சனி, 9 ஆகஸ்ட், 2025

தமிழர் மேலாண்மையியல் (கோட்பாடுகள் - இலக்கிய அணுகுமுறைகள்) - நூல்

 




தமிழர் மேலாண்மையியல்

(கோட்பாடுகள்-இலக்கிய அணுகுமுறைகள்)

ஆசிரியர் –  முனைவர் ஆ.மணவழகன்

          மேலாண்மை என்பது மனித வாழ்வியலின் அனைத்து நிலைகளிலும் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. ஒருவர் அல்லது ஒன்றின் வெற்றி என்பது சிறந்த மேலாண்மையியல் செயற்பாடுகளால் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலாண்மைஎன்ற கலைச்சொல்லும் மேலாண்மையை ஒரு முறைப்படுத்தப்பட்ட அறிவு மற்றும் அறிவியல் முறையில் தனித்துவமாக அணுகும் மேலாண்மையியல்எனும் துறையும் இந்த நூற்றாண்டுக்கு உரியவை. எனினும், இதன் தொன்மையானது மனித இனத்தின் நாகரிகத் தொன்மையோடு தொடர்புடையதாக உள்ளது.

          மனித இனம், விலங்காண்டி நிலையிலிருந்து காட்டுமிராண்டி நிலைக்கு மாறிய சமூக யுகத்திலேயே அவனின் மேலாண்மையியல் செயல்பாடுகளும் முகிழ்க்கத் தொடங்கின எனலாம். கூடிவாழ்தல், குழுவாக வேட்டையாடுதல், வாழ்விடங்களைத் தெரிவுசெய்தல், நிலைத்த குடியிருப்புகளை உருவாக்குதல், உணவு உற்பத்தி முதலிய தொடக்ககால முன்னெடுப்புகள் யாவும் மனித இனத்தின் மேலாண்மையியல் செயல்பாடுகளே. தேவை மற்றும் இன்றியமையாமையின் விளைவால் மேலாண்மையியல் என்பது இன்று முறைப்படுத்தப்பட்ட ஒரு கல்விமுறையாக  வடிவமைக்கப்பட்டுள்ளது.

          நவீன காலத்தில் மேலாண்மை என்பது நிறுவனம் சார்ந்த ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்டு,  கோட்பாடுகளின் வழி முன்னெடுக்கப்படுகிறது. அதனால், ‘நிருவாகத்தின் இதயமே மேலாண்மைதான்என்று சுட்டப்படுகிறது. எனினும், இன்றைய சூழலில் தனியோர், குடும்பம், சமூகம் என்ற அனைத்து நிலைகளிலும் மேலாண்மைச் செயல்நெறி மிக இன்றியமையாததாக உள்ளது. தனியோரின் வெற்றி, குடும்பத்தின் மேன்மை, அரசின் நல்லாட்சி, நிறுவனத்தின் வளர்ச்சி என யாவும் சிறந்த மேலாண்மையின் விளைவே.

        இவ்விதம், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்கும் மேலாண்மையியல் குறித்தும் தொல்தமிழரின் மேலாண்மையியல் செயல்பாடுகளையும் இடைக்கால இலக்கியங்கள் வழி அறியலாகும் மேலாண்மையியல் கூறுகளையும் நவீனக் கோட்பாடுகளின் வழி விளக்குவதை நோக்கமாகக் கொண்டு, ‘தமிழர் மேலாண்மையியல் (கோட்பாடுகள்-இலக்கிய அணுகுமுறைகள்)என்ற இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.

      2007ஆம் ஆண்டு வெளிவந்த என்னுடைய சங்க இலக்கியத்தில் மேலாண்மைஎன்ற நூல், சங்க இலக்கியத்தை மேலாண்மையியல் நோக்கில் அணுகிய தமிழின் முதல் நூல் ஆகும். இந்நூலில், சங்க இலக்கியத்தின் அடையாளப்படும் துறைகளுள் சில துறைகள் மட்டும் மேலாண்மையியல் நோக்கில் அணுகப்பட்டிருந்தன. தமிழர் மேலாண்மையியல்எனும் இந்நூல், மேலாண்மையியல் வரலாறு, கோட்பாடுகள், பண்புகள் போன்றவற்றை எளிய முறையில் விளக்குவதோடு, பரந்துபட்ட நோக்கில் தமிழர்தம் மேலாண்மையியல் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விளக்கி உரைக்கிறது. சங்ககாலம் தொடங்கி இடைக்காலம் வரையான தமிழரின் அறிவு மரபை, மேலாண்மையியல் செயல்பாடுகளைத் துறைதோறும் முறைப்படுத்தி வழங்குகிறது.

          தமிழரின் பன்முக மேலாண்மையியல் சிந்தனைகளை முழுமையாக அறிய இந்நூல் வழிவகுக்கும். தமிழியலின் துறைசார் கோட்பாடுகளைப் பிறதுறைக் கோட்பாடுகளோடும் மேலாண்மையியல் சிந்தனைகளோடும் ஒப்பிட்டு அறியவும்  ஆய்வு மேற்கொள்ளவும் இந்நூல் அடிப்படைத் தரவகமாக அமையும். தமிழரின் மேலாண்மையியல் சார்ந்த பல்வேறு புதிய ஆய்வுக் களங்களையும் இதன்வழி அறிந்துகொள்ள முடியும். 

          நூலில் முதல் அலகான மேலாண்மையியல் என்பது, மேலாண்மை அறிமுகம் - மேலாண்மைக்கு வழங்கப்படும் விளக்கங்கள் - மேலாண்மையின் தொன்மை மற்றும் வளர்ச்சி - மேலாண்மை யுகங்கள் - மேலாண்மையின் இன்றியமையாமை - வரையறைகள் - கோட்பாடுகள் - பண்புகள் - மேலாண்மையியலுக்கும் நிருவாகவியலுக்குமான வேறுபாடுகள்- இலக்கியத்தில் மேலாண்மைக் கூறுகளை அணுகும் முறைகள் ஆகியவற்றை இயம்புகிறது. 

          சங்க இலக்கியங்கள் தமிழரின் தனித்துவமான வாழ்வியலைப் பேசுபவை. இயற்கையே அதன் முதன்மைக் களம்.  எளிய மக்களின் வாழ்வியல் முதல், பெருவேந்தர்களின் வாழ்வியல் வரையான அனைத்தும் அதன் பாடுபொருள்கள். தமிழர் நாகரிகத் தொன்மை, பண்பாட்டுத் தொன்மை, அறிவு மரபின் தொன்மை போன்றவற்றிற்கான முதல் மற்றும் முதன்மைச் சான்றுகளாக விளங்குபவையும் சங்க இலக்கியங்களே. அவ்வகையில், தமிழரின் மேலாண்மையியல் சிந்தனைகளுக்கும் இவையே முதன்மைத் தரவுகளாய்த் திகழ்கின்றன. எனவே,  நூலின் இரண்டாவது அலகு, சங்கத் தமிழரின் வேளாண் மேலாண்மை, நெசவுத் தொழில்நுட்ப மேலாண்மை, கட்டடக் கலையியல் மேலாண்மை, மருத்துவவியல் மேலாண்மை, நீர்மேலாண்மை ஆகியவற்றை நவீன மேலாண்மையியல் சிந்தனைகளின் அடிப்படையில் விரிவாகப் பேசுகிறது.

