புதன், 5 ஜூலை, 2017

அரச முறைமை - வரிவிதிப்பு


நாட்டில் குடிமக்களை வருத்தி வரி வசூலித்தல் செங்கோன்மையன்று. அவ்வகை அரசு கொடுங்கோன்மை அரசாக அக்காலத்தில் ஒதுக்கப்பட்டது. அதனால்தான் சிலப்பதிகாரத்தில், மாடலமறையோனின் அறிவுரையால் இனி, ‘குடிமக்களிடம் வரிவசூலிக்க வேண்டாம், நம் எல்லைக்கு உட்பட்டிருக்கும் சிற்றரசுகளும் நமக்குத் திறை எதுவும் செலுத்த வேண்டாம், இதை இன்றே எல்லோருக்கும் தெரிவியுங்கள்’ என்று சிலம்பில் சேரன் செங்குட்டுவன் உத்தரவிடுகிறான். வரையறையின்றிப் பெறப்படும் வரியால், அரசின் கையிருப்பு உயருமே அன்றி, மக்களின் வளம் பெருகாது என்பது தொன்மைச் சான்றோரின் தொலைநோக்கு.

            வரிவிதிப்பு மக்களின் வருவாய்க்கு உட்பட்டதாக அமைதல் வேண்டுமே தவிர, குடிமக்களைத் துன்புறுத்தி மிகுதியும் பெறுவதாக இருத்தல் கூடாது. வலிந்து பெறும் வரி அரசுக்குத் தீராத பகையாக முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது(புறம்.75).
            மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
          உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்
          பொன்னும் கொள்ளார் மன்னர் (நற். 226:1-3)
என்பார் கணிபுன்குன்றனார். இதில், மருந்துமரம் என்பதற்காக வேரோடு பிடுங்கி பயன்படுத்துதலும், வரம் கிடைக்க உயிர் நீங்கமட்டும் தவம் செய்தலும் எப்படித் தீதாகுமோ அதைப்போல, மக்களின் வளம் கெட அவர்களை வருத்தி வரிவசூல் செய்தலும் மிகுந்து துன்பத்தைத் தரும் என்கிறார்.  அதேபோல, சிறப்புக்குரிய அரசுரிமையை அடைந்துவிட்டோம் என எண்ணிக்கொண்டு, தம் குடிமக்களிடம் வரியை வேண்டி இரக்கும் அரசன் சுமக்க இயலாத துன்பத்திற்கு ஆளாவான் என்றும், அப்படிப்பட்டவன் ‘கூரில் ஆண்மை சிறியோன்’(புறம்.75) என்றும் சோழன் நலங்கிள்ளி சினம்கொள்கிறான்.

            முறையற்ற வரிவசூல் செய்யும் அரசை எச்சரிக்கும் புலவர் பிசிராந்தையாரோ, ஒரு மா என்னும் அளவைவிடக் குறைந்த நிலமேயாயினும், விளைந்த நெல்லைக் கொண்டுவந்து கவளமாக்கி யானைக்குக் கொடுத்தால் அது பலநாட்களுக்கு உணவாகும். நூறு செய் அளவுடைய பெரிய நிலமாயினும் அதனுள் யானை தானே தனியாகப் புகுந்து உண்ணத் தொடங்கினால், யானையின் வாயினுள் புகும் நெல்லைக் காட்டிலும் கால்களில் மிதிப்பட்டு அழிவது மிகுதியாகும். அதுபோல, அறிவுடைய மன்னன் ஒருவன் குடிமக்களிடமிருந்து வரி வாங்கும் நெறியை அறிந்து வாங்குவானானால், அவனது நாட்டில் வாழும் குடிமக்கள் அவனுக்கு மிகுதியும் பொருளைத் தந்து தாங்களும் தழைப்பர். மன்னன் அந்நெறியை அறியும் அறிவற்றவனாகி, குடிகளைத் துன்புருத்தி வரிவசூல் செய்வானாயின் அந்த யானை புகுந்த விளைநிலம்போல, தானும் உண்ணப் பெறான்; உலகும் அழியும் (புறம்.184) என்று எச்சரிக்கிறார்.

