பொதுக் கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுக் கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஜூன், 2017

வஞ்சினம் மொழிதல் தமிழர் பண்பாடு





"வஞ்சினம் மொழிதல் தமிழர் பண்பாடு"

*********************************************** 


தமிழர் பண்பாட்டில் ‘வஞ்சினம் மொழிதல்’ என்பது தொன்றுதொட்டு வரும் மரபு. வீரயுகப் பண்பாட்டின் அடையாளமாக இது விளங்குகிறது. குறிப்பாக, அரசியல் வாழ்வில் போர்ச்சூழலை மையமிட்டதாக வஞ்சின உரைகள் அமைகின்றன. 


‘நான் எண்ணியதை எண்ணியவாறு செய்துமுடிக்கவில்லை எனில், என் நிலை இன்னதாக ஆகட்டும்’ (தகுநிலை குறைதல்) என உரைப்பது வஞ்சினம் அதாவது சத்தியம் இதுபற்றி, 


‘இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் 

துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்’ என்கிறார் தொல்காப்பியர்.


  சங்க இலக்கியங்களில் வஞ்சினம் உரைத்தல் பல காணப்பட்டாலும், புறநானூற்றில் பாண்டியன் நெடுஞ்செழியன் உரைக்கும் வஞ்சின வார்த்தைகள் ஆள்வோர்க்கும் ஆள நினைப்போர்க்கும் பாடமாகும். வயதில் இளையவனான நெடுஞ்செழியன், தன்னை எதிர்த்துவரும் இருபெரும் வேந்தர்களையும் அவர்களுக்குத் துணைநிற்கும் வேளிர்களையும் பார்த்து இவ்வாறு வஞ்சினம் உரைக்கிறான். 

     “இளையவன் இவனெனப் போர்தொடுத்து வருகிறீர். நீங்கள் நகைப்பிற்குரியவர்கள். இப்போரிலே நான் தோற்றால், என் குடிமக்கள் நல்லாட்சி நிழல் காணாமல் ‘என் அரசன் கொடியன்’ எனப் பழி தூற்றும் நிலையினேன் ஆகுக; மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர் அவை என்னைப் பாடாமல் போகட்டும்; பாதுகாப்போர் துன்புறும்போது, என்னிடம் வந்து இரப்போருக்குக் கொடுக்க இயலா வறுமையில் நான் வாடுவேன் ஆகுக! (புறம். 72).


  ஆம், குடிகளால் கொடியது எனத் தூற்றப்படுவதும், புலவர்களால் புறக்கணிக்கப்படுவதும், இரப்போர்க்கு ஈவதற்குப் பொருளற்றுப் போகும் வறுமை நிலையினை எய்துவதும் நல்லரசுக்கு அழகல்ல.





x

புதன், 28 டிசம்பர், 2016

தமிழர் திருநாள் / பொங்கல் / உழவர் திருநாள் / தைத் திருநாள்




மறந்துபோன மரபு விழாக்கள்
பொங்கல் / உழவர் திருநாள் / தமிழர் திருநாள்
முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
tamilmano77@gmail.com


            இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழருடையது. வாழ்வு கொடுத்து வளமளிக்கும்  இயற்கையைக் காத்தனர்.      உலக உயிர்களுக்கெல்லாம் மூலமான ஞாயிறையும் திங்களையும் மழையையும் போற்றினர். மரங்களையும் தெய்வங்களாக எண்ணி இயற்கையோடு இணைந்தனர்.

            உலக மாந்தரினம் பலவும் ஆடையின்றி அரைமனிதராக அலைந்து திரிந்த வாழ்வியல் சூழலில், மானிட வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாம் வேளாண்மையைக் கண்டறிந்து, அதில் மேலாண்மை செய்தவர்கள் தமிழர்கள். வேளாண் தொழிலோடும் உழவோடும் தொடர்புடைய கதிரவனையும், மழையையும், மாடுகளையும் தமிழர் கொண்டாடினர். அவற்றிற்கு விழாக்கள் கண்டு நெஞ்சம் நிறைந்தனர். ஆம், வளமைக்கும் நன்றிக்குமான விழாவான தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் பழமையும் சிறப்பும் தனித்துவமும் மிக்கது.  