          திட்டமிடத் தவறுபவர்கள் தோல்வி அடைவதற்குத் திட்டமிடுகிறார்கள்என்கிறார் பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.  திட்டமிடுதல் என்பது, ‘கூடி வினைபுரிதல்என்ற நிறுவனம்சார் செயல்பாடு மட்டுமல்ல, அது தனியோரின் நடத்தையியல் சார்ந்ததாகவும் இருக்கிறது; அவரின் வெற்றிக்கும் வழிவகுக்கிறது. அவ்வகையில், நூலின் மூன்றாம் அலகானது திருக்குறளைக் களமாகக்கொண்டு தனிமனித மேலாண்மை, குடும்ப மேலாண்மை, அரசியல் மேலாண்மை, தொழில்துறை மேலாண்மை, கல்வியியல் மேலாண்மை, வாணிக மேலாண்மை, ஆட்சியியல் மேலாண்மை ஆகிய மேலாண்மையியல் கூறுகளை  விளக்கி உரைக்கிறது.

      சங்க இலக்கியங்களை நோக்கின் காப்பிய இலக்கியங்கள் பிற்காலத்தவை. தன்மையிலும் பாடுபொருள்களிலும் சங்க இலக்கியங்களிலிருந்து மாறுபடுபவை; இவை, புறச் சமயங்களின் எழுச்சியால் விளைந்தவை. காப்பியங்கள் ஒவ்வொன்றும் தனக்கென ஒவ்வொரு நோக்கத்தைக் கொண்டுள்ளது. ஆயினும் இவை, தமிழ்ச் சமூகத்தையும் மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் எதிரொலிக்கத் தவறவில்லை. அவ்வகையில், நூலின் நான்காவது அலகு, காப்பியங்களைக் களமாகக் கொண்டு, உணவு உற்பத்தி மேலாண்மை, உடை உற்பத்தி மேலாண்மை, உறைவிட மேலாண்மை, கலையியல் மேலாண்மை ஆகிய கூறுகளை முன்னிறுத்துகிறது. 

     நூலின் ஐந்தாவது அலகானது, பன்முக மேலாண்மையியல் நோக்கில் இடைக்கால இலக்கியங்களை அணுகுகிறது. இப்பகுதியில், பக்தி இலக்கியங்களில் உளவியல் மேலாண்மை, சித்தர் இலக்கியங்களில் உடல்நல மேலாண்மை, சிற்றிலக்கியங்களில் சூழலியல் மேலாண்மை ஆகிய தலைப்புகளில் மேலாண்மையியல் கூறுகள் அணுகப்பட்டுள்ளன. நிறைவாக, மேலாண்மையியல் கலைச்சொற்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. 

     2007ஆம் ஆண்டு வெளிவந்த சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ (ஆ.மணவழகன்) என்ற நூல், சங்க இலக்கியத்தை மேலாண்மையியல் நோக்கில் அணுகிய தமிழின் முதல் நூல் ஆகும். இந்நூலில், சங்க இலக்கியத்தின் அடையாளப்படும் துறைகளுள் சில துறைகள் மேலாண்மையியல் நோக்கில் அணுகப்பட்டிருந்தன. தமிழர் மேலாண்மையியல்எனும் இந்நூல், மேலாண்மையியல் வரலாறு, கோட்பாடுகள், பண்புகள் போன்றவற்றை எளிய முறையில் விளக்குவதோடு, பரந்துபட்ட நோக்கில் தமிழர்தம் மேலாண்மையியல் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விளக்கியுரைக்கிறது. சங்ககாலம் தொடங்கி இடைக்காலம் வரையான தமிழரின் அறிவு மரபை, மேலாண்மையியல் செயல்பாடுகளைத் துறைதோறும் முறைப்படுத்தி வழங்குகிறது.

          தமிழரின் பன்முக மேலாண்மையியல் சிந்தனைகளை முழுமையாக அறிய இந்நூல் வழிவகுக்கும். தமிழியலின் துறைசார் கோட்பாடுகளைப் பிறதுறைக் கோட்பாடுகளோடும் மேலாண்மையியல் சிந்தனைகளோடும் ஒப்பிட்டு அறியவும்  ஆய்வு மேற்கொள்ளவும் இந்நூல் அடிப்படைத் தரவகமாக அமையும். தமிழரின் மேலாண்மையியல் சார்ந்த பல்வேறு புதிய ஆய்வுக் களங்களையும் இதன்வழி அறிந்துகொள்ள முடியும். 


பதிப்பகம்:

அய்யனார் பதிப்பகம்

சென்னை, 600 088.

 

நூல் பெற – 9789016815 / 9080986069






 

வியாழன், 29 மே, 2025

அறிஞர்கள் அவையம்

 அறிஞர்கள் அவையம்

 தொடக்கத்தில், தமிழாய்வு என்பது தமிழ் இலக்கிய ஆய்வு, தமிழ் இலக்கண ஆய்வு என்ற இருநிலைகளிலேயே முன்னெடுக்கப்பட்டது. அவற்றோடு, தத்துவ ஆய்வும், அரிதாக வரலாற்றாய்வும் தமிழாய்வு என்று கொள்ளப்பட்டன. அறுபதுகளுக்குப் பிறகு தமிழாய்வுகள் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அமெரிக்கா, இங்கிலாந்து முதலான பிற நாடுகளிலும் புதுப்பொலிவோடு பன்முக வளர்ச்சிபெறத் தொடங்கியது. இதன் விளைவாகத் தமிழாய்வின் எல்லையும் பரப்பும் விரிவு பெற்றது. தமிழாய்வின் விரிவுபெற்ற எல்லா எல்லைகளையும் பொருள்கொள்ளும்  வகையில் இதற்கு ஒரு புதிய சொல்லாக்கமும் எழுபதுகளில் உருவாயிற்று. #தமிழியல் என்ற பெயரால் தமிழாய்வு எல்லைகள் எல்லாவற்றையும் ஆய்வாளர்கள் குறிக்கத் தொடங்கினர். 

தொடர்ச்சியாக, எண்பதுகளில், தமிழில் நிகழ்ந்த ஆய்வுகள் இலக்கணம், இலக்கியம், தத்துவம், வரலாறு என்பதோடு நில்லாமல் பண்பாடு, நாட்டுப்புறவியல் முதலான பல்வேறு எல்லைகளில் பரந்து, விரிந்து வளரத் தொடங்கியன. புதுப்புதுத் ஆய்வுத் துறைகளும் தமிழுக்கு அறிமுகம் ஆகின. இத்தகைய துறைகள் எல்லாவற்றையும் தழுவிக் கொள்ளுகிற ஒன்று #தமிழியல் _ஆய்வு என்று கொள்ளப்பெற்றது. இன்றைய நிலையில் தமிழியலில் ஆய்வு என்பது இலக்கியவியல், இலக்கணவியல், மொழியியல், பண்பாட்டியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், தொல்லியல் முதலான பல்வேறு துறைகளையும் பொருண்மைகளையும் உள்ளக்கிய பெரும் பரப்பாக விளங்குகிறது.  

