சனி, 19 செப்டம்பர், 2015

கவிஞர் ஆ.மணவழகனின் கூடாகும் சுள்ளிகள் கவிதைத் தொகுப்பு


நூல்              - கூடாகும் சுள்ளிகள்  (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்        - கவிஞர் ஆ. மணவழகன் (Dr.A.Manavazhahan)
வெளியீடு      - அய்யனார் பதிப்பகம், சென்னை-88. 2010


மணவழகன் கவிதைகள் குறித்து

கூட்டின் அடிவயிற்றில் மெத்தென்ற சிறு பஞ்சு மீது...


கவிஞர் இரா.பச்சியப்பன்

கண்காணாத தூரத்தில் பிழைக்கும்படியான நெடுங்காலம் கடந்த பின்பொழுதொன்றில், பால்ய நண்பனோ ஊர்க்காரனோ எதிர்ப்படும்பொழுது மனசின் அடியாழத்திலிருந்து அப்படியேன் அலையெழும்புகிறது? கரங்கள் பற்றும் தருணத்தில் துளிர்க்கும் கண்ணீரைச் சட்டென்று ஒதுக்கிவிட முடிகிறதா என்ன? தனக்குப் பிடித்தமான ஒன்றை எதிர்பாராத கணத்தில் காண நேர்கிறபோது அவ்வளவு எளிதில் முகம் திருப்பிக்கொள்ள இயலுமா என்ன?

சென்னைக்கு வந்த புதிதில் மாநிலக்கல்லூரியின் பின்புறத்தில் வௌவால்கள் நிறைந்த அந்த ஆலமரத்தை அடிக்கடி போய் ஆச்சர்யம் மீதுற பார்த்திருக்கிறேன். ஊரில் இலுப்பைத் தோப்பில் அப்படித்தான் வௌவால்கள் கொத்துக்கொத்தாய்க் கனிந்திருக்கும். மூங்கில் புதர் வேலியாய் அமைந்த அந்தத் தோப்பில் கங்கையம்மன் அகண்ட கண்களோடு வௌவால்கள் பறப்பதை, விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். வௌவால்களின் முகம் அசப்பில் குழந்தையின் முகம்போலவே தோன்றும். நெடுங்காலத்திற்குப் பிறகு சென்னையில் நுணா மரத்தைப் பார்க்கிறபோதும் அப்படித்தான் நிற்கத் தோன்றியது. கம்மம்பூக்களின் வாடையும், நுணாப் பூக்களின் வாசனையும் தொலைத்த வாழ்வில் எங்காவது அவை தட்டுப்பட்டால் வேறென்னதான் செய்வது?

கவிதைகூட அப்படித்தான் போல. மெல்லிய இசையாய் நமக்குள் தங்கிவிட்ட ஒரு பொழுதை, காலம் ஆற்றிய பெரும் தழும்பை, மழைக்காலத்தில் பழகிய நீச்சலை, நேருக்கு நேர் நின்று ஊழ் துப்பிய எச்சிலை என ஏதேனும் ஒன்றை ஒவ்வொரு கவிதையும் சொல்லிக்கொண்டே இருக்கிறது. கவிதை பறவைகள் போல. அவை நம்மைப் பொருட்படுத்துவதேயில்லை. அதன் அலகில் இருக்கும் சுள்ளிகளோ, இரையோ நம்மிடமிருந்து யாசித்துப் பெறாதவை. நமக்குப் போல இல்லை. அதற்கென்று எல்லையற்ற வானமும் சிறுகிளையும் வாய்த்திருக்கிறது. பறவைகள்போல கவிதை செய்கிறவர்கள் பாக்கிவான்கள். நள்ளிரவொன்றில் குழல்விளக்கு வெளிச்சத்தில் நண்பர் மணவழகன் கவிதைகளை வாசிக்கிறபோது பறவைகளும் வௌவால்களும் நிறைந்த தோப்பில் நுழைவதுபோலவே உணர்ந்தேன். சருகு மூடிய குளமும் நாவல் மரத்தின் கிளையொன்றிலிருந்து சட்டெனப் பாய்ந்து மீனைக் கொத்தியபடி மறுபடி கிளையமர்ந்து தலைசிலிர்ப்பும் மீன்கொத்தியும், பெரிய மூக்கு விடைக்கும்படி நோக்கும் கங்கையம்மனும் நெடுநாளைக்குப் பிறகு சந்தித்த ஆச்சர்யம்தான்.