            தைப் பொங்கல், தமிழர் திருநாள், அறுவடைத் திருநாள், உழவர் திருநாள்  எனப் பலவாறு அழைக்கப்படும் பொங்கல் விழாவானது, நான்கு நாட்கள் கொண்டாடப்படும் தொடர் நிகழ்வாகும்.  முதல் நாள் போகி, அடுத்த நாள் கதிரவன் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் அல்லது கரிநாள்.

            மார்கழி இறுதி நாள் போகி (போக்கி). ஆடிப்பட்ட வேளாண்மை மார்கழியில் களம் கண்டு, திங்கள் இறுதியில் வீடு சேர்த்தலின் விழாக்கோலமே இப்போகி. பழையன கழிதல் என்பதற்கேற்ப இல்லத்தைத் தூய்மைப்படுத்துதல், வெள்ளையடித்தல், செம்மண் பட்டை தீட்டுதல் போன்றன இதன் முன் நிகழ்வுகளாகும். வேளாண் குடிகளின் வாழ்வியல் சடங்குகள் பலவும் இந்நாளில் நிகழ்த்தப் பெறுகின்றன. இந்நாளில் முன்னோர் வழிபாடும் மேற்கொள்ளப்படுகிறது. புது வருவாயான அரிசியில் மாவிடித்து விளக்கேற்றுவர். போகி நாள் இரவில் இறைவழிபாடு செய்யப்பட்ட பூசைப் பொருட்களைக் கொண்டு மறுநாள் விடியற்காலையில் காடு வளைத்தல் என்ற சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, முதல்நாள் இரவில் பூசையில் வைக்கப்பட்ட மா, வேம்பு, பூளா பூ (பூளை)  ஆகியவற்றின் கொத்துகளைத் தனக்கு உரிமையாக உள்ள விளைநிலத்தின் நான்கு எல்லைகளிலும் இட்டு, தனக்கான அத்துகளை உழவர் உறுதிசெய்வர்.  

            இரண்டாம் நாள் கதிரவன் பொங்கல். தைத் திங்களின் முதல் நாளிது. செங்கதிரோன் வெளித்தோன்றும் முன்பே அடுப்பு மூட்டி, புதுப் பானை உலையில் புத்தரிசிப் பொங்கல் வைப்பர். காலைக் கதிரவன் வெளித்தோன்றும்போது பொங்கல் பொங்கவேண்டுமென்பது மரபு.  கதிரவன் வெளித்தோன்றும்போது குலவையிட்டு, பொங்கலோ பொங்கலென ஓசை எழுப்பி, இசை முழக்கி, ஆர்ப்பரித்து கதிரவனுக்கு நன்றி நவிலும் இயற்கை வழிபாடிது. அரசி மாக்கோலம், கரும்புத் தூண்களில் மஞ்சள் –வேம்பு – மாவிலை – பூளை பூத்தோரணம் என இல்லங்கள் தோறும் அலங்காரம் அணிவகுக்கும்.

            மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். உலக உருவாக்கத்திற்கு மூலமான இயற்கைக்கு நன்றி சொன்ன தமிழன், உயிர்களின் வாழ்விற்கு அடிப்படையான வேளாண் தொழிலில் துணைநிற்கும் விலங்குகளுக்கு நன்றி நவிலும் நன்னாளே இந்நாள். உழவனின் வாழ்வியல் மூலதனம் எருது. உழவனுக்கு எது வாய்க்கிறதோ இல்லையோ தொழிலுக்குத் துணையாக எருதுகள் வாய்க்க வேண்டும். நல்ல எருதுகள் வாய்க்கப்பெற்ற உழவன் பேறு பெற்றவன்.  மாட்டுப் பொங்கல் நாளில் எருதுகளையும் பசுக்களையும் குளிப்பாட்டி, உடலில் வண்ணப் பொடிகளால் அணிசெய்வர். கொம்புகள் சீவி, வண்ணம் தீட்டி அழகுபடுத்துவர். புதுக் கயிறு மாற்றி, சலங்கை கட்டி, மாலையிட்டு களிப்பர்.



