திங்கள், 10 அக்டோபர், 2011

குறுந்தொகை - நூல் அறிமுகம்



குறுந்தொகை - நூல் அறிமுகம்
முனைவர் ஆ.மணவழகன்
செப்டம்பர் 20, 2011

எட்டுத்தொகை நூல் வைப்பு முறையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள நூல் குறுந்தொகை. இது அக இலக்கிய வகையைச் சார்ந்தது. இதற்கு உரை எழுதியவர் பேராசிரியர் என்றும், அவர் எழுதாமல் விட்ட இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதினார் என்றும் கூறப்படுகிறது.  ஆனால், அவர்களுடைய உரைகள் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல, மூலநூலே கி.பி.1915 வரை தமிழுலகிற்குக் கிடைக்காமல்தான் இருந்தது. குறுந்தொகை மூலமும், திருக்கண்ணபுரந்தலத்தான் திருமாளிகைச் சௌரிப் பெருமாள் அரங்கன் (தி.சௌ. அரங்கசாமி ஐயங்கார்) இயற்றிய புத்துரையும் 1915இல், வித்யாரத்னாகர அச்சுகூடத்தாற் பதிப்பிக்கப்பட்டு முதன்முதலாக வெளிவந்தது.  
               
நூல் அமைப்பு

குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள மொத்தப் பாடல்கள்– 401(உ.வே.சா.வின் கூற்றுப்படி). இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ; தொகுப்பித்தவர் தெரியவில்லை. இந்நூலிலுள்ள பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். பலருடைய இயற்பெயர் தெரியவில்லை. மீனெறி தூண்டிலார், செம்புலப் பெயல்நீரால், கயமனார், நெடுவெண்ணிலவினார், விட்ட குதிரையார், ஓரேருழவரனார் போன்றோர் பாடலடிகளால் பெயற்பெற்றுள்ளனர். பாடல்களின் அடி அளவு நான்கடி முதல் எட்டடிவரை. கி.மு. 1ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.   

சிறப்புகள்

எட்டுத்தொகையை அறிமுகப்படுத்தும் பழம் பாடல் குறுந்தொகையை ‘நல்ல குறுந்தொகைஎன்று குறிப்பிடுகிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள 401 பாடல்களில் சுமார் 250 பாடல்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பெற்றுள்ளன. 29 உரையாசிரியர்கள் தத்தம் உரைகளிலே சுமார் 716 இடங்களில் குறுந்தொகைப் பாடல்களை எடுத்துக்காட்டியுள்ளனர். நச்சினார்க்கினியர் மட்டுமே 208 இடங்களில் குறுந்தொகைப் பாடல்களை எடுத்துக்காட்டியுள்ளதன் மூலம் இதன் சிறப்பை அறிய முடிகிறது.

உள்ளம் இனிக்கும் உவமைகள் சில

      சமூகச் சூழலை உணர்த்தும் உவமைகள், தொழில்முறைகளோடு தொடர்புடைய உவமைகள், சுற்றுச் சூழலை மையமாகக் கொண்ட உவமைகள், பண்பாட்டை வெளிப்படுத்தும் உவமைகள் என பல எளிய இனிய உவமைகள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன.

 அவற்றுள் சில:

1.             செம்புலப் பெயர்நீர் போல
2.             குப்பைக் கோழித் தனிப்போர் போல
3.             கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
                     நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கு
4.             ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
                     ஓரேர் உழவன் போல
5.             'உலைவாங்கு மிதிதோல் போல'
6.             '-----------------------------  கள்வர்தம்
                     பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
                     உகிர்நுதி புரட்டும் மோசை போல'
7.             கையில் ஊமன் கண்ணில் காக்கும்
                     வெண்ணெ யுணங்கல் போலப் 
8.             பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
                     நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல

குறுந்தொகை காட்டும் பண்பாடு

       குறுந்தொகைப் பாடல்களில் அக்காலத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு புதைந்துகிடைப்பதைக் காணலாம். குறுந்தொகையில் சிறந்த உவமைகள் இடம்பெற்றுள்ளதைப் போலவே, சமூக நலன் நாடும் சிறந்த தொடர்களும் இடம்பெற்றுள்ளன. இத்தொடர்கள் அக்கால மக்களின் வாழ்வியல் உயர் பண்புகளை, சமூகச் சூழல்களை வெளிப்படுத்துவதாக உள்ளன. குறிப்பாக,