சிறியதும் பெரியதுமான சற்றேரக்குறைய எழுபது கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் பணிபுரிந்த தொடக்க காலத்திலிருந்து என்னுடன் அவர் மனமுவந்து பழகிவந்திருக்கிறார். சங்க இலக்கியங்களை வாசித்திருக்கிற, ஆய்ந்திருக்கிற அவரின் ஆழம் நம்மை தூரவே நிறுத்திவைத்து வியக்க வைக்கும். இடையில் முளைக்கும் சிறுபுதரை அழித்து, எழுப்பி வைத்திருக்கிற தயக்க வேலியினை மிதித்துவந்து அவரின் நட்பு வட்டத்தில் நம்மை இணைத்துக் கொண்டதற்கு அவருக்குள் இருக்கிற படைப்பாளி ஒரு பெரும் காரணமாக இருந்திருக்கலாம். இணையத்தில் வெகுகாலமாய்க் கவிதைகள் எழுதிவந்திருக்கிறார். இணையத்தில் அவரின் வாசகர் வட்டம் மிகப்பெரிது.

இளம் ஆய்வாளருக்கான செம்மொழி விருதினைப் பெற்றிருக்கும் ஒருவருக்குள் இன்னும் அந்தக் கம்மங்கொல்லை குருவிகள் பறக்க, காற்றிலாடும் கொல்லை வனப்பு கூடியிருப்பது மிகுந்த ஆச்சர்யம்தான். தனியார் கல்லூரியின் வேலைப்பளுக் கிடையில் இத்தனை சாத்தியங்களைக் கொண்டிருப்பது சாதாரணமானதல்ல.
இந்தத் தொகுப்பினை வசதிக்காக மூன்று வகையாகப் பகுத்துக்கொள்ளலாம். உருகி உருகிக் காதலிக்கும் நெஞ்சத்தின் உணர்வுகள்; இழப்பின் காயத்தின்வழி கசியும் துளிகள்; தனக்கான அரசியலை முழங்கும் பதாகைகள் எனப் பெரும்பான்மையான கவிதைகளை உத்திபிரித்துக்கொள்ளலாம். நெற்கட்டை

அரி அரியாக வைப்பதில் ஓர் அழகு மட்டுமல்ல ஓர் அவசியமும் இருக்கிறது. ஒரே பக்கம் கதிர்வைத்துக் கட்டுக் கட்டமுடியாது. சின்னச்சின்ன கட்டாக்கி கட்டுப்போர் போடுவது ஒருவகை. பென்னைப் பென்னையாய் வைக்கோல் சுமைகட்டி வைக்கோல் போர் போடுவது ஒருவகை. முன்னதில் தனித்தனியாக எடுக்கவேண்டிய அவசியம் இருப்பதுபோலவே பின்னதில் பின்னிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. கவிதையைச் சொல்லியிருக்கிற உத்தியும் அதாவது, கட்டியிருக்கிற பாங்கும் அதனை வரிசைக்கிரமாய்த் தொடுத்திருக்கிற பாங்கும் மிக நுட்பமானது.

சாக்கடை நாற்றத்தோடு கழிவுநீர் ஊற்றுகள்
அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்
பறவைகள் அமர்ந்தறியா செயற்கை மரங்கள்
முளைக்காத தானியங்கள்
விதை கொடுக்காத கனிகள்
உயிரில்லா முட்டைகள்
தாய் தந்தை உறவறியா
குளோனிங் குழந்தைகள்
எனச் சொல்லுகிற ஒரு ஒழுங்குமுறை. மனதுக்குள் இசை அலையைச் சீராக எழுப்பி கரையில் வந்து அடிப்பதுபோல் கடைசியில் மனிதக் கொடூரத்தின் முகத்தை எழுதுகிற எழுத்து லாவகம் அடுத்து இப்படிச் செல்கிறது...

