வியாழன், 29 மே, 2025

அறிஞர்கள் அவையம்

 அறிஞர்கள் அவையம்

 தொடக்கத்தில், தமிழாய்வு என்பது தமிழ் இலக்கிய ஆய்வு, தமிழ் இலக்கண ஆய்வு என்ற இருநிலைகளிலேயே முன்னெடுக்கப்பட்டது. அவற்றோடு, தத்துவ ஆய்வும், அரிதாக வரலாற்றாய்வும் தமிழாய்வு என்று கொள்ளப்பட்டன. அறுபதுகளுக்குப் பிறகு தமிழாய்வுகள் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அமெரிக்கா, இங்கிலாந்து முதலான பிற நாடுகளிலும் புதுப்பொலிவோடு பன்முக வளர்ச்சிபெறத் தொடங்கியது. இதன் விளைவாகத் தமிழாய்வின் எல்லையும் பரப்பும் விரிவு பெற்றது. தமிழாய்வின் விரிவுபெற்ற எல்லா எல்லைகளையும் பொருள்கொள்ளும்  வகையில் இதற்கு ஒரு புதிய சொல்லாக்கமும் எழுபதுகளில் உருவாயிற்று. #தமிழியல் என்ற பெயரால் தமிழாய்வு எல்லைகள் எல்லாவற்றையும் ஆய்வாளர்கள் குறிக்கத் தொடங்கினர். 

தொடர்ச்சியாக, எண்பதுகளில், தமிழில் நிகழ்ந்த ஆய்வுகள் இலக்கணம், இலக்கியம், தத்துவம், வரலாறு என்பதோடு நில்லாமல் பண்பாடு, நாட்டுப்புறவியல் முதலான பல்வேறு எல்லைகளில் பரந்து, விரிந்து வளரத் தொடங்கியன. புதுப்புதுத் ஆய்வுத் துறைகளும் தமிழுக்கு அறிமுகம் ஆகின. இத்தகைய துறைகள் எல்லாவற்றையும் தழுவிக் கொள்ளுகிற ஒன்று #தமிழியல் _ஆய்வு என்று கொள்ளப்பெற்றது. இன்றைய நிலையில் தமிழியலில் ஆய்வு என்பது இலக்கியவியல், இலக்கணவியல், மொழியியல், பண்பாட்டியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், தொல்லியல் முதலான பல்வேறு துறைகளையும் பொருண்மைகளையும் உள்ளக்கிய பெரும் பரப்பாக விளங்குகிறது.  

இச்சூழலில், தமிழியல் ஆய்வுக் துறைகளைப் பொருண்மைகளின் அடிப்படையில் தோற்றம் – வளர்ச்சி - ஆய்வுக் களங்கள் – செல்நெறிகள் – ஆய்வு இடைவெளி - ஆய்வு நீட்சி - எதிர்காலத் தேவை என்ற அடிப்படையில் முழுமையாக நோக்கவேண்டிய தேவையும், எதிர்கால ஆய்வுக் களங்களை, முன்னெடுக்கவேண்டிய  தமிழாய்வுப் பணிகளை வரையறை செய்யவேண்டிய தேவையும் உள்ளது. 

தமிழாய்வில், நேற்றைய புரிதலையும் இன்றைய செல்நெறியையும் நாளையத் தேவையையும் வழங்கவேண்டியது தமிழாய்வு நிறுவனங்களின் தலையாய கடமையாகும். இத்தேவையை நிறைவேற்றும் பொருட்டு, சென்னை, #உலகத்_தமிழாராய்ச்சி _நிறுவனத்தில் ’அறிஞர்கள்_அவையம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று #தமிழ்நாடு_அரசு அறிவித்துள்ளது. இதன்வழி, துறைசார் அறிஞர்கள், தகைசால் பேராசிரியர்கள், வல்லுநர்களைக் கொண்டு திங்கள்தோறும் கலந்தாய்வுகள் நிகழ்த்தப்பெறும். இதற்கான விதையை நிறுவனத்தின் தலைவர் திரு ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள்  விதைத்துள்ளார். 

அறிஞர்கள் அவையத்தின் வழி திங்கள்தோறும் நிகழ்த்தப்பெற வேண்டிய முதன்மைப் பொருண்மைகளாக இலக்கியவியல், இலக்கணவியல், அகராதியியல், திருக்குறள், மொழியியல், மானிடவியல்-பண்பாட்டியல், தொல்லியல்-நாணயவியல்-குறியீட்டியல், சமூகவியல்-வரலாற்றியல், நாட்டுப்புறவியல், சுவடியியல்-கல்வெட்டியல்-பதிப்பியல், ஒப்பிலக்கியவியல்-திறனாய்வியல்-ஆய்வியல் அணுகுமுறைகள், பயன்பாட்டுத் தமிழியில் ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தேவைக்கேற்ப மாற்றங்கள் இருக்கலாம். 

அறிஞர்கள் அவையம் நிகழ்வில் துறைசார்ந்த சான்றோர்கள், வல்லுநர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்று கருத்துகளை வழங்குவர்.  இதன்வழி தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியேயும், உலகெங்கிலும் நடைபெற்ற / நடைபெறும் தமிழாய்வுப் பணிகளை ஒருங்கிணைக்கவும் அதன்வழி எதிர்காலத் தேவையை வரையறுக்கவும் முடியும்.

அறிஞர்கள் அவையம் #நிகழ்வு-ஒன்று நாளை (29.05.2025) நடைபெறவுள்ளது. நிகழ்வில், #அகராதியியல் – நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்’ குறித்த உரைகளைத் துறைசார்ந்த சான்றோர்கள் வழங்க இருகின்றனர். 

நிகழிடம்: மாநாட்டுக் கூடம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை. 

நேரம்: முற்பகல் 10 மணி முதல்…  


-ஆ.மணவழகன்

28.05.2025