சனி, 9 ஏப்ரல், 2011

கவிஞர் ஆ.மணவழகன் கவிதைகள் - 4


கனவு சுமந்த கூடு


கடைக்கால் எடுக்கையில்
ஒதுக்கிவிட்ட வேப்பங்கன்று
தளிர் விரித்து
கிளை தாங்கி
நிழல் பரப்பி
கூடு சுமக்கும் மரமாய்
கனவு இல்லமோ
இன்னும்
கடைக்காலாய்



பிறர்தர வாரா


ஒப்புசாண் மலை மீது
பீடியைப் பற்றவைத்துக் காட்டினான்

கோனான் சிவக்குமார்

இரத்தினம் கிணற்றில்
புறா பிடிக்கும் அவசரத்தில்
புகையிலையின் மகத்துவம்(!?) சுட்டினான்
பால்ய நண்பன் பாண்டியன்


நாத்தம் பாக்காம குடிச்சிடு
ஒத்தை மரத்துக் கள் உடம்புக்கு நல்லது
எடுத்து வைத்தார்கள்
சிறிய கோப்பையில் அப்பாவும்
பெரிய சொம்பில் மாமாவும்


பீர் மட்டுந்தான் நல்லதாம்
காட்டுக்கோட்டை கல்லூரிக் காலத்தில்
வாங்கிவந்தார்கள்
சேட்டும் குமரேசனும் ராஜேசும்


தேசியக் கல்லூரியில்
வில்ஸ் வெண்சுருட்டை
விரலிடுக்கில் வைக்கும்
லாவகம் சொன்னான்
மாப்ள காளிமுத்து


கஞ்சா என்னவெல்லாம் செய்யும்
வகுப்பெடுத்தான்
அகால மரணமடைந்த ஆருயிர் நண்பன்


பாக்கியநாதன்
இதப் பழிக்கக்கூடாது சார்
குழந்தை மாதிரி ஒண்ணுமே பண்ணாது
இராணுவ ரம்மை சோடாவில் கலந்து கொடுத்தார்
பசுமைக் கவிஞர்


எதா இருந்தாலும் இதுக்கு உட்டதுதான்
சாமிக்கு வாங்கி வைத்த சாராயத்தை
நாக்கில் வைத்துப் பார்க்கச் சொன்னான்
தையல் கடை செல்வம்


முழு பான்பராக்கையும்
ஒரே வாயில் போட முடியுமா?
பந்தயம் கட்டித் தோற்றான்
திருச்சி நண்பன் சங்கர்

எல்லா எழவையுந்தான் பார்த்தாச்சு
எதிலேயும் ஒரு ---ம் இல்லை


பழகியாச்சு விடமாட்டேங்குது
பொய்சொல்லாதே
உன் மனைவி விதவையாவது பற்றி
உன் குடும்பம் நடுத்தெருவில் நிற்பது பற்றி
எந்த அரசுக்கும்
இங்குக் கவலையில்லை

வீடு சுமந்து அலைபவன்

சிறகு முளைக்குமுன்பே
பறக்கத் தொடங்கியாயிற்று


சைதாப்பேட்டை
மேட்டுப்பாளையம்
சானடோரியம்
இப்போது ஆதம்பாக்கம்


முதலில் கைப்பை
அடுத்து தானி
பின் குட்டியானை
இப்போது 407


வீட்டைச் சுமந்து திரிந்தாயிற்று
வேலையும் வேலை நிமித்தமும்
எங்கள் ஆறாம் திணை


வரலாறுகளை வரப்பில் சுமந்திருக்கும்
வளமான மண்
வாழ்க்கையை வாய்க்காலில் நிறைத்திருக்கும்
வற்றாத கிணறு


சோகத்தை விதைத்ததால்
இன்பத்தையே விளைவிக்கும் இல்லம்


குளோரின் கலக்காத குடிநீர்
குப்பைகளைச் சுமக்காத காற்று
எல்லாமும்தான் இருக்கிறது ஊரில்


இருந்துமென்ன---
இருந்தது இல்லாமல் போகும்போதும்
இருப்பு இடம் மாறிப் போகும்போதும்தான்
உறைக்கிறது


ஏதிலிகளின் வலி


கருத்துகள் இல்லை: