ஞாயிறு, 3 ஏப்ரல், 2011
பழந்தமிழர் தொழில்நுட்பம் - ஆய்வு நூல்
சங்க இலக்கியத்தில் மேலாண்மை - ஆய்வு நூல் குறித்து
காலத்தின் அடிப்படையில் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல், தொழில்சார் மேலாண்மை(3), இருபதாம் நூற்றாண்டுப் படைப்புகள் குறித்த ஆய்வுகள்(5), அறிவியல் தமிழ் ஆய்வுகள்(1), இணைய தமிழ்(2) என்று நாளது வரையான தமிழ் இலக்கிய வளர்ச்சிப் படிநிலைகள், தமிழ் ஆய்வின் வளர்ச்சி ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் தலைப்புகள்இடம்பெற்றுள்ளன.
முதல் மூன்று கட்டுரைகள் சங்க இலக்கியங்கள், திருக்குறள், இரட்டைக் காப்பியங்கள் ஆகிய பழந்தமிழ் நூல்களைக் களங்களாகக் கொண்டமைந்துள்ளன. இக்கால கட்டுமானத் தொழில்நுட்பம், வேளாண் மேலாண்மை, நீர் மேலாண்மை ஆகியவற்றில் பயன்பாட்டில் இருக்கும் தொழில்நுட்பங்களுக்குப் பழந்தமிழர்தம் தொழில்நுட்பங்களே அடிப்படையாக இருக்கின்றன என்பதை இக்கட்டுரைகள் தக்க சான்றுகளோடு உலகிற்கு உணர்த்துகின்றன.
அறிவியல் தமிழ்த் துறையில் வெளிவந்துள்ள ஆய்வுகளின் ஆவணமாக ‘அறிவியல் தமிழ் ஆய்வுகள்’ கட்டுரை திகழ்கிறது. உலகத் தமிழரை ஒன்றிணைக்கும் இணையத் தமிழின் வளர்ச்சியை ‘இணையத் தமிழ் இலக்கியம்’, ‘இணையத்தமிழும் எதிர்காலவியலும்’ ஆகிய கட்டுரைகள் இயம்புகின்றன. இணையத்திலும் இணையற்று விளங்கும் தமிழின் ஆட்சியை இணைய தமிழ், தமிழ் இணைய பக்கங்கள், தமிழ் இணைய இதழ்கள், தனியார் பக்கங்கள்/வலைப்பூக்கள், வெளிப்பாட்டு உத்திமுறை, கணினி மொழிநடை ஆகிய தலைப்புகளின் விவரித்துள்ளதோடு, பயன்பாட்டு நிறைவு-நிறைவின்மை, அதில் உள்ள தடைகள் ஆகியவற்றையும் சுட்டி, தீர்வுகள் குறித்த சிந்தனைகளையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - ஆ. மணவழகன்
வெளியீடு - காவ்யா பதிப்பகம், சென்னை
ஆண்டு - 2007
மணவழகன் கவிதைகள் - 2
பாருங்க சார்
தெய்வப் புலவர் வள்ளுவர்
எழுதியது சார்
வாழ்க்கைக்குத் தேவையான
வழிகளைச் சொல்வது சார்
மூன்று பெரும்பகுப்புகள்
நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள்
ஆயிரத்து முந்நூற்று முப்பது
குறள்களைக் கொண்டது சார்
வெளியில் வாங்கினா
இருபத்தி ஐந்து ரூபா சார்
கம்பெனி விளம்பரத்துக்காக
வெறும் பத்து ரூபா சார்
------ ------- ------ ---- -----
தொடர்வண்டிச் சிறுவன்
மலிவு விலையில் விற்றுச் செல்கிறான்
திருக்குறளோடு வாழ்க்கையையும்
கழிவுநீர் ஊற்றுகள்
அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்
பறவைகள் அமர்ந்தறியா
செயற்கை மரங்கள்
முளைக்காத தானியங்கள்
விதை கொடுக்காத கனிகள்
உயிரில்லா முட்டைகள்
தாய் தந்தை உறவறியா
குளோனிங் குழந்தைகள்
ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும்
அறிவியல் வளர்ச்சிகள்
ஆடுகளை மலையில் விட்டு
அருகிருக்கும் கொல்லையில் கதிரொடித்து
பால் பருவக் கம்பைப் பக்குவமாய் நெருப்பிலிட்டு
கொங்கு ஊதித் தாத்தா கொடுத்த
இளங்கம்பின் சுவைக்கு
ஈடு இது என்று
எதைக் காட்டி ஒப்புமை சொல்வேன்
பச்சைக் கம்பு தின்றதே இல்லை
ஆதங்கப்பட்ட தோழிக்கு
புளிக்குழம்போடு
அரைத்த கேழ்வரகின்
ஆவிபறக்கும் உருண்டை
இளம் முருங்கைக்கீரைக் கூட்டோடு
இடித்துச் சமைத்த கம்பஞ் சோறு
நாட்டுப் புளிச்சை கடைசலோடு
புதுச் சோளச்சோற்றுக் கவளம்
இம்முறையேனும் கெங்கவல்லி சென்றதும்
ஆக்கித்தரச்சொல்லி
அம்மாவிடம் கேட்கவேண்டும்
ஊர் கிளம்ப ஒருவாரம் முன்பே
நாக்கு நங்கூரம் போடும்
ஏளனப் பார்வைக்கு இலக்காகும்
உயிர்க்கொல்லிப் பொடிகளால் உருவான
மசாலா குழம்பும்
உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்ட
கடையரிசிச் சோறும்
புள்ளைங்க வந்தா மட்டுந்தான்
நல்ல சோறு சாப்பிட முடியுது
அப்பா சான்றிதழ் தருவார் , ஊரில்
எனக்காகச் சமைக்கப்பட்ட
கடை அரிசிச் சோற்றுக்கும்
உயிர்க்கொல்லி பொடிகளால் உருவான
அதே மசாலா குழம்புக்கும்
இரைப்பையைத் தொடாமலேயே செரிக்கும்
தொண்டைக்குழியில் உருட்டி வைத்த
என் களி கம்பஞ்சோற்று ஆசை
வெள்ளி, 1 ஏப்ரல், 2011
மணவழகன் கவிதைகள் - 1
புலிகளைக் காட்டி
மனிதர்களை
வேட்டையாடினார்கள்
காந்தியைப் பெற்றவர்களும்
புத்தரை ஏற்றவர்களும்
முள்ளிவாய்க்கால்
கரையும் காற்றும் சொல்லும்
அவர்கள்
வீரத்தையும் தியாகத்தையும்
அண்ணா நினைவிடமும்
அருகிருக்கும் கடலும் சொல்லும்
எங்கள்
துரோகத்தையும்
கையாலாகாத தனத்தையும்
பிரபாகரன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு
ஒருமுறை பூக்கும்
அபூர்வ மலர் நீ
இரு நூற்றாண்டின்
ஈடு இணையில்லா
ஒற்றை அதிசயம் நீ
இராஜராஜன், செங்குட்டுவன்
நெடுஞ்செழியன் ஒட்டுமொத்த
உருவம் நீ
எதிரிக்கு அடங்கிப்போகாது
என்றும் அணைந்துபோகாது
உலகத் தமிழனின் உயிர் மூச்சு நீ
உலகுக்குப் புதிரானவன்
உறவுக்குக் கதிரானவன்
தமிழின் கொடை நீ
தமிழனின் படை நீ
கரையான்களாலும் கருணாக்களாலும்
அரிக்க முடியா விருட்சம் நீ
வீரம் செறிந்த விதை நீ
கடல்நீரைக் கால்வாய்
குடித்துவிடாது
வருவாய்
தமிழின் அகம் நீ
அகத்தில் புறம் நீ
செவ்வாய், 29 மார்ச், 2011
பழந்தமிழக மகளிர் தொழில்முனைவோர்
வேளாண் உற்பத்தி மற்றும் வேளாண் வணிகத்தில் மகளிர்
உணவு உற்பத்தி
பயிர்ப்பாதுகாப்பு
உணவுத் தேட்டம்
உணவுப் பரவலாக்கம்
கடல் சார் தொழில் முனைவோர்
மீன் பிடித்தலும் விற்றலும்
நாண்கொள்நுண் கோலின் மீன்கொள் பாண்மகள்
என்று காட்டுகிறது அகநானூறு.
உணங்கல் மீன் உற்பத்தி
என்பதிலும்,
இனப்புள் ஒப்பும் (நற்.45:6-7)
என்பதிலும் அறியலாம்.
உப்பு வணிகம்
என்பதிலும்,
என்பதிலும் காணலாம்.
உடை உற்பத்தியில் மகளிர்
என்ற பாடலடிகள் காட்டுகின்றன.