                      ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும்
அறிவியல் வளர்ச்சிகள்
ஆடுகளை மலையில் விட்டு
அருகிருக்கும் கொல்லையில் கதிரொடித்து
பால் பருவக் கம்பைப் பக்குவமாய்  
நெருப்பிலிட்டு
கொங்கு ஊதி தாத்தா கொடுத்த
இளங்கம்பின் சுவைக்கு
ஈடு இது என்று
எதைக்காட்டி ஒப்புமை சொல்வேன்
பச்சைக் கம்பு தின்றதே இல்லை
ஆதங்கப்பட்ட தோழிக்கு
பல மைல் வெயில் கடந்து வந்தவனுக்குச் சட்டென்று ஒரு புங்கை நிழல் கிடைப்பதுமாதிரி, கொடுமை வாழ்வை அடுக்கிச் சொல்லிவிட்டு ஒரு கம்மங்கதிரில் இழந்த வாழ்வின் ருசியைச் சொல்லியிருக்கிற நேர்த்தி சாதாரணமானதல்ல. இங்கே வருகிற ஆடுமேய்த்தலும், கம்மங்கதிரைச் சுட்டுத்திண்ணலும் அதைமட்டுமேயா உணர்த்தி நிற்கின்றன? பறவை அமர்ந்தறியா செயற்கை மரங்களெனச் சொல்லுகிறபோது மரங்களை மட்டுமா சுட்டுகிறது? வரிசையாய்க் கடக்கும் நமது நாட்கள் கூட மரங்கள்தானே. நமது நாட்களில் ஒரு கணம் பறவை அமர்வதுபோன்ற அனுபவம் நேர்ந்ததுண்டா? நமது மரங்கள் எதற்காகவோ வானுயர்ந்து நிற்கின்றன. அதுதரும் நிழல் ஒன்றுதானா வேரோடி நிற்பதற்கான காரணம். இதே போன்றதொரு இழப்பின் வலி சொல்லும் மற்றொரு அற்புதமான கவிதை இக்கரைக்கு அக்கரை’. ‘வீடு சுமந்து அலைபவன்கவிதை தமிழர்களின் அவல வாழ்வினையும் சேர்த்தே சொல்லுகிற கவிதை.
                        இருந்தது இல்லாமல் போகும்போதும்
                        இருப்பு இடம்மாறிப் போகும்போதும்தான்
                        உரைக்கிறது
ஏதிலிகளின் வலி
தன்னனுபவத்தில் சிறகு விரித்து பெரும் ஜனசமூகத்தின் நெடுங்காலத் துயர வரலாற்றோடு கைகோர்த்து நிற்கிறது இக்கவிதை.

இத்தொகுப்பு காதல் கவிதைகளால் மேலும் அழகாகிவிடுகிறது. காலகாலமாய் ஓடும் ஜீவநதியின் அடிமடியில் உருண்டு விளையாடும் கூழாங் கற்களின் மினுமினுப்பில் இருக்கிறது நீரின் காதல். உதிர்ந்த சிறகுஎன்ற கவிதையில் இப்படி வருகிறது:
                        பெரும் பயணத்திலும் பேருந்து ஓட்டத்திலும்
                        கண்ணில்படும் பலகையின் பெயரைக்
                        கண்டு மனம் பதைபதைக்கும் - அவள்
                        வாழ்க்கைப் பட்டது இவ்வூரோ?...
ஓடுகிற ஓட்டத்தில் கண்ணில் அடிக்கும் முள்ளாய் அந்த ஊர்ப்பெயர். தூலம் உளுத்து ஒருபக்கமாய்ச் சாய்ந்த கூரை ஒழுகி ஓதமேறிக்கிடக்கும் மண்சுவராய் மனம். மழைக்காலத்தின் நள்ளிரவொன்றில் குடும்பமே அலறுவதுபோல ஏதோ ஒரு பொழுதில் அந்த ஊர்வழியே கடக்கிறபோது நினைவுகளின் அலறலை என்ன செய்துவிட முடியும். ஒரு கவிதை எழுதுவது தவிர.
                        எந்திரமாய்க் கை குலுக்கி / என்றும் போல்
                        புன்னகைத்துப் பிரிந்த /        அந்தக் கடைசி நிமிடம்...

இப்படி நிறைய இடங்களைச் சொல்லலாம். காதல் கவிதை எழுதும்போது எந்தச் சவாலும் எழுந்து நிற்கவில்லை. சண்டையில் தோற்றுப்போனவனின் தூங்காத இரவுகள் போலவே அவஸ்தைப்படுத்துகிற வார்த்தைகளால் நெய்யப்பட்டிருக்கின்றன.

