ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

பழந்தமிழர் தொழில்நுட்பம் - ஆய்வு நூல்


                  

பழந்தமிழர் தொழில்நுட்பம்
முனைவர் ஆ.மணவழகன்
அய்யனார் பதிப்பகம், சென்னை. மு.ப.2010


பழந்தமிழர் தொழில்நுட்பம் - நூல் குறித்து
முனைவர் கோ. பாக்யவதி
          எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் 



    முனைவர் ஆ. மணவழகன் இயற்றிய ‘பழந்தமிழர் தொழில்நுட்பம்’ என்னும் நூல், மக்கள் வாழ்வியல் கூறுகளை வெளிப்படுத்தும் ஊடகங் களாகத் திகழும் பழந்தமிழ் இலக்கியங்களின் வழி பழந்தமிழர் தொழில்நுட்பங்களை வெளிக்கொணரும் ஆய்வு நூல்.

                 பல்துறை அறிவு தமிழருக்கேயுரிய சிறப்பு. பிரபஞ்சத்தின் உட்கூறுகளாகிய ஐம்பூதங்களைத் தம் ஆராய்ச்சித் திறன் வாயிலாக அறிந்து கொண்ட தமிழர்கள் அவற்றை மனிதகுல ஆக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டனர். அவ்வகையில், வானியல், நிலவியல், நீர் மேலாண்மை, பொறியியல், மருத்துவம், நெசுவு, கட்டுமானம், தோல்பொருள், கப்பல் கட்டுமானம், உலோகம் எனப் பல்வேறு நிலைகளில் காணப்படும் பழந்தமிழரின் தொழில்நுட்பங்கள் இந்நூலில் விரித்துரைக்கப்படுகின்றன. இவ்வகைத் தொழில்நுட்பங்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்களின் பதிவுகளிலிருந்து தொகுத்தும் வகைப்படுத்தியும் நாளது வரையிலான வளர்ச்சியோடு ஒப்புமைப் படுத்தியும்  விளக்கியுள்ளார் ஆசிரியர்.

                பண்டைத் தமிழரின் வேளாண் தொழில்நுட்பத்தில் நீர் மேலாண்மை, ஊடுபயிர், சுழற்சி முறை பயிர், தழை, எரு உரங்கள் பற்றிய விவரங்களையும்; நீர்மேலாண்மை தொழில்நுட்பதில் அணைகள், நீருண் துறைகள், நீர் இறைப்புக் கருவிகள் பற்றிய தகவல்களையும் இந்நூலிருந்து அறிந்து கொள்ளலாம். உள்நாட்டு வணிகம் குறித்த தகவல்களைப் புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. வெளிநாட்டு வணிகத்தில் நறுமணப் பொருட்கள், ஆடைகள் ஏற்றுமதி சிறப்பாக இருந்ததையும் அரேபியர்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு ஏராளமான பொருள் ஈட்டியதையும் ஆசிரியர் சுட்டியுள்ளார்.

                பொறியியல் தொழில்நுட்பத்தில் கட்டுமானம், எந்திரங்களின் உற்பத்தி போன்றவற்றையும், நெசவுத் தொழில்நுட்பத்தில் பருத்தி, பட்டு, தோல் ஆடைகளின் தரம், உறுதி, வேலைப்பாடு போன்றவற்றின் சிறப்பினையும் அறிந்து கொள்ளலாம். சுருங்கை எனப்படும் கழிவுநீர்க் கால்வாய்களை மக்கள் அக்காலத்திலேயே பயன்படுத்திய திறன் போற்றுதற்குரியது.

                இதுபோன்ற பழந்தமிழரின் பல்துறைத் தொழில்நுட்பங்களை அழிவில்லாத இலக்கியங்கள் மூலம் புலப்படுத்தும் இந்நூல், இன்றைய தொழில் வளர்ச்சியில் எத்துறையாக இருப்பினும் நம் முன்னோர்கள் வகுத்து வைத்த பாதையில்தாம் நாம் பயணிக்கின்றோம் என்ற உண்மையை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.



நூல் - பழந்தமிழர் தொழில்நுட்பம்
ஆசிரியர் - ஆ. மணவழகன்
வெளியீடு - அ ய்யனார் பதிப்பகம், சென்னை
ஆண்டு - 2010

நூல் பெற - 9789016815

கருத்துகள் இல்லை: