ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

மணவழகன் கவிதைகள் - 2

வாழ்க்கை வணிகன்



பாருங்க சார்
தெய்வப் புலவர் வள்ளுவர்
எழுதியது சார்
வாழ்க்கைக்குத் தேவையான
வழிகளைச் சொல்வது சார்
மூன்று பெரும்பகுப்புகள்
நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள்
ஆயிரத்து முந்நூற்று முப்பது
குறள்களைக் கொண்டது சார்
வெளியில் வாங்கினா
இருபத்தி ஐந்து ரூபா சார்
கம்பெனி விளம்பரத்துக்காக
வெறும் பத்து ரூபா சார்
------ ------- ------ ---- -----
தொடர்வண்டிச் சிறுவன்
மலிவு விலையில் விற்றுச் செல்கிறான்
திருக்குறளோடு வாழ்க்கையையும்


*****


நகரியம்
சாக்கடை நாற்றத்தோடு
கழிவுநீர் ஊற்றுகள்
அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்
பறவைகள் அமர்ந்தறியா
செயற்கை மரங்கள்


முளைக்காத தானியங்கள்
விதை கொடுக்காத கனிகள்
உயிரில்லா முட்டைகள்
தாய் தந்தை உறவறியா
குளோனிங் குழந்தைகள்
ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும்
அறிவியல் வளர்ச்சிகள்


ஆடுகளை மலையில் விட்டு
அருகிருக்கும் கொல்லையில் கதிரொடித்து
பால் பருவக் கம்பைப் பக்குவமாய் நெருப்பிலிட்டு
கொங்கு ஊதித் தாத்தா கொடுத்த
இளங்கம்பின் சுவைக்கு
ஈடு இது என்று
எதைக் காட்டி ஒப்புமை சொல்வேன்


பச்சைக் கம்பு தின்றதே இல்லை
ஆதங்கப்பட்ட தோழிக்கு


*****


இக்கரைக்கு அக்கரை


புளிக்குழம்போடு
அரைத்த கேழ்வரகின்
ஆவிபறக்கும் உருண்டை


இளம் முருங்கைக்கீரைக் கூட்டோடு
இடித்துச் சமைத்த கம்பஞ் சோறு

நாட்டுப் புளிச்சை கடைசலோடு
புதுச் சோளச்சோற்றுக் கவளம்


இம்முறையேனும் கெங்கவல்லி சென்றதும்
ஆக்கித்தரச்சொல்லி
அம்மாவிடம் கேட்கவேண்டும்
ஊர் கிளம்ப ஒருவாரம் முன்பே
நாக்கு நங்கூரம் போடும்


ஏளனப் பார்வைக்கு இலக்காகும்
உயிர்க்கொல்லிப் பொடிகளால் உருவான
மசாலா குழம்பும்
உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்ட
கடையரிசிச் சோறும்


புள்ளைங்க வந்தா மட்டுந்தான்
நல்ல சோறு சாப்பிட முடியுது
அப்பா சான்றிதழ் தருவார் , ஊரில்
எனக்காகச் சமைக்கப்பட்ட
கடை அரிசிச் சோற்றுக்கும்
உயிர்க்கொல்லி பொடிகளால் உருவான
அதே மசாலா குழம்புக்கும்


இரைப்பையைத் தொடாமலேயே செரிக்கும்
தொண்டைக்குழியில் உருட்டி வைத்த
என் களி கம்பஞ்சோற்று ஆசை

*****

கருத்துகள் இல்லை: