டுப்பாளையம்
சானடோரியம்
இப்போது ஆதம்பாக்கம்


முதலில் கைப்பை
அடுத்து தானி
பின் குட்டியானை
இப்போது 407


வீட்டைச் சுமந்து திரிந்தாயிற்று
வேலையும் வேலை நிமித்தமும்
எங்கள் ஆறாம் திணை


வரலாறுகளை வரப்பில் சுமந்திருக்கும்
வளமான மண்
வாழ்க்கையை வாய்க்காலில் நிறைத்திருக்கும்
வற்றாத கிணறு


சோகத்தை விதைத்ததால்
இன்பத்தையே விளைவிக்கும் இல்லம்


குளோரின் கலக்காத குடிநீர்
குப்பைகளைச் சுமக்காத காற்று
எல்லாமும்தான் இருக்கிறது ஊரில்


இருந்துமென்ன---
இருந்தது இல்லாமல் போகும்போதும்
இருப்பு இடம் மாறிப் போகும்போதும்தான்
உறைக்கிறது


ஏதிலிகளின் வலி


திங்கள், 4 ஏப்ரல், 2011

கவிஞர் ஆ.மணவழகன் கவிதைகள் - 3


முரண்

பூச்சூடி
பொட்டு வைத்து
ஆடை உடுத்தி
அலங்காரம் செய்த
அழகு பொம்மையோடு
அம்மணக் குழந்தை
எங்கள் தேசம்


வெள்ள நிவாரணம்

ஒரு சோடி வேட்டி சேலை
மூன்று லிட்டர் மண்ணெண்ணெய்
ஐந்து கிலோ அரிசி
இரண்டாயிரம் ரொக்கம்
மாற்றாக
மனித உயிர்கள் பல
மனிதப் போலி

பலப்பல முகங்கள்
பலப்பல நிறங்கள்
உலக நாகரிகத்தை
உடலில் சுமக்கும் அதிசயங்கள்
பார்த்தால் பேசினால்
அனைவரும் மனிதரே
பழகிப்பார்
பத்தில் ஒன்பது பதர்கள்

 மாக்கள்
 வைக்கோல் கன்றுக்கு
மடிசுரக்கும் பசு
கட்சித் தொண்டன் 

அதிசயம்

ஆயிரம் தாஜ்மகால் அதிசயம்
ஒற்றைச் சித்தனின் உயிர்த்தவம்
தூக்கணாங்கூடு
சிறுமை

பிழைப்பில் கூடியது எறும்பு
இறப்பில் கூடியது மனிதம்
ஆறறிவுச் சிறுமை


ஒட்டடை
ஐயோ
துடைத்து விடாதே
ஒட்டடை அல்ல வீடு
சுவரில் சிலந்தி

ஐயோ பாவம்

நடுங்கி இருக்குமோ குளிரில்
புல்லின் நுனியில்
பனித்துளி
சுவடுகள்

நீ நடக்கும் பாதைகளில்
உன் பாதச்சுவடுகளைப்
பாதுகாத்து வை
உன் மரணம்
சாதனையாகும் பொழுது
அதுவும்
சரித்திரமாகும்




ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

உதிரும் இலை - நூல் மதிப்புரை


இருத்தலும் வாழ்தலும் - அதன் வலிகளோடு
ஆ. மணவழகன்

சைதாப்பேட்டை தொடர்வண்டி நிறுத்தத்தில் தொடங்கி, தாம்பரம் நிலையம் வருவதற்குள் படித்து முடித்துவிட்ட ஒரு கவிதைத் தொகுப்பு. ‘இக்கவிதைகள் சில வருடங்களுக்கு முன்பாகவே வந்திருக்க வேண்டும்’ என்ற பொன்.அனுர வின் பதிப்புரையோடும், ‘முனுசாமியின் கவிதைமொழி அழுத்தமானது’ என்ற கனிமொழியின் அணிந்துரையோடும், ‘சரியான அரசியல் புரிதலையும், அழகியல் உணர்வையும் பெற்றிருக்கும் யாழினி முனுசாமியின் கவிதைகள்’ என்ற  பா. இரவிக்குமாரின் ஆய்வுரையோடும் வெளிவந்திருக்கும் தொகுப்பு இது.  கவிஞர் யாழினி முனுசாமியின்  முதல் கவிதைத் தொகுப்பாக இது அறியப்படுகிறது. ஆனால், மொழி ஆளுகையும், கவிதை நடையும்  கவிதையோடு அவருக்கிருக்கும் நெடுநாளைய உறவை உறுதிசெய்கின்றன.