            அரசியல் கவிதைகள் வனைதலில் தமிழர்களின் குருதியே முதன்மையாகிறது. இழந்த மண்ணிலிருந்து சிந்திய ரத்தம் கொண்டு ஆத்திரங்கொண்டு எழுத்தைச் சுற்றி வெறிகொண்ட கைகள் விரல் நுணுக்கத்தில் எழும்பி வந்தவை அவை. முடிகிற இடத்தில் சரியாக அறுத்து மாலை வெயிலில் காயவைத்துத் தட்டித்தட்டி சூளையிலிட்டதை மனம் தட்டிப்பார்க்க திசைகள் அதிர்கின்றன. பொய்த்தேவுகவிதையில் வெளிப்படையாகவே தனது அரசியலைச் சொல்கிறார் கவிஞர். அதற்கான வரலாற்று நியாயங்களையும்  வாசகனுக்குத் தெளிவுபடுத்துகிறார். பத்துக் கோடிக்கும் மேலாக வாழ்கிற ஓர் இனம் தமது ஒரு பகுதி மக்கள் துடிக்கத்துடிக்கச் சாகிறபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே எதனால்? காஷ்மீரிகளைப் போல தனித்த தேசிய இறைமை கொண்ட இனமாக, கவிஞர் சொல்லில் சொன்னால் நான் தமிழன் என்கிற ஒரு தெளிவு இல்லாததுதானே காரணம். இந்த இனம் நினைத்திருந்தால் ஓர் அரசியல் நிர்ப்பந்தத்தை உருவாக்கிப் பேரழிவிலிருந்து காப்பாற்றி இருக்காதா என்ன?

          ‘மே 2009’ கவிதை மிக நுட்பமாக இந்த அரசியலைப் பேசுகிறது. கையாலாகாதனத்தின் முன்பு நமது எல்லாப் பெருமிதங்களும் பல்லிளித்துக்கொண்டு நிற்பதை இக்கவிதை எடுத்துக்காட்டுகிறது. பிரபாகரன்கவிதை நம்பிக்கைப் புள்ளியிலிருந்து எழுந்ததாக இருக்கிறது.  

       இது மிளகாய்த் தோட்டத்தில் முதல் வெப்புபோல. உள்ளே நுழைந்து பழமெடுக்கும்போது பூவும் பிஞ்சும் உதிராமல் நடக்கப் பழகும் நளினம் வேண்டும். நாற்று நட்டதிலிருந்து பார்த்தால் முதல் வெப்பு நெடுங்காலம் கடந்ததாய்த் தோன்றும். ஆனால் அவை நேர்த்தியானவை. பழுதில்லாதவை. அடுத்த வெப்புமிக விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த தொகுப்பை இதைவிட நேர்த்தியாகக் கொண்டுவருவார் என்பதற்கு இத்தொகுப்பு ஓர் உதாரணம். ஏனெனில் தமிழ் வாழ்வு என்ற வற்றாத கிணறு இவர் மனசில் உண்டு.

     மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் ஆந்தைகளும் வௌவால்களுமெனப் பறவைக்காடாய் இருந்த அந்த இலுப்பைத் தோப்பை விழுங்க சுற்றியிருந்தவர்களுக்குப் பேராசை வந்தது. வெங்கோடை இரவுப் பொழுதொன்றில் மூங்கில் புதர் தீப்பற்றியதாய்ப் பேச்செழுந்தது. கொள்ளிவாய் பிசாசின் வேலையென்று வேடிக்கை பார்த்தனர். குஞ்சுகள் கருகும் நிணவாடையும் புகையும் ஊரைச் சூழ, இலுப்பைத் தோப்பின் பெருமைமிகு வரலாற்றைத் திண்ணைதோறும் வாய்வலிக்கப் பேசினர். பறவைகளின் அலறல் ஓய்ந்த மாலையொன்றில் எரிந்த விறகுகளை ஆளாளுக்குச் சுமந்துவந்தனர். வரப்புகள் எல்லை மாறின. பஞ்சாயத்தின் தீர்மானங்கள் மாறின. கங்காதேவி மொசைக் பதித்த சிறு கோயிலில் பளபளக்க அருள் பாலிக்கிறாள். கங்கா நகர் என்று அறிவிப்புப் பலகையொன்று வழிகாட்டுகிறது. வௌவால்களையும் குருவிகளையும் இலுப்பை மரங்களையும் மனதில் சுமந்து பித்தேறித் திரிபவர்கள் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சடைமுடி குலுங்க மந்திரம் ஜெபிக்க ரத்தப் பலியிட்டு நிணச்சோறிறைத்து ஏவிய இந்த ரத்தக்கவிதைக் காட்டேறி பழிவாங்க மாட்டாளா? செய்வாள்.