            அதனால்தான், ‘உலகம் கொள்ளும் அளவிற்குச் செல்வம் கிடைக்கப்பெறினும் பழியோடு வரும் செல்வம் வேண்டாமென’ விலக்கப்பட்டது. ஆம். பேரரசு, சிற்றரசு என்பதெல்லாம் மக்கள் விரும்பும் நல்லரசு என்பதிலேயே அளவிடப்படுகிறது.  

-       குறிப்பு நூல்: தொலைநோக்கு, முனைவர் ஆ.மணவழகன்.



புதன், 28 ஜூன், 2017

பழந்தமிழர் நீதி

நீதி வேண்டுவோர், தன் வயது குறைவு காரணமாக தான் வழங்கும் நீதியைக் குறைவாக எண்ணிவிடக் கூடதென்று ‘முதியவர் வேடமணிந்து’ நீதி வழங்கிய கரிகாலன்!


தன் மகன் அறியாது செய்த பிழைக்காக அவனைத் ‘தேர்க்காலிலிட்ட’ மனுநீதிச் சோழன்!


நீதிமுறைமை மாறிவிடக் கூடாதென்பதற்காக அறியாது செய்த சிறு பிழைக்கும் ‘தன் கையையே வெட்டிக்கொண்ட’ பொற்கைப் பாண்டியன்!


அடைக்கலம் வந்த புறாவிற்காக ‘தன் தசையையே அறுத்துக்கொடுத்த’ சிபி!


- இவை வரலாறோ, புனைவோ எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இவர்களின் செயல்கள் உலகிற்கு உணர்த்துவது இதைத்தான்: நீதிக்காக உணர்வு, உறுப்பு, உடல், உறவு, உயிர் அனைத்தையும் இழக்கலாம். ஆனால் நீதியை மட்டும் எதன்பொருட்டும் இழக்கக் கூடாது.
-முனைவர் ஆ.மணவழகன்



முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்குக் கவிச்செல்வர் விருது


தமிழ்நாடு திருவள்ளுவர் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம் சார்பில், 25.06.2017 அன்று முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்குக் கவிச்செல்வர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

செவ்வாய், 27 ஜூன், 2017

வஞ்சினம் மொழிதல் தமிழர் பண்பாடு





"வஞ்சினம் மொழிதல் தமிழர் பண்பாடு"

*********************************************** 


தமிழர் பண்பாட்டில் ‘வஞ்சினம் மொழிதல்’ என்பது தொன்றுதொட்டு வரும் மரபு. வீரயுகப் பண்பாட்டின் அடையாளமாக இது விளங்குகிறது. குறிப்பாக, அரசியல் வாழ்வில் போர்ச்சூழலை மையமிட்டதாக வஞ்சின உரைகள் அமைகின்றன. 


‘நான் எண்ணியதை எண்ணியவாறு செய்துமுடிக்கவில்லை எனில், என் நிலை இன்னதாக ஆகட்டும்’ (தகுநிலை குறைதல்) என உரைப்பது வஞ்சினம் அதாவது சத்தியம் இதுபற்றி, 


‘இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் 

துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்’ என்கிறார் தொல்காப்பியர்.


  சங்க இலக்கியங்களில் வஞ்சினம் உரைத்தல் பல காணப்பட்டாலும், புறநானூற்றில் பாண்டியன் நெடுஞ்செழியன் உரைக்கும் வஞ்சின வார்த்தைகள் ஆள்வோர்க்கும் ஆள நினைப்போர்க்கும் பாடமாகும். வயதில் இளையவனான நெடுஞ்செழியன், தன்னை எதிர்த்துவரும் இருபெரும் வேந்தர்களையும் அவர்களுக்குத் துணைநிற்கும் வேளிர்களையும் பார்த்து இவ்வாறு வஞ்சினம் உரைக்கிறான். 

     “இளையவன் இவனெனப் போர்தொடுத்து வருகிறீர். நீங்கள் நகைப்பிற்குரியவர்கள். இப்போரிலே நான் தோற்றால், என் குடிமக்கள் நல்லாட்சி நிழல் காணாமல் ‘என் அரசன் கொடியன்’ எனப் பழி தூற்றும் நிலையினேன் ஆகுக; மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர் அவை என்னைப் பாடாமல் போகட்டும்; பாதுகாப்போர் துன்புறும்போது, என்னிடம் வந்து இரப்போருக்குக் கொடுக்க இயலா வறுமையில் நான் வாடுவேன் ஆகுக! (புறம். 72).