உனது அசைவுகளில்
                 நிரம்பியிருக்கிறது
                 எனக்கான மகிழ்ச்சி

என, குழந்தைக்கான கொஞ்சலோடு தொடங்குகிறது (குழந்தைக்கான கவிதையாகத்தான் இருக்கவேண்டும்) கவிதைப்பயணம். முதல் கவிதை குழந்தைக்கு அடுத்த கவிதை மனைவிக்கு (பனிக்கட்டி வைப்பு ) என்று வகைப்பிரித்தாலும், நவீன ஊடகத்தின் தாக்கம், இயற்கைவளம்  அழிவு, கிராம சூழல், காதல், வறுமை, முதிர்கன்னிகள், கல்வி நிலையங்களின் நிலை, இயற்கை பேரழிவு,  நாகரிக தேடல், நகர வாழ்க்கையில் நிறைவு நிறைவின்மை, உறவுகள், ஊணமுற்றோர் என, பலதரப்பட்ட சமூக காரணிகளும், சிக்கல்களும் இவர்தம் கவிதைகளில் கருப்பொருள்களாகின்றன.

                மழைக்காலங்களில்
                இடிந்துவிழும் வீடுகளைக் கொண்டது
                எங்கள் சிற்றூர்
                இந்தப் பெருமழையில்
                 யார் வீடோ

என இரங்குதலில், நகரத்தில் உடலால் மட்டுமே வாழும் தன்மையைக் கவிஞர் காட்டுகிறார்.

                போனவருடம்
                புதுப்பாவாடையைத் தூக்கிச் செருகி
                மிளகாய்ப்பட்டாசு வெடித்த சிறுமி
               இவ்வருடம்
               தலை தீபாவளிக்கு வருவதைக் கண்டு
               உள்ளுக்குள் முனகுகிறாள்
                பிருந்தா அக்காவின் அம்மா

என்ற முதிர்கன்னிகள் பற்றிய பதிவுகளாகட்டும்,

               சாணி வாரிக்கொட்டினாலும்
               ஊசிப்போன பின்தான் கொடுப்பாள்
              ஆண்டச்சி
              அடிச்சத்தம்/
              அழுகைச் சத்தம்தான்
              இங்கு வெடிச்சத்தம்
              எவன் செத்தாலென்ன
             வறுமை மட்டும் மார்கண்டேயனாக இருந்துகொண்டு?

என்ற வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு பற்றிய பதிவுகளாகட்டும், இவரின்  எளிய மொழி நடை கவிதைக்கு பலம் சேர்த்திருப்பது உண்மை.

பச்சை முடி செழித்த மலை/  கல்குவாரி முதலைகளால்/ மெல்ல மெல்ல விழுங்கப்பட்டு /ஊனமாய்க் காட்சியளிக்கிறது

என, இயற்கை அழிவினைப் காட்சிப்படுத்தும் கவிஞர்,

           கொள்ளையர்களுக்குத்
           தன் உறுப்புகளைக் களவுகொடுத்து
           பலவீனமாய் மெலிந்திருக்கும்
           ஏழையைப் போல்

என, ஏழைக்கு அம்மலையை ஒப்புமை படுத்துகிறார். அதோடு, ‘எரிமலைகளை / யாரும் நெருங்குவதில்லை’ எனத் தன் தீர்வையும் முன்வைக்கிறார்.

            கத்துதல்
            முட்டுதல்
            உழுதல்
           இனப்பெருக்கம் செய்தல்
           இப்படி அனைத்தம்சமும் உண்டு
          ஆனாலும் ஏனோ
          கறுப்பு மாடுகள் எளிதில் விலைபோவதில்லை

என்பதாக, தன் சமூக அரசியல் புரிதலையும் ஆங்காங்கே தெளித்துவிட்டுச் செல்லவும் கவிஞர் தவறவில்லை.

தான் வாழும் சூழலை அதன் இருப்போடும், இருமாப்போடும், வார்த்தைகளை மறைக்காத இசையின் இனிமையோடு பதிவு செய்தல் கவிதையின் வெற்றியாக அமைகிறது. கவிஞரின், கல்வி நிலைங்கள் பற்றிய கவிதையிலும், இன்னும் சிலவற்றிலும் இத்தன்மை வெளிப்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது. வலிந்து மேற்கொள்ளும் உவமைகளுக்கும், உருவகங்களுக்கும் இங்கு வேலையற்றுதான் போகின்றன.