இச்சூழலில், தமிழியல் ஆய்வுக் துறைகளைப் பொருண்மைகளின் அடிப்படையில் தோற்றம் – வளர்ச்சி - ஆய்வுக் களங்கள் – செல்நெறிகள் – ஆய்வு இடைவெளி - ஆய்வு நீட்சி - எதிர்காலத் தேவை என்ற அடிப்படையில் முழுமையாக நோக்கவேண்டிய தேவையும், எதிர்கால ஆய்வுக் களங்களை, முன்னெடுக்கவேண்டிய  தமிழாய்வுப் பணிகளை வரையறை செய்யவேண்டிய தேவையும் உள்ளது. 

தமிழாய்வில், நேற்றைய புரிதலையும் இன்றைய செல்நெறியையும் நாளையத் தேவையையும் வழங்கவேண்டியது தமிழாய்வு நிறுவனங்களின் தலையாய கடமையாகும். இத்தேவையை நிறைவேற்றும் பொருட்டு, சென்னை, #உலகத்_தமிழாராய்ச்சி _நிறுவனத்தில் ’அறிஞர்கள்_அவையம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று #தமிழ்நாடு_அரசு அறிவித்துள்ளது. இதன்வழி, துறைசார் அறிஞர்கள், தகைசால் பேராசிரியர்கள், வல்லுநர்களைக் கொண்டு திங்கள்தோறும் கலந்தாய்வுகள் நிகழ்த்தப்பெறும். இதற்கான விதையை நிறுவனத்தின் தலைவர் திரு ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள்  விதைத்துள்ளார். 

அறிஞர்கள் அவையத்தின் வழி திங்கள்தோறும் நிகழ்த்தப்பெற வேண்டிய முதன்மைப் பொருண்மைகளாக இலக்கியவியல், இலக்கணவியல், அகராதியியல், திருக்குறள், மொழியியல், மானிடவியல்-பண்பாட்டியல், தொல்லியல்-நாணயவியல்-குறியீட்டியல், சமூகவியல்-வரலாற்றியல், நாட்டுப்புறவியல், சுவடியியல்-கல்வெட்டியல்-பதிப்பியல், ஒப்பிலக்கியவியல்-திறனாய்வியல்-ஆய்வியல் அணுகுமுறைகள், பயன்பாட்டுத் தமிழியில் ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தேவைக்கேற்ப மாற்றங்கள் இருக்கலாம். 

அறிஞர்கள் அவையம் நிகழ்வில் துறைசார்ந்த சான்றோர்கள், வல்லுநர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்று கருத்துகளை வழங்குவர்.  இதன்வழி தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியேயும், உலகெங்கிலும் நடைபெற்ற / நடைபெறும் தமிழாய்வுப் பணிகளை ஒருங்கிணைக்கவும் அதன்வழி எதிர்காலத் தேவையை வரையறுக்கவும் முடியும்.

அறிஞர்கள் அவையம் #நிகழ்வு-ஒன்று நாளை (29.05.2025) நடைபெறவுள்ளது. நிகழ்வில், #அகராதியியல் – நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்’ குறித்த உரைகளைத் துறைசார்ந்த சான்றோர்கள் வழங்க இருகின்றனர். 

நிகழிடம்: மாநாட்டுக் கூடம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை. 

நேரம்: முற்பகல் 10 மணி முதல்…  


-ஆ.மணவழகன்

28.05.2025

திங்கள், 27 ஜனவரி, 2025

இந்தோனேசியாவில் தமிழ்ப் பயிற்சிப் பள்ளித் தொடக்கம்

 

இந்தோனேசியாவில் தமிழ்ப் பயிற்சிப் பள்ளியை முனைவர் ஆ.மணவழகன் தொடங்கி வைத்தார்

இந்தோனேசியாவில் தமிழ்ப் பயிற்சிப் பள்ளித் தொடக்கம்

          உலகத் தமிழ்ச் சிறகத்தின் இரண்டாமாண்டு கலை இலக்கிய வரலாற்று விழா இந்தோனேசியாவில் மேடான் நகரில் ஆகத்து 9,10,11 ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்றது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, புரூணை, இலங்கை, நார்வே, நெதர்லாந்து, அமேரிக்கா, பிரான்சு முதலான பல்வேறு நாடுகளில் வாழும் தமிழன்பர்களும் இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களும் திரளாக கலந்துகொண்டனர்.



          நிகழ்வின் முதல் நாளான ஆகஸ்ட் 9ஆம் நாள் இந்தோனேசியாவின் மேடான் நகரில் கிட்டத்தட்ட 60 வருடங்கள் பள்ளியாக இயங்கிவந்த குருபக்தி மையத்தில் உலகத் தமிழ்ச் சிறகத்தின் சார்பில் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இப்பயிற்சிப் பள்ளியை முனைவர் ஆ. மணவழகன் (இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பொறுப்பாளர் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம், சென்னை) அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இன்றைய தலைமுறை தமிழ் குழந்தைகள் கலந்து கொண்டனர். இனி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து தமிழ் வகுப்புகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் உலகத் தமிழ்ச் சிறகம் அமைப்பின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக அமையும்.

         இந்த விழாவிற்குப் புதுவைப் பொதுப்பணித் துறை அமைச்சர் மாண்புமிகு க.இலட்சுமி நாராயணன் அவர்களும், இந்திய மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்களும், இந்திய மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் அவர்களும், தமிழ் நாடு காங்கிரசு கட்சியின் துணைத் தலைவர் திருமிகு இராம. சுகந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

\

   இந்தோனேசியத் தமிழர்களான மேனாள் தூதரக அதிகாரியான திரு.சிவாஜிராஜா, மருத்துவர் அசோகன், திரு. சுபேந்திரன், திரு. மதியழகன், திரு. செல்வராஜா போன்றோர் உலகத் தமிழ்ச் சிறகத்தின் செயல்பாடுகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

மொழியியல் கண்காட்சி தொடக்கவிழா

 



சென்னை, பெரும்பூரில் உள்ள கே.ஆர்.எம் பொதுப்பள்ளியில் மாணவர்கள் ஏற்பாடு செய்த மொழியியல் கண்காட்சி 12.07.2024 அன்று நடைபெற்றது. மொழியியல் கண்காட்சியைத் தொடங்கிவைத்து, தமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும் குறித்து சிறப்புரை வழங்கினார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் பேராசிரியரும் நிறுவனத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடப் பொறுப்பாளருமான முனைவர் ஆ.மணவழகன் அவர்கள். முன்னதாக மொழிசார்ந்த பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன. 