            மாட்டுப் பொங்கல் நாளில், சாணத்தால் சிறு தொட்டிகள் நான்கு கட்டி, ஒன்பது கோள்களைக் குறிக்கும் வகையில் அதன் ஒவ்வொரு முனையிலும் சாணி பிள்ளையார் வைப்பர். ஒரு முனையில் மட்டும் மஞ்சள் பிள்ளையார் அலங்கரிக்கும். சிறு தொட்டிகள் பசும் பாலால் நிரப்பப்பட்டு, பாலில் மலர்களும், துளசியும், அருகம் புல்லும் தூவப்படும். தொட்டிகளின் தலைப்பகுதியில் உழவுக் கருவிகள், உலக்கை, அலங்கரிக்கப்பட்ட தடி, கதிர் அரிவாள், களைகொட்டு, மண்வெட்டி, கரும்பு, மஞ்சள், பூளா பூ (பூளை), ஆவாரம் பூ போன்றவை பயன்பாட்டு நோக்கிலும் வளமை நோக்கிலும் வைக்கப்படும். பொங்கல் சமைத்து, அது பொங்குகிற போது பொங்கலோ பொங்கலென குலவையிடுவர்.
           
            சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல்  ஆகிவற்றைப் படையல் செய்து வழிபட்டு, அதனை வெல்லம், வாழைப்பழத்துடன் கலந்து மாடுகளுக்கு ஊட்டி மகிழ்வர்.  ஊட்டும்பொழுதும் பொங்கலோ பொங்கலென முழங்குதல் மரபு. சிறுபிள்ளைகள் சிறுபறை இசைத்து  மகிழ்வர். ஊரில், அலங்கரிக்கப்பட்ட எருதுகளின் உலாவும் நிகழ்த்தப்பெறும்.

            நான்காம் நாள் காணும் பொங்கல். இதனை உழவர்கள் தங்களுக்கான ஓய்வு நாளாக, விளையாட்டுகளால் மகிழ்ந்திருக்கும் நாளாகக் கொள்கின்றனர். உறவினரோடும் நண்பரோடும் விழாக்களைக் கண்டு மகிழ்வர். கட்டிளங் காளையர் காளையடுக்கும் ஏறு தழுவுதல் எனும் வீர விளையாட்டு இந்நாளில் நிகழ்த்தப்பெறும்.  

நகரமயமாதலில் உழவு மாடுகள் இல்லை; உழு கருவிகள் இல்லை; புதுநெல் வரவு இல்லை; புதுப்பானைப் பொங்கல் இல்லை; உறவுகள் உடன் இல்லை; ஏறு தழுவுதல் எதுவும் இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் சமையலறையில் மின்சார அடுப்பேற்றி, உயர் அழுத்தச் சமையல் கலனில் (குக்கர்) பொங்கல் வைத்துக்கொண்டிருக்கிறாள் என் மனையாள். தொலைக்காட்சியில் நடிகைகள் பல்லிளிக்கும் பொங்கல் கேளிக்கை நிகழ்ச்சிகளை வெறித்தபடி, எம் பிள்ளைகளுக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறேன் என் பாட்டன் பாட்டி இயற்கையோடு இயைந்து வாழ்ந்துவிட்டுப் போன பாங்கை.  