               பாட்டியைக் கொடும்மைக்காரி என்ற அம்மா
                உணரவில்லை
               தானும் அவளாகவே
              மாறிவிட்டிருப்பதை

என்பதில், உறவுநிலைச் சிக்கல்களையும்,

              குடித்துத் தீர்த்திருந்தது
               குடி உன்னை
              இப்போதெல்லாம்
              குடித்து விழுந்துகிடப்பவரைக் கண்டால்
              பதைக்கிறது மனம்

என்பதில், குடியால் ஏற்பட்ட தன் குடும்ப பாதிப்பையும் பதிவுசெய்கிறார். கவிதை தோன்றும் காரணிகளுள் ‘இழப்பு’ என்பது முதன்மை பெறுகிறது. ஆம்,

                   இழந்துவிட்டதன் மீதுதான்
                   ஆசை அதிகரிக்கிறது
                   எப்போதும்
                   நேற்று அப்பா
                   இன்று நீ

என்கிறார் கவிஞர். ‘சுயம்’ நம்மை ஆற்றுப்படுத்துவது, அறியவைப்பது ஆயினும், துன்பத்தில் ஆழ்த்துவதும் அதுவே.

             மாலை மட்டும் மாற்றிக்கொள்வோமென்றேன்
            தமிழ்ப்பெண்ணின் அடையாளம் தாலி யென்றீர்கள்
            சீர் கொடுப்பது எனக்கு விலைகொடுப்பதென்றேன்
            பெற்றோரின் கடமையென்றீர்கள்
           ஒரு புரட்சித் தினத்தில்
           எளிமையாய் முடிக்கலாமென்றபோது
           ‘எங்களுக்கு கௌரவமிருக்கிறது’ என்றீர்கள்’
           எப்படியோ
           ஐந்து பைசா வட்டிக்கு வாங்கி
           ஒலிம்பிக் கார்ட்ஸ்
           புது மண்டபம்
           கச்சேரியென
           ஒரு சுபதினத்தில்
           ஊர்மெச்ச முடித்தாயிற்று
          வட்டி கட்டுவதில் திணருகிறது வாழ்க்கை

சமூகத்தின் மிக மிக்கிய காரணி மனிதன் என்றாலும்,  தனி மனிதனே சமூகம் அல்ல என்பது தெளிவு. இங்கு சமூகத்திற்காக சுயத்தை இழத்தலும், துன்பத்தில் வீழ்தலும் இயல்பாகிறது. அதவே கவிதையாகிறது.

            நத்தையாய் நகரும்
           அரசுப் பேருந்து
           எப்போது சென்று சேருமோ?
          தூரம் கடந்துவந்து மிரட்டுகிறது
          அதிகாரத்தின் குரல்
         ஒரு நிமிடம் தாமதித்தாலும்
          கரைந்து போகக்கூடும்
         என் குடும்பத்தின் ஒருநாள் உணவு

         என்பதில், மாத ஊழியனின் வாழ்வியல் நெருக்கடிகளும்,  முதலாளித் துவத்துக்குத் தம்மை  உயர்த்திக்கொண்டுவிட்ட அதிகார வர்கத்தின் போக்கும் கவிதைக் கருவாகின்றன.

மனைவிக்கு மரியாதை செய்வதாய் (‘பெண்ணியம் பேசுவதாய்...’ என்றும் கொள்ளலாம்) அந்தரங்கம் பேசும் இடத்தையும் ( தூக்கம் தளும்பும் உன்னை... - ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் இதனைக் கொள்ளலாம்) , நகரத்தின் பற்றுதலுக்கான காரணத்தை வலிந்து திணிக்கும் இடத்தையும் (காக்கை குருவி ...) தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இருத்தலை அதன் இயல்போடு பதிவுசெய்திருக்கும் இக்கவிதைகள் காலம் தாழ்த்தி வெளிவந்தாலும், செறிவையும், சீர்மையையும் இழந்துவிடவில்லை.   எதார்த்தங்கள், எளியமொழி நடையின் கைகோர்ப்போடு வலம் வருகின்றன. இவை தனிமனிதன்  சார்ந்த பதிவுகளாயினும், நிகழ்கால சமூகத்தின் முகத்தை அதன் உன்னதத்தோடும் ஊணத்தோடும் எதிரொளிக்கின்றன.


                         உதிரும் இலைகள் குறித்து
                        எந்தக் கவலையுமில்லை
                        துளிர்த்துக்கொண்டேயிருக்கின்றன
                       புதிய புதிய தளிர்கள்

நூல் - உதிரும் இலை
ஆசிரியர் - யாழினி முனுசாமி
வெளியீடு - மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ், சென்னை



பழந்தமிழர் தொழில்நுட்பம் - ஆய்வு நூல்


                  

பழந்தமிழர் தொழில்நுட்பம்
முனைவர் ஆ.மணவழகன்
அய்யனார் பதிப்பகம், சென்னை. மு.ப.2010


பழந்தமிழர் தொழில்நுட்பம் - நூல் குறித்து
முனைவர் கோ. பாக்யவதி
          எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் 



    முனைவர் ஆ. மணவழகன் இயற்றிய ‘பழந்தமிழர் தொழில்நுட்பம்’ என்னும் நூல், மக்கள் வாழ்வியல் கூறுகளை வெளிப்படுத்தும் ஊடகங் களாகத் திகழும் பழந்தமிழ் இலக்கியங்களின் வழி பழந்தமிழர் தொழில்நுட்பங்களை வெளிக்கொணரும் ஆய்வு நூல்.