பேராசிரியர் ஆ.மணவழகன் அவர்களுக்கு அறிவுக் களஞ்சியம் விருது


அறிவுக் களஞ்சியம் விருதுபெறும் முனைவர் ஆ.மணவழகன்

அறிவுக் களஞ்சியம் விருது - 2025

சென்னைப் பல்கலைக்கழகம், துவாரகதாஸ் கோவர்த்தனதாஸ் வைணவக் கல்லூரி, மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து
64ஆம் முப்பெரும் விழாவினை 24.01.2025 அன்று நடத்தின.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தப் பெருவிழாவில், பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கான வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்குதல், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான
18ஆம் அறிவு களஞ்சியம் விருதுப் போட்டிகளின் பரிசளிப்பு, 64ஆம் அறிவியல் பூங்கா இதழ் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன‌.
விழாவில், பன்முகத் தன்மைகளோடு கூடிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியரும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தின் பொறுப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான #முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு "அறிவுக் களஞ்சியம் விருது" வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
இந்த விருதினை மாண்புமிகு நீதியரசர் முனைவர் வள்ளிநாயகம், (நீதிபதி லோக் அதாலத் , உயர்நீதிமன்றம், சென்னை) அவர்களும், மாண்புமிகு நீதியரசர் முனைவர் தமிழ்வாணன் (தலைவர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்) அவர்களும் வழங்கினர்.
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் கலைமாமணி முனைவர் சேயோன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூட்டுநர் குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ். ஆம்ஸ்ட்ராங், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் ஏழுமலை, டிஜி வைணவக் கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்தோஷ் பாபு, மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் முனைவர் முத்துவேலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் சங்கப் பலகை துறைத் தலைவர் முனைவர் சங்கரநாராயணன் நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்தார்.



திங்கள், 11 நவம்பர், 2024

புளிச்சாங்கொடி - திணை வாழ்வைத் தேடும் கவிதைகள்… - இரா. பச்சியப்பன்

 

 



திணை வாழ்வைத் தேடும் கவிதைகள்

கவிஞர் இரா.பச்சியப்பன்

07.03.2024

வாழ்க்கை என்பதை என்னவாகப் புரிந்துகொள்வது? நிகழ்வுகள் தோற்றுவிக்கும் உணர்வுகளையும் அது தந்த நினைவுகளையும்தான் நாம் வாழ்க்கை என்று புரிந்துகொள்கிறோம் எனத் தோன்றுகிறது. நம்மினும் படைப்பாளன் உணர்வுக் கூர்மையுடையவன். இந்த உணர்வுகளின் ஆழத்தைத் தரிசிக்கிறான். மானுடத்திற்குப் பொதுவான உணர்வுகளாக  அவற்றை இரசவாதம் செய்கிறான்.

இங்குதான், உலகியல் வழக்கு, நாடக வழக்கு ஆகியன விசித்திரமான வேதியியல் வினைபுரிந்து, புலனெறி வழக்காகப் பாடலுள் ஜீவன்கொண்டு கண்மலர்ந்துத் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலுள் நாம் காண்பது என்ன? படைப்பாளன் அனுபவத்தையா, நமது அனுபவத்தையா? அனுபவம் நிலமும் பொழுதும் தருவதுதானே. இவற்றின் கூட்டுக் கலவையால் நம்மைச் சுற்றியுள்ள, நம்மோடு பிணைப்பைக் கொண்டுள்ள கருப்பொருள்களின் ஊடாகத்தானே இந்த அனுபவத்தில் திளைக்கிறோம்.

எனவே, படைப்பாளன் தனது படைப்பின் உரிப்பொருள்களை முதற்பொருளின் அடித்தளத்தில் கருப்பொருள்களின் துணையோடு எண்ணற்ற இசைக் கோர்வையாக, படைப்பாக நமக்கு அள்ளி வழங்குகிறான். முதற்பொருளோடும் கருப்பொருளோடும் பிணைந்திருக்கும் நமக்கு அது அனுபவமாகக் கேட்கிறது.

இந்தப் படைப்பை ஆழ உணர்ந்த நம் முன்னோன் திணைக் கோட்பாடாக இலக்கணப்படுத்தியுள்ளான். நம் மண்ணைப் பாடுவது எனில் ஊர்ப்புறத்தைப் பாடுவது மட்டும் எனலாகாது; நம் நிலத்தில் விளையும் அத்தனை அனுபவங்களையும் பாடுவது ஆகும். அடிப்படையில் அவை இரண்டு கூறுகளை உடையவை என்று தொல்காப்பியர், தன் முன்னோர் வழிநின்று வகைப்படுத்தித் தந்திருக்கிறார். அகமென்றும் புறமென்றும் வகை கண்டு, அவற்றுள் எல்லா அனுபவங்களையும் அடக்க முற்பட்டிருக்கிறார். இது மானுடப் பொதுமையானது. இது, தமிழர் கண்ட இலக்கியக் கோட்பாடு. 

சங்க இலக்கியங்களில்தாம் திணைக் கோட்பாட்டை முன்வைத்து அதிகமாகப் பேசுகிறோம். ஏனெனில், அவை தமிழர்  வாழ்வை ஆழமாக வெளிப்படுத்துகின்றன. அப்படி வெளிப்படுத்தும் போக்கு பிற்காலங்களில் மங்கி, சிலபோழ்து முற்றிலும் அயல்நெறிக்கு ஆட்பட்டுள்ளது. தொண்ணூறுகளில் மீண்டும் அந்த எழுச்சி தொடங்குகிறது. இதனைத் தீவிரமாகத் தொடங்கிவைத்தவர் கவிஞர் பழமலய். அவரைத் தொடர்ந்து இளம் படைப்பாளிகள் பலர் தொகைதொகையாய் எழுத வந்தனர். அவ்வகைக் கவிஞருள் தன்னையுணர்ந்து, படைப்புச் செயல்பாட்டில் தீவிரமுள்ளவர் கவிஞர் ஆ. மணவழகன். இவர் ஏற்கெனவே, ‘கூடாகும் சுள்ளிகள்எனும் கவிதை நூலைத் தந்தவர். புளிசாங்கொடிஇவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு.

காலத்திற்கேற்றவாறு விரிவாக்கம் செய்யப்படாத எதுவும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கிவிடும் ஆபத்து உள்ளது. திணைக் கோட்பாடு என்பது, திணை வாழ்க்கைமுறை சிதையாமல் இருந்த சங்ககாலத்தில் தோன்றிய கவிதைகளுக்கு மட்டுமானது என்று தோன்றவில்லை. எல்லையற்ற வாழ்வைத் தமது மண்ணின் தன்மைக்கேற்பப் பாடும் எல்லாக் காலத்திற்குமானது எனவும் கொள்ளலாம்.

நிலமும் காலமும் ஆகிய முதற்பொருளும் அது தோற்றுவிக்கும் கருப்பொருளும் தொண்ணூறுகளுக்குப் பின்வந்த கவிதைகளில் தீவிரமாக இயங்குகின்றன. நவீனப் பாடுபொருள்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவை அகம் புறமாகவே வெளிப்படுகின்றன.

கவிஞர் மணவழகனின் இத்தொகுப்பில் அகத்திணைக் கவிதைகளும் புறத்திணைக் கவிதைகளும் கலந்தே உள்ளன. எனினும், புறத்திணைக் கவிதைகளே மிகுதியாக உள்ளன என்பதை எப்படிப் புரிந்துகொள்வது. அகவாழ்க்கையினும் புறவாழ்க்கை நம்மை அலைக்கழிக்கிறது எனலாமா? இவற்றிலும், காஞ்சித் திணைக் கூறுகள் மிகுந்திருப்பதை எவ்வகையில் புரிந்துகொள்வது. நமது வாழ்க்கைக் கண்ணீரால் புதைந்துள்ளது எனக் கொள்ளலாமா? வாகைத் திணையும் பாடாண் திணையும் சிலக் கவிதைகளில் வெளிப்படுகின்றன. இன்னும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான அல்லது வாழவேண்டியத் தேவைக்கான ஆதாரமாக இவை உள்ளன என்று கொள்ளலாமா? இவ்வகையில்தான் இத்தொகுப்பை நாம் மீண்டும் மீண்டும் வாசிக்கிறோம்.

