சனி, 21 டிசம்பர், 2019

பழமலய் படைப்புலகம்









விழுப்புரம் - 06.10.2019

மக்கள் கவிஞர் பழமலய் படைப்புலகம் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் 06.10.2019 அன்று விழுப்புரத்தில்  நடைபெற்றது. நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், 'பழமலய் படைப்புகளில் விழுமியங்கள்' என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.

பன்னாட்டுப் பரப்பில் தமிழிலக்கியச் செல்நெறிகள்- பன்னாட்டுத் தமிழ் மாநாடு





சென்னை, 13.10.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய பன்னாட்டுப் பரப்பில் தமிழிலக்கியச் செல்நெறிகள் என்ற பொருண்மையிலான ’பன்னாட்டுத் தமிழ் மாநாடு’ 13.10.2019 அன்று சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குத் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையின் நிறுவனர் திரு. சேக்கிழார் அப்பாசாமி அவர்கள் தலைமை தாங்கினார். கவிஞர் மீனா திருப்பதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றி மாநாட்டினைத் தொடங்கிவைத்தார்

கவிஞர் த.பழமலய் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது











சென்னை, 13.10.2019.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய *பன்னாட்டுப் பரப்பில் தமிழிலக்கியச் செல்நெறிகள்* என்ற பொருண்மையிலான ’பன்னாட்டுத் தமிழ் மாநாடு’ 13.10.2019 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குத் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையின் நிறுவனர் திரு. சேக்கிழார் அப்பாசாமி அவர்கள் தலைமை தாங்கினார். கவிஞர் மீனா திருப்பதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, தொடக்கவுரை நிகழ்த்தி மாநாட்டினைத் தொடங்கிவைத்தார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள். மாநாட்டில் தமிழகம், புதுச்சேரி, டென்மார்க், இலங்கை, சிங்கப்பூர், குவைத், மொரீசியசு, பிரான்சு ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆய்வாளர்கள் இலக்கியச் செல்நெறிகள் குறித்துச் சிறப்பாக எடுத்துரைத்தனர். மதிய அமர்வில் சுமார் நூறு கவிஞர்கள் பங்கேற்று கவிபாடிய கவியரங்கம் நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக, தமிழ்ப் பட்டறையின் சார்பில் எட்டு நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு க.பாண்டியராசன் அவர்களும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களும் வெளியிட்டனர். நிகழ்வில், மக்கள் கவிஞர் த.பழமலய் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்புச் செய்தார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.

முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு நற்றமிழ்க் காவலர் விருது


13.10.2019, சென்னை.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையும் இணைந்து நிகழ்த்திய பன்னாட்டுத் தமிழ் மாநாட்டில்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு 13.10.2019 அன்று 'நற்றமிழ்க் காவலர்' என்ற  விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இவ்விருதினை, தமிழ் வளர்ச்சி, பண்பாடு மட்டும் தொல்லியல் துறை அமைச்சர் திரு கா.பாண்டியராசன் அவர்கள் வழங்கினார்.


தமிழர் ஒப்பனைக் கலைகள் - ஆ.மணவழகன்

தமிழர் ஒப்பனைக் கலைகள்
- முனைவர் ஆ.மணவழகன்




சிலப்பதிகாரத்தில் காட்டப்படும் மாதவியின் ஒப்பனைத் திறன் இன்றைக்கும் உலகம் கண்டு வியக்கக்கூடியது. 

பத்துவகை மூலிகைப் பொருட்கள், ஐந்து வகை நறுமணப் பொருட்கள், முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப் பொருட்களினாலும் ஊறிய நல்ல நீரிலே, வாசனைமிக்க நெய் பூசிய, தன் மணம் மகழும் கரிய கூந்தலை நலம்பெறுமாறு தேய்த்துக் கழுவி நீராடினாள். நீராடியபின், தன் கூந்தலை மணம் மிகுந்த புகைக் காட்டி ஈரம் உலர்த்தினாள். கூந்தலை ஐந்து பகுதிகளாகப் பிரித்து, கத்தூரியின் குழம்பினைத் தடவினாள். 