                 பல்துறை அறிவு தமிழருக்கேயுரிய சிறப்பு. பிரபஞ்சத்தின் உட்கூறுகளாகிய ஐம்பூதங்களைத் தம் ஆராய்ச்சித் திறன் வாயிலாக அறிந்து கொண்ட தமிழர்கள் அவற்றை மனிதகுல ஆக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டனர். அவ்வகையில், வானியல், நிலவியல், நீர் மேலாண்மை, பொறியியல், மருத்துவம், நெசுவு, கட்டுமானம், தோல்பொருள், கப்பல் கட்டுமானம், உலோகம் எனப் பல்வேறு நிலைகளில் காணப்படும் பழந்தமிழரின் தொழில்நுட்பங்கள் இந்நூலில் விரித்துரைக்கப்படுகின்றன. இவ்வகைத் தொழில்நுட்பங்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்களின் பதிவுகளிலிருந்து தொகுத்தும் வகைப்படுத்தியும் நாளது வரையிலான வளர்ச்சியோடு ஒப்புமைப் படுத்தியும்  விளக்கியுள்ளார் ஆசிரியர்.

                பண்டைத் தமிழரின் வேளாண் தொழில்நுட்பத்தில் நீர் மேலாண்மை, ஊடுபயிர், சுழற்சி முறை பயிர், தழை, எரு உரங்கள் பற்றிய விவரங்களையும்; நீர்மேலாண்மை தொழில்நுட்பதில் அணைகள், நீருண் துறைகள், நீர் இறைப்புக் கருவிகள் பற்றிய தகவல்களையும் இந்நூலிருந்து அறிந்து கொள்ளலாம். உள்நாட்டு வணிகம் குறித்த தகவல்களைப் புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. வெளிநாட்டு வணிகத்தில் நறுமணப் பொருட்கள், ஆடைகள் ஏற்றுமதி சிறப்பாக இருந்ததையும் அரேபியர்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு ஏராளமான பொருள் ஈட்டியதையும் ஆசிரியர் சுட்டியுள்ளார்.

                பொறியியல் தொழில்நுட்பத்தில் கட்டுமானம், எந்திரங்களின் உற்பத்தி போன்றவற்றையும், நெசவுத் தொழில்நுட்பத்தில் பருத்தி, பட்டு, தோல் ஆடைகளின் தரம், உறுதி, வேலைப்பாடு போன்றவற்றின் சிறப்பினையும் அறிந்து கொள்ளலாம். சுருங்கை எனப்படும் கழிவுநீர்க் கால்வாய்களை மக்கள் அக்காலத்திலேயே பயன்படுத்திய திறன் போற்றுதற்குரியது.

                இதுபோன்ற பழந்தமிழரின் பல்துறைத் தொழில்நுட்பங்களை அழிவில்லாத இலக்கியங்கள் மூலம் புலப்படுத்தும் இந்நூல், இன்றைய தொழில் வளர்ச்சியில் எத்துறையாக இருப்பினும் நம் முன்னோர்கள் வகுத்து வைத்த பாதையில்தாம் நாம் பயணிக்கின்றோம் என்ற உண்மையை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.



நூல் - பழந்தமிழர் தொழில்நுட்பம்
ஆசிரியர் - ஆ. மணவழகன்
வெளியீடு - அ ய்யனார் பதிப்பகம், சென்னை
ஆண்டு - 2010

நூல் பெற - 9789016815

சங்க இலக்கியத்தில் மேலாண்மை - ஆய்வு நூல் குறித்து


சங்க இலக்கியத்தில் மேலாண்மை
ஆ.மணவழகன்
காவ்யா பதிப்பகம், சென்னை. மு.ப. 2007.


சங்க இலக்கியத்தில் மேலாண்மை நூல் குறித்து
 க.ஜெயந்தி
உதவிப் பேராசிரியர், சிந்தி கல்லூரி, சென்னை.