இத்தொகுப்பில் உள்ள ஒப்புசான் மலைஎன்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். முதுகுடி மகளிரின் திறல்மிகு வாகைஎன்பதை, ச.பாலசுந்தரம் மனைநிலை வாகைஎன்று பாடங்கண்டு உரை கண்டவாறோ, ‘அனை நிலை வாகைஎன்று இளம்பூரணர் பாடங்கொண்டு, ‘பிறவும் அன்னஎன்று உரை கண்டவாறோ இக்கவிதையை நோக்கலாம். காமம் நீத்த பாலினாலும்என்று வாகைத் திணையின் துறையாக இக்கவிதைக்குத் துறை வகுக்கலாம்.

இன்பம் துன்பம் எதுவாயினும்

அடைக்கலமாவது பாட்டியிடமும்

ஒப்புசான் மலையிடமும்தான்

 என்று இக்கவிதையில் வருபவர் பேசுகிறார். அப்போது ஒப்புசான் மலையும் பாட்டியும் ஒன்றாகவே இணைந்து, நம்முன்னே பெரும் ஆகிருதியாய் நிற்கின்றது.

காயாகக் கனியாகக்

கொடியாகத் தழையாக

ஏதாவதொன்றை எனக்காக வைத்து...

என்று அந்த மலையின் கருணை வரிகளில் விரிகிறது.

வளமனைத்தையும் இழந்து நின்ற

பெருங்கோடையிலும்...

 

ஒப்புசான் மலையின் அடிமடியில் ஏதேனும் ஒன்று பசியாற்றும். வறட்சியின்போதும் நாடிவரும்  உயிர்களுக்காக ஏதேனும் கொடுத்துப் பசியாற்றும் இதன் அடிவாரம் பாட்டியின் அடிமடியைப் போன்றது.  அடிமடிஎன்று கவிஞன் ஆளும் சொல் மிக முக்கியமானது. இங்குதான், ‘அருளொடு புணர்ந்த அகற்சியானும்என்று தொல்காப்பியன் கண்டது நினைவுக்கு வருகிறது அல்லது முதுகுடி மகளிரின் திறல் வெளிப்படுகிறது.

பாட்டியின் அடிமடி ஓர் அமுத சுரபி. பாட்டியின் வயிறு காய்ந்திருந்தாலும் பேரப்பிள்ளைகளுக்கு அடிமடி நிறைந்தே நிற்கும். நைந்து கிழிந்தப் பழம்புடவையின் ஒருமுனையில் ஏதேனும் ஆகாரம் முடிச்சிட்டு, அடிமடியில் செருகியிருக்கும். அது பார்ப்பவர்க்குத் தெரியாது. பேரனின் பசியறிந்து, கருணைமிகு கரங்களுக்கு வெளிப்படும். மடியவிழ்க்கும் முன்னே பேரப்பிள்ளைகள் கரங்கள் பறிப்பதுமுண்டு.

பாட்டியினதும் ஒப்புசான் மலையினதும் அருளைவிட்டு விலகி, வாழ்க்கைப் பாட்டிற்காக நெடுந்தொலைவு வந்துவிட்டான் பெயரன். வந்த இடத்தில் குறிஞ்சி நிலத்திற்கு விளக்கம் சொல்லியாகவேண்டிய நிலை. அப்போதெல்லாம் நினைவிலாடுகிறது ஒப்புசான் மலை. குறிஞ்சி வாழ்க்கை வாழ்ந்தவன் வெற்று விளக்கத்தில் திகைத்து நிற்கிறான். ஏனெனில், ஒப்புசான் மலை திடுதிப்பென அருகில் நிற்கிறது. இது ஒரு பிரமைதான். ஆனால் மனம் குறிஞ்சி நிலத்தில் அலைகிறது. ஒப்புக்கு விளக்கம் சொன்னால் ஒப்புசான் மலை விடுமா?

இக்கவிதையில் நிலம், பொழுது துல்லியமாக உள்ளது. குறிஞ்சி நிலத்தைப் பேசிவிட்டு வாகைத் திணைக் கவிதை என்கிறீர்களே என்று கேட்கத் தோன்றும். வெட்சிதானே குறிஞ்சியது புறனேஅல்லவா. வாகை எல்லாப் புறத்திணைக் கூறுகளையும் உள்ளடக்கியது ஆகும். தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப்படுத்தல் என்பஎன்கிறார் தொல்காப்பியர். ஒப்புசான் மலையினது, பாட்டியினது அருள் வாழ்க்கையை விதந்து பேசுகிறது இக்கவிதை.

"கொற்றவை கண்விழிக்கிறாள்என்ற கவிதை சமகால அரசியலை வெளிப்படுத்தும் உச்சம். திணைவாழ்வை, அதன் மேன்மையை, திணைக்குடிகளின் விழுமியங்களைப் பேசுகிறது. உட்பகையால் சிதைந்தக் கோட்டையின் அவலத்தைப் பாடுகிறது. தமிழன் கண்ட விழுமியத்தை வீழ்த்த நடந்த சூழ்ச்சிகளை வெளிப்படையாக விவாதிக்கிறது. நிறங்களின் குறியீட்டோடு அறிமுகமான தத்துவங்கள் எல்லாம் எப்படி எம் மக்களுக்கு எதிராய் நிற்கின்றன என்று புரியவைக்கிறது.

இந்தக் கவிதையில் இயங்குகிற காலம் - பொழுது தற்காலம் ஆகும். காலத்தை விரிவாக்கம் செய்து  இக்கவிதையை வாசித்தால் பல நுட்பங்கள் வெளிப்படுகின்றன. இதில்வரும் கொற்றவை இக்காலத்தைப் பாலை எனப் புரிந்துகொள்ள உதவுகிறாள். பல ஊழி கண்மூடிக்கிடந்தவள் கண்திறந்து பார்க்கிறாள். எல்லாம் வறண்டு கிடக்கிறது. வாகைதானே பாலையது புறனேஎன்கிறார் தொல்காப்பியர். நமது மேன்மைகளைச் சொன்னால்தான் இளம் தலைமுறைக்கு வீறுணர்ச்சி எழும். வாழ்க்கை மீளும்.

மானாவாரிகவிதை அற்புதமான குறிஞ்சித்திணைக் கவிதை. தலைவியின் சொற்கள் தினையாய் விளைந்து கிடக்கின்றன. அருவடைக்கேனும் வருவாள் எனத் திணைப்புனத்து அருகில் தலைவன் காத்துக்கிடக்கிறான்.

நடவுவயல் அழித்து வழித்தடம் அமைக்கும் கொடூரத்தை, கால்களில் ஒட்டியிருக்கும் புழுதி மண்ணை, எங்கு வீசினும் வேர் பிடிக்கும் தேன்பசலையை, நாம் கண்ட ஐவன நெல்லை, ஒப்புசான் மலையில் அடர்ந்து செழித்திருக்கும் செடி, கொடிகளை, தூய்மை இந்தியாவின் போலிமுகத்தை, விவசாயியின் பிள்ளை என நினைக்கவும் கூச்சப்பட்ட முதல் தலைமுறையை, தீநுண்மிச் சூழலை, சென்னையின் பெருவெள்ளத்தை, இரவல் புறாக்களுக்கு உணவிடும் அயல்வாழ்வை... என நமது வாழ்வின் அத்தனைப் பக்கங்களையும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பேசுகின்றன.