                       ‘உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்

                       ‘வினையே ஆடவர்க்கு உயிரே

                       ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்

                       ‘ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்

              ‘இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு

போன்ற தொடர்களைக் குறிப்பிடலாம். இத்தொடர்கள் செல்வத்தின் பயனையும், முன்னோர் சேர்த்து வைத்த செல்வத்தை முறையாக செலவு செய்யாமல் வீணடிப்பவர் விரைவில் கெட்டழிவர் என்பதையும், ஆண்களுக்கு வினை என்பது உயிரைப் போன்றது என்பதையும், பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழ்ந்த வாழ்க்கை நிலையையும், பொருளில்லாரின் வாழ்க்கையில் இன்பம் என்பதற்கு இடமில்லை என்பதையும் வலியுறுத்துகின்றன.
       குறுந்தொகை, அக இலக்கியம் என்றாலும், புறச் செய்திகளையும், சமூக உயர் பண்பு நெறிகளையும், விழுமியங்களையும் பல இடங்களில் சுட்டுகின்றது. சான்றோர் என்பவர் யார் என்பதையும், அவர்களின் தன்மையையும் பற்றிக் குறிப்பிடுமிடத்து,

சான்றோர், புகழு முன்னர் நாணுப
                            பழியாங் கொல்பவோ காணுங் காலே;(குறு.252)

என்று மிக அழகாக அடையாளப்படுத்துகிறது. மேடையமைத்து தங்களுக்குத் தாங்களே விழா எடுத்துக்கொள்ளும் இன்றைய சமூக நிலையில், குறுந்தொகை, சான்றோர் என்பவர் தங்களைப் புகழும் முன்பாகவே நாணம் கொள்வர்; புகழ்ச்சியையே தாங்கிக் கொள்ளாதவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் பழியை எப்படி ஏற்பர். அவற்றைப் பொருத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறது.  மேலும், பல பாடல்கள் விருந்தோம்பலின் சிறப்பினை வலியுறுத்துகின்றன.

பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
                            வருவீ ருளீரோ வெனவும் (குறு.11;3-4)

என்பதில் மாலையில் ஊரின் எல்லையை அடைக்கும் வாயில் காவலர்கள், உள்ளே வருவதற்கு விருந்தினர் எவரேனும் இருக்கிறீர்களா என்று கேட்டு வாயிலை அடைக்கும் விருந்தோம்பல் பண்பு காட்டப்படுகிறது. அதே போல இல்லத்திற்கு இரவலர்கள் வராத நாள் துன்ப நாளாக கருதபட்டது.

சுவை மிக்க பாடல்களில் சில
குக்கூ என்றது கோழி

       தம் உள்ளத்தின் உணர்வுகளை இம்மியும் தப்பாமல் பிறருக்கும் உணர்த்த முடியுமேயானால் அவனே சிறந்த எழுத்தாளனாகிறான். அந்த எழுத்தே அழியா காவியமாகிறது. குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும் ஒரு காதல் காவியமாக உள்ளதைக் காணமுடிகிறது. காட்டாக ஒரு பாடல், இரவில் கணவனோடு சேர்ந்திருக்கிறாள் ஒரு தலைவி. இரவு முடிகிற விடியற்காலையில் கோழி கூவுகிறது. கோழி கூவுவதைக் கேட்டதும் ஏற்பட்ட  அவளின் மன நிலையை பின்வருமாறு உரைக்கிறது பாடல்.
 