            அகத்தியமும் தொல்காப்பியமும்
            மேல்கணக்கும் கீழ்க்கணக்கும்
            பெருங் காப்பியமும்  சிறு காப்பியமும்
            பக்தி இலக்கியமும் பல்துறை நுட்பங்களும்
            சித்தர் இலக்கியமும் சிற்றிலக்கியமும்
            கொன்றெரித்து

            தமிழ்ப் பெருமையும் தன்மானமும்
            வீரமும் விவேகமும்
            அறிவும் அரசியலும்
            ஆற்றலும் ஆளுமையும் என
            அனைத்தையும்
            செரித்துத் தொலைத்த எம்மக்கள்...
            இன்று
            இலவசங்களில் ஏமாந்தவற்றைப் போகியாகத்
            தெருவெங்கும் எரித்துக்கொண்டிருக்கின்றனர்

            பாலை நிலத்துக் கொற்றவைமுன்
            துடி இசைத்துக் கூத்தாடிய வீரனைப்போல
            நகரத்து வீதியெங்கும்
            சிறுபறை முழக்கி
            எக்காளமிட்டுச் செல்கின்றனர்
            எம் சிறுவர்கள்.
                                                                                        ஆ.மணவழகன்
tamilmano77@gmail.com

ஏறு தழுவுதல் – தமிழர்ப் பண்பாடு




ஏறு தழுவுதல் – தமிழர் பண்பாடு

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

என்பார் பாவேந்தர் பாரதிதாசன். அண்டத்தின் கருக்கள் உருவான போதே உருவானவை தமிழினமும் மொழியும் என்பது இவர்போன்ற ஆன்றோர் வாக்கு. உலக உயிர்களுள்  மூத்த இனமாம் தமிழினத்திற்கெனப் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் கலையும் பண்பாடும் தனிச் சிறப்பு. பழங்காலத்துக் கலைகளுள் முதன்மை பெறுவது ஏறுதழுவுதல் எனும் வீரக் கலை.

            மாடுகளில் ஆண்மையுடையது எருது. இது பழங்கால முல்லை நிலத்து ஆயர்களின் பெருஞ்செல்வம். மதம் கொண்ட யானையையும் கடும் புலியையும் எதிர்கொண்டு தாக்கும் வலிமையுடையது. வினையின் சிறப்பால் இது கொல்லேறு என்று போற்றப்படும். இவ்வெருதுகளை, வானிடத்து திங்கள் போலவும் திருமாலிடத்துள்ள சங்கு போலவும் அழகிய நெற்றிசுட்டியையுடைய கரிய நிறமுடைய காரிகள்; கரிய மேகம் சூழும் மலையிடத்து வீழ்கின்ற அருவியைப் போல அழகிய வெள்ளைக் கால்களையுடைய காரிகள்; பலராமன் மார்பில் இருக்கும் மாலையைப் போல சிவந்து நீண்ட கொடி மறுவினை உடைய வெள்ளைகள்; விண்மீனுடன் விளங்கும் செவ்வானம் போல அழகிய வெள்ளைப் புள்ளிகளையுடைய சிவந்த நிறத்தனவாகிய சேய்கள்; சிவபெருமான் மிடற்றின்கண் தோன்றும் கருமைபோல கரிய கறையினையுடை கழுத்தையும், உயர்ந்து வளர்ந்த திமிலினையும் உடைய கபில நிறத்தனவாகிய குரால்கள், தெளிவாகத் தோன்றும் சிவந்த சிறு புள்ளிகளையுடைய வெள்ளைகள் எனப் பலவாறு பழந்தமிழ் இலக்கியங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றன.

            கொல்லேறு என்றாலும் அதன் கோட்டிற்குக் காளையர் அஞ்சுவதில்லை. முல்லை நிலத்து ஆயர் பெண்ணை மணம்முடிப்பதற்காக ஏறுதழுவும் பண்பாடு பண்டைத் தமிழரிடையே இருந்தது. காளையர் அந்நிகழ்வில் விருப்பமுடன் பங்கேற்றனர். தான் விரும்பிய பெண்ணை மணந்து கொள்ளவும், தன் வீரத்தை வெளிப்படுத்தவும், புகழ்பெறவும் தனக்குக் கிட்டிய ஓர் அரிய வாய்ப்பாக ஏறுதழுவும் இவ்விழாவைக் கருதினர். எனவே கொல்லேற்றின் கோடு கிழித்து குடல் சரிவதோ, உயிர் விடுவதோ அவர்களுக்குப் பொருட்டல்ல.

கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம் (கலி.101:41-42)

என்று, கொல்லும் இயல்புடைய காளையை அடக்குபவர்க்குத்தான் எம் மகளைக் கொடுப்போம் என்பதில் ஆயர்களும் உறுதிகொண்டிருந்தனர். முல்லைநிலப் பெண்களும், கொல்லேற்றின் கோடஞ்சாது, அதனைத் தழுவி அடக்கும் வீரமுள்ள ஆடவனையே மணக்க விரும்பி ஏறுதழுவலைப் பரண்மீதிருந்து காண்பர்(கலி.103:6-9). அவ்வாறு பார்த்துக்கொண்டிருக்கும் ஆயமகளின் கூந்தலில் வந்து விழுந்த மாலையைத் தெய்வத்தின் செயலென்று நம்பினர்(107:31:33).
ஏறு தழுவும் வீர விழா நிகழ்வின் காட்சியை,
            எழுந்தது துகள்
            ஏற்றனர் மார்பு
            கவிழ்ந்தன மருப்பு
            கலங்கினர் பலர்        (கலி.102:21-24)

என்று கண்முன் காட்டுகிறது கலித்தொகை.
            காளையை அடக்கிய காதலனின் கைப்பிடிக்கும் ஆய மகளின் திருமணம் சங்க இலக்கியமாம் கலித்தொகையில் காணப்படும் தனிச் சிறப்பாகும். ஏற்றினைத் தழுவிய ஆடவனுக்கே தலைமகளைத் தமர் கொடை நேர்வர்(கலி.104:73-76). இல்லின் முற்றத்தில் திரையிட்டு(கலி.115:19-20), மணல் தாழப் பரப்பி, இல்லத்தில் செம்மண் பூசி, பெண் எருமையின் கொம்பினை நட்டு வழிபாடாற்றி ஆயமகளின் திருமணம் நடைபெற்றது.

                                    தரு மணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி
                                    எருமைப் பெடையொடு எமர் ஈங்கு அயரும்
                                    பெரு மணம்                                       (கலி.114:12-14)
தம் துணையோடு பூக்களில் மது அருந்தும் வண்டுகள் அஞ்சியோடுமே என்றெண்ணித் தன் தேரில் ஒலிக்கும் மணி நாவினை இழுத்துக் கட்டிய தலைவனையும்,  தன் குரல் கேட்டால் இணைமான் துணை பிரியுமே என்றஞ்சி கணவனை எழுப்பத் தயங்கும் தலைவியையும், மரத்தையும் உறவாகப் பார்த்த மாந்தரையும் கொண்டதே பழந்தமிழ்ச் சமூகம். ஏறுதழுவும் வீரர்கள் தாம் குத்துப்பட்டாலும் காளைகளைத் துன்புறுத்தியதாகப் பதிவுகள் இல்லை. காளைகள் துன்புறுத்தப்படுகின்றன எனக் காரணம் காட்டி, ஏறுதழுவலை இன்று எடுத்தெறிவது இனப் புறக்கணிப்பு என்பதைத் தவிர வேறென்னவாக இருந்துவிட முடியும்.  
நான்
உண்பதை
உடுத்துவதை
பார்ப்பதை
படிப்பதை
சிரிப்பதை
சிந்திப்பதை
விதைப்பதை
விளையாடுவதை
யார்யாரோ தீர்மானிக்கிறார்கள்
சொல்லிக்கொள்கிறேன்
நான் ‘தமிழனென்று’.