உடை - பராமரிப்புத் தொழில்
கால்நடை வளர்ப்பு
என்கிறது பெரும்பாணாற்றுப்படை.
கள் உற்பத்தி மற்றும் வணிகம்
பிற சிறுதொழில் முனைவோர்
சான்றுகளின் முடிவாக
தமிழில் ஆராய்ச்சி
மனிதன் தன் தேவைகளைத் தானே நிறைவு செய்துகொள்ள முனையும் முதல் கணத்திலேயே அவனுடைய ஆராய்ச்சி அறிவும் செயல்படத் தொடங்கிவிடுகிறது. உலகின் மிகத் தொன்மையான இனத்துள் ஒன்றாகச் சுட்டப்படும் தமிழினத்திற்கும் இது பொருந்தும். அவ்வகையில், தமிழர் மொழியும், உலகின் மிகப் பழமையான மொழிகளுள் இடையறுத லின்றி வாழும் ஒரே மொழியுமான தமிழ் மொழியில் காணக்கிடைக்கும் பண்டை நூல்களுள் ஆராய்ச்சிகளும் அவற்றிற்கான கூறுகளும் நிறைந்துள்ளன. அவற்றை இன்றும் வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
12ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநடை இலக்கியங்களில் பழந்தமிழரின் பல்வேறு அறிவுநுட்பங்கள் உரையாசிரியர்களால் ஆங்காங்கே எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.. ஓலைச் சுவடிகளாகக் கிடைத்த பழந்தமிழ் நூல்கள் பதிப்புகளாக பெருமளவு அச்சேறிய 19,20ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர், அவை தொடர்பான ஆய்வுகளும், கருத்தரங்குகளும்,சொற்பொழிவுகளும் பல்வேறு தரப்பினரால்முனைப்புடன் நிகழ்த்தப்பட்டு. நூல்களாக வெளியிடப்பட்டன. மேலும், தமிழில் ஆராய்ச்சி என்பது காலந்தோறும் பல்வேறு கோணங்களிலும் வளர்ச்சிபெற்று வந்துள்ளமையைக் காணமுடிகிறது. அவ்வகையில், 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைத் தமிழாய்வுகளுக்கான ‘மறுமலர்ச்சி காலம்’ எனலாம். இக் காலகட்டத்தில் தமிழில் புதிய புதிய துறைகளும், அத்துறைகள் தொடர்பான ஆய்வுகளும் பெருமளவு தோன்றி பல்வேறு பரிமாணங்களோடு வளர்ந்து வருகின்றன. தமிழில் இன்றளவும் வெளிவந்து கொண்டிருக்கும் ஆய்வுகள் மொழிக்கும், அறிவுக்கும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளன.
தமிழ் ஆய்வுக் களங்கள்
இலக்கியம், இலக்கணம் என்ற தொடக்க நிலை ஆய்வுகளிலிருந்து, 20-21ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் ‘ஆய்வுக்களம்’ பல நிலைகளிலும் மாறுபட்ட, புதிய போக்குகளைக் கொண்டு விளங்குகிறது.
மொழி, பண்பாடு, மொழியியல், ஒப்பிலக்கியம், திறனாய்வு, மரபுவழி கலைகள், தமிழிசை, தொல்லியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டு மானுடவியல், படைப்பிலக்கியம், நாணயவியல், அரசியல், சமூக வரலாறு, சமயத் தமிழ், எழுத்து முறைகள், அகராதியியல், மெய்யியல், கல்வெட்டியல், சுவடியியல், சோதிடவியல், நாடகவியல், ஊடகவியல், மொழிபெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம், எதிர்காலவியல், வானியல், புவியமைப்பியல், உடலியல், உயிரியல், நீரியல், மரபுசார் வேளாண் அறிவியல், மண்ணறிவியல், கட்டுமானக் கலை, தமிழ் மருத்துவம், தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், விளிம்புநிலை மக்கள் இலக்கியம், மண்சார்ந்த இலக்கியம், மொழிக்கல்வி, மரபுவழி அறிவியல், மொழிசார் இயக்கங்கள், சூழலியல், நுண்கலைகள், ஆவணத் தமிழ், அறிவியல் தமிழ், மேலாண்மை, தொலைநோக்கு, கணினித் தமிழ் போன்ற பல தளங்களில் தமிழ் ஆராய்ச்சி தன் போக்கைப் பலகிளைகளாக விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, இவற்றுள் பல களங்களில் தமிழ் படித்த ஆய்வாளர்கள் மட்டுமன்றி, தமிழறிந்த பிறதுறை வல்லுநர்களும் தங்கள் பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக வளர்ச்சியுற்றுவரும் இப்போக்கு, தமிழ்மொழியில் பிறதுறை ஆக்கங்களும், ஆய்வுகளும் மிகுதியாக வெளிவரவும் வளரவும் வழிவகை செய்துள்ளது. இவற்றுள்ளும், ‘அறிவியல் தமிழ்’ புதிய ஆய்வாளர்களுக்கும், பிறதுறை வல்லுநர்களுக்கும் பெரிதும் இடமளிக்கும் ‘தமிழ் ஆய்வுக்’ களமாக முகிழ்ந்துள்ளது. ‘அறிவியல் தமிழ்’ பல துறைகளோடு தொடர்புடையதாலும், தமிழின் எதிர்கால நலனில் பெரும் பங்காற்றவல்லதாலும் அதன் தன்மையும் தேவையும் குறித்து இங்குத் தனியே நோக்கப்படுகிறது.
அறிவியல் தமிழ்
அறிவியல் தமிழ் என்பது, அறிவியல் துறை சார்ந்த கருத்துகளை அறிவியல் மொழியில் விளக்கும் இயற்றமிழ் வகை என்பர் (வளரும் தமிழ், ப.162). மேலும் இதனை, பல துறைகளில் அறிவைப் பெற விழையும் தமிழரின் அறிவுப் பசியைத் தணிக்க எழுந்த பலதுறை நூல்களுள் அமைகின்ற ஒரு வழக்கை அறிவியல் தமிழ் எனலாம் (வளரும் தமிழ், ப.163) என்றும் விளக்குவர். தமிழில் உள்ள அறிவியல் கருத்துகளை வெளிக்கொணர்தல் அறிவியல் தமிழில் ஒருவகை செயலாக்கம் என்றாலும், அறிவியல், தொழில்நுட்பங்களைத் தமிழில் படைத்தளித்தலே ‘அறிவியல் தமிழாக’ சுட்டப்படுகிறது. இங்கு, மொழிக்கு இரண்டாம் இடமும், அறிவியலுக்கு முதன்மை இடமும் வழங்கப்படுகிறது.
தாய்மொழியும் அறிவியல் மொழியும்
அறிவியலின் வளர்ச்சி என்பதும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு என்பதும் தோன்றும் இடங்களால் வேறுபடலாம். ஆனால், அவற்றின் பயன் உலக பொதுநோக்கை முன்னிறுத்துவது. அறிவியலை ஆணிவேராகக் கொண்டு இயங்கும் இன்றைய உலகச் சூழலில், அறிவியலின் பயனையும், தொழில்நுட்பத்தின் திறனையும் ஒருவர் எளிதில் பெற, அவரின் தாய் மொழியில் அவை வழங்கப்படுதல் வேண்டும்.
உலகமயமாக்கலின் இன்றைய சூழலில், மக்கள்வளமும், நுகர்வோரும் நிறைந்த இந்தியா போன்ற நாடுகள் வெற்றுச் சந்தைகளாக மாறிவரும் இன்றைய நிலையில், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவை அவரவர் தாய்மொழியில் கைக்கொள்ளுதல் அறிவியல் யுகத்தில் நம்மையும் இணைத்துக்கொள்ள ஏதுவாகிறது. மேலும், அறிவியல், தொழில்நுட்பம் பற்றிய மாயையை உடைப்பதாகவும், சராசரி மனிதனுக்கும் தொழில்நுட்பத்திற்குமான இடைவெளியைக் குறைப்பதாகவும் இது அமைகிறது. இக்கருத்தை, ‘உலகின் பல்வேறு பாகங்களிலும் அந்தந்த நாட்டுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. இந்தப் புதுமைகளை, மக்கள் அறிந்து, புரிந்து தன் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். அதுவே அறிவியல் வளர்ச்சியின் உண்மையான பயன் ஆகும்’ (இந்திய அறிவியல் தொழில்நுட்பம், ப.233) என்ற அறிஞர் கூற்று உறுதிப்படுத்துகிறது.