  ஆம், குடிகளால் கொடியது எனத் தூற்றப்படுவதும், புலவர்களால் புறக்கணிக்கப்படுவதும், இரப்போர்க்கு ஈவதற்குப் பொருளற்றுப் போகும் வறுமை நிலையினை எய்துவதும் நல்லரசுக்கு அழகல்ல.





x

புதன், 28 டிசம்பர், 2016

தமிழர் திருநாள் / பொங்கல் / உழவர் திருநாள் / தைத் திருநாள்




மறந்துபோன மரபு விழாக்கள்
பொங்கல் / உழவர் திருநாள் / தமிழர் திருநாள்
முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
tamilmano77@gmail.com


            இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழருடையது. வாழ்வு கொடுத்து வளமளிக்கும்  இயற்கையைக் காத்தனர்.      உலக உயிர்களுக்கெல்லாம் மூலமான ஞாயிறையும் திங்களையும் மழையையும் போற்றினர். மரங்களையும் தெய்வங்களாக எண்ணி இயற்கையோடு இணைந்தனர்.

            உலக மாந்தரினம் பலவும் ஆடையின்றி அரைமனிதராக அலைந்து திரிந்த வாழ்வியல் சூழலில், மானிட வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாம் வேளாண்மையைக் கண்டறிந்து, அதில் மேலாண்மை செய்தவர்கள் தமிழர்கள். வேளாண் தொழிலோடும் உழவோடும் தொடர்புடைய கதிரவனையும், மழையையும், மாடுகளையும் தமிழர் கொண்டாடினர். அவற்றிற்கு விழாக்கள் கண்டு நெஞ்சம் நிறைந்தனர். ஆம், வளமைக்கும் நன்றிக்குமான விழாவான தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் பழமையும் சிறப்பும் தனித்துவமும் மிக்கது.  

            தைப் பொங்கல், தமிழர் திருநாள், அறுவடைத் திருநாள், உழவர் திருநாள்  எனப் பலவாறு அழைக்கப்படும் பொங்கல் விழாவானது, நான்கு நாட்கள் கொண்டாடப்படும் தொடர் நிகழ்வாகும்.  முதல் நாள் போகி, அடுத்த நாள் கதிரவன் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் அல்லது கரிநாள்.

            மார்கழி இறுதி நாள் போகி (போக்கி). ஆடிப்பட்ட வேளாண்மை மார்கழியில் களம் கண்டு, திங்கள் இறுதியில் வீடு சேர்த்தலின் விழாக்கோலமே இப்போகி. பழையன கழிதல் என்பதற்கேற்ப இல்லத்தைத் தூய்மைப்படுத்துதல், வெள்ளையடித்தல், செம்மண் பட்டை தீட்டுதல் போன்றன இதன் முன் நிகழ்வுகளாகும். வேளாண் குடிகளின் வாழ்வியல் சடங்குகள் பலவும் இந்நாளில் நிகழ்த்தப் பெறுகின்றன. இந்நாளில் முன்னோர் வழிபாடும் மேற்கொள்ளப்படுகிறது. புது வருவாயான அரிசியில் மாவிடித்து விளக்கேற்றுவர். போகி நாள் இரவில் இறைவழிபாடு செய்யப்பட்ட பூசைப் பொருட்களைக் கொண்டு மறுநாள் விடியற்காலையில் காடு வளைத்தல் என்ற சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, முதல்நாள் இரவில் பூசையில் வைக்கப்பட்ட மா, வேம்பு, பூளா பூ (பூளை)  ஆகியவற்றின் கொத்துகளைத் தனக்கு உரிமையாக உள்ள விளைநிலத்தின் நான்கு எல்லைகளிலும் இட்டு, தனக்கான அத்துகளை உழவர் உறுதிசெய்வர்.  

            இரண்டாம் நாள் கதிரவன் பொங்கல். தைத் திங்களின் முதல் நாளிது. செங்கதிரோன் வெளித்தோன்றும் முன்பே அடுப்பு மூட்டி, புதுப் பானை உலையில் புத்தரிசிப் பொங்கல் வைப்பர். காலைக் கதிரவன் வெளித்தோன்றும்போது பொங்கல் பொங்கவேண்டுமென்பது மரபு.  கதிரவன் வெளித்தோன்றும்போது குலவையிட்டு, பொங்கலோ பொங்கலென ஓசை எழுப்பி, இசை முழக்கி, ஆர்ப்பரித்து கதிரவனுக்கு நன்றி நவிலும் இயற்கை வழிபாடிது. அரசி மாக்கோலம், கரும்புத் தூண்களில் மஞ்சள் –வேம்பு – மாவிலை – பூளை பூத்தோரணம் என இல்லங்கள் தோறும் அலங்காரம் அணிவகுக்கும்.

            மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். உலக உருவாக்கத்திற்கு மூலமான இயற்கைக்கு நன்றி சொன்ன தமிழன், உயிர்களின் வாழ்விற்கு அடிப்படையான வேளாண் தொழிலில் துணைநிற்கும் விலங்குகளுக்கு நன்றி நவிலும் நன்னாளே இந்நாள். உழவனின் வாழ்வியல் மூலதனம் எருது. உழவனுக்கு எது வாய்க்கிறதோ இல்லையோ தொழிலுக்குத் துணையாக எருதுகள் வாய்க்க வேண்டும். நல்ல எருதுகள் வாய்க்கப்பெற்ற உழவன் பேறு பெற்றவன்.  மாட்டுப் பொங்கல் நாளில் எருதுகளையும் பசுக்களையும் குளிப்பாட்டி, உடலில் வண்ணப் பொடிகளால் அணிசெய்வர். கொம்புகள் சீவி, வண்ணம் தீட்டி அழகுபடுத்துவர். புதுக் கயிறு மாற்றி, சலங்கை கட்டி, மாலையிட்டு களிப்பர்.



            மாட்டுப் பொங்கல் நாளில், சாணத்தால் சிறு தொட்டிகள் நான்கு கட்டி, ஒன்பது கோள்களைக் குறிக்கும் வகையில் அதன் ஒவ்வொரு முனையிலும் சாணி பிள்ளையார் வைப்பர். ஒரு முனையில் மட்டும் மஞ்சள் பிள்ளையார் அலங்கரிக்கும். சிறு தொட்டிகள் பசும் பாலால் நிரப்பப்பட்டு, பாலில் மலர்களும், துளசியும், அருகம் புல்லும் தூவப்படும். தொட்டிகளின் தலைப்பகுதியில் உழவுக் கருவிகள், உலக்கை, அலங்கரிக்கப்பட்ட தடி, கதிர் அரிவாள், களைகொட்டு, மண்வெட்டி, கரும்பு, மஞ்சள், பூளா பூ (பூளை), ஆவாரம் பூ போன்றவை பயன்பாட்டு நோக்கிலும் வளமை நோக்கிலும் வைக்கப்படும். பொங்கல் சமைத்து, அது பொங்குகிற போது பொங்கலோ பொங்கலென குலவையிடுவர்.
           
            சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல்  ஆகிவற்றைப் படையல் செய்து வழிபட்டு, அதனை வெல்லம், வாழைப்பழத்துடன் கலந்து மாடுகளுக்கு ஊட்டி மகிழ்வர்.  ஊட்டும்பொழுதும் பொங்கலோ பொங்கலென முழங்குதல் மரபு. சிறுபிள்ளைகள் சிறுபறை இசைத்து  மகிழ்வர். ஊரில், அலங்கரிக்கப்பட்ட எருதுகளின் உலாவும் நிகழ்த்தப்பெறும்.

            நான்காம் நாள் காணும் பொங்கல். இதனை உழவர்கள் தங்களுக்கான ஓய்வு நாளாக, விளையாட்டுகளால் மகிழ்ந்திருக்கும் நாளாகக் கொள்கின்றனர். உறவினரோடும் நண்பரோடும் விழாக்களைக் கண்டு மகிழ்வர். கட்டிளங் காளையர் காளையடுக்கும் ஏறு தழுவுதல் எனும் வீர விளையாட்டு இந்நாளில் நிகழ்த்தப்பெறும்.  

நகரமயமாதலில் உழவு மாடுகள் இல்லை; உழு கருவிகள் இல்லை; புதுநெல் வரவு இல்லை; புதுப்பானைப் பொங்கல் இல்லை; உறவுகள் உடன் இல்லை; ஏறு தழுவுதல் எதுவும் இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் சமையலறையில் மின்சார அடுப்பேற்றி, உயர் அழுத்தச் சமையல் கலனில் (குக்கர்) பொங்கல் வைத்துக்கொண்டிருக்கிறாள் என் மனையாள். தொலைக்காட்சியில் நடிகைகள் பல்லிளிக்கும் பொங்கல் கேளிக்கை நிகழ்ச்சிகளை வெறித்தபடி, எம் பிள்ளைகளுக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறேன் என் பாட்டன் பாட்டி இயற்கையோடு இயைந்து வாழ்ந்துவிட்டுப் போன பாங்கை.  