                                                                        முனைவர் ஆ.மணவழகன்
                                                                        இணைப் பேராசிரியர்
                                                                        பொறுப்பாளர்
                                                                        பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
                                                                        உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
                                                                        தரமணி, சென்னை 600113.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் - Ancient Tamil's Art Gallery

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்




பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
‘பழந்தமிழரின் சிறப்புகளையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண் சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டும், படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்படும்’ என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். அதன்படி, பணிகள் நிறைவுற்று பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் 01.03.2016 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.



காட்சிப் பொருண்மைகள்

இக்காட்சிக் கூடத்தின் அரங்குகளில் பழந்தமிழரின் வாழ்வியல் சிறப்புகள், பண்பாட்டு விழுமியங்கள், அறிவு நுட்பங்கள், கலைக் கூறுகள், தொழில்நுட்பத் திறன்கள், அரசியல் மேலாண்மை போன்றவற்றை பொதுமக்களுக்கும் பள்ளி-கல்லூரி-ஆய்வு மாணவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் வெளிநாட்டினருக்கும் எடுத்துக்காட்டும் விதமாக ஓவியங்கள், நிழற்படங்கள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், தோல் கருவிகள், சுதை வடிவங்கள், புடைப்புச் சிற்பங்கள்  போன்றவை எழில்மிகு கலை நயத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காட்சிக்கூட அரங்குகள்
            தொல்காப்பியர் அரங்கு
            திருவள்ளுவர் அரங்கு
            கபிலர் அரங்கு
            ஔவையார் அரங்கு
            இளங்கோவடிகள் அரங்கு
            கம்பர் அரங்கு
            தமிழ்த்தாய் ஊடக அரங்கு

தொல்காப்பியர் அரங்கு




            தொல்காப்பியர் அரங்கில் தமிழரின் கலைநுட்பங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. எழில்மிகு கதவு, ஒரே சிற்பத்தின் இருபுறங்களிலும் ஆடலரசியான மாதவி மற்றும் துறவறம் பூண்ட மணிமேகலையின் தோற்றங்கள், எழில்மிகு வடிவமைப்பில் அன்னம், காளை, மரத்தூண்கள், கற்றூண்கள், கற்சங்கிலி, கல்லாலான வசந்த மண்டபம், யானை-காளை இணைந்த வடிவம்,  உலோகத்தாலான தமிழ்த்தாய், கபிலர், ஔவையார், தொல்காப்பியர் சிலைகள், மரத்தாலான நடராசர் சிற்பம் போன்றவையும் பழந்தமிழர் வாழ்வியலைப் படம்பிடிக்கும் பல்வேறு ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

திருவள்ளுவர் அரங்கு


          திருவள்ளுவர் அரங்கில், பழந்தமிழரின் உலோகவியல் நுட்பம், மருத்துவ நுட்பம், நெசவுத் தொழில்நுட்பம், போரியல் நுட்பம், நீர் மேலாண்மை, வேளாண் மேலாண்மை, மண்பாண்டத் தொழில்நுட்பம், பண்டைக்கால கல்விமுறை,  ஆகியற்றை எடுத்தியம்பும் ஓவியங்கள், மாதிரி வடிவங்கள், நிழற்படங்கள், கற்சிற்பங்கள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், பல்வேறு போர்க்கருவிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

கபிலர் அரங்கு

          கபிலர் அரங்கில், தமிழர் குடும்ப அமைப்பு முறை, பல்வேறு வகையான இல்லப் புழங்குபொருட்கள், ஐந்திணை வாழ்வியல் காட்சிகள், சுடுமண் சிற்பங்கள், இசைக் கருவிகள், தமிழர் அளவைகள், கற்சிற்பங்கள், இலக்கியப் பறவைகளின் வடிவங்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஔவையார் அரங்கு