மேலும், ‘புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான செயல்விளக்கமும், பயன்பாடும் மக்களைச் சென்றடைய மொழி ஓர் ஊடகமாகப் பயன்படுகிறது. இவ்வூடகம் ஒருவரின் தாய்மொழியாக இருக்கும் நிலையில் கருத்துப் பரிமாற்றம் மேலும் சிறப்பானதாகவும், தெளிவானதாவும், எளிமையானதாகவும் அமையும் என்பது திண்ணம்’ (வளரும் தமிழ், பதிப்புரை) என்றும் சுட்டப்படுகிறது. இக்கருத்து, தாய்மொழி வழி அறிவியல் வளர்ச்சியின் தேவையை வலியுறுத்துகிறது. அதேவேளை, அறிவியல் என்பது தமிழுக்குப் புதிய துறை அன்று. நம் முன்னோர்கள் மருத்துவம், மனையியல், வானவியல், கணிதம், சோதிடவியல், உலோகவியல், பொறியியல், உயிரியல் போன்ற பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்ததும் அவற்றைத் தம் இலக்கியங்களில் பதிவு செய்துவைத்திருப்பதும் இங்குச் சுட்டத்தக்கது.
அறிவியல் கலைச்சொற்கள்
அறிவியல் தமிழாக்கத்தில் ‘கலைச்சொல்லாக்கம்’ முக்கியப் பங்கினை வகிக்கிறது. குறிப்பிட்ட துறையிலுள்ள கருத்துகளுக்கான பொருளை விளக்கப் பயன்படும் சொல்லையே கலைச்சொல் என்று குறிப்பிடுகிறோம். ‘சாதாரண வழக்கில் உள்ள சொற்களே அறிவியலில் சிறப்புப் பொருளைத் தரும்பொழுது கலைச் சொல்லாகிறது’ (அறிவியல் தமிழ், டி.பத்மனாபன், ப.2). மொழிபெயர்ப்பு, மொழியாக்கம், ஒலிபெயர்ப்பு என்ற மூன்று நிலைகளில் அமையும் கலைச்சொல்லாக்கத்தின் அடிப்படையிலேயே அறிவியல் தமிழாக்கத்தின் பயன் வெளிக்கொணரப்படுகிறது. கருத்துகளை வரையறையோடும் துல்லியமாகவும் வெளியிடத் துணைபுரிபவை அந்தந்தத் துறைசார்ந்த கலைச்சொற்களே. அவ்வகைக் கலைச்சொற்களை உருவாக்கும் பணிகள் அரசு நிறுவனங்களாலும் (தமிழ் வளர்ச்சித் துறையின் ‘கலைச்சொற் அகராதி’ போன்றவை), பல துறைகளைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்களாலும் (மணவை முஸ்தபாவின் ‘கணினி கலைச்சொல் அகராதி’ போன்றவை) தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அறிவியல் தமிழாக்கம்
அறிவியல் தமிழாக்கம் என்பதில், அறிவியல் தமிழில் கட்டுரைகளும் நூல்களும் வெறும் மொழிபெயர்ப்புகளாக வெளிவந்துகொண்டிருந்த நிலை மாறி, தமிழிலேயே அறிவியல் படைப்புகளை உருவாக்கும் பரவலான நிலையை இன்று காணமுடிகிறது. ‘தமிழில் அறிவியல் எழுதுவோரைக் காட்டிலும், அறிவியல் பற்றி எழுதுவோரும், பேசுவோரும் பெருகிவிட்டனர். அதனாலேயே இத்தருணத்தில் தமிழகத்தின் பல்துறை அறிவியல், பொறியியல் பேராசிரியர்கள் தம்தம் துறைசார் அறிவியல் ஆய்வுகளைத் தமிழில் வழங்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது’ (அறிவியலும் இலக்கியமும், சில மதிப்பீடுகள், ப.24) என்ற இன்றைய நிலை இங்குச் சுட்டத்தக்கது. அரசின் உந்துதல் என்பதைவிட தனிமனித முயற்சிகள் இப்பணியில் பெரும்பங்கு வகிக்கின்றன.
அறிவியல் தமிழ் வளர்க்கும் இதழ்கள் மற்றும் அமைப்புகள்
முதல் அறிவியல் இதழ் 1831ஆம் ஆண்டு வெளிவந்த ‘தமிழ்மேகசின்’ என்ற தமிழ்மாத இதழாகும். இது தமிழில் அறிவியல் கருத்துகளை வெளியிட முடியும் என்ற நம்பிக்கை வலுப்பெற உதவியது. 1933இல் தொடங்கப்பட்ட ‘தமிழ்க்கடல்’ என்ற இதழ் தன் நோக்கத்தைக் கீழ்க்கண்டவாறு வெளியிட்டது. இவ்விதழ், ‘பூமிசாஸ்திரம், வானசாஸ்திரம், தாவரசாஸ்திரம், ரஸாயனசாஸ்திரம், பௌதீகசாஸ்திரம் முதலியவற்றை மக்களுக்குச் சொல்லும்’ என்று குறிப்பிட்டது. அறிவியல் தமிழை முதன்மை நோக்கமாகக் கொண்ட இதழாக இது அறியப்படுகிறது. தற்போது, சுற்றுச்சூழல், கலைக்கதிர், யுனஸ்கோ கூரியர், அமுதசுரபி, செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்க்கலை, தமிழ்ப்பொழில், கலைமகள், தாமரை, மஞ்சரி போன்ற இதழ்கள் பொதுப் பொருண்மையில் அறிவியல் தமிழிற்கு வாய்ப்பளித்து வளர்த்து வருகின்றன. இவையல்லாமல், இளம் விஞ்ஞானி, மருத்துவமலர், சித்த மருத்துவம், மருத்துவர், கால்நடைக் கதிர், வளரும் வேளாண்மை, நவீன வேளாண்மை, நிலவளம், மூலிகை மணி, ஆரோக்கியம், தமிழ்க் கம்யூட்டர் போன்ற இதழ்கள் அறிவியல் துறைகளைத் தனித்தனியாகக் கொண்டுள்ளன.
இதேபோல, ‘களஞ்சியம்’ இதழ் அண்ணாபல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் மூலமும், ‘துளி’ இதழ், தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் தமிழ்த்துறை மூலமும், ‘அறிவியல் பலகணி’ (மொழி அறிவியல் ஆய்வேடு) இதழ், தொல் அறிவியல் துறை மூலமும் வெளிவந்து அறிவியல் தமிழ்ப்பணி ஆற்றுகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மையமாகக்கொண்டு இயங்கும், ‘அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம்’ என்ற அமைப்பு அறிவியல் தமிழ் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிவருதல் குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பு, 1988 முதல் தொடர்ச்சியாக அறிவியல் தமிழ்க் கருத்தரங்குகளை நடத்தி, அவற்றை நூல்களாக வெளியிட்டு வருகிறது. மேலும் இவ்வமைப்பு, ‘பொறியியல் தொழில்நுட்பம்’(1993), ‘மருத்துவ அறிவியல் வளர்ச்சி’(1994), ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’(1995), ‘தகவல் தொடர்பியல்’ (1999), ‘வேளாண் அறிவியல் வளர்ச்சி’(2000), ‘கல்வி நுட்பவியல்’ (2001), ‘உயிர் தொழில் நுட்பவியல்’ (2002), ‘இணையத் தமிழ்’ (2003) ஆகிய சிறப்பு பொருண்மைகளில் கருத்தரங்குகளை நடத்தி நூலாக வெளியிட்டுள்ளது சுட்டத்தக்கது.
இவையல்லாமல், தமிழ் இணையப் பக்கங்கள் பலவும் அறிவியல் தமிழ் வளர்ச்சியில் ஆர்வம்காட்டி வருகின்றன. மருத்துவம், பல்துறை அறிவியல் போன்றவற்றிற்கும், கணினித் தொழில்நுட்பம், புதிய மென்பொருள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடு, தமிழ் எழுத்துருக்கள் பயன்பாடு மற்றும் எழுத்துரு மாற்றிகள் போன்றவற்றிற்கென்றும் எண்ணற்ற இணையப் பக்கங்கள் உள்ளன. இவை தமிழின் ஆராய்ச்சி வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிவதாய் அமைகின்றன. இணையத்தில் காணப்படும் ‘மின் நூலக’ பணிகளும் (நூலகம்.காம், சென்னை லைப்ரரி.காம் போன்றவை), நூல்கள் சேமிப்புத் திட்டப்பணிகளும்(மதுரை திட்டப்பணிபோன்றவை)உலகெங்கிலுமுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர் களுக்குப் பெரிதும் பயனுள்ளவையாக உள்ளன.
பயன் நூல்கள்
அறிவியல் தமிழ், டி.பத்மநாமன். க.மணி, கலைக்கதிர், கோயம்புத்தூர், 2000.
அறிவியல் தமிழ் ஊடகங்கள், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சை, 2004.
அறிவியல் தமிழ் வளர்ச்சி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சை, 1999.
அறிவியல் தொழில்நுட்ப வரலாறு, ஜே.தர்மராஜ், டென்சி பதிப்பகம், 1998.
அறிவியலும் இலக்கியமும்-சில மதிப்பீடுகள், நெல்லை சு.முத்து, சேகர் பதிப்பகம், சென்னை, 2003.
இந்திய அறிவியல் தொழில்நுட்பம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சை, 1998.
சங்க இலக்கியத்தில் மேலாண்மை, ஆ.மணவழகன், காவ்யா பதிப்பகம், சென்னை, 2007.
பல்துறைத் தமிழ், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சை, 2003.
பழந்தமிழர் தொழில்நுட்பம், ஆ.மணவழகன், அய்யனார் பதிப்பகம், சென்னை, 2010.
பிறதுறைத் தமிழியல், ஞாலத்தமிழ் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, 2004.
வளரும் தமிழ், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சை, 2003.
கூடாகும் சுள்ளிகள் கவிதைத் தொகுப்பு - நூல் மதிப்புரை
புதன், 16 பிப்ரவரி, 2011
கவிஞர் ஆ மணவழகனின் கூடாகும் சுள்ளிகள் குறித்து - கவிஞர் இரா. பச்சியப்பன்
கூடாகும் சுள்ளிகள் கவிஞர் ஆ.மணவழகன் |
கண்காணாத தூரத்தில் பிழைக்கும்படியான நெடுங்காலம் கடந்த பின்பொழுதொன்றில், பால்ய நண்பனோ ஊர்க்காரனோ எதிர்ப்படும்பொழுது மனசின் அடியாழத்திலிருந்து அப்படியேன் அலையெழும்புகிறது? கரங்கள் பற்றும் தருணத்தில் துளிர்க்கும் கண்ணீரைச் சட்டென்று ஒதுக்கிவிட முடிகிறதா என்ன? தனக்குப் பிடித்தமான ஒன்றை எதிர்பாராத கணத்தில் காண நேர்கிறபோது அவ்வளவு எளிதில் முகம் திருப்பிக்கொள்ள இயலுமா என்ன?
சென்னைக்கு வந்த புதிதில் மாநிலக்கல்லூரியின் பின்புறத்தில் வௌவால்கள் நிறைந்த அந்த ஆலமரத்தை அடிக்கடி போய் ஆச்சர்யம் மீதுற பார்த்திருக்கிறேன். ஊரில் இலுப்பைத் தோப்பில் அப்படித்தான் வௌவால்கள் கொத்துக்கொத்தாய்க் கனிந்திருக்கும். மூங்கில் புதர் வேலியாய் அமைந்த அந்தத் தோப்பில் கங்கையம்மன் அகண்ட கண்களோடு வௌவால்கள் பறப்பதை, விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். வௌவால்களின் முகம் அசப்பில் குழந்தையின் முகம்போலவே தோன்றும். நெடுங்காலத்திற்குப் பிறகு சென்னையில் நுணா மரத்தைப் பார்க்கிறபோதும் அப்படித்தான் நிற்கத் தோன்றியது. கம்மம்பூக்களின் வாடையும், நுணாப் பூக்களின் வாசனையும் தொலைத்த வாழ்வில் எங்காவது அவை தட்டுப்பட்டால் வேறென்னதான் செய்வது?
கவிதைகூட அப்படித்தான் போல. மெல்லிய இசையாய் நமக்குள் தங்கிவிட்ட ஒரு பொழுதை, காலம் ஆற்றிய பெரும் தழும்பை, மழைக்காலத்தில் பழகிய நீச்சலை, நேருக்கு நேர் நின்று ஊழ் துப்பிய எச்சிலை என ஏதேனும் ஒன்றை ஒவ்வொரு கவிதையும் சொல்லிக்கொண்டே இருக்கிறது. கவிதை பறவைகள் போல. அவை நம்மைப் பொருட்படுத்துவதேயில்லை. அதன் அலகில் இருக்கும் சுள்ளிகளோ, இரையோ நம்மிடமிருந்து யாசித்துப் பெறாதவை. நமக்குப் போல இல்லை. அதற்கென்று எல்லையற்ற வானமும் சிறுகிளையும் வாய்த்திருக்கிறது. பறவைகள்போல கவிதை செய்கிறவர்கள் பாக்கிவான்கள். நள்ளிரவொன்றில் குழல்விளக்கு வெளிச்சத்தில் நண்பர் மணவழகன் கவிதைகளை வாசிக்கிறபோது பறவைகளும் வௌவால்களும் நிறைந்த தோப்பில் நுழைவதுபோலவே உணர்ந்தேன். சருகு மூடிய குளமும் நாவல் மரத்தின் கிளையொன்றிலிருந்து சட்டெனப் பாய்ந்து மீனைக் கொத்தியபடி மறுபடி கிளையமர்ந்து தலைசிலிர்ப்பும் மீன்கொத்தியும், பெரிய மூக்கு விடைக்கும்படி நோக்கும் கங்கையம்மனும் நெடுநாளைக்குப் பிறகு சந்தித்த ஆச்சர்யம்தான்.
சிறியதும் பெரியதுமான சற்றேரக்குறைய எழுபது கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் பணிபுரிந்த தொடக்க காலத்திலிருந்து என்னுடன் அவர் மனமுவந்து பழகிவந்திருக்கிறார். சங்க இலக்கியங்களை வாசித்திருக்கிற, ஆய்ந்திருக்கிற அவரின் ஆழம் நம்மை தூரவே நிறுத்திவைத்து வியக்க வைக்கும். இடையில் முளைக்கும் சிறுபுதரை அழித்து, எழுப்பி வைத்திருக்கிற தயக்க வேலியினை மிதித்துவந்து அவரின் நட்பு வட்டத்தில் நம்மை இணைத்துக் கொண்டதற்கு அவருக்குள் இருக்கிற படைப்பாளி ஒரு பெரும் காரணமாக இருந்திருக்கலாம். இணையத்தில் வெகுகாலமாய்க் கவிதைகள் எழுதிவந்திருக்கிறார். இணையத்தில் அவரின் வாசகர் வட்டம் மிகப்பெரிது.
இளம் ஆய்வாளருக்கான செம்மொழி விருதினைப் பெற்றிருக்கும் ஒருவருக்குள் இன்னும் அந்தக் கம்மங்கொல்லை குருவிகள் பறக்க, காற்றிலாடும் கொல்லை வனப்பு கூடியிருப்பது மிகுந்த ஆச்சர்யம்தான். தனியார் கல்லூரியின் வேலைப்பளுக் கிடையில் இத்தனை சாத்தியங்களைக் கொண்டிருப்பது சாதாரணமானதல்ல.
இந்தத் தொகுப்பினை வசதிக்காக மூன்று வகையாகப் பகுத்துக்கொள்ளலாம். உருகி உருகிக் காதலிக்கும் நெஞ்சத்தின் உணர்வுகள்; இழப்பின் காயத்தின்வழி கசியும் துளிகள்; தனக்கான அரசியலை முழங்கும் பதாகைகள் எனப் பெரும்பான்மையான கவிதைகளை ‘உத்தி’ பிரித்துக்கொள்ளலாம். நெற்கட்டை
அரி அரியாக வைப்பதில் ஓர் அழகு மட்டுமல்ல ஓர் அவசியமும் இருக்கிறது. ஒரே பக்கம் கதிர்வைத்துக் கட்டுக் கட்டமுடியாது. சின்னச்சின்ன கட்டாக்கி கட்டுப்போர் போடுவது ஒருவகை. பென்னைப் பென்னையாய் வைக்கோல் சுமைகட்டி வைக்கோல் போர் போடுவது ஒருவகை. முன்னதில் தனித்தனியாக எடுக்கவேண்டிய அவசியம் இருப்பதுபோலவே பின்னதில் பின்னிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. கவிதையைச் சொல்லியிருக்கிற உத்தியும் அதாவது, கட்டியிருக்கிற பாங்கும் அதனை வரிசைக்கிரமாய்த் தொடுத்திருக்கிற பாங்கும் மிக நுட்பமானது.
சாக்கடை நாற்றத்தோடு கழிவுநீர் ஊற்றுகள்
அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்
பறவைகள் அமர்ந்தறியா செயற்கை மரங்கள்
முளைக்காத தானியங்கள்
விதை கொடுக்காத கனிகள்
உயிரில்லா முட்டைகள்
தாய் தந்தை உறவறியா
குளோனிங் குழந்தைகள்
எனச் சொல்லுகிற ஒரு ஒழுங்குமுறை. மனதுக்குள் இசை அலையைச் சீராக எழுப்பி கரையில் வந்து அடிப்பதுபோல் கடைசியில் மனிதக் கொடூரத்தின் முகத்தை எழுதுகிற எழுத்து லாவகம் அடுத்து இப்படிச் செல்கிறது...
ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும்
அறிவியல் வளர்ச்சிகள்
ஆடுகளை மலையில் விட்டு
அருகிருக்கும் கொல்லையில் கதிரொடித்து
பால் பருவக் கம்பைப் பக்குவமாய் நெருப்பிலிட்டு
கொங்கு ஊதி தாத்தா கொடுத்த
இளங்கம்பின் சுவைக்கு
ஈடு இது என்று
எதைக்காட்டி ஒப்புமை சொல்வேன்
பச்சைக் கம்பு தின்றதே இல்லை
ஆதங்கப்பட்ட தோழிக்கு
பல மைல் வெயில் கடந்து வந்தவனுக்குச் சட்டென்று ஒரு புங்கை நிழல் கிடைப்பதுமாதிரி, கொடுமை வாழ்வை அடுக்கிச் சொல்லிவிட்டு ஒரு கம்மங்கதிரில் இழந்த வாழ்வின் ருசியைச் சொல்லியிருக்கிற நேர்த்தி சாதாரணமானதல்ல. இங்கே வருகிற ஆடுமேய்த்தலும், கம்மங்கதிரைச் சுட்டுத்திண்ணலும் அதைமட்டுமேயா உணர்த்தி நிற்கின்றன? பறவை அமர்ந்தறியா செயற்கை மரங்களெனச் சொல்லுகிறபோது மரங்களை மட்டுமா சுட்டுகிறது? வரிசையாய்க் கடக்கும் நமது நாட்கள் கூட மரங்கள்தானே. நமது நாட்களில் ஒரு கணம் பறவை அமர்வதுபோன்ற அனுபவம் நேர்ந்ததுண்டா? நமது மரங்கள் எதற்காகவோ வானுயர்ந்து நிற்கின்றன. அதுதரும் நிழல் ஒன்றுதானா வேரோடி நிற்பதற்கான காரணம். இதே போன்றதொரு இழப்பின் வலி சொல்லும் மற்றொரு அற்புதமான கவிதை ‘இக்கரைக்கு அக்கரை’. ‘வீடு சுமந்து அலைபவன்’ கவிதை தமிழர்களின் அவல வாழ்வினையும் சேர்த்தே சொல்லுகிற கவிதை.
இருந்தது இல்லாமல் போகும்போதும்
இருப்பு இடம்மாறிப் போகும்போதும்தான்
உரைக்கிறது
ஏதிலிகளின் வலி
தன்னனுபவத்தில் சிறகு விரித்து பெரும் ஜனசமூகத்தின் நெடுங்காலத் துயர வரலாற்றோடு கைகோர்த்து நிற்கிறது இக்கவிதை.
இத்தொகுப்பு காதல் கவிதைகளால் மேலும் அழகாகிவிடுகிறது. காலகாலமாய் ஓடும் ஜீவநதியின் அடிமடியில் உருண்டு விளையாடும் கூழாங் கற்களின் மினுமினுப்பில் இருக்கிறது நீரின் காதல். ‘உதிர்ந்த சிறகு’ என்ற கவிதையில் இப்படி வருகிறது:
பெரும் பயணத்திலும் பேருந்து ஓட்டத்திலும்
கண்ணில்படும் பலகையின் பெயரைக்
கண்டு மனம் பதைபதைக்கும் - அவள்
வாழ்க்கைப் பட்டது இவ்வூரோ?...
ஓடுகிற ஓட்டத்தில் கண்ணில் அடிக்கும் முள்ளாய் அந்த ஊர்ப்பெயர். தூலம் உளுத்து ஒருபக்கமாய்ச் சாய்ந்த கூரை ஒழுகி ஓதமேறிக்கிடக்கும் மண்சுவராய் மனம். மழைக்காலத்தின் நள்ளிரவொன்றில் குடும்பமே அலறுவதுபோல ஏதோ ஒரு பொழுதில் அந்த ஊர்வழியே கடக்கிறபோது நினைவுகளின் அலறலை என்ன செய்துவிட முடியும். ஒரு கவிதை எழுதுவது தவிர.
எந்திரமாய்க் கை குலுக்கி
என்றும் போல்
புன்னகைத்துப் பிரிந்த
அந்தக் கடைசி நிமிடம்...
இப்படி நிறைய இடங்களைச் சொல்லலாம். காதல் கவிதை எழுதும்போது எந்தச் சவாலும் எழுந்து நிற்கவில்லை. சண்டையில் தோற்றுப்போனவனின் தூங்காத இரவுகள் போலவே அவஸ்தைப்படுத்துகிற வார்த்தைகளால் நெய்யப்பட்டிருக்கின்றன.
அரசியல் கவிதைகள் வனைதலில் தமிழர்களின் குருதியே முதன்மையாகிறது. இழந்த மண்ணிலிருந்து சிந்திய ரத்தம் கொண்டு ஆத்திரங்கொண்டு எழுத்தைச் சுற்றி வெறிகொண்ட கைகள் விரல் நுணுக்கத்தில் எழும்பி வந்தவை அவை. முடிகிற இடத்தில் சரியாக அறுத்து மாலை வெயிலில் காயவைத்துத் தட்டித்தட்டி சூளையிலிட்டதை மனம் தட்டிப்பார்க்க திசைகள் அதிர்கின்றன. ‘பொய்த்தேவு’ கவிதையில் வெளிப்படையாகவே தனது அரசியலைச் சொல்கிறார் கவிஞர். அதற்கான வரலாற்று நியாயங்களையும் வாசகனுக்குத் தெளிவுபடுத்துகிறார். பத்துக் கோடிக்கும் மேலாக வாழ்கிற ஓர் இனம் தமது ஒரு பகுதி மக்கள் துடிக்கத்துடிக்கச் சாகிறபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே எதனால்? காஷ்மீரிகளைப் போல தனித்த தேசிய இறைமை கொண்ட இனமாக, கவிஞர் சொல்லில் சொன்னால் நான் தமிழன் என்கிற ஒரு தெளிவு இல்லாததுதானே காரணம். இந்த இனம் நினைத்திருந்தால் ஓர் அரசியல் நிர்ப்பந்தத்தை உருவாக்கிப் பேரழிவிலிருந்து காப்பாற்றி இருக்காதா என்ன?
‘மே 2009’ கவிதை மிக நுட்பமாக இந்த அரசியலைப் பேசுகிறது. கையாலாகாதனத்தின் முன்பு நமது எல்லாப் பெருமிதங்களும் பல்லிளித்துக்கொண்டு நிற்பதை இக்கவிதை எடுத்துக்காட்டுகிறது. ‘பிரபாகரன்’ கவிதை நம்பிக்கைப் புள்ளியிலிருந்து எழுந்ததாக இருக்கிறது.
இது மிளகாய்த் தோட்டத்தில் முதல் ‘வெப்பு’ போல. உள்ளே நுழைந்து பழமெடுக்கும்போது பூவும் பிஞ்சும் உதிராமல் நடக்கப் பழகும் நளினம் வேண்டும். நாற்று நட்டதிலிருந்து பார்த்தால் முதல் வெப்பு நெடுங்காலம் கடந்ததாய்த் தோன்றும். ஆனால் அவை நேர்த்தியானவை. பழுதில்லாதவை. அடுத்த ‘வெப்பு’ மிக விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த தொகுப்பை இதைவிட நேர்த்தியாகக் கொண்டுவருவார் என்பதற்கு இத்தொகுப்பு ஓர் உதாரணம். ஏனெனில் தமிழ் வாழ்வு என்ற வற்றாத கிணறு இவர் மனசில் உண்டு.
மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் ஆந்தைகளும் வௌவால்களுமெனப் பறவைக்காடாய் இருந்த அந்த இலுப்பைத் தோப்பை விழுங்க சுற்றியிருந்தவர்களுக்குப் பேராசை வந்தது. வெங்கோடை இரவுப் பொழுதொன்றில் மூங்கில் புதர் தீப்பற்றியதாய்ப் பேச்செழுந்தது. கொள்ளிவாய் பிசாசின் வேலையென்று வேடிக்கை பார்த்தனர். குஞ்சுகள் கருகும் நிணவாடையும் புகையும் ஊரைச் சூழ, இலுப்பைத் தோப்பின் பெருமைமிகு வரலாற்றைத் திண்ணைதோறும் வாய்வலிக்கப் பேசினர். பறவைகளின் அலறல் ஓய்ந்த மாலையொன்றில் எரிந்த விறகுகளை ஆளாளுக்குச் சுமந்துவந்தனர். வரப்புகள் எல்லை மாறின. பஞ்சாயத்தின் தீர்மானங்கள் மாறின. கங்காதேவி மொசைக் பதித்த சிறு கோயிலில் பளபளக்க அருள் பாலிக்கிறாள். கங்கா நகர் என்று அறிவிப்புப் பலகையொன்று வழிகாட்டுகிறது. வௌவால்களையும் குருவிகளையும் இலுப்பை மரங்களையும் மனதில் சுமந்து பித்தேறித் திரிபவர்கள் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சடைமுடி குலுங்க மந்திரம் ஜெபிக்க ரத்தப் பலியிட்டு நிணச்சோறிறைத்து ஏவிய இந்த ரத்தக்கவிதைக் காட்டேறி பழிவாங்க மாட்டாளா? செய்வாள்.