            அகத்தியமும் தொல்காப்பியமும்
            மேல்கணக்கும் கீழ்க்கணக்கும்
            பெருங் காப்பியமும்  சிறு காப்பியமும்
            பக்தி இலக்கியமும் பல்துறை நுட்பங்களும்
            சித்தர் இலக்கியமும் சிற்றிலக்கியமும்
            கொன்றெரித்து

            தமிழ்ப் பெருமையும் தன்மானமும்
            வீரமும் விவேகமும்
            அறிவும் அரசியலும்
            ஆற்றலும் ஆளுமையும் என
            அனைத்தையும்
            செரித்துத் தொலைத்த எம்மக்கள்...
            இன்று
            இலவசங்களில் ஏமாந்தவற்றைப் போகியாகத்
            தெருவெங்கும் எரித்துக்கொண்டிருக்கின்றனர்

            பாலை நிலத்துக் கொற்றவைமுன்
            துடி இசைத்துக் கூத்தாடிய வீரனைப்போல
            நகரத்து வீதியெங்கும்
            சிறுபறை முழக்கி
            எக்காளமிட்டுச் செல்கின்றனர்
            எம் சிறுவர்கள்.
                                                                                        ஆ.மணவழகன்
tamilmano77@gmail.com

ஏறு தழுவுதல் – தமிழர்ப் பண்பாடு




ஏறு தழுவுதல் – தமிழர் பண்பாடு

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

என்பார் பாவேந்தர் பாரதிதாசன். அண்டத்தின் கருக்கள் உருவான போதே உருவானவை தமிழினமும் மொழியும் என்பது இவர்போன்ற ஆன்றோர் வாக்கு. உலக உயிர்களுள்  மூத்த இனமாம் தமிழினத்திற்கெனப் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் கலையும் பண்பாடும் தனிச் சிறப்பு. பழங்காலத்துக் கலைகளுள் முதன்மை பெறுவது ஏறுதழுவுதல் எனும் வீரக் கலை.

            மாடுகளில் ஆண்மையுடையது எருது. இது பழங்கால முல்லை நிலத்து ஆயர்களின் பெருஞ்செல்வம். மதம் கொண்ட யானையையும் கடும் புலியையும் எதிர்கொண்டு தாக்கும் வலிமையுடையது. வினையின் சிறப்பால் இது கொல்லேறு என்று போற்றப்படும். இவ்வெருதுகளை, வானிடத்து திங்கள் போலவும் திருமாலிடத்துள்ள சங்கு போலவும் அழகிய நெற்றிசுட்டியையுடைய கரிய நிறமுடைய காரிகள்; கரிய மேகம் சூழும் மலையிடத்து வீழ்கின்ற அருவியைப் போல அழகிய வெள்ளைக் கால்களையுடைய காரிகள்; பலராமன் மார்பில் இருக்கும் மாலையைப் போல சிவந்து நீண்ட கொடி மறுவினை உடைய வெள்ளைகள்; விண்மீனுடன் விளங்கும் செவ்வானம் போல அழகிய வெள்ளைப் புள்ளிகளையுடைய சிவந்த நிறத்தனவாகிய சேய்கள்; சிவபெருமான் மிடற்றின்கண் தோன்றும் கருமைபோல கரிய கறையினையுடை கழுத்தையும், உயர்ந்து வளர்ந்த திமிலினையும் உடைய கபில நிறத்தனவாகிய குரால்கள், தெளிவாகத் தோன்றும் சிவந்த சிறு புள்ளிகளையுடைய வெள்ளைகள் எனப் பலவாறு பழந்தமிழ் இலக்கியங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றன.