          ஔவையார் அரங்கில், பண்டை அரசர்களின் அறம்-வீரம்-நீதிவழுவாமை-போர்முறை-கொடை போன்ற உயர் பண்புகளும், கோட்டை, அரண்மனை, கோயில்கள், பண்டைய நகரமைப்பு, கல்லணை போன்ற கட்டுமான நுட்பங்களும், மகளிர் வீரம், புறப்புண் நாணுதல், வஞ்சினம் மொழிதல், வடக்கிருத்தல் போன்ற பண்பாட்டுச் சிறப்புகளும் கலைநயத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இளங்கோவடிகள் அரங்கு

          இளங்கோவடிகள் அரங்கில், பண்டைத் தமிழரின் வெளிநாட்டு வணிகம், வணிக வீதி அமைப்பு, கப்பல் கட்டுமான நுட்பம் போன்றவற்றின் ஓவியங்களும் கலங்கரை விளக்கம், நெசவுக் கருவிகள், நாவாய் போன்ற மாதிரி வடிவங்களும் உலோகக் கருவிகள், வேளாண்மை நுட்பம், நீர் மேலாண்மை  போன்றவற்றின் நிழற்படங்களும் இடம்பெற்றுள்ளன.

கம்பர் அரங்கு

          கம்பர் அரங்கில் பல்வேறு வகையான இசைக்கருவிகள், தமிழகப் பழங்குடிகளின் அரிதான புழங்குபொருட்கள், பல்வேறு சடங்கியில் நிகழ்வுகளின் நிழற்படங்கள், பல்வேறுவகை நாட்டுப்புறக் கலைசார் பொருட்கள், தெருக்கூத்துக் கலைப் பொருட்கள், தமிழினத்தின் தொன்மை, அறிவு நுட்பம் போன்றவற்றை உணர்த்தும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் போன்றன இடம்பெற்றுள்ளன.

தமிழ்த்தாய் ஊடக அரங்கு

காட்சிக்கூடத்தில் சுமார் 2,300 சதுர அடியில், 56 இருக்கைகள் கொண்ட, நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய திரையரங்கு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் காட்சிக்கூடத்தைப் பார்வையிடுவதற்கு முன்பாக, பழந்தமிழர் வாழ்வியல், பழந்தமிழர் மருத்துவம், தமிழர் நீர்மேலாண்மை, ஆட்சித்திறன், பழந்தமிழர் போரியல் போன்ற குறும்படங்கள் இத்திரையரங்கில் திரையிட்டுக் காண்பிக்கப்படும்.

சிறப்புகள்

மரபு சிறப்புகளுடன் கூடிய அழகிய நுழைவாயிலுடன், காட்சிக்கூடக் கலைப்பொருள்களின் எழில்மிகு தோற்றத்தை எப்புறத்திலிருந்தும் முழுமையாகக் காணும் வகையிலான ஒளிமிகு மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. தேவையான பொருண்மைகள் முப்பரிமாணத் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இக்காட்சிக்கூடம், பழந்தமிழரின் வாழ்வியல் நுட்பங்களைப் பார்வையாளர்கள் கண்டு இன்புறும் வகையிலும், தமிழர் பெருமைகளை உலகோர் உணரும் வகையிலும், இலக்கிய மற்றும் தொல்லியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு வகையிலான கலைநுட்பத்துடன்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையம்
www.pvkk.org

தொடர்புக்கு:

முனைவர் ஆ.மணவழகன்
பொறுப்பாளர்
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை-600113.

வெள்ளி, 22 மார்ச், 2013

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்



தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் ஒலிக்கும் வகையில் தமிழுக்கென்று தனித்ததொரு நிறுவனம் பிரெஞ்சு அகாதெமி போன்று உருவாக்கப்படவேண்டும் என்ற வேணவா தமிழறிஞரிடையே கனன்று கொண்டிருந்தது. இவ்வுணர்வுக்கனல் 1968 இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது அன்றைய தமிழக முதல்வர் பேரறிஞர் சி.என். அண்ணாதுரையவர்கள் வழி கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. அக்கருத்தரங்கில், தக்கணக் கல்லூரி முதுகலை ஆராய்ச்சி நிறுவன (பூனே) இயக்குநர் டாக்டர். கத்ரே, இதற்கான முன் வரைவுத் திட்டத்தினை வழங்கினார். அதன்படி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்' தோன்றி செயல்படுவதற்கான உதவியை யுனெஸ்கோவிடம் தமிழறிஞர் நாடினர்.