தன் சிறிய அடிகளிலே செம்பஞ்சுக் குழம்பினைப் பூசினாள். கால்களின் மெல்லிய விரல்களிலே மகரவாய் மோதிரம், பீலி, காலாழி போன்ற அணிகளை அணிந்தாள். காலுக்குப் பொருத்தமான பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம் முதலான அணிகலன்களை அணிந்துகொண்டாள். திரண்ட தொடைகளுக்கு குறங்குசெறி என்னும் அணியை அணிந்தாள். 

அளவில் பெரிய முத்துக்கள் முப்பத்தியிரண்டால் கோவையாகத் தொடுக்கப்பட்ட விசிரிகை என்னும் அணியினை, தன் இடையை அலங்கரித்த, பூ வேலைப்பாடு செய்த நீலப் பட்டாடையின் மீது மேகலையாக அணிந்தாள். அழகான கண்டிகையோடு பின்னிக் கட்டிய தூய மணிகள் சேர்த்துக் கோர்த்த முத்து வளையைத் தன் தோளுக்கு அணிந்தாள். 

மாணிக்க மணிகளுடன், வயிரங்கள் பதித்துவைத்த சித்திர வேலைப்பாடமைந்த சூடகம், செம்பொன்னால் ஆன வளையல்கள், நவமணி வளையல்கள், சங்கு வளையல்கள், பவகை பவழ வளையல்கள் ஆகியவற்றை மெல்லிய மயிரினை உடைய தன் முன்கைகளில் பொருந்துமாறு அணிந்தாள். வாளை மீனின் பிளந்த வாயைப் போன்ற வாயகன்ற முடக்கு மோதிரம், செந்நிற ஓளிவீசும் மாணிக்கம், கிளர்மணி மோதிரம், சுற்றிலும் ஒளிபரப்பும் மரகதத் தாள்செறி ஆகியவற்றைக் காந்தள் மலர் போன்ற தன் மெல்லிய விரல்கள் முழுவதும் மறைக்கும்படி அணிந்தாள். 

வீரச்சங்கிலி, நுண்ணியத் தொடர் சங்கிலி, பூணப்படும் சரடு, புனைவேலைகள் அமைந்த சவடி, சரப்பளி போன்ற அணிகளை கழுத்திலே கிடந்த முத்து ஆரத்துடன் அணிந்தாள். சங்கிலிகள் முழுவதையும் ஒன்றாய் இணைத்துப் பூட்டிய கொக்கி ஒன்றில் இருந்து பின்புறமாய் சரிந்து தொங்கிய, அழகிய தூய மணிகளால் செய்யப்பட்ட கோவை அவள் கழுத்தை மறைத்துக் கிடந்தது. 

இந்திர நீலத்துடன் இடையிடையே சந்திரபாணி என்னும் வயிரங்கள் பதித்துக் கட்டப்பட்ட, குதம்பை என்னும் அணியை இரு காதுகளிலும் அழகுற அணிந்தாள். சிறந்த வேலைப்பாடு அமைந்த வலம்புரிசங்கு, தொய்யகம், புல்லகம் இவற்றைத் தன் கரிய நீண்ட கூந்தலில் அழகுற அணிந்து கொண்டாள் என்று மாதவியின் வாயிலாகத் தமிழரின் ஒப்பனைக் கலைத்திறனை அதன் நுட்பங்களோடு அழகுற காட்சிப்படுத்துகிறார் இளங்கோவடிகள். 


தமிழர் மரபு அறிவியல்: ஆவணமாக்கலும் மீட்டுருவாக்கமும்

கேரளப் பல்கலைக்கழகத்தின் *மனோன்மணியம் சுந்தரனார் திராவிடப் பண்பாட்டு மையம்* 14.12.2019 அன்று நிகழ்த்திய தேசியப் பயிலரங்கில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் பங்கேற்று, 'தமிழர் மரபு அறிவியல்: ஆவணமாக்கலும் மீட்டுருவாக்கமும்' என்று தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.






புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள் - தேசியக் கருத்தரங்கம்




தமிழ்நாடு அரசு நிதிநல்கையுடன்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலமும்
 ஐவனம் - தமிழியல் ஆய்வு நடுவமும்
இணைந்து நிகழ்த்தும்

தேசியக் கருத்தரங்கம்

“புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்”

                                              திருவள்ளுவராண்டு  2050, மார்கழி 02                                                                     
   திசம்பர்  18, 2019 புதன்கிழமை


ஒருங்கிணைப்பு
முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை-600113.




                                                                                                     

புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்


புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்
தேசியக் கருத்தரங்கம்
18.12.2019




            தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலமும், தமிழியல் ஆய்வு நடுவமும் இணைந்து நடத்திய ’புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்’ என்ற தேசியக் கருத்தரங்கம் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் நோக்கவுரை வழங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் நாட்டுப்புறவியல் தலைவர் முனைவர் ஆறு.இராமநாதன் அவர்கள் மாநாட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களை வெளியிட்டு தொடக்கவுரை ஆற்றினார். கருத்தரங்க நிறைவுவிழாவில் கவிஞர் ஆண்டார் பிரியதர்சினி அவர்கள் நிறைவுரை ஆற்றி ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கினார்.

       நோக்கவுரை வழங்கிய முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், உலகின் மிகப் பழமையான இனக்குழுக்கள், தம்மைச் செழுமை படுத்திக்கொள்ள காலந்தோறும் பலவிதக் கற்பிதங்களை உருவாக்கியுள்ளன. அவை நெறிப்படுத்துதல், தற்காத்துக்கொள்ளுதல், தக்கவைத்துக் கொள்ளுதல், தனித்துக்காட்டல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டவை.  சமகால தேவையின் அடிப்படையில் உருவாக்கப்படும் இவ்விதக் கற்பிதங்கள் கால ஓட்டத்தில் எதிர்நிலை விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஆனால், யுகங்கள் பல கடந்தும் மனித  வாழ்வியலைச் செழுமைபடுத்தும் சிந்தனைகள் விழுமியங்களாக எஞ்சி நிற்கின்றன. காலத்திற்கும், பட்டறிவிற்கும் ஏற்ப இவை கோட்பாடுகளாகவும், வரையறைகளாகவும் உருவம்பெறுகின்றன. சுருங்கக் கூறின், ஒரு பண்பட்ட, தொன்மையான இனக்குழு எவற்றைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று போராடுகிறதோ, எவற்றை இழந்துவிட்டதாக வருந்துகிறதோ அவ்வகை நடத்தைகள் அல்லது கற்பிதங்களே விழுமியங்களாகின்றன.

            பொதுவாக விழுமியங்கள் குறித்த நம் தேடல்களும் மரபு இலக்கியங்களைக் களமாகக் கொண்டே அமைகின்றன. தமிழ்ச் சமூக விழுமியங்களைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் பதிவுசெய்துள்ளன. விருந்தோம்பல், கொடை, வீரம், மானம், வடக்கிருத்தல், ஈகை, அன்பு, உயிரிரக்கம், அறநெறி போன்ற உயர் பண்பு நெறிகளைச் சுட்டும் இலக்கியங்களாக அவை இருக்கின்றன. ஆயினும், ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகால தமிழ்ச் சமூக விழுமியங்களைப் புதின இலக்கியங்களிலும், ஒரு நூற்றாண்டு கால தமிழ்ச் சமூக விழுமியங்களைப் புதுக்கவிதை, சிறுகதை இலக்கிய வடிவங்களிலும் கண்டறியமுடியும் என்கிற கருதுகோள்களை முன்வைத்தே இக்கருத்தரங்கம் நிகழ்த்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