கூடாகும் சுள்ளிகள்
(கவிதைத் தொகுப்பு)
கவிஞர் ஆ. மணவழகன்
(tamilmano77@gmail.com)
அய்யனார் பதிப்பகம்
32, இராமகிருஷ்ணாபுரம்
2வது தெரு,
ஆதம்பாக்கம், சென்னை-88
விலை ரூ.50
கவிஞர் ஆ மணவழகனின் கூடாகும் சுள்ளிகள் கவிதைத் தொகுப்பு
தமிழினம் போற்றும் தமிழ்மனம்
ஒரு மனிதன் படைப்பாளியாகப் பரிமாணம் கொள்ளும் தருணம் உன்னதமானது. ஏனெனில், படைப்பாளியாக இருப்பதென்பது சமூக மனிதனாக இருப்பதாகும். இன்றைய சமூகம் என்னவாக இருக்கிறது என்பது கண்கூடு.
கண்முன் நடக்கும் எத்தகைய அநியாயம் குறித்தும் கவலைப்படவோ கவனங்கொள்ளவோ அவன் தயாராக இல்லை. விலங்குகளைப் போலவே புசித்து, புணர்ந்து, இனப்பெருக்கம் செய்து சந்ததியை வளர்ப்பதோடும் வளப்படுத்துவதோடும் அவன் கடமை முடிந்துவிடுவதாகக் கற்பிக்கப்படுகின்றான். ஆனால், உண்மையான படைப்பாளியால் அப்படி வாழ முடியாது. சமூகம் குறித்த அக்கறை உள்ளவனாக, சமூகத்தை மேம்படுத்தும்/மாற்றும் பேரவா உள்ளவனாகவே அவனால் தொழிற்பட முடியும். அப்படித் தொழிற்படுபவனே உண்மையான சமூகப் படைப்பாளியாவான். அத்தகைய ஒரு படைப்பாளியாக- கவிஞராகப் பரிமாணம் கொண்டிருக்கிறார் ஆய்வாளர் முனைவர் ஆ.மணவழகன். தமிழின் செழுமையான சங்க இலக்கியத்தில் திளைத்தூறி, ஆய்ந்து, ஆய்வாளராக நிலைபெற்று, கவிதைத்துறைக்கு வந்திருக்கிறார் என்றாலும், கவிதை இவருக்குப் புதியதல்ல. இணையதள வாசகர்களுக்குக் கவிதைவழி நன்கு அறிமுகமானவர் இவர்.
எதை எழுதவேண்டும் என்பதிலாகட்டும், எதை எழுதக்கூடாது என்பதிலாகட்டும் ஒவ்வொருவருக்கும் ஓர் அரசியல் உண்டு. அப்படி அரசியல் இருப்பதொன்றும் தேசத் துரோகமல்ல; இல்லாமல் இருப்பதுதான் தேசத் துரோகம். மணவழகன் என்கிற மனிதனின், தமிழ்ப் பேராசிரியனின், கவிஞனின் மனம் எத்தகையது எனும் கேள்விக்கு அவரது கவிதைகளின்வழி ஒரு வரியில் பதில் சொல்லவேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்; ‘தமிழினம் போற்றும் தமிழ்மனம்’. இந்தக் கவிதைத் தொகுதியைப் படித்து முடிக்கையில் இதை உணரமுடிகிறது. அகம் சார்ந்த கவிதைகளானாலும் சரி, புறம் சார்ந்த கவிதைகளானாலும் சரி இந்தத் தமிழ் மனத்தையே வெளிப்படுத்துகின்றன.
தமிழினம் குறித்துப் பெருமைப்பட இனியொன்றுமில்லை. துரோகங்களாலும் வஞ்சகங்களாலும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனம் குறித்துப் பெருமைப்பட என்ன இருக்கிறது? தனிமனிதர்களும் தன்னலவாதிகளாகவும் இரட்டை வேடதாரிகளாகவும் இருக்கின்றனர். அதற்கு இலக்கியம் என்ன செய்யும்? பெரிய புரட்சியை உண்டாக்குமோ உண்டாக்காதோ தெரியாது. ஆனால், ஒன்றைச் செய்யும். தனிமனிதர்களின் ‘சிரித்தாளும் சூழ்ச்சி’யையும், அரசியல் வேடதாரிகளின் நாடகங்களையும் அம்பலப்படுத்தும். மனிதர்களை ஓரளவிற்கேனும் மேம்படுத்தும். மேலாக, எழுதப்பட்ட இனத்தை அடையாளப்படுத்தும். வீழ்த்தப்பட்டவர்களின் வீரத் தியாகத்தையும் வீழ்த்தியவர்களின் வஞ்சகத் துரோகத்தையும் வரலாறாகப் பதிவு செய்யும். அத்தகைய பதிவுகள் இந்தக் கவிதைத் தொகுதியில் நிறைய காணக்கிடைக்கின்றன.
இத்தொகுப்பிலுள்ள ‘தமிழ் அடையாளம்’ சார்ந்த கவிதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ‘இந்தியத் தமிழனாக’ உணரும் தமிழகத் தமிழனை, ‘தமிழனாக’ உணர்வுபெற வைக்க இக்கவிதைகள் பயன்படக்கூடும். ‘திராவிடன்’, ‘இந்தியன்’ என்பதெல்லாம் ஏமாற்றுவேலை என்பதனை ஆதாரத்துடன் வெளிப்படுத்துகிறார்.
‘கன்னடம்
தண்ணீர் தரட்டும்
நானும் திராவிடன்
இந்தியா
ஈழம் அமைத்துத் தரட்டும்
நானும் இந்தியன்
கானல்நீர் தாகம் தீர்க்காது
விட்டுவிடு
நான் தமிழன்’
உண்மைதானே! ஆஸ்திரேலியாவில் ஓர் இந்தி மாணவன் தாக்கப்பட்டால் ‘இந்திய மாணவர்’ தாக்கப்பட்டார் என்று குரல் கொடுக்கிறார்கள், எழுதுகிறார்கள். பாகிஸ்தான் எல்லையில் சுட்டுக்கொல்லப்படும் சிங் சிப்பாய் ‘இந்திய சிப்பாய்’ ஆகிறார். ஆனால், இராமேஸ்வர மீனவர்கள் மட்டும் ‘தமிழக மீனவர்கள்’ ஆகிறார்கள். வெளிநாட்டில் வாழும் ‘சிங்’குகளின் ‘மயிர்’ பிரச்சினைக்காக (தாடி வைத்துக்கொள்ளுதல், தலைப்பாகை அணிதல்) குரல் கொடுக்கும் இந்தியப் பிரதமர் தமிழனின் உயிர் பிரச்சினைகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. எல்லா கோவமும் சேர்ந்தால்தானே கவிதை.
நடையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எளிமையும் நவீனமும் இவரது கவிதைகளின் தனித்துவ நடையாக இருக்கின்றது. ‘.... தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை’ என்ற ‘கவிமணி’யின் நடைக் கொள்கையைப் பின்பற்றி எழுதியிருக்கிறார். காதல் கவிதைகளைத் தவிர்த்த பிற கவிதைகளையே கவிஞரை அடையாளப்படுத்தும் கவிதைகளாகக் கொள்ளலாம். சொல்முறையிலும் காதல் கவிதைகளுக்கென்று ஒரு பாணியும், அறிவுறுத்தும் கவிதைகளுக்கென்று ஒரு பாணியும் நவீனத்தன்மை கொண்ட கவிதைகளுக்கென்று ஒரு பாணியும் இயல்பாகவே அதனதன் தன்மைக்கேற்ற நடையில் அமைந்திருக்கின்றன.