                              குக்கூ என்றது கோழி அதனெதிர்
                            துட்கென்றன் என் தூய நெஞ்சம்
                            தோடாய் காதலர்ப் பிரிக்கும்
                            வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே (குறுந்.157)

தலைவனோடு சேர்ந்திருக்கும் பொழுது கோழி ‘குக்கூ என்று கூவியது, அதைக்கேட்ட என் நெஞ்சம் ‘துட்கென்றது என்கிறாள். இதில் உள்ள அழகான ஓசை நயம் உணரத்தக்கது. துன்பச் செய்தியைக் கேட்டதும் ‘திக்குனு ஆகிவிட்டது என்று இன்று நாம் சொல்லும் இந்த உணர்ச்சிநிலையை இங்கு இலக்கியம் காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் வைகறை(விடியல்) வருகிறது. ஆனால் அன்று வந்த விடியல் காதலரைப் பிரிக்கும் வாள்போல் வந்தது என்கிறாள். சூழலை வார்த்தைகளில் காட்டும் வண்ணத்தை இங்குக் காணமுடிகிறது.

கண்ணால் காண்பதே இன்பம்

       காதலர்கள் சேர்ந்து இன்ப வாழ்க்கை வாழாவிடினும், ஒருவரை ஒருவர் அவ்வப்போது காண்பது மனதிற்கு மகிழ்வையும் நிம்மதியையும் தருகிறது.  சேர்ந்து வாழ முடியாத சூழலில் தன் காதலனைக் காண்பதே தற்போது இன்பமாக இருக்கிறது என்கிறார் ஒருத்தி. இதனை அழகான உவமையால் விளக்குகிறாள்.

                              குறுந்தாள் கூதளி ராடிய நெடுவரைப்
                            பெருந்தேன் கண்ட இருகை முடவன்
                            உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
                            சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
                            நல்கார் நயவார் ஆயினும்
                            பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே (60)

உயர்ந்த மலை. அம்மலை மீது உள்ள பெரிய மரத்தின் உச்சியில் பெரிய தேன்கூடு ஒன்று உள்ளது. அதனைக் கண்ட இரு கைகளும் இல்லாத முடவன் ஒருவன் மரத்தின் கீழ் நின்றுகொண்டு, தேன் கூட்டை நோக்கி கையை நீட்டி நீட்டி நக்குகிறான். தேன் கையில் வரவில்லை என்றாலும் வருவதுபோல எண்ணி இன்பம் அடைகிறான். அதைப்போல, காதலர் தன்மீது இரக்கம் கொண்டு தம்மைச் சேர வரவில்லை என்றாலும் அவரைக் கண்களால் காண்பதே உள்ளத்திற்கு இனிமை தருவதாக உள்ளது என்கிறாள் தலைவி.

       இதே மனநிலையில் இருக்கும் தலைவன் ஒருவனின் சூழலை விளக்கும் மற்றொரு பாடல் பின்வருமாறு உவமையை அமைத்துள்ளது.
             
                              தச்சன் செய்த சிறுமா வையம்
                            ஊர்ந்து இன்புறார் ஆயினும் கையின்
                            ஈர்ந்து இன்புறும் இளையோர் போல (61)

அதாவது, தச்சன் செய்து கொடுத்த அழகிய சிறிய தேரினை இழுத்துச் செல்லும் சிறுவர்கள், அத்தேரில் ஏறி அமர்ந்து அதனை ஓட்டி இன்புற வாய்ப்பு இல்லை என்றாலும், அதன் மீது அமர்ந்து செல்வதைப் போல எண்ணி, அதனை இழுத்து விளையாடி இன்பம் அடைகின்றனர். அதேபோல, காதலியோடு சேர வாய்ப்பு இல்லை என்றாலும் அவளோடு வாழ்வதுபோல  எண்ணி வாழ்ந்திருத்தலே இன்பம் தருகிறது என்கிறான் தலைவன்.



உயிர்ச் சிறிது காதலோ பெரிது
     
காதல் என்றால் எக்காலத்திலும் இடையூறுகள் இருக்கத்தானே செய்கின்றன. காதலித்ததால் வீட்டில் கண்டிக்கப்பட்ட ஒரு தலைவி தன் வீட்டு முற்றத்தில் இருக்கும் பலா மரத்தினை நோக்கி தன்னிலையோடு ஒப்பிடுகிறாள்.