சனி, 27 செப்டம்பர், 2014

மறைமலையடிகளின் பன்முகப் பார்வை - நூல் வெளியீடு








உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 15.9.2014 அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெற்ற 'மறைமலையடிகளின் பன்முகப் பார்வை' நூல் வெளியீட்டு விழா. இடமிருந்து - அறக்கட்டளைப் பொறுப்பாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் .மணவழகன், தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர் கா.மு. சேகர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் பொற்கோ, உலகத் தமிழாராய்ச்சி நிறுனவத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், நூலாசிரியர் திரு.மறை.தி.தாயுமானவன் (தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளின் பெயரன்), கவிஞர் கலைச்செல்வி (உரையாசிரியர் புலியூர் கேசிகனின் மகள்)

வெள்ளி, 22 மார்ச், 2013

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வித் திருவிழா




           உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிப்ரவரி 2013 முழுவதும் கல்வியியல் தொடர் நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. பிப்ரவரித் திங்கள் தொடர் நிகழ்வுகளில், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஒன்பது; மூன்று நாள் பயிலரங்குகள் இரண்டு; ஐந்து நாள் பயிலரங்கு ஒன்று; தேசியக் கருத்தரங்கு ஒன்று; கலை நிகழ்ச்சிகள்; மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் ஆகியவை இடம்பெற்றன. சிறப்பாக, உலகத் தாய்மொழித் தினமான பிப்ரவரி 21 அன்று, அறக்கட்டளைச் சொற்பொழிவு, மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை,கவிதை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. தமிழக முதல்வரின் பிறந்தநாளான பிப்.24அன்று நிறுவன வளாகத்தில் 65 பழமரக்கன்றுகள் நடும் விழா, சிற்றுண்டி நிலையம் திறப்பு விழா போன்றவை நடைபெற்றன.




தொடக்க விழா

        2013 பிப்ரவரி திங்கள் 1ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், தேசியக் கருத்தரங்குகள், தேசியப் பயிலரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு, அதன் துவக்க நிகழ்ச்சியாக 01.02.2013 அன்று மாலை 03.00 மணியளவில் தொடக்கவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவில் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம், இ.ஆ.ப., அவர்கள் பிப்ரவரித் திங்களுக்கான நிகழ்வுகளைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். கவிஞர் கலைமாமணி திரு ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களும், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். நிறுவனத் தனி அலுவலர் திரு தா.மார்டின் செல்லதுரை அவர்கள் நன்றியுரை கூறினார்.
வரவேற்புரை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல்,கலை(ம) பண்பாட்டுப் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன்

தலைமையுரை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன்

தொடக்கவுரை:தமிழ்வளர்ச்சிஅறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம்

வாழ்த்துரை: கலைமாமணி ஏர்வாடி திரு இராதாகிருட்டிணன்


வாழ்த்துரை:அரசுமொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்

நன்றியுரை :உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தனி அலுவலர் திரு மார்ட்டின்


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்



தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் ஒலிக்கும் வகையில் தமிழுக்கென்று தனித்ததொரு நிறுவனம் பிரெஞ்சு அகாதெமி போன்று உருவாக்கப்படவேண்டும் என்ற வேணவா தமிழறிஞரிடையே கனன்று கொண்டிருந்தது. இவ்வுணர்வுக்கனல் 1968 இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது அன்றைய தமிழக முதல்வர் பேரறிஞர் சி.என். அண்ணாதுரையவர்கள் வழி கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. அக்கருத்தரங்கில், தக்கணக் கல்லூரி முதுகலை ஆராய்ச்சி நிறுவன (பூனே) இயக்குநர் டாக்டர். கத்ரே, இதற்கான முன் வரைவுத் திட்டத்தினை வழங்கினார். அதன்படி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்' தோன்றி செயல்படுவதற்கான உதவியை யுனெஸ்கோவிடம் தமிழறிஞர் நாடினர்.