தமிழ்க் கவிதை மரபில் குழந்தை பற்றிய சித்திரிப்புகள் முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. தம்மக்களின் எச்செயலும் இன்பம் பயக்கக் கூடியதே. ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் / சிறுகை அளாவிய கூழ்’ என்கிறார் திருவள்ளுவர். குழந்தைகள் பற்றிய கவிதைகளைப் படிக்கும்போது நம் மனம் பறக்கத் தொடங்கிவிடுகிறது. குழந்தைகளின் குதூகலம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ‘பெருமாள் திருமொழி’யில் குலசேகர ஆழ்வார் குழந்தைக் காட்சிகளை மிக அழகாகத் தீட்டியிருப்பார். மனத்தைக் கிளர்த்தும் குழந்தைமைச் செயல்களை ‘படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்’(புறம்.188) என்ற சங்கப் பாடலில் பாண்டியன் அறிவுடைநம்பி வியக்கிறார். பருகப் பருக வற்றாத அமிழ்தம் குழந்தைமை இன்பம் என்பதை இன்றும் வெளிவந்த வண்ணமிருக்கும் கவிதைகள் மெய்ப்பிக்கின்றன. கவிஞர் எழுதுகிறார்,
‘உருக வைக்கும் / பனிக்கட்டி
என் மடியில் / எழில்மதி’
அறிவுடைநம்பியின் பாட்டைப் பிழிந்து வடிகட்டிக் கொடுத்திருப்பதைப்போல் அத்தனை ‘சில்லென்று’ இருக்கிறது இக்கவிதை. குழந்தைகளின் கிறுக்கல்களை நவீன ஓவியங்களாக இரசித்திருக்கிறோம். ஆனால், கசக்கி எறிந்த காகிதத்தையே கவிதையாகப் பார்க்கும் மனம் எழில்மதியின் அப்பாவிற்கு வாய்த்திருக்கிறது.
சோழனின் பிறந்தநாளுக்காக நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. எல்லோரும் இன்புற்றிருக்கும் இத்தருணத்தில் அரண்மனை அலங்காரத்தின் போது கூடிழந்த சிலந்திக்காக ‘சிலம்பி தன் கூடிழந்த வாறு’ என்று வருந்துகிறான் முத்தொள்ளாயிரப் புலவன். இவர் கவிதையிலும் முத்தொள்ளாயிரக் கவிஞனின் தாக்கம் வெளிப்படுகிறது.
‘ஐயோ! / துடைத்து விடாதே
ஒட்டடை அல்ல
வீடு! / சுவரில் சிலந்தி’
இப்படியாக, சங்கக் கவிஞன், முத்தொள்ளாயிரக் கவிஞனின் நீட்சியாகவும் மண்சார்ந்த கவிஞர்களின் தொடர்ச்சியாகவும் திகழ்கிறார், கவிஞர் ஆ.மணவழகன்.
பெருநெல்லியின் சுவையும், மலைக் கள்ளிமடையானின் தித்திப்பும் இவர் கவிதைகளில் உண்டு. புளிக்குழம்பு, ஆவிபறக்கும் கேழ்வரகின் உருண்டை, இளம் முருங்கைக்கீரைக் கூட்டு, புதுச்சோளச் சோற்றுக் கவளம், களிகம்பஞ்சோறு ஆகியவற்றின் மீதான ஏக்கம் கலந்த ஆசை இவரது கவிதைகளில் மணக்கின்றது.
எழுத்து என்பது வெறும் எழுத்தாக மட்டுமே இருப்பதில்லை. அது, படிப்பவரின் சிந்தனையைக் கட்டமைக்கிறது. அச்சிந்தனை வாழ்க்கையை வழிநடத்துகிறது. சமயங்களில் அதனால் உணர்வுக்கும் நடப்புக்கும் இடையே ஊசலாட்டம் ஏற்படுகின்றது. இந்த மனப் போராட்டத்தை வெளிப்படுத்துகிறது ‘நன்றாமோ தீது’ கவிதை. ‘வீடு சுமந்து அலைபவன்’, ‘வாழ்க்கை வணிகன்’, ‘கனவு சுமந்த கூடு’, ‘எம்மையும் மன்னியும்’, ‘யார் நீ’, ‘மே 2009’, ‘புதுமனை புகுவிழா’, ‘பொய்த்தேவு’, ‘பிறர்தர வாரா’ போன்ற பல கவிதைகள் குறிப்பிடத்தகுந்த கவிதைகளாகும்.
அரசியல் கவிதைகளில் தோழனாக, கிராமியக் கவிதைகளில் மண்ணின் மைந்தனாக, நன்னெறி வலியுறுத்தும் கவிதைகளில் ஆசிரியனாக, பிற உயிர்க்காக வருந்தும் கவிதைகளில் ஜீவகாருண்யவாதியாக, காதல்-குழந்தை-நட்பு-அலுவலகம் சார்ந்த கவிதைகளில் சக மனிதனாகப் புலப்படுகிறார் கவிஞர். தூக்கணாங்குருவிக் கூட்டைப் பற்றி யாரேனும் இப்படி வியந்திருப்பார்களா தெரியவில்லை.
‘ஆயிரம் தாஜ்மகால் / அதிசயம்
ஒற்றைச் சித்தனின் / உயிர்த்தவம்’
உண்மைதானே!
‘உள்ளம் செதுக்கும் உளிகள்’ கல்லூரிப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட வேண்டிய கவிதை.
‘ஒழுக்கம் படி! / எதிர் நிற்போர்
உணர்வைப் படி!’
‘ஏழ்மை கீழ்மையல்ல
உண்மை / நாகரிகம் படி!’
இப்படியான சமூக ஒழுங்கமைப்புக்கான பாடங்களைப் படிக்க வலியுறுத்துகிறார். இது, மாணவர்களுக்கான கவிதை மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கான கவிதையும்கூட.
இவரது கவிதைகளில், ஆட்சியாளர்களின் மக்கள் விரோதப் போக்கைப் பற்றிய விமர்சனக் கவிதைகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. அரசியல்வாதிகள், திரைத்துறையினர், பெருந்தொழிலதிபர்கள் போன்றோர் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாவிட்டாலும் அது ‘வாராக்கடன்’. ஆனால், ஒரு விவசாயியால் கடனைத் திருப்பிக்கட்ட இயலாமல்போனால் அவரது வீடு ‘ஜப்தி’ செய்யப்படும். இதுதான் இந்தியா!. ‘புதுமனை புகுவிழா’ கவிதை இந்த அவலத்தை, அநியாயத்தை வெளிப்படுத்துகின்றது.
‘பிறர்தர வாரா’ கவிதையில், குடிகாரர்களையும், போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களையும் அழகான அனுபவக் கவிதையின் ஊடாக எச்சரிக்கின்றார் கவிஞர். மக்களின், குறிப்பாக இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்யும் அரசாங்கத்தின் செயல்திட்டத்திலிருந்து விடுபடும் வழி மக்களிடமே உள்ளதை உணர்த்துகிறார். ஒப்புசாண் மலைமீது பீடி பற்றவைத்தது போன்ற கிராமத்து ‘திருவிளையாடல்’ முதல், 320, மூன்றாவது மாடியில், ‘குழந்தை மாதிரி சார்/ஒன்னுமே பண்ணாது’ என்று ‘இராணுவ ரம்மை/ சோடாவில் கலந்து’ குடித்த நகரத்துத் திருவிளையாடல்கள் வரை அத்தனையும் பட்டியலிட்டு, அவற்றில் ஒரு ’....ம்’ இல்லை என்று வாக்குமூலம் கொடுத்து (சில நண்பர்களையும் காட்டிக் கொடுத்து) ‘விட முடியலை’ என்பவர்களைப் பின்வருமாறு எச்சரிக்கின்றார்.
‘உன் மனைவி / விதவையாவது பற்றி
உன் குடும்பம் / நடுத்தெருவில் நிற்பது பற்றி
எந்த அரசுக்கும் / இங்குக் கவலையில்லை’
உண்மைதானே! எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. எத்தனை கோடி ‘கல்லா’ கட்டுகிறது என்பதுதான் அவர்களுக்கு முக்கியம். பாமர மக்கள் மட்டுமல்ல, ஊருக்கே அறிவுரை சொல்லும் அக்ரகாரத்து ஐயரின் மகன்கூடக் குடித்துவிட்டுச் சாக்கடையில் விழுந்துகிடக்கும் அளவுக்கு நம் செம்மொழித் தமிழ்த்திருநாட்டில் ‘மது’ ஜனநாயகப் படுத்தப்பட்டு இருக்கிறது.