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசி னோரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே! (18)

உயர்ந்த பலா மரத்தில் இருக்கும் பெரிய பலா பழமானது சிறிய காம்பில் தொங்கிக்கொண்டிருக்கிறது. பலா பழம் நாளுக்குநாள் பெரியதாவதால், பழத்தின் எடை தாங்காது எந்த நேரத்திலும் காம்பு உடைந்த பழம் விழலாம். அதுபோல, என் உள்ளத்தின் காதலானது நாளுக்கு நாள் மிகுந்துகொண்டே செல்கிறது. ஆனால், என் உயிரோ பலா பழத்தின் காம்பைப் போல மிகச் சிறிது. பலா பழம் எந்த நேரத்திலும் அறுந்து விழுந்துவிடுவதைப் போல, தலைவன் மீது கொண்ட காதல் நாளுக்குநான் பெருகுவதால் என் உயிரும் எந்த நேரத்திலும் பிரிந்துவிடலாம் என்கிறாள்.

இல்வாழ்க்கை

      உடன் போக்கு சென்று (வீட்டை விட்டு வெளியேறுதல்) தனிக்குடித்தனம் மேற்கொள்ளும் புதுமணத் தம்பதிகளின் இல்லற வாழ்க்கையைக் குறுந்தொகைப் பாடலொன்று மிக அழகாகப் படம்பிடிக்கிறது.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.(167)

முதல் முதலாக தன் கணவனுக்காகச் சமைக்கும் பெண் ஒருத்தியின் செயல்பாடுகளும், கணவனுக்குத் தான் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பமும் இங்குக் காட்டப்படுகின்றன.. கட்டித் தயிரினை அழகான விரல்களால் பிசைகிறாள்; தயிர் பிசைந்த கையினை தன் ஆடையில் துடைத்துக்கொள்கிறாள்; முதல் முதலாக சமைப்பதால் அடுப்பை சரியாக எரியூட்டத் தெரியவில்லை. அதனால் புகை கண்களில் பட்டு கண்கள் கலங்குகின்றன.  அதனையும் துடைத்துக்கொள்கிறாள். கண்களில் எல்லாம் கரி ஒட்டியிருக்கிறது. எப்படையே சமைத்து முடித்துவிட்ட உணவினை தன் கணவனுக்குப் பரிமாறுகிறாள். கணவன் இனிது என உண்கிறான். அந்த சொற்களைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறாள். கணவனை மகிழ்விக்க எண்ணும் மனைவியும், சுவை எப்படி இருந்தாலும் இனிது என உண்டு மனைவியை மகிழ்விக்கும் கணவனும் இன்ப இல்லறத்திற்கும் இங்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளனர்.  

காமம் என்றால் என்ன?

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
     
என்று, காதல் என்றால் என்ன என்பதற்கு அழகாக விளக்கம் சொன்ன குறுந்தொகை, காமம் என்றால் என்ன என்பதற்கும் விளக்கம் சொல்கிறது. இதனைக் கீழ்வரும் பாடலில் காணலாம்.

காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலு மின்றே யானை
குளகுமென் றாண்மதம் போலப்
பாணியு முடைத்தது காணுனர் பெறினே(136)

காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; அக் காமம் புதியதாகத் தோன்றும் வருத்தமும் அன்று; உடலில் தோன்றும் நோயும் அன்று. கடுத்தலும்(மிகுதலும்),தணிதலும் இன்று; யானை குளகு என்ற தழையுணவை மென்று தின்று அதனால் கொண்ட மதத்தைப் போல மனதிற்கு ஏற்ற பொருத்தமானவரைப் பெற்றால் அக்காமம் வெளிப்படும் சிறப்பினை உடையது என்கிறது. காமம் என்பது இன்று தவறான பொருளின் வழங்கப்படுவது உணரத்தக்கது.