            கொல்லேறு என்றாலும் அதன் கோட்டிற்குக் காளையர் அஞ்சுவதில்லை. முல்லை நிலத்து ஆயர் பெண்ணை மணம்முடிப்பதற்காக ஏறுதழுவும் பண்பாடு பண்டைத் தமிழரிடையே இருந்தது. காளையர் அந்நிகழ்வில் விருப்பமுடன் பங்கேற்றனர். தான் விரும்பிய பெண்ணை மணந்து கொள்ளவும், தன் வீரத்தை வெளிப்படுத்தவும், புகழ்பெறவும் தனக்குக் கிட்டிய ஓர் அரிய வாய்ப்பாக ஏறுதழுவும் இவ்விழாவைக் கருதினர். எனவே கொல்லேற்றின் கோடு கிழித்து குடல் சரிவதோ, உயிர் விடுவதோ அவர்களுக்குப் பொருட்டல்ல.

கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம் (கலி.101:41-42)

என்று, கொல்லும் இயல்புடைய காளையை அடக்குபவர்க்குத்தான் எம் மகளைக் கொடுப்போம் என்பதில் ஆயர்களும் உறுதிகொண்டிருந்தனர். முல்லைநிலப் பெண்களும், கொல்லேற்றின் கோடஞ்சாது, அதனைத் தழுவி அடக்கும் வீரமுள்ள ஆடவனையே மணக்க விரும்பி ஏறுதழுவலைப் பரண்மீதிருந்து காண்பர்(கலி.103:6-9). அவ்வாறு பார்த்துக்கொண்டிருக்கும் ஆயமகளின் கூந்தலில் வந்து விழுந்த மாலையைத் தெய்வத்தின் செயலென்று நம்பினர்(107:31:33).
ஏறு தழுவும் வீர விழா நிகழ்வின் காட்சியை,
            எழுந்தது துகள்
            ஏற்றனர் மார்பு
            கவிழ்ந்தன மருப்பு
            கலங்கினர் பலர்        (கலி.102:21-24)

என்று கண்முன் காட்டுகிறது கலித்தொகை.
            காளையை அடக்கிய காதலனின் கைப்பிடிக்கும் ஆய மகளின் திருமணம் சங்க இலக்கியமாம் கலித்தொகையில் காணப்படும் தனிச் சிறப்பாகும். ஏற்றினைத் தழுவிய ஆடவனுக்கே தலைமகளைத் தமர் கொடை நேர்வர்(கலி.104:73-76). இல்லின் முற்றத்தில் திரையிட்டு(கலி.115:19-20), மணல் தாழப் பரப்பி, இல்லத்தில் செம்மண் பூசி, பெண் எருமையின் கொம்பினை நட்டு வழிபாடாற்றி ஆயமகளின் திருமணம் நடைபெற்றது.

                                    தரு மணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி
                                    எருமைப் பெடையொடு எமர் ஈங்கு அயரும்
                                    பெரு மணம்                                       (கலி.114:12-14)
தம் துணையோடு பூக்களில் மது அருந்தும் வண்டுகள் அஞ்சியோடுமே என்றெண்ணித் தன் தேரில் ஒலிக்கும் மணி நாவினை இழுத்துக் கட்டிய தலைவனையும்,  தன் குரல் கேட்டால் இணைமான் துணை பிரியுமே என்றஞ்சி கணவனை எழுப்பத் தயங்கும் தலைவியையும், மரத்தையும் உறவாகப் பார்த்த மாந்தரையும் கொண்டதே பழந்தமிழ்ச் சமூகம். ஏறுதழுவும் வீரர்கள் தாம் குத்துப்பட்டாலும் காளைகளைத் துன்புறுத்தியதாகப் பதிவுகள் இல்லை. காளைகள் துன்புறுத்தப்படுகின்றன எனக் காரணம் காட்டி, ஏறுதழுவலை இன்று எடுத்தெறிவது இனப் புறக்கணிப்பு என்பதைத் தவிர வேறென்னவாக இருந்துவிட முடியும்.  
நான்
உண்பதை
உடுத்துவதை
பார்ப்பதை
படிப்பதை
சிரிப்பதை
சிந்திப்பதை
விதைப்பதை
விளையாடுவதை
யார்யாரோ தீர்மானிக்கிறார்கள்
சொல்லிக்கொள்கிறேன்
நான் ‘தமிழனென்று’.

                                                                        முனைவர் ஆ.மணவழகன்
                                                                        இணைப் பேராசிரியர்
                                                                        பொறுப்பாளர்
                                                                        பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
                                                                        உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
                                                                        தரமணி, சென்னை 600113.