         தமிழையும் தமிழரையும் இழிவுபடுத்தும் வகையான கருத்துகள் தமிழரிடையேயும் பரவலாகக் காணப்படும் இன்றைய சூழலில், தமிழ் மொழியின் வளத்தையும்; தமிழ் இலக்கியங்கள் மக்களின் வாழ்வை அறிய உதவும் ஆவணங்களாகத் திகழ்வதையும்; தமிழ் இலக்கிய வகைகள் காலமாற்றத்திற்கேற்ப வளர்ந்துவரும் நிலையையும் சான்றுகளோடு வெளிப்படுத்துகிறது  ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற இந்நூல்.   சமகாலச் சிக்கலைக் கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் பதினொரு கட்டுரைகளின் பொருண்மைகளைத் தேர்வு செய்து நூலினை வெளியிட்டுள்ள ஆசிரியரின் முயற்சி முதற்கண் பாராட்டத்தக்கது.

    காலத்தின் அடிப்படையில் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல், தொழில்சார் மேலாண்மை(3), இருபதாம் நூற்றாண்டுப் படைப்புகள் குறித்த ஆய்வுகள்(5), அறிவியல் தமிழ் ஆய்வுகள்(1), இணைய தமிழ்(2) என்று நாளது வரையான தமிழ் இலக்கிய வளர்ச்சிப் படிநிலைகள், தமிழ் ஆய்வின் வளர்ச்சி ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் தலைப்புகள்இடம்பெற்றுள்ளன.

      முதல் மூன்று கட்டுரைகள் சங்க இலக்கியங்கள், திருக்குறள், இரட்டைக் காப்பியங்கள் ஆகிய பழந்தமிழ் நூல்களைக் களங்களாகக் கொண்டமைந்துள்ளன. இக்கால கட்டுமானத் தொழில்நுட்பம், வேளாண் மேலாண்மை, நீர் மேலாண்மை ஆகியவற்றில் பயன்பாட்டில் இருக்கும் தொழில்நுட்பங்களுக்குப் பழந்தமிழர்தம் தொழில்நுட்பங்களே அடிப்படையாக இருக்கின்றன என்பதை இக்கட்டுரைகள் தக்க சான்றுகளோடு உலகிற்கு உணர்த்துகின்றன       

          அவ்வகையில் அமைந்துள்ள ‘பழந்தமிழர் கட்டுமான நுட்பங்களும் பயன்பாட்டுப்பொருள்களும்’ என்ற முதல் கட்டுரை, பழந்தமிழர் கட்டுமானத் தொழில்நுட்பம் தொடர்பாகக் கொண்டிருந்த தெளிந்த அறிவை வெளிப்படுத்துகிறது. குடியிருப்பில் பல்வகை நுட்பங்கள், பருவநிலைக்கு ஏற்ற தளங்கள், மாடங்கள், நகர்ப்புறக் கட்டமைப்பு, பெருநகரங்களின் கட்டமைப்பு, சுகாதார வசதிகளின் கட்டமைப்பு, பொது இருப்பிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள், பாதுகாப்பு அரண்கள், இஞ்சி, செம்புப் புரிசை,  எந்திரம் பொருந்திய அரண்கள், கலங்கரை விளக்கம் ஆகியன பற்றிய பதிவுகள் வழி அக்காலத்தில் காணப்பட்ட சிறந்த கட்டுமானத் தொழில்நுட்பம்; அரைமண், பூச்சு மண் மற்றும் சுண்ணம், இட்டிகை (செங்கல்), ஓடுகள் மற்றும் உலோகத் தகடுகள், கருங்கல், பளிங்குக் கற்கள் ஆகிய கட்டுமானப் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தமை ஆகிய செய்திகள் இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

              மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான உணவுத் தேவையை நிறைவு செய்துவரும் உழவர் நலனில் அரசு கவனம் செலுத்தத் தவறியதால், அவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தளப்படுவது இக்கால வரலாறு. இதற்கு நேர்மாறாக, வேளாண் குடியைக் காத்தல் என்பதைப் பழந்தமிழர் தம் தலையாய கடமையாகக் கொண்டிருந்தனர் என்பதை ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற இரண்டாவது கட்டுரையில் ஆய்வாளர் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், பழந்தமிழர் இயற்கை வளங்களைக் காத்தல், அவற்றை மேம்படுத்துதல், விளைநிலங்களை விரிவாக்கம் செய்தல், பயிரிடுதலில் பல நுட்பங்களைக் கையாள்தல், (மானாவாரி, ஊடுபயிர், பல்விதைப் பயன்பாடு, எரு இடுதல், களை பறித்தல், பயிர்ப்பாதுகாப்பு); தொழில்சார் தொழில்நுட்பம் (பல விதைக்கருவிகள், எந்திரங்களின் பயன்பாடு) என்று பழந்தமிழர் உணவுத் தேவையில் தன்னிறைவு காணுதற்பொருட்டுத் வேளாண் தொழில்சார் மேலாண்மையைக் கையாண்டுள்ளனர்  என்பதை இக்கட்டுரையில் தகுந்த சான்றுகள் வழி எடுத்துக்காட்டியதுடன், இன்றைய நிலையோடு ஒப்பிட்டு, உழவர் நல மேம்பாடு காலத்தின் தேவையாக இருப்பதையும் ஆசிரியர் உணர்த்துகிறார்.