குறிப்பிடத்தக்க குறுந்தொகைப் பதிப்புகள்

1.திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கன் (உரையும் மூலமும்-அச்சில் ஏற்றிய முதல்வர்-           1915
2.   உ.வே.சா – 1937
3. பேரா. இராகவையங்கார்- 1946 
4. பொ.வே. சோமசுந்தரனார்   - 1955

ஆங்கில மொழிபெயர்ப்பு

                மு. சண்முகம்பிள்ளை மற்றும் டேவிட் இ.லூ

குறுந்தொகை எளிய வடிவம்

            குறுந்தொகை வசனம், 
     கொங்குதேர் வாழ்க்கை
     குறுந்தொகை விருந்து
     குறுந்தொகைச் செல்வம் - மு.வ, 
     குறுந்தொகைச் சொற்பொழிவுகள் - கழகம்

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

நற்றிணை - அறிமுகம்



 நற்றிணை - அறிமுகம்

முனைவர் ஆ.மணவழகன்
செப்டம்பர் 07, 2011
  
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை. ‘நல் என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது.

நூல் அமைப்பு
      
       நற்றிணையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை 400. பாடல்கள் 9 அடிகள்  முதல்  முதல் 12 அடிகள் வரை. இந்நானூறு பாடல்களையும் 175 புலவர்கள் பாடியுள்ளனர். பாண்டிய அரசன் மாறன்வழுதி என்பவனால் இந்நூல் தொகுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொகுத்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நற்றிணை ஆசிரியர்கள் சிலரின் இயற்பெயர் தெரியவில்லை. அதனால் அவர்கள் பாடல்களில் இடம்பெற்றுள்ள அடிகளால் பெயர் பெற்றுள்ளனர். (எ.கா. தேய்புரி பழங்கயிற்றனார், தனிமகனார்).

சிறப்புகள்

       நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணைபுரிகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்தன்மை, கல்வியாளர்களின் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை இவை உணர்த்துகின்றன. பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கத்தையும், பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் கால்பந்து இடம்பெற்றிருந்தது  போன்ற செய்திகளையும் நற்றிணையில் அறியலாம்.

       நீரின்றமையாவுலகு, ‘பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர், விருந்தோம்பல் போன்ற குறள் கருத்துகள் பலவற்றிற்கு மூலம் நற்றிணையே. அதோடு, உவமைத்திறம், உள்ளுறை, இறைச்சிப் பொருள்களின் அமைப்பு என இலக்கியச் சுவையும்  மிகுந்ததாக நற்றிணைப் பாடல்கள் திகழ்கின்றன.

சுவைக்க சில செய்திகள்

மரங்களையும் உடன்பிறந்தோராக எண்ணுதல்

      தாவரங்களுக்கு ஓர் அறிவாகிய ‘தொடு உணர்வு உண்டு என்பது தொல்காப்பியர் கூற்று. ஆனால் அதற்கு மேலேயும், பேச்சுகளை உணரும் தன்மையும், சூழலை உணரும் தன்மையும், செயல்களை உணரும் தன்மையும் அவைகளுக்கு உண்டு என்கிறது நற்றிணை. அதனாலேயே நற்றிணைப் பெண் ஒருத்தி தாவரத்தைத் தன்னுடைய மூத்த சகோதரி என்கிறாள். உடன்பிறந்தோரையே உதறித்தள்ளும் இன்றையக் காலச்சூழலில், தன் தாய் வளர்த்த புன்னை மரத்தைத்கூடத் தன் 'உடன்பிறந்தோராக எண்ணும் உயரிய பண்பினை நற்றிணைக் காட்டுகிறது.
      
       தன் காதலனோடு புன்னை மரத்தின்கீழ் நின்று பேசிக்கொண்டிருக்கும் பெண் ஒருத்தி, திடீரென இந்த மரத்தின் கீழ் நின்று பேச வேண்டாம், நாம் வேறு இடத்திற்குச் செல்வோம் என்கிறாள். காரணம் கேட்கும் காதலனிடம், ‘நான் பிறப்பதற்கு முன்பாகவே விதை ஊன்றி பாசத்தோடு வளர்க்கப்பட்டது இப்புன்னை மரம் என்றும்,  இது என்னை விடச் சிறந்ததென்றும், என் மூத்த சகோதரி என்றும் என் அம்மா கூறியிருக்கிறாள் அதனால் இதன் கீழ் நின்று உன்னோடு பேச எனக்கு நாணமாக இருக்கிறது என்கிறாள்.  இதனை,
             
