புதன், 5 ஜூலை, 2017

அரச முறைமை - வரிவிதிப்பு


நாட்டில் குடிமக்களை வருத்தி வரி வசூலித்தல் செங்கோன்மையன்று. அவ்வகை அரசு கொடுங்கோன்மை அரசாக அக்காலத்தில் ஒதுக்கப்பட்டது. அதனால்தான் சிலப்பதிகாரத்தில், மாடலமறையோனின் அறிவுரையால் இனி, ‘குடிமக்களிடம் வரிவசூலிக்க வேண்டாம், நம் எல்லைக்கு உட்பட்டிருக்கும் சிற்றரசுகளும் நமக்குத் திறை எதுவும் செலுத்த வேண்டாம், இதை இன்றே எல்லோருக்கும் தெரிவியுங்கள்’ என்று சிலம்பில் சேரன் செங்குட்டுவன் உத்தரவிடுகிறான். வரையறையின்றிப் பெறப்படும் வரியால், அரசின் கையிருப்பு உயருமே அன்றி, மக்களின் வளம் பெருகாது என்பது தொன்மைச் சான்றோரின் தொலைநோக்கு.

            வரிவிதிப்பு மக்களின் வருவாய்க்கு உட்பட்டதாக அமைதல் வேண்டுமே தவிர, குடிமக்களைத் துன்புறுத்தி மிகுதியும் பெறுவதாக இருத்தல் கூடாது. வலிந்து பெறும் வரி அரசுக்குத் தீராத பகையாக முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது(புறம்.75).
            மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
          உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்
          பொன்னும் கொள்ளார் மன்னர் (நற். 226:1-3)
என்பார் கணிபுன்குன்றனார். இதில், மருந்துமரம் என்பதற்காக வேரோடு பிடுங்கி பயன்படுத்துதலும், வரம் கிடைக்க உயிர் நீங்கமட்டும் தவம் செய்தலும் எப்படித் தீதாகுமோ அதைப்போல, மக்களின் வளம் கெட அவர்களை வருத்தி வரிவசூல் செய்தலும் மிகுந்து துன்பத்தைத் தரும் என்கிறார்.  அதேபோல, சிறப்புக்குரிய அரசுரிமையை அடைந்துவிட்டோம் என எண்ணிக்கொண்டு, தம் குடிமக்களிடம் வரியை வேண்டி இரக்கும் அரசன் சுமக்க இயலாத துன்பத்திற்கு ஆளாவான் என்றும், அப்படிப்பட்டவன் ‘கூரில் ஆண்மை சிறியோன்’(புறம்.75) என்றும் சோழன் நலங்கிள்ளி சினம்கொள்கிறான்.

            முறையற்ற வரிவசூல் செய்யும் அரசை எச்சரிக்கும் புலவர் பிசிராந்தையாரோ, ஒரு மா என்னும் அளவைவிடக் குறைந்த நிலமேயாயினும், விளைந்த நெல்லைக் கொண்டுவந்து கவளமாக்கி யானைக்குக் கொடுத்தால் அது பலநாட்களுக்கு உணவாகும். நூறு செய் அளவுடைய பெரிய நிலமாயினும் அதனுள் யானை தானே தனியாகப் புகுந்து உண்ணத் தொடங்கினால், யானையின் வாயினுள் புகும் நெல்லைக் காட்டிலும் கால்களில் மிதிப்பட்டு அழிவது மிகுதியாகும். அதுபோல, அறிவுடைய மன்னன் ஒருவன் குடிமக்களிடமிருந்து வரி வாங்கும் நெறியை அறிந்து வாங்குவானானால், அவனது நாட்டில் வாழும் குடிமக்கள் அவனுக்கு மிகுதியும் பொருளைத் தந்து தாங்களும் தழைப்பர். மன்னன் அந்நெறியை அறியும் அறிவற்றவனாகி, குடிகளைத் துன்புருத்தி வரிவசூல் செய்வானாயின் அந்த யானை புகுந்த விளைநிலம்போல, தானும் உண்ணப் பெறான்; உலகும் அழியும் (புறம்.184) என்று எச்சரிக்கிறார்.

            அதனால்தான், ‘உலகம் கொள்ளும் அளவிற்குச் செல்வம் கிடைக்கப்பெறினும் பழியோடு வரும் செல்வம் வேண்டாமென’ விலக்கப்பட்டது. ஆம். பேரரசு, சிற்றரசு என்பதெல்லாம் மக்கள் விரும்பும் நல்லரசு என்பதிலேயே அளவிடப்படுகிறது.  