      மக்கள் நல மேம்பாடு குறித்த சிந்தனைகள் குறைந்து, தன்னலம் மேலோங்கி வரும் இன்றைய சூழலில், நீர் நிலைகளைப் பாதுகாத்தல் குறித்த சிந்தனை மறைந்து வருவதற்கு நமது நாட்டில் காணப்படும் மாசுற்ற / பராமரிக்கப்படாத நீர்நிலைகள் சான்றுகளாக உள்ளன. இவ்வாறன்றி, இயற்கைச் சீற்றங்களிலிருந்தும், எதிரிகள் மற்றும் விலங்குகளிடமிருந்தும் பழந்தமிழர் நீர்நிலைகளைப் பாதுகாத்துள்ளனர் என்பதை ‘சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை’ கட்டுரையில் ‘காப்புடை கயம்’ என்ற புறநானூற்றுச் சான்று வழி வெளிப்படுத்தியுள்ளார். இவைதவிர, பழந்தமிழர் நீர்நிலைகளின் தேவையை உணர்ந்திருந்தமை; நீர்த்தடுப்பு/நீர்ச்சேமிப்பு, பாசனத்திற்கான நீர்நிலைகள் (நீத்தேக்கம், புதவு மற்றும் மடுகு), குடிநீர்த் தேவைக்கான நீர்நிலைகள் (நீருண்துறை, கூவல்) ஆகியன அமைந்திருந்தமை ஆகிய செய்திகளைச் சுட்டிக்காட்டி, இன்று நீர்நிலைகள் பராமரிப்பில் அரசும் மக்களும் கவனமின்றி இருப்பதைச் சிந்திக்கச் செய்கிறார்.

             ‘செல்வக் கேசவராய முதலியார் படைப்புத்திறன்’ என்ற நான்காவது கட்டுரை, செல்வக்கேசவராய முதலியாரின் தமிழ் இலக்கியப் புலமையையும், தமிழ்மொழி ஈடுபாட்டையும், ஆய்வுப் பார்வையையும் அறிந்துகொள்வதற்குத் துணைசெய்யும் வகையிலான ஆழமான ஆய்வாக உள்ளது. ஆய்வில் ஈடுபடுவோர்க்கு வழிகாட்டுவதாக அமையும் செல்வக் கேசவராயரின் பன்முக ஆய்வுத் திறனை வெளிக்கொணர்ந்து, இளம் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது இக்கட்டுரை.

      வாழ்க்கைக்கு ஏற்றம் தரும் வகையான கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுதலால், வளமான சிந்தனையும், செயல்திறனும் உடைய இளைய சமுதாயம் உருவாகும்; நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்ல ஏதுவாகும். இவ்வகையில் அமைந்துள்ள ‘பாரதி கல்வியியல் தொலைநோக்கு’ என்ற ஐந்தாவது கட்டுரை, ‘பாரதியின் பல்வேறு சிந்தனைத் தளங்களுக்கிடையே அவரின் கல்வியியல் சிந்தனை ஒரு திட்டமிட்ட வரையறைக்குள் முழுமை பெற்றிருப்பதையும், அவ்வரையறைக்கு இன்றைக்கும் நாளைக்குமான கல்வியியல் தொலைநோக்கு பொதிந்திருப்பதையும்’ (ப.72) வெளிக்கொணர்கிறது.  அதேபோல, ‘கவிதைத் தடத்தில் க.நா.சு’, ‘காசி ஆனந்தன் கவிதைகளில் மொழி-இனம்-நாடு’, ‘புதுக்கவிதைகளில் மண்ணும் மக்களும்’, ‘இணையத் தமிழ் இலக்கியம்’ ஆகிய கட்டுரைகள் இருபதாம், இருப்பத்தோராம் நூற்றாண்டுக் கவிதை வகைகளை ஆய்வு செய்கின்றன.

 மண்ணின் மைந்தர்களின் உணர்வுப் பதிவுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் ‘மண் சார்ந்த கவிதைகள்’ எனும் புதுக்கவிதை வகையின் தோற்றம், வளர்ச்சி பற்றிய அறிமுகத்துடன், அவ்வகைக் கவிதைகள் குறித்த ஆய்வாகவும் ‘புதுக்கவிதைகளில் மண்ணும் மக்களும்’ கட்டுரை அமைந்துள்ளது. ‘இவ்வகைக் கவிதைகள், கிராமத்தின் இயல்பைச் சுட்டுவதோடு, கிராமம் பற்றிய உயர் மாயையை உடைப்பனவாகவும் அமைகின்றன. இருந்ததைச் சுட்டி, இன்று இருப்பதை ஆதங்கத்தோடு பதிவு செய்கின்றன’ (ப.122) என்ற ஆய்வு முடிவும் இவண் சுட்டத்தக்கது.

 அறிவியல் தமிழ்த் துறையில் வெளிவந்துள்ள ஆய்வுகளின் ஆவணமாக ‘அறிவியல் தமிழ் ஆய்வுகள்’ கட்டுரை திகழ்கிறது.  உலகத் தமிழரை ஒன்றிணைக்கும் இணையத் தமிழின் வளர்ச்சியை ‘இணையத் தமிழ் இலக்கியம்’, ‘இணையத்தமிழும் எதிர்காலவியலும்’ ஆகிய கட்டுரைகள் இயம்புகின்றன. இணையத்திலும் இணையற்று விளங்கும் தமிழின் ஆட்சியை இணைய தமிழ், தமிழ் இணைய பக்கங்கள், தமிழ் இணைய இதழ்கள், தனியார் பக்கங்கள்/வலைப்பூக்கள், வெளிப்பாட்டு உத்திமுறை, கணினி மொழிநடை ஆகிய தலைப்புகளின் விவரித்துள்ளதோடு, பயன்பாட்டு நிறைவு-நிறைவின்மை, அதில் உள்ள தடைகள் ஆகியவற்றையும் சுட்டி, தீர்வுகள் குறித்த சிந்தனைகளையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
* பின்னிணைப்பாக 143 தமிழ் இணைய பக்க முகவரிகளை முயன்று தொகுத்து அளித்துள்ளமையும், பயன்நூல் பட்டியலும் ஆய்வாளரின் கடும் உழைப்பிற்குக் கூடுதல் சான்றுகளாக அமைந்துள்ளன.

ழூ கள நூல்களில் உள்ள கருத்துகளோடு, ஒவ்வொரு துறை சார்ந்த செய்திகளையும், முடிவுகளையும் உரிய இடங்களில் மேற்கோள் காட்டி, சிக்கல்களுக்கான தீர்வுகளையும் ஆய்வாளர் இக்கட்டுரைகளில் முன்வைத்துள்ளார். இதனால், கருத்துச் செறிவு, ஆய்வியல் நெறிமுறை ஆகிய இரு வகையிலும் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டும் வகையில்  கட்டுரைகள் விளங்குகின்றன.

* மேலாண்மைத் துறையில் தமிழர் பழங்காலந்தொட்டே சிறந்து விளங்குகின்றனர் என்பதைச் சுட்டும் வகையில், இணையம் வரையான செய்திகளை, கருத்துகளை உள்ளடக்கமாக கொண்ட இந்நூலுக்கு ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற தலைப்பு அளித்துள்ளமை பொருத்தமாக உள்ளது.

* உழவர்க்குப் பழந்தமிழர் அளித்திருந்த சிறப்பிடத்தைச் சுட்டும் வகையிலும், இக்காலத்தில் அவர்கள் இழிநிலையில் இருப்பதை உணர்த்தும் வகையிலும் அட்டையில் உழவரை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

               எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் நூலாசிரியரின் முதல் நூலான ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை’ என்ற நூலை தொடர்ந்து இந்நூல் வெளிவந்துள்ளது. இவ்வரிசையில் மேலும் பல அரிய துறைகள் சார்ந்த, காலத்திற்கு ஏற்ற ஆய்வுகளை முனைவர்  ஆ. மணவழகன் அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்; ‘புதிய தளிர்களை இனம் கண்டு, முறைப்படுத்தி, வளப்படுத்தல், அவற்றிற்கு அடிப்படையான மூலங்களைக் கண்டறிந்து, அவற்றை உலகிற்கு வழங்கும் (புகுமுன்...) அவர்தம் முயற்சி மேலும் தொடர வாழ்த்துகள்.