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
------------- ------------  ----------
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே

என்கிறது நற்றிணை. பழந்தமிழரின் இயற்கையோடு ஒன்றிய வாழ்வினையும், மரம் போன்று அஃறிணை உயிர்களிடத்தும் அன்புகொண்டு தம் பிள்ளைகளைவிட மேலானதாகப் போற்றிய உயிர் இரக்கத்தையும் இதில் அறிய முடிகிறது. இதுபோன்று, மரத்தைக்கூட சகோதரியாக எண்ணும் உயர் பண்பையும், தான் காதலிப்பதை மரம்கூட அறிந்துவிடக்கூடாதே என்றெண்ணி நாணும் பண்பட்ட நாகரிகத்தையும் உலகின் வேறு இலக்கியங்கள் காட்டுகிறதா என்பது கேள்விக்குறியே.

அரசிற்கு அறிவுறுத்தல்

அரசிற்குப் பொருள் ஈட்டும் வழிகளில் ஒன்று 'வரிவிதித்தல்' என்பது. இந்த வரிவிதித்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தினைக் கருத்தில்கொண்டு அமைய வேண்டுமே அன்றி, அரசிற்கு வரும் வருவாயின் அளவைக் கணக்கில்  கொண்டு அமைந்து விடுதல் கூடாது. வருவாய் ஒன்றையே நோக்கமாகக் கொண்டால் அவ்வரசு நல்லரசாக  அமையாது. மக்களும் நல்வாழ்வு வாழ முடியாது.  இக்கருத்தை, ‘மூலிகை மருத்துவத்தை மேற்கொள்ளும் மக்கள் மூலிகையைப் பறிக்கும்பொழுது மரமே இறந்துவிடும்படி வேரோடு பறிக்க மாட்டார்; தவம் மேற்கொள்ளும் மக்கள் உயர்தவமே ஆயினும் தம் வலிமை முழுதும் கெட்டு உயிர் போகும் அளவிற்கு அதனை மேற்கொள்ள மாட்டார்; அதுபோல, நல்லாட்சி செய்யும் மன்னர் குடிமக்கள் வளம் கெட்டு வருந்தும்படி வரி வாங்க மாட்டார் என்கிறது நற்றிணை.

மரம்சா மருந்தும் கொள்ளார்  மாந்தர்;
உரம் சாச் செய்யார் உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார் மன்னர்' ( நற். 226:1-3)

உண்மைச் செல்வம்

       ஒருவரது உண்மையானச் செல்வம் எது என்பதை நற்றிணைப் பாடல் ஒன்று உலகிற்கு அழகாக உணர்த்துகிறது. செல்வம் என்பது, ஒருவன் சேர்த்து வைத்திருக்கும் பொன்னையோ, பொருளையோ, இனிதாகப் பயணம் செய்ய வைத்திருக்கும் ஊர்திகளையோ, இனியவை செய்யக் காத்திருக்கும் வேலையாட்களையோ  பொறுத்து  அமைவதல்லை; நல்லவர்களின் செல்வம் என்பது, அவரைச் சேர்ந்தோரின் துன்பங்களைக் கண்டு அவற்றைப் போக்கும் உயர்ந்த பண்பேயாகும் என்கிறது.
      
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
                   செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே,
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே (நற்.210:5-9)


உயிர் இரக்கம்

     மரங்களையும், விலங்குகளையும் உடன் பிறந்தோராகவும், பிள்ளைகளாகவும்  எண்ணிப் போற்றிய காரணத்தால்தான், தென்னை மரத்திற்குத் ‘தென்னம்பிள்ளை என்றும் அணிலுக்கு ‘அணிற்பிள்ளைஎன்றும் கீரிக்குக் ‘கீரிப்பிள்ளை என்றும் பெயர்களை வைத்தனர் தமிழர். மேலும், உயிரிரக்கம் என்பது அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் கொள்வதுதானே. அதனால்தான் பழந்தமிழர் பறவைகளிடத்தும் இரக்கம் கொண்டிருந்தனர். பறவைகளுக்கும் கருணை காட்டினர். இதனை நற்றிணைப் பாடல்களில் அறியலாம். நிலத்தில் விளைந்த விளைச்சலை வீட்டில் சேர்க்கும் காலம் வந்தது. நல்ல வெண்ணெல் விளைந்திருந்தது. அதனை அரிந்து எடுக்க எண்ணிய உழவர்கள் 'தண்ணுமை' என்னும் கருவியை முழக்கி இசையை எழுப்பினர். இதனை,