                1970 சூலைத் திங்களில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு பாரிஸில் நடைபெற்றது. அம்மாநாட்டைத் தொடங்கி வைத்த, அன்று யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் பொறுப்பிலிருந்த டாக்டர் மால்கம் ஆதிசேஷையா அவர்கள், 1968 நவம்பரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவுவது பற்றி யுனெஸ்கோ நிறைவேற்றிய தீர்மானத்தை எடுத்துவைத்தார். அம்மாநாட்டில், "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கட்டமைப்புப் பற்றிய திட்டமும் அறிவிக்கப்பட்டது.  பதிவு பெற்ற ஒரு சங்கமாக நிறுவுவது பற்றியும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1970 அக்டோபர் 21ஆம் நாள் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பெற்றது. சென்னை, ஸ்டெர்லிங் ரோடு, "தமிழகம்' இல்லத்தில் தற்காலிகமாக இயங்கி, 1972 முதல் சென்னை, மைய பல்தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் உயிர்ப்புப் பெற்று நாளும் தமிழ் மணம் பரப்பிக் கொண்டுள்ளது.

நோக்கம்
       தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு அவரும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன இவ் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன.

                தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.


                உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோன்றிய பொழுது அது தாய் நிறுவனமான உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் (International Association of Tamil Research - IATR) அரவணைப்பில் அமைந்தது. முனைவர் மு.வரதராசனாரை மதிப்புறு இயக்குநராகவும், முனைவர் கா. மீனாட்சி சுந்தரனாரை முதன்மை ஆட்சி அலுவலராகவும் நியமனம் செய்த பின்பு தனித்து இயங்கத் தொடங்கியது. தமிழ்ப் பணியும் விதைக்கப்பட்டு முளைவிடத் தொடங்கியது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்று நாற்றிசையும் புகழ்மணம் பரப்பி வருகிறது.

நிருவாகம் - கல்விப் புலங்கள் - பேராசிரியர்கள்:

     இயக்குநர் (மு.கூ.பொ.)
            முனைவர் கோ.விசயராகவன் 
     
     சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
            முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர்
           முனைவர் கா.காமராஜ், முதுநிலை ஆராய்ச்சியாளர்
           முனைவர் வி.இரா.பவித்ரா, முதுநிலை ஆராய்ச்சியாளர்
 
     தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புலம்
           முனைவர் கோ.வியசயராகவன் (இ.பொ.)
            முனைவர் அ.சதீஷ், இணைப் பேராசிரியர்
           முனைவர் கோ.பன்னீர்செல்வம், முதுநிலை ஆராய்ச்சியாளர்
           முனைவர் சு.தாமரைப்பாண்டியன், முதுநிலை ஆராய்ச்சியாளர்

     தமிழ் மொழி (ம) மொழியியல் புலம்
           முனைவர் பெ.செல்வக்குமார், இணைப் பேராசிரியர்
           முனைவர் க.சுசீலா, முதுநிலை ஆராய்ச்சியாளர்
           முனைவர் நா.சுலோசனா, முதுநிலை ஆராய்ச்சியாளர்

     அயல்நாட்டுத் தமிழர் புலம்
             முனைவர் கு.சிதம்பரம், முதுநிலை ஆராய்ச்சியாளர்
            முனைவர் து.ஜானகி, முதுநிலை ஆராய்ச்சியாளர்

முகவரி: 


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
(International Institute of Tamil Studies)
இரண்டாம் முதன்மைச் சாலை
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
தரமணி, சென்னை - 600 113.
தொ.பே. 044 22542992
இ.தளம்: www.ulakaththamizh.org


       