இத்தொகுதியில் பேசுவதற்குரிய கவிதைகள் இன்னும் நிறைய உள்ளன. பிரதியில் பயணிக்கையில் நீங்களே அதை உணர்வீர்கள். தமிழ்க் கவிதை மரபை அறிந்தவர் கவிதைத் துறைக்கு வந்து சேர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. நல்ல கவிதை நடையும் சீரிய சமூகச் சிந்தனையும் இவருக்கு ஒருங்கே வாய்த்திருக்கின்றன. இவர் தொடர்ந்து சிரத்தையுடன் செயல்பட்டு நிலையானதொரு இடத்தைக் கவிதையிலும் பெறவேண்டும் என்பதே எம்போன்றோரின் அவாவாகும்.
கூடாகும் சுள்ளிகள் (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் - கவிஞர் ஆ. மணவழகன்
(tamilmano77@gmail.com)
அய்யனார் பதிப்பகம்
32, இராமகிருஷ்ணாபுரம்
2வது தெரு,
ஆதம்பாக்கம், சென்னை-88
விலை ரூ.50
புதன், 30 ஜூன், 2010
செம்மொழி மாநாடு : யானைப் பசிக்குச் சோளப்பொறி
மாநாட்டின் முத்தாய்ப்பாய் அமைந்தது கலைஞர் தலைமையில் நிகழ்ந்த ‘எங்கும் தமிழ்’ என்ற தலைப்பிலான சிறப்பு விவாதம். இதில், தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்குகொண்டு தமிழின் இன்றைய நிலை குறித்தும் தமிழை வளர்க்க செய்யவேண்டுவன குறித்தும் கருத்துரைகளை வழங்கினர். நிகழ்வின் முடிவாய் பேசிய கலைஞர் அவர்கள், மாநாட்டு நிறைவு விழாவில் தமிழின் வளர்ச்சிக்கு ‘பட்ஜெட்’ போல பல தீர்மானங்களை நிறைவேற்ற இருக்கிறேன், நிறைய பேச இருக்கிறேன்’ என்று கூறியது அனைவரின் எதிர்ப்பார்பையும், கவனத்தையும் நிறைவுவிழாவை நோக்கித் திருப்பியது.
ஜூன் 23இல் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட செம்மொழி மாநாடு, ஜூன் 27 அன்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களின் தலைமையிலும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் முன்னிலையிலும் நிறைவு விழாவினைக் கண்டது.
பல எதிர்ப்புகளுக்கு இடையில் நடைபெற்ற மாநாடு என்பதாலும் பட்ஜெட் போல பல தீர்மானங்களை அறிவிக்க இருக்கிறேன் என்ற முதல்வரின் உறுதிமொழியாலும் மாநாட்டுத் தீர்மானத்தை எதிர்நோக்கி உலகத்தமிழர்களின் உள்ளங்கள் காத்திருந்தன. முதல்வரும் தாம் கூறியதுபோலவே நிறைவுவிழாவில் தீர்மானங்கள் சிலவற்றை மத்திய அமைச்சர்களின் முன்னிலையில் வாசித்தார்.
1. ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் அமைக்கப்படும்
2. இலங்கை தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண்பதற்கு ஏற்ப முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்திட வேண்டும்
3. தமிழ் மொழியை மத்திய ஆட்சிமொழியாக்க வேண்டும்
4. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாடு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
5. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு வழங்கப்படும் மத்திய அரசின் நிதி உதவியைப் போன்று தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் வழங்கப்படவேண்டும்.
6. இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைத்திட வேண்டும்.
7. கடல்கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்திடல் வேண்டும்.
8. தமிழகத்தில் ஆட்சிமொழியாக, நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும். அதற்கு அலுவலர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
9. தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட உரிய சட்டம் இயற்றப்படும்.
10. சிறந்த தமிழ் மென்பொருள் ஒன்றுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படும்.
11. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வி ஆண்டு முதல் இடம்பெற ஆவண செய்யப்படும்
12. ‘தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கம்’ மதுரையில் தொடங்கப்படும். (இச்சங்கம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தொடர்ந்து நடத்துவதோடு, பல தமிழ்ப்பணிகளையும் செய்யும்)
13. தமிழ் வளர்ச்சிக்கென்றே தனியாக தமிழக அரசின் சார்பில் நூறு கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும்.
போன்ற தமிழ் மொழி, தமிழ் மரபு தொடர்பான அறிவிப்புகளும் மாநாட்டின் நினைவாக கோவைக்கான சிறப்பு நிதிநிலை அறிக்கையும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
தமிழ்ப் பாதுகாப்பு, வளர்ச்சி தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், இவை ‘யானை பசிக்குச் சோளப்பொறி’ என்ற அளவிலேயே அமைந்திருந்ததை உணர முடிகிறது. அவ்வகையில் மாநாட்டுத் தீர்மானங்கள் சில ஏமாற்றங்களை நம்முன் வைக்கின்றன.
1. தமிழ் மாநாட்டுச் செலவிற்காக ஒதுக்கிய தொகை 300 கோடிக்கு மேல். ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படவிருக்கிற தொகையோ வெறும் 100 கோடி மட்டுந்தானா?
2. இதற்கு முன்பு நடைபெற்ற மாநாடுகள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றவற்றைத் தமிழ்கூறு நல்லுலகிற்குத் தந்தன. இம்மாநாடு அப்படி ஒன்றை உருவாக்க வில்லையே! மேலும், மதுரையில் அமைய இருக்கும் தமிழ்ச் சங்கம் கூட, உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரிலிருந்து விலகி ‘செம்மொழி மாநாடு’ என்ற பெயரோடு நடைபெற்ற இம்மாநாடு தொடர்ந்து நடைபெற வேண்டும், அதுவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தில் உள்ள மேலைநாட்டு உறுப்பினர்களின் தயவு இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதைத்தானே முதன்மை நோக்காக கொண்டிருக்கிறது!
3. முந்தைய உலகத் தமிழ் மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இடிந்துவிழும் நிலையிலும், ஆராய்ச்சியாளர்கள் இன்மையால் இழுத்து மூடும் நிலையிலும் இருப்பதை பல ஊடகங்களும் சுட்டிக்காட்டியும், நிறுவனத்தை மேம்படுத்த யாதொரு சிறப்புத் திட்டமும் மாநாட்டில் முன்மொழியப்படவில்லையே!
4. தமிழ் வழியில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற தீர்மானம் வரவேற்கத்தக்க முக்கியான ஒன்று. ஆனால், தமிழையே பாடமாக படித்தோர்க்கு?
5. மாநாட்டில், தமிழை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது அச்சு ஊடகமா? சின்னத் திரையா? வெள்ளித்திரையா? என்ற பட்டிமன்றம் நடைபெற்றது. ஆனால், அதன் தொடர்ச்சியாக இந்த மூன்று ஊடகங்களிலும் நடைபெறும் தமிழ்க் கொலையை, தமிழ்ப் பண்பாட்டுக் கொலைகள் போன்றவற்றைத் தடுப்பதற்கும், தமிழை வளர்க்கும், தமிழ்ப் மரபிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களுக்கு ஊக்கப் படுத்துவதற்கும் தீர்மானம் ஏதும் இல்லையே!
6. செம்மொழி உயராய்வு நிறுவனத்திற்கு ஜார்ஜ் கோட்டையை வழங்கியிருப்பது பாராட்டிற்குரியது. அதே வேளையில் அந்நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளர்கள் என்று எவரும் இல்லாதிருப்பது வருத்தத்திற்குரியது. அதைப்பற்றிய அறிவிப்பும் தீர்மானமாக இடம்பெற்றிருக்கலாமே!
7. முனைவர் அனந்த கிருஷ்ணன் இணையத் தமிழை வளர்க்க 70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தாரே? அதைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லையே.
8. பன்னாட்டுத் தமிழர்கள் குறிப்பாக மொரீசியல், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து தமிழ் அந்நியப்பட்டுக்கொண்டே போகிறதே! அவர்களிடம் தமிழார்வத்தை ஊட்ட, அவர்களின் வாரிசுகளுக்குத் தமிழ் கற்பிக்க, தமிழ் உள்ளடக்கங்கள் அவர்களை எளிதில் எட்டச் செய்ய இம்மாநாடு என்ன வழி சொல்கிறது?
இன்னும் இன்னும் எத்தனையோ விடைதெரியா கேள்விகள்.. ஐயங்கள்.. விடை மட்டும் ஈழத் தமிழரின் விடுதலையைப் போல.... எது எப்படியோ, தமிழ் வளர்ச்சிக்கென்று ஒதுக்கவிருக்கும் நூறு கோடி ரூபாயையாவது சிறந்த திட்டமிடலோடு, தமிழை வளர்க்க, தமிழ் மரபுகளைக் காக்க, பண்பாட்டுக் கலைப் பெட்டகங்களைப் பேண முறையாக செலவிட்டால் குறைந்தபட்ச பலனையாவது எதிர்பார்க்கலாம்.
- அய்யனார் சாமி