செய்யுளை நாடுங்காலை நமக்குத் திணை வெளிப்படுவது போல பிற அழகியல் கூறுகளும் இத்தொகுப்பில் மிளிர்கின்றன. குறிப்பாக, உள்ளுறை உவமம். கருப்பொருள் வாயிலாகத் தாம் சொல்லவந்ததை நமக்கு ஆழ உணர்த்திச் செல்லும் பாங்கு அலாதியானது.

இடனறிஎன்ற கவிதையை இங்குக் காணலாம். நம்பி வளையை விட்டு வெளியே வருகிறது நண்டு. சிறு நரியின் சூழ்ச்சி அது அறியாது. விடிந்தபோது பார்த்தால் சில்லு சில்லாய் நொறுங்கிக் கிடக்கிறது நண்டு.

நண்டு என்பது யாது? யார்? வாழ்வை ஏமாற்றி நொறுக்கிய நரி எது? யார்? இப்படிப் பல கவிதைகளில் கருப்பொருள் வழியாக உள்ளுறை உவமம் பொதியப்பட்டுள்ளது. 

          வலம் இடம்

        முறைமாறிப்

        பூட்டிக்கொண்டு

        சால் பிடிக்கும்

        வாகு அறியாமல்

        தவித்து நிற்கின்றன...

        மணமுறிவு மன்றங்களில்

        மாநகர எருதுகள்!

என்பது ஒரு சிறு கவிதைதான். ஆனால், தற்காலத்தில் காணலாகும் மிகப்பெரிய சமூக அவலத்தை உள்ளுறை உவமமாகச் சுட்டி நிற்கிறது. 

நிழல் தின்று

செரித்துப் பருத்த

கடுங்கோடை ஞாயிற்றின்

வெண்கதிர்கள்

உன் சொற்கள்!

                              ***

உதிர்ந்த இதழ்களைச் சேகரித்து

ரோசாப்பூ தைக்க எண்ணும்

அப்பாவிச் சிறுமியாய்...!

                             ***

மழைநீர் வாய்க்கப்பெற்ற

மானாவாரியாய்...!

 போன்ற வாழ்வியல் உவமைகள் தொகுப்பெங்கும் அணிசெய்து, மனத்தில் காட்சிப் படிமங்களாய் நிறைந்து நிற்கின்றன.

 கவிதைகள் பெரும்பாலும் ஆசிரிய நடையில் இயங்குவது தவிர்க்க முடியாததாகிறது. வடிவ ஒழுங்கால் அல்ல; ஆனால், அந்தக் குரல். முன்னிலையாக ஒருவரை நிறுத்தி தான்வாழ்ந்த வாழ்வை, தற்கால நிலையை உரைப்பது மாதிரியான தொனி.

இவ்வகையில் நமது தொன்மைக் கோட்பாடான திணைக் கோட்பாடுவழி புளிச்சாங்கொடியைநோக்குகையில் நம் மண்ணுக்கு நாம் மீண்டதான உணர்வு வருகிறது. இன்றைய புற உலகம் நமக்கு அயல் மண்ணில் அகதி வாழ்க்கை போன்ற ஒன்றைத் தந்துள்ளதிலிருந்து சிறு மீட்சி.

கவிஞர் ஆ. மணவழகள் தெளிந்த சங்கப் புலவனாய் தற்காலத்தில் இயங்குகிறார். அவரது ஆய்வு உலகம் போலவே படைப்பு மனமும் வற்றாத ஜீவிதத் தன்மை கொண்டது. பல தொகுப்புகள் மூலம் இவர் மேலும் சிறக்க வாழ்த்துகள்.


நூல் : புளிச்சாங்கொடி
ஆசிரியர் : கவிஞர் ஆ.மணவழகன்
அய்யனார் பதிப்பகம்
சென்னை 600088
9789016815 / 9080986069

வெள்ளி, 8 நவம்பர், 2024

கூடாகும் சுள்ளிகள் - கவிதைத் தொகுப்பை முன்வைத்து - கவிஞர் இரா.பச்சியப்பன்

 



கூட்டின் அடிவயிற்றில் மெத்தென்ற சிறு பஞ்சு மீது...

 கவிஞர் இரா.பச்சியப்பன்

 

கண்காணாத தூரத்தில் பிழைக்கும்படியான நெடுங்காலம் கடந்த பின்பொழுதொன்றில், பால்ய நண்பனோ ஊர்க்காரனோ எதிர்ப்படும்பொழுது மனசின் அடியாழத்திலிருந்து அப்படியேன் அலையெழும்புகிறது? கரங்கள் பற்றும் தருணத்தில் துளிர்க்கும் கண்ணீரைச் சட்டென்று ஒதுக்கிவிட முடிகிறதா என்ன? தனக்குப் பிடித்தமான ஒன்றை எதிர்பாராத கணத்தில் காண நேர்கிறபோது அவ்வளவு எளிதில் முகம் திருப்பிக்கொள்ள இயலுமா என்ன?

 சென்னைக்கு வந்த புதிதில் மாநிலக்கல்லூரியின் பின்புறத்தில் வௌவால்கள் நிறைந்த அந்த ஆலமரத்தை அடிக்கடி போய் ஆச்சர்யம் மீதுற பார்த்திருக்கிறேன். ஊரில் இலுப்பைத் தோப்பில் அப்படித்தான் வௌவால்கள் கொத்துக்கொத்தாய்க் கனிந்திருக்கும். மூங்கில் புதர் வேலியாய் அமைந்த அந்தத் தோப்பில் கங்கையம்மன் அகண்ட கண்களோடு வௌவால்கள் பறப்பதை, விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். வௌவால்களின் முகம் அசப்பில் குழந்தையின் முகம்போலவே தோன்றும். நெடுங்காலத்திற்குப் பிறகு சென்னையில் நுணா மரத்தைப் பார்க்கிறபோதும் அப்படித்தான் நிற்கத் தோன்றியது. கம்மம்பூக்களின் வாடையும், நுணாப் பூக்களின் வாசனையும் தொலைத்த வாழ்வில் எங்காவது அவை தட்டுப்பட்டால் வேறென்னதான் செய்வது?