       தொடக்கவுரையாற்றிய முனைவர் ஆறு. இராமநாதன் அவர்கள் தமது உரையில், உலகில் மனித இனக்குழுக்கள் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனித்த அடையாளங்களைக் கொண்டுள்ளன. அனைத்திற்கும் பொதுவாக விழுமியங்கள் என்ற ஒன்றை நாம் வரையறுப்பது கடினம். ஒரு இனக்குழுவில் கொண்டாடப்படும் ஒரு பண்பு அல்லது நெறி பிற இனக்குழுவிற்குப் பொருந்தாமல் போகலாம். ஆநிரை கவர்தலைச் சங்கச் சமூகம் விழுமியமாகக் கொண்டாடியது. தற்போது இல்லையென்றாலும் அண்மைக்காலம் வரியிலும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆநிரை திருட்டு என்பது சில இனக்குழுக்களின் வழக்கத்தில் இருந்தது. அச்செயலை அக்குழுக்கள் வழுவாகக் கருதவில்லை. அப்படி பார்க்கிறபோது தமிழ்ச் சமூகத்திற்கென ஒட்டமொத்த விழுமியங்கள் எவை என்ற கேள்வியும், தமிழ்ச் சமூகத்திற்கே உரிய சிறப்புக் கூறுகள் எவை என்ற கேள்வியும் எழுகின்றன. இவற்றை நாம் புத்திலக்கியப் படைப்புகளில்தான் தேடியாக வேண்டும். அந்த வகையில் இந்த கருத்தரங்கு மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.   

       நிறைவுரையாற்றிய கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி அவர்கள், மக்களின் வாழ்வியலைப் உள்ளபடி பதிவு செய்யும் இலக்கியங்களாக இன்றைய நவீன இலக்கியங்கள் உள்ளன. தமிழ்ச் சமூகத்தின் உண்மையான முகத்தை இங்குதான் நாம் காணமுடியும். மேலும், தமிழ்நாட்டிலிருந்து வரும் படைப்புகளை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது, வேலை நிமித்தல் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் சூழலை நம் சூழலோடு ஒப்பிட்டு எழுதும் படைப்புகளையும் நாம் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.   

 இந்நிகழ்வில், தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்கிறார்கள். புதின இலக்கியம், சிறுகதை இலக்கியம், நாவல் இலக்கியம் என்று மூன்று பிரிவுகளில் ஏழு அமர்வுகளாக ஆய்வரங்கம் நிகழ்த்தப்பட்டது. கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் இரண்டு நூற்தொகுதிகளாக வெளியிடப்பட்டன.           

ஆ.மணவழகன்




புதன், 3 அக்டோபர், 2018

முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இளம் தமிழ் ஆய்வாளர் விருது - 2018


முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் 
 'இளம் தமிழ் ஆய்வாளர்' விருது - 2018


தமிழில் முனைவர் பட்டம் பெற்று, நூல்கள் பல படைத்து மாநில, பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும் ஆய்வரங்குகளிலும் பங்கேற்றுத் தமிழாராய்ச்சியில் சிறந்து விளங்கும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் இணைப் பேராசிரியர், தமிழ் ஆய்வாளர் முனைவர் ஆ.மணவழகன் அவர்களைப் பாராட்டி, தமிழக அரசு அவருக்கு 'இளம் தமிழ் ஆய்வாளர்' விருது வழங்கியது. சென்னை, நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 30.9.2018 அன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு 50 பொன்விழா நிகழ்வில், தமிழக முதல்வர் அவர்கள் இந்த விருதுதினை அருக்கு வழங்கினார். 

இளந்தமிழ் ஆய்வாளர்




புதன், 7 மார்ச், 2018

முனைவர் ஆ.மணவழகன் பெற்ற விருதுகள் - Awards received by Dr.A.Manavazhahan



முனைவர் ஆ.மணவழகன் - பெற்ற விருதுகள்




1. முனைவர் ஆ.மணவழகன், குடியரசுத் தலைவரின் “இளம் ஆய்வு அறிஞர் விருது” - 2007-08. 


2. முனைவர் ஆ.மணவழகன், சிறந்த ஆய்வு நூலுக்கான தமிழ்நாடு அரசு விருது, 3.04.2015

நூல் – தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்2013.