                1970 சூலைத் திங்களில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு பாரிஸில் நடைபெற்றது. அம்மாநாட்டைத் தொடங்கி வைத்த, அன்று யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் பொறுப்பிலிருந்த டாக்டர் மால்கம் ஆதிசேஷையா அவர்கள், 1968 நவம்பரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவுவது பற்றி யுனெஸ்கோ நிறைவேற்றிய தீர்மானத்தை எடுத்துவைத்தார். அம்மாநாட்டில், "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கட்டமைப்புப் பற்றிய திட்டமும் அறிவிக்கப்பட்டது.  பதிவு பெற்ற ஒரு சங்கமாக நிறுவுவது பற்றியும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1970 அக்டோபர் 21ஆம் நாள் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பெற்றது. சென்னை, ஸ்டெர்லிங் ரோடு, "தமிழகம்' இல்லத்தில் தற்காலிகமாக இயங்கி, 1972 முதல் சென்னை, மைய பல்தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் உயிர்ப்புப் பெற்று நாளும் தமிழ் மணம் பரப்பிக் கொண்டுள்ளது.

நோக்கம்
       தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு அவரும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன இவ் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன.

                தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.


                உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோன்றிய பொழுது அது தாய் நிறுவனமான உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் (International Association of Tamil Research - IATR) அரவணைப்பில் அமைந்தது. முனைவர் மு.வரதராசனாரை மதிப்புறு இயக்குநராகவும், முனைவர் கா. மீனாட்சி சுந்தரனாரை முதன்மை ஆட்சி அலுவலராகவும் நியமனம் செய்த பின்பு தனித்து இயங்கத் தொடங்கியது. தமிழ்ப் பணியும் விதைக்கப்பட்டு முளைவிடத் தொடங்கியது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்று நாற்றிசையும் புகழ்மணம் பரப்பி வருகிறது.

நிருவாகம் - கல்விப் புலங்கள் - பேராசிரியர்கள்:

     இயக்குநர் (மு.கூ.பொ.)
            முனைவர் கோ.விசயராகவன் 
     
     சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
            முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர்
           முனைவர் கா.காமராஜ், முதுநிலை ஆராய்ச்சியாளர்
           முனைவர் வி.இரா.பவித்ரா, முதுநிலை ஆராய்ச்சியாளர்
 
     தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புலம்
           முனைவர் கோ.வியசயராகவன் (இ.பொ.)
            முனைவர் அ.சதீஷ், இணைப் பேராசிரியர்
           முனைவர் கோ.பன்னீர்செல்வம், முதுநிலை ஆராய்ச்சியாளர்
           முனைவர் சு.தாமரைப்பாண்டியன், முதுநிலை ஆராய்ச்சியாளர்

     தமிழ் மொழி (ம) மொழியியல் புலம்
           முனைவர் பெ.செல்வக்குமார், இணைப் பேராசிரியர்
           முனைவர் க.சுசீலா, முதுநிலை ஆராய்ச்சியாளர்
           முனைவர் நா.சுலோசனா, முதுநிலை ஆராய்ச்சியாளர்

     அயல்நாட்டுத் தமிழர் புலம்
             முனைவர் கு.சிதம்பரம், முதுநிலை ஆராய்ச்சியாளர்
            முனைவர் து.ஜானகி, முதுநிலை ஆராய்ச்சியாளர்

முகவரி: 


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
(International Institute of Tamil Studies)
இரண்டாம் முதன்மைச் சாலை
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
தரமணி, சென்னை - 600 113.
தொ.பே. 044 22542992
இ.தளம்: www.ulakaththamizh.org