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஐங்குறுநூறு அறிமுகம்

 ஐங்குறுநூறு - அறிமுகம்

முனைவர் ஆ.மணவழகன்
அக்டோபர் 03, 2011

எட்டுத்தொகை இலக்கியங்களுள் மூன்றாவதாக இடம்பெற்றுள்ள அக இலக்கியம் ஐங்குறுநூறு. இவ்விலக்கியமே எட்டுத்தொகையுள் அடியளவால் மிகவும் சிறிய பாடல்களைக் கொண்டது (3 அடி முதல் 6 அடிவரை). இந்நூலில் ஐந்நூறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன (ஐந்து+குறுகிய+நூறு). இந்த ஐந்நூறு பாடல்களையும் திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர் (5X100=500). ஐந்திணை ஒழுக்கங்களை நூறுநூறு பாக்களில் இலக்கிய வளமை குன்றாது எடுத்தியம்புகிறது. ஒவ்வொரு நூறும் பத்து பத்து பாக்களாக, தனித்தனி தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. தலைப்பானது செய்யுளில் பயின்று வரும் சொற்களாலோ அல்லது பொருளாலோ இடப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும். திணையையும் ஒரு பெரும் புலவர் பாடியுள்ளார்.

மருதத் திணை         - ஓரம்போகியார்
நெய்தல் திணை     - அம்மூவனார்
குறிஞ்சித் திணை   - கபிலர்
பாலைத் திணை     - ஓதலாந்தையாரை
முல்லைத் திணை  - பேயனார்

யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் விருப்பத்தால் கூடலூர்கிழார் என்னும் புலவர் ஐங்குறுநூற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நூல், சங்க கால தமிழரின் திணை சார்ந்த வாழ்வியல், காதல் வாழ்க்கை, சமூக நோக்கு, பழக்க வழக்கங்கள், நாகரிகம், ஒழுக்கம், மகளிர் மாண்புகள், அறம், அருள் என அனைத்தையும் எளிய – இனிய வடிவத்தில் பதிவுசெய்துள்ளது.

சிறப்புகள்
சங்க இலக்கியத் தொகை நூல்களுள் பல சிறப்புகளைப் பெற்றது ஐங்குறுநூறு. சங்க இலக்கியங்களுள் மூன்றடியிலும் பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல் இது ஒன்றே. இந்நூலைத் தவிர வேறு எந்த நூலிலும் மருதத் திணைப் பாடல்கள் முதலாவதாக வைக்கப்படவில்லை. இந்திராவிழா பற்றிய செய்தியைக் கொண்டுள்ள பழைய இலக்கியம் இதுவே. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிய செய்திகளும், அவற்றின் பெயரால் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. விலங்குகள் போன்றவற்றின் வாழ்வியல் நுட்பங்களும் படம்பிடித்துக்காட்டப்பட்டுள்ளன. குறுந்தொகையைப் போன்றே சிறந்த உவமைகளைக் கொண்டுள்ள நூல் ஐங்குறுநூறு எனலாம்.
        உலகில் அனைத்து தீய செயல்களுக்கும் காரணமாக அமைவது வறுமையே. வறுமையே, பசிக்கும், பிணிக்கும் மூலகாரணமாக அமைகிறது. வறுமையைப் போக்கவே மக்கள் தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆகவே, ஒரு நாடு சிறந்தோங்க பசி, பிணியை இல்லாது செய்யவேண்டும் என்ற சிந்தனையை 

                                        'பசியில் ஆகுக பிணிசே நீங்குக'

என்று வெளிப்படுத்துகிறது ஐங்குறுநூறு. ஐங்குறுநூற்றில் வேளாண் சிந்தனைகள் காணக்கிடைக்கின்றன. வயல் நிறைய விளைய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்குக் காரணம் தானியத்தைச் சேர்த்து வைக்கவேண்டும் என்பதல்ல, இரவலர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதே. இந்த உயர்ந்தச் சிந்தனையை

                                    'விளைக வயலே வருக இரவலர்'
    மற்றும்,

                                 நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க

 என்ற ஐங்குறுநூற்று அடிகளில் அறியலாம்.