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழனப் பல் புள்இரிய (நற். 350: 1-2)

எனக் காட்டுகிறது பாடல். இசை முழங்கி நெற் அரிதல் ஒரு சடங்கு போல தோன்றினாலும் இதில் புதைந்திருக்கும் உண்மை வேறானது. நெற்பயிரில் சிறு குருவிகள் கூடுகட்டி வாழ்ந்திருக்கும். நெல்லை அரிந்தெடுக்கும் போது அக்குருவிகளுக்குத் தீங்கு நேரிடலாம். இசையை முழங்கி ஆராவாரம் செய்தால், அக்குருவிகள் தங்கள் கூட்டத்தோடு வேற்றிடம் பெயரும், தீங்கு நேராது என்ற உயிரிரக்கம் இதில் புலனாகிறது.

உயிர் இரக்கம் என்பது, பிறர்க்குச் சிறுதுன்பம்  நேர்ந்தபோதும், தன் நலனைக் கருதாது விரைந்து சென்று, அத்துன்பத்தைப் போக்க முயல்வதாகும். அதைத்தான், கண்ணிற்கு ஏதாவது துன்பம் என்றால், கை யோசிப்பதில்லை, விரைந்து சென்று துயர் நீக்கும். அதுபோலத்தான் நல்லவர்களின் மனம் உயிரிரக்கம் கொண்டாக இருக்கும் என்கிறது நற்றிணை.

கண்ணுறு விழுமம் கைபோல் உதவி (நற்.216:3)

உயர் பண்பு

விருந்தோம்பல் என்பது தமிழர்களின் உயர் பண்பு. விருந்தினர் என்பவர் இன்று வழங்கப்படுவதுபோல தெரிந்தவர்களோ உறவினர்களோ அல்ல; முன்பின் தெரியாதவர்கள்தான் விருந்தினர் என்பவர். முன்பின் தெரியாதவர்களையும் அன்போடு வரவேற்று, உபசரித்து, அவர்களுக்கு வேண்டும் உணவளித்து பசிபோக்குவதுதான் விருந்தோம்பல். அவ்வகையில், நடு இரவில் விருந்தினர் வந்தாலும்கூட அவர்களையும் அன்போடு வரவேற்று, இன்முகத்தோடு விருந்து உபசரிக்கும் இல்லத் தலைவியை,

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்
முல்லைசான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் (நற்.142: 1)

என்று காட்டுகிறது நற்றிணை. மேலும் இதில், கற்பு என்பது இல்லத்திலிருந்து விருந்து உபசரிக்கும் நற்குணமே என்பதையும் அறியலாம்.
மருத்துவன் இயல்பு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பிற துறைகள் போலவே மருத்துவத்துறையும் வளர்ச்சியுற்று விளங்கியதற்கு நற்றிணைப் பாடல்கள் சான்றுகளாக உள்ளன. மருத்துவத் துறையைக் குறிப்பிடும் இடத்து மருத்துவனின் இயல்பு சுட்டப்படுகிறது.  மருத்துவன் என்பவன், நோயாளிகள் விரும்பி கேட்கும் அனைத்தையும் கொடுக்காமல், நோயின் தன்மை அறிந்து, அந்த நோய் தீர்வதற்கான மருந்துகள் எவையோ அவைகளை மட்டும் ஆராய்ந்து கொடுத்து, நோயினைக் குணப்படுத்துவான் என்கிறது.

அரும்பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல ( நற். 136: 2-3)

இவைபோல இன்னும் ஏராளமான செய்திகளைக் கொண்டுள்ள நற்றிணையை முழுமையாகச் சுவைத்து இன்புறுங்கள். தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை உணருங்கள்.

*****