 கவிதைகூட அப்படித்தான் போல. மெல்லிய இசையாய் நமக்குள் தங்கிவிட்ட ஒரு பொழுதை, காலம் ஆற்றிய பெரும் தழும்பை, மழைக்காலத்தில் பழகிய நீச்சலை, நேருக்கு நேர் நின்று ஊழ் துப்பிய எச்சிலை என ஏதேனும் ஒன்றை ஒவ்வொரு கவிதையும் சொல்லிக்கொண்டே இருக்கிறது. கவிதை பறவைகள் போல. அவை நம்மைப் பொருட்படுத்துவதேயில்லை. அதன் அலகில் இருக்கும் சுள்ளிகளோ, இரையோ நம்மிடமிருந்து யாசித்துப் பெறாதவை. நமக்குப் போல இல்லை. அதற்கென்று எல்லையற்ற வானமும் சிறுகிளையும் வாய்த்திருக்கிறது. பறவைகள்போல கவிதை செய்கிறவர்கள் பாக்கிவான்கள். நள்ளிரவொன்றில் குழல்விளக்கு வெளிச்சத்தில் நண்பர் மணவழகன் கவிதைகளை வாசிக்கிறபோது பறவைகளும் வௌவால்களும் நிறைந்த தோப்பில் நுழைவதுபோலவே உணர்ந்தேன். சருகு மூடிய குளமும் நாவல் மரத்தின் கிளையொன்றிலிருந்து சட்டெனப் பாய்ந்து மீனைக் கொத்தியபடி மறுபடி கிளையமர்ந்து தலைசிலிர்ப்பும் மீன்கொத்தியும், பெரிய மூக்கு விடைக்கும்படி நோக்கும் கங்கையம்மனும் நெடுநாளைக்குப் பிறகு சந்தித்த ஆச்சர்யம்தான்.

 சிறியதும் பெரியதுமான சற்றேரக்குறைய எழுபது கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் பணிபுரிந்த தொடக்க காலத்திலிருந்து என்னுடன் அவர் மனமுவந்து பழகிவந்திருக்கிறார். சங்க இலக்கியங்களை வாசித்திருக்கிற, ஆய்ந்திருக்கிற அவரின் ஆழம் நம்மை தூரவே நிறுத்திவைத்து வியக்க வைக்கும். இடையில் முளைக்கும் சிறுபுதரை அழித்து, எழுப்பி வைத்திருக்கிற தயக்க வேலியினை மிதித்துவந்து அவரின் நட்பு வட்டத்தில் நம்மை இணைத்துக் கொண்டதற்கு அவருக்குள் இருக்கிற படைப்பாளி ஒரு பெரும் காரணமாக இருந்திருக்கலாம். இணையத்தில் வெகுகாலமாய்க் கவிதைகள் எழுதிவந்திருக்கிறார். இணையத்தில் அவரின் வாசகர் வட்டம் மிகப்பெரிது.

 இளம் ஆய்வாளருக்கான செம்மொழி விருதினைப் பெற்றிருக்கும் ஒருவருக்குள் இன்னும் அந்தக் கம்மங்கொல்லை குருவிகள் பறக்க, காற்றிலாடும் கொல்லை வனப்பு கூடியிருப்பது மிகுந்த ஆச்சர்யம்தான். தனியார் கல்லூரியின் வேலைப்பளுக் கிடையில் இத்தனை சாத்தியங்களைக் கொண்டிருப்பது சாதாரணமானதல்ல.

 இந்தத் தொகுப்பினை வசதிக்காக மூன்று வகையாகப் பகுத்துக்கொள்ளலாம். உருகி உருகிக் காதலிக்கும் நெஞ்சத்தின் உணர்வுகள்; இழப்பின் காயத்தின்வழி கசியும் துளிகள்; தனக்கான அரசியலை முழங்கும் பதாகைகள் எனப் பெரும்பான்மையான கவிதைகளை உத்திபிரித்துக்கொள்ளலாம். நெற்கட்டை

 அரி அரியாக வைப்பதில் ஓர் அழகு மட்டுமல்ல ஓர் அவசியமும் இருக்கிறது. ஒரே பக்கம் கதிர்வைத்துக் கட்டுக் கட்டமுடியாது. சின்னச்சின்ன கட்டாக்கி கட்டுப்போர் போடுவது ஒருவகை. பென்னைப் பென்னையாய் வைக்கோல் சுமைகட்டி வைக்கோல் போர் போடுவது ஒருவகை. முன்னதில் தனித்தனியாக எடுக்கவேண்டிய அவசியம் இருப்பதுபோலவே பின்னதில் பின்னிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. கவிதையைச் சொல்லியிருக்கிற உத்தியும் அதாவது, கட்டியிருக்கிற பாங்கும் அதனை வரிசைக்கிரமாய்த் தொடுத்திருக்கிற பாங்கும் மிக நுட்பமானது.

                 சாக்கடை நாற்றத்தோடு கழிவுநீர் ஊற்றுகள்

அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்

பறவைகள் அமர்ந்தறியா செயற்கை மரங்கள்

முளைக்காத தானியங்கள்

விதை கொடுக்காத கனிகள்

உயிரில்லா முட்டைகள்

தாய் தந்தை உறவறியா

குளோனிங் குழந்தைகள்

 

எனச் சொல்லுகிற ஒரு ஒழுங்குமுறை. மனதுக்குள் இசை அலையைச் சீராக எழுப்பி கரையில் வந்து அடிப்பதுபோல் கடைசியில் மனிதக் கொடூரத்தின் முகத்தை எழுதுகிற எழுத்து லாவகம் அடுத்து இப்படிச் செல்கிறது...

                                 ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும்

அறிவியல் வளர்ச்சிகள்

ஆடுகளை மலையில் விட்டு

அருகிருக்கும் கொல்லையில் கதிரொடித்து

பால் பருவக் கம்பைப் பக்குவமாய்        நெருப்பிலிட்டு

கொங்கு ஊதி தாத்தா கொடுத்த

இளங்கம்பின் சுவைக்கு

ஈடு இது என்று

எதைக்காட்டி ஒப்புமை சொல்வேன்

பச்சைக் கம்பு தின்றதே இல்லை

ஆதங்கப்பட்ட தோழிக்கு

 

பல மைல் வெயில் கடந்து வந்தவனுக்குச் சட்டென்று ஒரு புங்கை நிழல் கிடைப்பதுமாதிரி, கொடுமை வாழ்வை அடுக்கிச் சொல்லிவிட்டு ஒரு கம்மங்கதிரில் இழந்த வாழ்வின் ருசியைச் சொல்லியிருக்கிற நேர்த்தி சாதாரணமானதல்ல. இங்கே வருகிற ஆடுமேய்த்தலும், கம்மங்கதிரைச் சுட்டுத்திண்ணலும் அதைமட்டுமேயா உணர்த்தி நிற்கின்றன? பறவை அமர்ந்தறியா செயற்கை மரங்களெனச் சொல்லுகிறபோது மரங்களை மட்டுமா சுட்டுகிறது? வரிசையாய்க் கடக்கும் நமது நாட்கள் கூட மரங்கள்தானே. நமது நாட்களில் ஒரு கணம் பறவை அமர்வதுபோன்ற அனுபவம் நேர்ந்ததுண்டா? நமது மரங்கள் எதற்காகவோ வானுயர்ந்து நிற்கின்றன. அதுதரும் நிழல் ஒன்றுதானா வேரோடி நிற்பதற்கான காரணம். இதே போன்றதொரு இழப்பின் வலி சொல்லும் மற்றொரு அற்புதமான கவிதை இக்கரைக்கு அக்கரை’. ‘வீடு சுமந்து அலைபவன்கவிதை தமிழர்களின் அவல வாழ்வினையும் சேர்த்தே சொல்லுகிற கவிதை.