-       குறிப்பு நூல்: தொலைநோக்கு, முனைவர் ஆ.மணவழகன்.



புதன், 28 ஜூன், 2017

பழந்தமிழர் நீதி

நீதி வேண்டுவோர், தன் வயது குறைவு காரணமாக தான் வழங்கும் நீதியைக் குறைவாக எண்ணிவிடக் கூடதென்று ‘முதியவர் வேடமணிந்து’ நீதி வழங்கிய கரிகாலன்!


தன் மகன் அறியாது செய்த பிழைக்காக அவனைத் ‘தேர்க்காலிலிட்ட’ மனுநீதிச் சோழன்!


நீதிமுறைமை மாறிவிடக் கூடாதென்பதற்காக அறியாது செய்த சிறு பிழைக்கும் ‘தன் கையையே வெட்டிக்கொண்ட’ பொற்கைப் பாண்டியன்!


அடைக்கலம் வந்த புறாவிற்காக ‘தன் தசையையே அறுத்துக்கொடுத்த’ சிபி!


- இவை வரலாறோ, புனைவோ எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இவர்களின் செயல்கள் உலகிற்கு உணர்த்துவது இதைத்தான்: நீதிக்காக உணர்வு, உறுப்பு, உடல், உறவு, உயிர் அனைத்தையும் இழக்கலாம். ஆனால் நீதியை மட்டும் எதன்பொருட்டும் இழக்கக் கூடாது.
-முனைவர் ஆ.மணவழகன்



முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்குக் கவிச்செல்வர் விருது


தமிழ்நாடு திருவள்ளுவர் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம் சார்பில், 25.06.2017 அன்று முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்குக் கவிச்செல்வர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

செவ்வாய், 27 ஜூன், 2017

வஞ்சினம் மொழிதல் தமிழர் பண்பாடு





"வஞ்சினம் மொழிதல் தமிழர் பண்பாடு"

*********************************************** 


தமிழர் பண்பாட்டில் ‘வஞ்சினம் மொழிதல்’ என்பது தொன்றுதொட்டு வரும் மரபு. வீரயுகப் பண்பாட்டின் அடையாளமாக இது விளங்குகிறது. குறிப்பாக, அரசியல் வாழ்வில் போர்ச்சூழலை மையமிட்டதாக வஞ்சின உரைகள் அமைகின்றன. 


‘நான் எண்ணியதை எண்ணியவாறு செய்துமுடிக்கவில்லை எனில், என் நிலை இன்னதாக ஆகட்டும்’ (தகுநிலை குறைதல்) என உரைப்பது வஞ்சினம் அதாவது சத்தியம் இதுபற்றி, 


‘இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் 

துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்’ என்கிறார் தொல்காப்பியர்.


  சங்க இலக்கியங்களில் வஞ்சினம் உரைத்தல் பல காணப்பட்டாலும், புறநானூற்றில் பாண்டியன் நெடுஞ்செழியன் உரைக்கும் வஞ்சின வார்த்தைகள் ஆள்வோர்க்கும் ஆள நினைப்போர்க்கும் பாடமாகும். வயதில் இளையவனான நெடுஞ்செழியன், தன்னை எதிர்த்துவரும் இருபெரும் வேந்தர்களையும் அவர்களுக்குத் துணைநிற்கும் வேளிர்களையும் பார்த்து இவ்வாறு வஞ்சினம் உரைக்கிறான். 

     “இளையவன் இவனெனப் போர்தொடுத்து வருகிறீர். நீங்கள் நகைப்பிற்குரியவர்கள். இப்போரிலே நான் தோற்றால், என் குடிமக்கள் நல்லாட்சி நிழல் காணாமல் ‘என் அரசன் கொடியன்’ எனப் பழி தூற்றும் நிலையினேன் ஆகுக; மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர் அவை என்னைப் பாடாமல் போகட்டும்; பாதுகாப்போர் துன்புறும்போது, என்னிடம் வந்து இரப்போருக்குக் கொடுக்க இயலா வறுமையில் நான் வாடுவேன் ஆகுக! (புறம். 72).


  ஆம், குடிகளால் கொடியது எனத் தூற்றப்படுவதும், புலவர்களால் புறக்கணிக்கப்படுவதும், இரப்போர்க்கு ஈவதற்குப் பொருளற்றுப் போகும் வறுமை நிலையினை எய்துவதும் நல்லரசுக்கு அழகல்ல.





x