3. முனைவர் ஆ.மணவழகன், வாழ்நாள் சாதனையாளர் விருது, சென்னை, 27.11.2016


4. முனைவர் ஆ.மணவழகன், கவிச்செல்வர் விருது : திருவள்ளூர் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம், 25.06.2017


5. முனைவர் ஆ.மணவழகன்,  புலியூர்க்கேசிகன் விருது: புலியூர்க்கேசிகன் இலக்கியப் பேரவை, சென்னை. 29.7.2017


6. முனைவர் ஆ.மணவழகன், நற்றிமிழ்ச் செல்வர் விருது : கபிலர் முத்தமிழ்ச் சங்கம், திருக்கோவிலூர், 27.08.2017


7. முனைவர் ஆ.மணவழகன், இலக்கியச் செம்மல் விருது: தென்சென்னைத் தமிழ்ச் சங்கம், சென்னை. 03.12.2017


8. முனைவர் ஆ.மணவழகன், சிறந்த ஆய்வு நூலுக்கான தமிழ்நாடு அரசு விருது - II , 2018.



9. முனைவர் ஆ.மணவழகன், தமிழ்நாடு அரசின் இளந் தமிழ் ஆய்வாளர் 2018 விருது,

தமிழ்நாடு பொன்விழா 50, தமிழ்நாடு அரசு. 30.09.2018



10. முனைவர் ஆ.மணவழகன், நற்றமிழ்க் காவலர் விருது: லகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – தமிழ்நாடு அரசு,   இலக்கியப் பட்டறை  இலக்கியப் பேரவை, பன்னாட்டுத் தமிழ் மாநாடு. 13.10.2019.


11.முனைவர் ஆ.மணவழகன், பண்பாட்டுக் காப்பாளர் விருது: தமிழ் மாநில சித்த வைத்தியச் சங்கம்,தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் அறக்கட்டளை, தமிழ்ப் பரம்பரை சித்த மருத்துவப் பயிற்சி ஆய்விருக்கை – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு. 10.01.2020.

 


வாழ்வியல் பாடத்திட்டம் தேவை - ஆ.மணவழகன்




ஆ.மணவழகன், தினமணி 29.7.17

குச்சிக் கிழங்கு - ஆ.மணவழகன்






குச்சிக் கிழங்கு



மழைக்குத் தவமிருக்கும் – என்
குச்சிக் கிழங்குக் காட்டில்
அடர் கோரை நீ
மண் தின்று மண் தின்று
முளைவிடும் உன் இருப்பை
எதைக்கொண்டும் அழிக்க இயலாமல் தவிக்கும்
ஏழை விவசாயி நான்….
கூர்முகங்கொண்டு குத்தி எறியும்
காட்டுப் பன்றிக்குத் தெரியவா போகிறது
கோரைக் கிழங்கிற்கும்
குச்சிக் கிழங்கிற்குமான வேறுபாடு!

-ஆ.மணவழகன், 28.8.17

பழந்தமிழக மகளிர் வீரம் - ஆ.மணவழகன்



விதைத்தலும் அறுவடை செய்தலும் வீரத்திற்கும் பொருந்தும். வீரத்தையும் மண் பற்றையும் விதைப்பதில் பெண்களே கைதேர்ந்த உழவர்கள். சங்க இலக்கியத் தாயொருத்தியின் மற உணர்வையும் மண் பற்றையும் பெண்பாற் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் நயம்பட உரைக்கிறார்.

‘முன்நாள் நடந்த போரில், இவளுடைய தந்தை போர்க்களத்தில் யானையைக் கொன்று தானும் வீழ்ந்து இறந்தான். நேற்று நடந்த போரில், இவளுடைய கணவன் பகைவர்கள் பெரும் ஆநிரைகளைக் கவர்ந்து செல்லாமல் தடுத்துநின்று போரிட்டு வீரமரணமடைந்தான். இன்றும் போருக்கு எழுமாறு வீரரை அழைக்கும் முரசின் ஒலி கேட்கிறது. இவளோ அறிவு மயங்கி, உறவென்று தனக்கிருக்கும் ஒரே மகனையும் போர்க்கோலம் பூணச்செய்து, கையிலே வேலைக்கொடுத்துப் போருக்கு அனுப்புகிறாள். இவள் துணிவு கொடியது. இந்தக் கொடிய முடிவினை எடுத்த இவளது சிந்தை கெடுக!

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே
------- ------------------- ---------------
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே! (புறம்.279)


- முனைவர் ஆ.மணவழகன்









வயநாரம் - வாதநாரம் - வாதநாராயணம் மரம் - ஆ.மணவழகன்


வயநாரம் - வாதநாரம் - வாதநாராயணன் மரம்

வீட்டுக்குப் பின்புறம் வரிசைகட்டி நிற்கும்!
ஊஞ்சல் கட்டி ஆடவும் உச்சியேறி ஒலி எழுப்பவும்
கிளைகள் பரப்பி காத்திருக்கும்!
ஏறவும் இறங்கவும் தொங்கவும் குதிக்கவுமாக
எங்களுக்கு அது ஒரு விளையாட்டுப் பூங்கா!
கொடாப்பில் குடியிருக்கும் குட்டிகளுக்கும்
பட்டியில் கட்டியிருக்கும் ஆடுகளுக்கும்
இதன் தழையே பிடித்தமான தீனி!
சூட்டுக் கடுப்பிற்கும் நகச் சுத்திக்கும்
பெயர்சொல்லா இதன் இலையே நன் மருத்து!
நாற்றங்காலுக்கும் நடவு வயலுக்கும்
நல்ல தழையுரம் வேம்பும் இதுவுமே!
ஒன்னா மண்ணா கிடந்து
ஒதுங்கிப்போன உறவுகளுள் இதுவும் ஒன்று!
வெங்கடேசன் அருளால் கொண்டுவந்து நட்டாயிற்று
உறவுகள் ஒதுக்கினாலும்
ஒதுங்க நிழல் கொடுக்கும் வாதநாரம் !

(மருந்திற்காகப் பல நாட்களாகச் சென்னை முழுவதும் தேடியும் கிடைக்காமல் போன வாதநார மரத்தை, கிராமத்தில் கண்டறிந்து அதன் கிளைகளோடு வந்த தலைமைச் செயலகச் சுற்றுலாத் துறை நண்பர் திரு. வெங்கடேசன் அவர்கள் என்னிடத்திலும் ஒன்றைக் கொடுத்தார். அது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடப்பட்டது(7.2.18). நன்றி - விநாயகம், விசயன்.) - முனைவர் ஆ.மணவழகன் (Dr.A.Manavazhahan)


வேட்கையில் எரியும் பெருங்காடு - கவிதைநூல் அறிமுகம்


சென்னை, கவிக்கோ அரங்கில் கவிஞர் பச்சியப்பன், கவிஞர் ப.இரவிக்குமார், கவிஞர் ப.கல்பனா ஆகியோரின் கவிதைகள் உள்ளிட்ட ஐந்து நூல்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது (9.2.18).  நிகழ்வில்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

உடன், நூலாசிரியர்களோடு எழுத்தாளர் பேரா.பாரதிபுத்திரன் கல்கி இதழாசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா, பேரா. முனைவர் க.பஞ்சாங்கம், கலைவிமர்சகர் இந்திரன், கவிஞர் ஹாஜாகனி, எழுத்தாளர் சுந்தரபுத்தன், கவிஞர் நாகரத்தினம் கிருஷ்ணா, கவிஞர் தமிழ் மணவாளன் உள்ளிட்டோர்.


வாழ்த்துரை இணைப்பு - 
https://youtu.be/fzVarNotQto







உலக மருத்துவத்தின் முன்னோடி தமிழர் மருத்துவம் - முனைவர் ஆ.மணவழகன்


தினமணி, 19.02.2018

புதன், 5 ஜூலை, 2017

அரச முறைமை - வரிவிதிப்பு


நாட்டில் குடிமக்களை வருத்தி வரி வசூலித்தல் செங்கோன்மையன்று. அவ்வகை அரசு கொடுங்கோன்மை அரசாக அக்காலத்தில் ஒதுக்கப்பட்டது. அதனால்தான் சிலப்பதிகாரத்தில், மாடலமறையோனின் அறிவுரையால் இனி, ‘குடிமக்களிடம் வரிவசூலிக்க வேண்டாம், நம் எல்லைக்கு உட்பட்டிருக்கும் சிற்றரசுகளும் நமக்குத் திறை எதுவும் செலுத்த வேண்டாம், இதை இன்றே எல்லோருக்கும் தெரிவியுங்கள்’ என்று சிலம்பில் சேரன் செங்குட்டுவன் உத்தரவிடுகிறான். வரையறையின்றிப் பெறப்படும் வரியால், அரசின் கையிருப்பு உயருமே அன்றி, மக்களின் வளம் பெருகாது என்பது தொன்மைச் சான்றோரின் தொலைநோக்கு.

            வரிவிதிப்பு மக்களின் வருவாய்க்கு உட்பட்டதாக அமைதல் வேண்டுமே தவிர, குடிமக்களைத் துன்புறுத்தி மிகுதியும் பெறுவதாக இருத்தல் கூடாது. வலிந்து பெறும் வரி அரசுக்குத் தீராத பகையாக முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது(புறம்.75).
            மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
          உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்
          பொன்னும் கொள்ளார் மன்னர் (நற். 226:1-3)
என்பார் கணிபுன்குன்றனார். இதில், மருந்துமரம் என்பதற்காக வேரோடு பிடுங்கி பயன்படுத்துதலும், வரம் கிடைக்க உயிர் நீங்கமட்டும் தவம் செய்தலும் எப்படித் தீதாகுமோ அதைப்போல, மக்களின் வளம் கெட அவர்களை வருத்தி வரிவசூல் செய்தலும் மிகுந்து துன்பத்தைத் தரும் என்கிறார்.  அதேபோல, சிறப்புக்குரிய அரசுரிமையை அடைந்துவிட்டோம் என எண்ணிக்கொண்டு, தம் குடிமக்களிடம் வரியை வேண்டி இரக்கும் அரசன் சுமக்க இயலாத துன்பத்திற்கு ஆளாவான் என்றும், அப்படிப்பட்டவன் ‘கூரில் ஆண்மை சிறியோன்’(புறம்.75) என்றும் சோழன் நலங்கிள்ளி சினம்கொள்கிறான்.

            முறையற்ற வரிவசூல் செய்யும் அரசை எச்சரிக்கும் புலவர் பிசிராந்தையாரோ, ஒரு மா என்னும் அளவைவிடக் குறைந்த நிலமேயாயினும், விளைந்த நெல்லைக் கொண்டுவந்து கவளமாக்கி யானைக்குக் கொடுத்தால் அது பலநாட்களுக்கு உணவாகும். நூறு செய் அளவுடைய பெரிய நிலமாயினும் அதனுள் யானை தானே தனியாகப் புகுந்து உண்ணத் தொடங்கினால், யானையின் வாயினுள் புகும் நெல்லைக் காட்டிலும் கால்களில் மிதிப்பட்டு அழிவது மிகுதியாகும். அதுபோல, அறிவுடைய மன்னன் ஒருவன் குடிமக்களிடமிருந்து வரி வாங்கும் நெறியை அறிந்து வாங்குவானானால், அவனது நாட்டில் வாழும் குடிமக்கள் அவனுக்கு மிகுதியும் பொருளைத் தந்து தாங்களும் தழைப்பர். மன்னன் அந்நெறியை அறியும் அறிவற்றவனாகி, குடிகளைத் துன்புருத்தி வரிவசூல் செய்வானாயின் அந்த யானை புகுந்த விளைநிலம்போல, தானும் உண்ணப் பெறான்; உலகும் அழியும் (புறம்.184) என்று எச்சரிக்கிறார்.

            அதனால்தான், ‘உலகம் கொள்ளும் அளவிற்குச் செல்வம் கிடைக்கப்பெறினும் பழியோடு வரும் செல்வம் வேண்டாமென’ விலக்கப்பட்டது. ஆம். பேரரசு, சிற்றரசு என்பதெல்லாம் மக்கள் விரும்பும் நல்லரசு என்பதிலேயே அளவிடப்படுகிறது.  

-       குறிப்பு நூல்: தொலைநோக்கு, முனைவர் ஆ.மணவழகன்.



புதன், 28 ஜூன், 2017

பழந்தமிழர் நீதி

நீதி வேண்டுவோர், தன் வயது குறைவு காரணமாக தான் வழங்கும் நீதியைக் குறைவாக எண்ணிவிடக் கூடதென்று ‘முதியவர் வேடமணிந்து’ நீதி வழங்கிய கரிகாலன்!


தன் மகன் அறியாது செய்த பிழைக்காக அவனைத் ‘தேர்க்காலிலிட்ட’ மனுநீதிச் சோழன்!


நீதிமுறைமை மாறிவிடக் கூடாதென்பதற்காக அறியாது செய்த சிறு பிழைக்கும் ‘தன் கையையே வெட்டிக்கொண்ட’ பொற்கைப் பாண்டியன்!


அடைக்கலம் வந்த புறாவிற்காக ‘தன் தசையையே அறுத்துக்கொடுத்த’ சிபி!


- இவை வரலாறோ, புனைவோ எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இவர்களின் செயல்கள் உலகிற்கு உணர்த்துவது இதைத்தான்: நீதிக்காக உணர்வு, உறுப்பு, உடல், உறவு, உயிர் அனைத்தையும் இழக்கலாம். ஆனால் நீதியை மட்டும் எதன்பொருட்டும் இழக்கக் கூடாது.
-முனைவர் ஆ.மணவழகன்



முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்குக் கவிச்செல்வர் விருது


தமிழ்நாடு திருவள்ளுவர் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம் சார்பில், 25.06.2017 அன்று முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்குக் கவிச்செல்வர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

செவ்வாய், 27 ஜூன், 2017

வஞ்சினம் மொழிதல் தமிழர் பண்பாடு





"வஞ்சினம் மொழிதல் தமிழர் பண்பாடு"

*********************************************** 


தமிழர் பண்பாட்டில் ‘வஞ்சினம் மொழிதல்’ என்பது தொன்றுதொட்டு வரும் மரபு. வீரயுகப் பண்பாட்டின் அடையாளமாக இது விளங்குகிறது. குறிப்பாக, அரசியல் வாழ்வில் போர்ச்சூழலை மையமிட்டதாக வஞ்சின உரைகள் அமைகின்றன. 


‘நான் எண்ணியதை எண்ணியவாறு செய்துமுடிக்கவில்லை எனில், என் நிலை இன்னதாக ஆகட்டும்’ (தகுநிலை குறைதல்) என உரைப்பது வஞ்சினம் அதாவது சத்தியம் இதுபற்றி, 


‘இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் 

துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்’ என்கிறார் தொல்காப்பியர்.


  சங்க இலக்கியங்களில் வஞ்சினம் உரைத்தல் பல காணப்பட்டாலும், புறநானூற்றில் பாண்டியன் நெடுஞ்செழியன் உரைக்கும் வஞ்சின வார்த்தைகள் ஆள்வோர்க்கும் ஆள நினைப்போர்க்கும் பாடமாகும். வயதில் இளையவனான நெடுஞ்செழியன், தன்னை எதிர்த்துவரும் இருபெரும் வேந்தர்களையும் அவர்களுக்குத் துணைநிற்கும் வேளிர்களையும் பார்த்து இவ்வாறு வஞ்சினம் உரைக்கிறான். 

     “இளையவன் இவனெனப் போர்தொடுத்து வருகிறீர். நீங்கள் நகைப்பிற்குரியவர்கள். இப்போரிலே நான் தோற்றால், என் குடிமக்கள் நல்லாட்சி நிழல் காணாமல் ‘என் அரசன் கொடியன்’ எனப் பழி தூற்றும் நிலையினேன் ஆகுக; மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர் அவை என்னைப் பாடாமல் போகட்டும்; பாதுகாப்போர் துன்புறும்போது, என்னிடம் வந்து இரப்போருக்குக் கொடுக்க இயலா வறுமையில் நான் வாடுவேன் ஆகுக! (புறம். 72).


  ஆம், குடிகளால் கொடியது எனத் தூற்றப்படுவதும், புலவர்களால் புறக்கணிக்கப்படுவதும், இரப்போர்க்கு ஈவதற்குப் பொருளற்றுப் போகும் வறுமை நிலையினை எய்துவதும் நல்லரசுக்கு அழகல்ல.





x