                இருந்தது இல்லாமல் போகும்போதும்
                                இருப்பு இடம்மாறிப் போகும்போதும்தான்
                                உரைக்கிறது
                ஏதிலிகளின் வலி

தன்னனுபவத்தில் சிறகு விரித்து பெரும் ஜனசமூகத்தின் நெடுங்காலத் துயர வரலாற்றோடு கைகோர்த்து நிற்கிறது இக்கவிதை.

 

இத்தொகுப்பு காதல் கவிதைகளால் மேலும் அழகாகிவிடுகிறது. காலகாலமாய் ஓடும் ஜீவநதியின் அடிமடியில் உருண்டு விளையாடும் கூழாங் கற்களின் மினுமினுப்பில் இருக்கிறது நீரின் காதல். உதிர்ந்த சிறகுஎன்ற கவிதையில் இப்படி வருகிறது:


                                 பெரும் பயணத்திலும் பேருந்து ஓட்டத்திலும்
                                கண்ணில்படும் பலகையின் பெயரைக்
                                கண்டு மனம் பதைபதைக்கும் - அவள்
                                வாழ்க்கைப் பட்டது இவ்வூரோ?...

 ஓடுகிற ஓட்டத்தில் கண்ணில் அடிக்கும் முள்ளாய் அந்த ஊர்ப்பெயர். தூலம் உளுத்து ஒருபக்கமாய்ச் சாய்ந்த கூரை ஒழுகி ஓதமேறிக்கிடக்கும் மண்சுவராய் மனம். மழைக்காலத்தின் நள்ளிரவொன்றில் குடும்பமே அலறுவதுபோல ஏதோ ஒரு பொழுதில் அந்த ஊர்வழியே கடக்கிறபோது நினைவுகளின் அலறலை என்ன செய்துவிட முடியும். ஒரு கவிதை எழுதுவது தவிர.

                                 எந்திரமாய்க் கை குலுக்கி

              என்றும் போல்
                                புன்னகைத்துப் பிரிந்த 
             அந்தக் கடைசி நிமிடம்...

 இப்படி நிறைய இடங்களைச் சொல்லலாம். காதல் கவிதை எழுதும்போது எந்தச் சவாலும் எழுந்து நிற்கவில்லை. சண்டையில் தோற்றுப்போனவனின் தூங்காத இரவுகள் போலவே அவஸ்தைப்படுத்துகிற வார்த்தைகளால் நெய்யப்பட்டிருக்கின்றன.

                 அரசியல் கவிதைகள் வனைதலில் தமிழர்களின் குருதியே முதன்மையாகிறது. இழந்த மண்ணிலிருந்து சிந்திய ரத்தம் கொண்டு ஆத்திரங்கொண்டு எழுத்தைச் சுற்றி வெறிகொண்ட கைகள் விரல் நுணுக்கத்தில் எழும்பி வந்தவை அவை. முடிகிற இடத்தில் சரியாக அறுத்து மாலை வெயிலில் காயவைத்துத் தட்டித்தட்டி சூளையிலிட்டதை மனம் தட்டிப்பார்க்க திசைகள் அதிர்கின்றன. பொய்த்தேவுகவிதையில் வெளிப்படையாகவே தனது அரசியலைச் சொல்கிறார் கவிஞர். அதற்கான வரலாற்று நியாயங்களையும்  வாசகனுக்குத் தெளிவுபடுத்துகிறார். பத்துக் கோடிக்கும் மேலாக வாழ்கிற ஓர் இனம் தமது ஒரு பகுதி மக்கள் துடிக்கத்துடிக்கச் சாகிறபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே எதனால்? காஷ்மீரிகளைப் போல தனித்த தேசிய இறைமை கொண்ட இனமாக, கவிஞர் சொல்லில் சொன்னால் நான் தமிழன் என்கிற ஒரு தெளிவு இல்லாததுதானே காரணம். இந்த இனம் நினைத்திருந்தால் ஓர் அரசியல் நிர்ப்பந்தத்தை உருவாக்கிப் பேரழிவிலிருந்து காப்பாற்றி இருக்காதா என்ன?

                 ‘மே 2009’ கவிதை மிக நுட்பமாக இந்த அரசியலைப் பேசுகிறது. கையாலாகாதனத்தின் முன்பு நமது எல்லாப் பெருமிதங்களும் பல்லிளித்துக்கொண்டு நிற்பதை இக்கவிதை எடுத்துக்காட்டுகிறது. பிரபாகரன்கவிதை நம்பிக்கைப் புள்ளியிலிருந்து எழுந்ததாக இருக்கிறது.  

 இது மிளகாய்த் தோட்டத்தில் முதல் வெப்புபோல. உள்ளே நுழைந்து பழமெடுக்கும்போது பூவும் பிஞ்சும் உதிராமல் நடக்கப் பழகும் நளினம் வேண்டும். நாற்று நட்டதிலிருந்து பார்த்தால் முதல் வெப்பு நெடுங்காலம் கடந்ததாய்த் தோன்றும். ஆனால் அவை நேர்த்தியானவை. பழுதில்லாதவை. அடுத்த வெப்புமிக விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த தொகுப்பை இதைவிட நேர்த்தியாகக் கொண்டுவருவார் என்பதற்கு இத்தொகுப்பு ஓர் உதாரணம். ஏனெனில் தமிழ் வாழ்வு என்ற வற்றாத கிணறு இவர் மனசில் உண்டு.

 மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் ஆந்தைகளும் வௌவால்களுமெனப் பறவைக்காடாய் இருந்த அந்த இலுப்பைத் தோப்பை விழுங்க சுற்றியிருந்தவர்களுக்குப் பேராசை வந்தது. வெங்கோடை இரவுப் பொழுதொன்றில் மூங்கில் புதர் தீப்பற்றியதாய்ப் பேச்செழுந்தது. கொள்ளிவாய் பிசாசின் வேலையென்று வேடிக்கை பார்த்தனர். குஞ்சுகள் கருகும் நிணவாடையும் புகையும் ஊரைச் சூழ, இலுப்பைத் தோப்பின் பெருமைமிகு வரலாற்றைத் திண்ணைதோறும் வாய்வலிக்கப் பேசினர். பறவைகளின் அலறல் ஓய்ந்த மாலையொன்றில் எரிந்த விறகுகளை ஆளாளுக்குச் சுமந்துவந்தனர். வரப்புகள் எல்லை மாறின. பஞ்சாயத்தின் தீர்மானங்கள் மாறின. கங்காதேவி மொசைக் பதித்த சிறு கோயிலில் பளபளக்க அருள் பாலிக்கிறாள். கங்கா நகர் என்று அறிவிப்புப் பலகையொன்று வழிகாட்டுகிறது. வௌவால்களையும் குருவிகளையும் இலுப்பை மரங்களையும் மனதில் சுமந்து பித்தேறித் திரிபவர்கள் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சடைமுடி குலுங்க மந்திரம் ஜெபிக்க ரத்தப் பலியிட்டு நிணச்சோறிறைத்து ஏவிய இந்த ரத்தக்கவிதைக் காட்டேறி பழிவாங்க மாட்டாளா? செய்வாள்.


 கூடாகும் சுள்ளிகள்
(கவிதைத் தொகுப்பு)
கவிஞர் ஆ. மணவழகன்
அய்யனார் பதிப்பகம்
ஆதம்பாக்கம், சென்னை-88
9789016815 / 9080986069

விலை ரூ.120