நூல் - சங்க இலக்கியத்தில் மேலாண்மை
ஆசிரியர் - ஆ. மணவழகன்
வெளியீடு - காவ்யா பதிப்பகம், சென்னை
ஆண்டு - 2007

மணவழகன் கவிதைகள் - 2

வாழ்க்கை வணிகன்



பாருங்க சார்
தெய்வப் புலவர் வள்ளுவர்
எழுதியது சார்
வாழ்க்கைக்குத் தேவையான
வழிகளைச் சொல்வது சார்
மூன்று பெரும்பகுப்புகள்
நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள்
ஆயிரத்து முந்நூற்று முப்பது
குறள்களைக் கொண்டது சார்
வெளியில் வாங்கினா
இருபத்தி ஐந்து ரூபா சார்
கம்பெனி விளம்பரத்துக்காக
வெறும் பத்து ரூபா சார்
------ ------- ------ ---- -----
தொடர்வண்டிச் சிறுவன்
மலிவு விலையில் விற்றுச் செல்கிறான்
திருக்குறளோடு வாழ்க்கையையும்


*****


நகரியம்
சாக்கடை நாற்றத்தோடு
கழிவுநீர் ஊற்றுகள்
அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்
பறவைகள் அமர்ந்தறியா
செயற்கை மரங்கள்


முளைக்காத தானியங்கள்
விதை கொடுக்காத கனிகள்
உயிரில்லா முட்டைகள்
தாய் தந்தை உறவறியா
குளோனிங் குழந்தைகள்
ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும்
அறிவியல் வளர்ச்சிகள்


ஆடுகளை மலையில் விட்டு
அருகிருக்கும் கொல்லையில் கதிரொடித்து
பால் பருவக் கம்பைப் பக்குவமாய் நெருப்பிலிட்டு
கொங்கு ஊதித் தாத்தா கொடுத்த
இளங்கம்பின் சுவைக்கு
ஈடு இது என்று
எதைக் காட்டி ஒப்புமை சொல்வேன்


பச்சைக் கம்பு தின்றதே இல்லை
ஆதங்கப்பட்ட தோழிக்கு


*****


இக்கரைக்கு அக்கரை


புளிக்குழம்போடு
அரைத்த கேழ்வரகின்
ஆவிபறக்கும் உருண்டை


இளம் முருங்கைக்கீரைக் கூட்டோடு
இடித்துச் சமைத்த கம்பஞ் சோறு

நாட்டுப் புளிச்சை கடைசலோடு
புதுச் சோளச்சோற்றுக் கவளம்


இம்முறையேனும் கெங்கவல்லி சென்றதும்
ஆக்கித்தரச்சொல்லி
அம்மாவிடம் கேட்கவேண்டும்
ஊர் கிளம்ப ஒருவாரம் முன்பே
நாக்கு நங்கூரம் போடும்


ஏளனப் பார்வைக்கு இலக்காகும்
உயிர்க்கொல்லிப் பொடிகளால் உருவான
மசாலா குழம்பும்
உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்ட
கடையரிசிச் சோறும்


புள்ளைங்க வந்தா மட்டுந்தான்
நல்ல சோறு சாப்பிட முடியுது
அப்பா சான்றிதழ் தருவார் , ஊரில்
எனக்காகச் சமைக்கப்பட்ட
கடை அரிசிச் சோற்றுக்கும்
உயிர்க்கொல்லி பொடிகளால் உருவான
அதே மசாலா குழம்புக்கும்


இரைப்பையைத் தொடாமலேயே செரிக்கும்
தொண்டைக்குழியில் உருட்டி வைத்த
என் களி கம்பஞ்சோற்று ஆசை

*****

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

மணவழகன் கவிதைகள் - 1


அவர்கள் நாசமாய்ப் போக


புலிகளைக் காட்டி
மனிதர்களை
வேட்டையாடினார்கள்
காந்தியைப் பெற்றவர்களும்
புத்தரை ஏற்றவர்களும்

*****


மே 2009


முள்ளிவாய்க்கால்
கரையும் காற்றும் சொல்லும்
அவர்கள்
வீரத்தையும் தியாகத்தையும்
அண்ணா நினைவிடமும்
அருகிருக்கும் கடலும் சொல்லும்
எங்கள்
துரோகத்தையும்
கையாலாகாத தனத்தையும்


*****

பிரபாகரன்


ஆயிரம் ஆண்டுகளுக்கு
ஒருமுறை பூக்கும்
அபூர்வ மலர் நீ
இரு நூற்றாண்டின்
ஈடு இணையில்லா
ஒற்றை அதிசயம் நீ


இராஜராஜன், செங்குட்டுவன்
நெடுஞ்செழியன் ஒட்டுமொத்த
உருவம் நீ


எதிரிக்கு அடங்கிப்போகாது
என்றும் அணைந்துபோகாது
உலகத் தமிழனின் உயிர் மூச்சு நீ


உலகுக்குப் புதிரானவன்
உறவுக்குக் கதிரானவன்
தமிழின் கொடை நீ
தமிழனின் படை நீ


கரையான்களாலும் கருணாக்களாலும்
அரிக்க முடியா விருட்சம் நீ
வீரம் செறிந்த விதை நீ


கடல்நீரைக் கால்வாய்
குடித்துவிடாது
வருவாய்
தமிழின் அகம் நீ
அகத்தில் புறம் நீ

*****