இயற்கையிலிருந்து விலகாமலும், அதேவேளையில், நவீனத்துவத்தைப் பயன்படுத்தியும் பயன் கண்டனர் நம் முன்னோர். வேளாண்துறையிலும் கூட நவீன கருவிகளைப் பயன்படுத்திய உண்மையைக் கீழ்க்கண்ட அடிகள் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
     
             'கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்'

கரும்பைப் பிழிந்து சாறு எடுப்பதற்கு நவீன கருவிகளைப் பயன்படுத்திய உண்மையை இவ்வடி உணர்த்துகிறது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு பகைமைபாராட்டுதலிலோ, அல்லது போர் புரிவதிலோ இல்லை.  பகைமையை மறத்தலிலும், நட்பை பாராட்டுதலிலுமே உள்ளது. போர்கள் போற்றப்பட்ட சூழலில் வேந்தர்கள் பகைகொள்ள வேண்டாம் என்கிறது ஐங்குறுநூறு.

                                வேந்து பகை தணிக யாண்டுபல நந்துக

புறத்திற்கென்று தனியே இலக்கியம் படைத்து, விழுப்புண் படுதலே வீரம் என்ற மரபை வளர்த்து, வாழ்ந்து வந்த சமுதாயச் சூழலில், பகையே வேண்டாம் என்று ஒருவர் சிந்தித்திருப்பது எண்ணி வியக்கத்தக்க ஒன்றல்லவா?

ஒரு நாட்டின் வாழ்விற்கும், வளர்ச்சிக்கும், வளமைக்கும் உற்ற துணையாக விளங்குவது அந்நாட்டின் அரசாங்கம் என்பது துணிவு. அந்த அரசாங்கம் முறைசெய்து மக்களை காப்பாற்ற வேண்டும். நாட்டில் களவு இல்லாது ஒழிய வேண்டும். இச்செயல்பாடுடைய அரசே நல்லரசாக விளங்கமுடியும். இதை,

                                அரசுமுறை செய்க களவில் லாகுக’-22

 என்ற ஐங்குறுநாற்றின் அடி நமக்கு தெளிவாக்குகிறது.

        அன்பும், அறனும், பண்பும் மிகுந்த ஒரு காலகட்டத்தில், இயற்கையோடு மனிதன் இயைந்து வாழ்ந்த ஒரு காலகட்டத்தில், அறச்சிந்தனைகள் நாட்டில் தலைத்தோங்க வேண்டும் என்று சிந்திப்பதும் அச்சிந்தனை உலகெங்கும் சிறந்தோங்க வேண்டும் என்று ஆசை கொள்வதும்  நாம் பெருமைப்பட கூடிய ஒன்றே. இவ்வகைச் சிந்தனை.

                                        அறநனி சிறக்க வல்லது கெடுக

என்று வெளிப்படுத்துகிறது ஐங்குறுநூறு.

        அறச்சிந்தனை எங்களுக்கு வாய்க்கப்பெற்றது போல, உலகம் அனைத்தும் பரவி தழைத்தோங்க வேண்டும், அதன் மூலம் தீய செயல்கள் அழிந்துபட வேண்டும் என்ற இத்தொலைநோக்குச் சிந்தனை இன்றும், என்றும் ஏற்புடையதுதானே! அறச்சிந்தனை வலுப்பெற்றால் என்ன நடக்கும்? தீமைகள் எல்லாம் விலகியோடும், எங்கும் நன்றே, தீமை இல்லை, எவ்வுயிரும் துன்பமின்றி இன்பம் பெறும். இந்த உண்மையைத் தானே ஐங்குறுநூற்றின்,
                              ‘நன்று பெரிது சிறக்க தீதில் ஆகுக

என்ற அடி நமக்கு வலியுறுத்துகிறது.

        உயிரியல் அறிவும் ஐங்குறுநூற்றில் காணக்கிடைக்கின்றன. நண்டுகள் பிறக்கும் போதே அதன் தாய் இறந்துவிடுகிறது என்பதையும், முதலைகள் தம் குட்டிகளையே தின்னும் என்பதையும் ஐங்குறுநூறு கீழ்க்கண்டவாறு பதிவுசெய்கிறது.

                        ‘தாய்சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
                        பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்’

                        ‘தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல் முதலை’

 ஐங்குறுநூறு  பதிப்புகள்

                    உ. வே. சா, ஔவை சு. துரைசாமிப்பிள்ளை (அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு), பொ.வே. சோமசுந்தரனார் (கழக உரை) போன்றவையும்  புலியூர் கேசிகன் உரை,   வர்த்தமானன் பதிப்பக வெளியீடு போன்றவையும் பிறவும் வெளிவந்துள்ளன.